Monday 23 July 2018

சாரல் துளிகள்

ஆயிரங்கால் கொண்ட பரி போல் தாவிச்சென்று கொண்டிருக்கும் இம்மழையை வாழ்த்துமுகமாய் ஓரிரு பூவிதழ்களை உதிர்க்கிறது குல்மொஹர்.

சொந்த ஊரில் பெய்யும் ஒவ்வொரு துளியும், புலம்பெயர்ந்தவர் மனதில் பெருமழையாய்ப் பொழிந்து பசும்நினைவுகளை மலர்த்துகிறது.

ஒரு கறாரான ஆசிரியரைப்போல், தினமும் குறித்த நேரத்தில் வந்து விடும் இம்மழையை என்ன செய்ய!!!!

வாகனங்களில் கரம் சிரம் புறம் நீட்டும் சிறார் போல் பால்கனி அழிக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டி மழையனுபவிக்கின்றன தாவரங்கள்.

ஒவ்வொரு சொல்லுக்கும் 
உறுமியும் பளிச்செனப் புன்னகைத்தும் 
மறுமொழியளித்துக் கொண்டிருந்த வானம் 
இருந்தாற்போல் அழத்துவங்கியது. 
இத்தனைக்கும் நான் 
மனதோடுதான் பேசிக்கொண்டிருந்தேன்.

களைத்துச் சோர்ந்து இற்று வீழும் இறுதிக்கணத்திலும் ஒரு பெருங்கனவு துணைக்கு வருவது எப்பேர்ப்பட்ட வரம்.

கடந்து வந்த பாதையெங்கும் பதிந்த நினைவுத்தடங்களில் தளும்பி நிற்கும் ப்ரியம் பொசிந்து ஆங்கோர் கடலாய் ஆர்ப்பரிப்பதை அறிவாயா நிலவே?.

கண் சிமிட்டும் நட்சத்திரங்களின் சமிக்ஞையைப் புரிந்து கொள்ளாமல் ஊரெங்கும் தேடிக் கொண்டிருக்கிறது நிலா. சூரியனை விழுங்கி வயிற்றில் ஔித்த மின்மினியோ ஏதுமறியாததுபோல் செடிக்குச்செடி தாவுகிறது. இருவரையும் நோக்கி குறும்புடன் சுடர்கிறான் சூரியன்.

விருப்புடனோ, அன்றியோ.. காம்பை விட்டுக் கழலும் பூ எவ்வுணர்வு கொண்டிருக்கும்?! சோகமா? விடுதலையா? அல்லால், கடந்த ஒன்றா?

உருகி வழியும் சூரியனைக் குடித்துப் பசியாறும் இலைகளின் கீழ் வெயிலாறிய குருவி கடைசி நொடி வரை கவனிக்கவேயில்லை, குறி வைத்திருந்த கவண்வில்லை.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

Ajai Sunilkar Joseph said...

அழகான பதிவு ,வாசிக்க வாசிக்க
வாசித்துகொண்டிருக்கணும் போல இருக்கு.

LinkWithin

Related Posts with Thumbnails