Monday 31 December 2018

சாரல் துளிகள்

இருந்திருக்கலாம்.. சாதகமாயொன்றுமில்லை. இல்லாமற் போனதால் பாதகமாயுமொன்றுமில்லை.

சூழ் உறவுகளிடை விதிக்கப்பட்ட தனி வாழ்வு போல் நன்னீர் நடுவே தாகித்திருக்கிறதொரு நீர்க்காகம்.

ஆகாயக்கோட்டையானாலும் ஏதோ ஓர் அஸ்திவாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுப்பப்படுகின்றன.

காரிருள் மறைத்த கருநாகம் போன்று மனதில் ஔிந்து கிடக்கும் வஞ்சம். வெளிப்படும் நேரம் வரை எதுவும் தெரிவதில்லை.

ஒருமித்த குரலில் பாடும் பள்ளிப்பிள்ளைகள் போல் கூட்டமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றன குருவிகள்.

அப்பேர்க்கொத்த நிலவுட்பட, காணும் யாவற்றிலும் களங்கம் கண்டுபிடிக்கும் மனித மனதை விட களங்கம் மிக்கது வேறொன்றுமில்லை.

காற்றிற்பறக்கும் பதராய்ப் பிறப்பினும், குருவியின் அலகிடைக் கொறிபடும் நெல்மணியாய்ச் சிறத்தல் இனிது.

விஷந்தோய்ந்தவற்றை விட, அமுதில் நனைந்த அம்புகளே அதிகம் பலிகொள்கின்றன.

சிறகிழந்த தும்பியைப்போல் தத்தித் தவ்விக்கொண்டிருக்கிறது வாலறுந்த ஒரு பட்டம்.

பாசி படர்ந்த குளத்து நீரென மூடிக்கிடக்கும் ஞாபகங்களின் மேல், யாரோ கல்லெறிந்த பின், அல்லது உள்ளிருந்தொரு மீன் குதித்து வெளியுலகம் பார்த்துச் சென்றபின், கலைவதை விட அதி விரைவாக மூடிக்கொள்கிறது குளம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails