Thursday 28 June 2018

சாரல் துளிகள்

மதங்கொண்டு புத்தியழிந்த யானையின் பாதையில் குறுஞ்செடி எங்ஙனம் பிழைக்கும்?.

வான்வெளியின் எங்கோ ஒரு மூலையில் கவனிக்கப்படாமலேயே அவிந்து வீழ்ந்த எரிநட்சத்திரங்கள் ஒன்றிணைந்து பெருநட்சத்திரமான போழ்து ஆங்கொரு பிரபஞ்சம் பிறந்தது.

நினைவுகளால் கனத்துத் ததும்பித் திணறும் இவ்விரவு அந்நினைவுகளையே ஊன்றிக்கொண்டு மெல்ல நகர்கிறது.

மழை தெளித்த முற்றத்தின் மீது சிறகுதிர்த்துக் கோலமிட்ட ஈசல்களுக்கு, அதை ரசிக்கத்தான் பொழுதில்லை.

காலம் ஒரு நெருப்பாறு. இறங்கிக் கரையேறுகிறவர்களைப் புடம் போட்டும், பொய் வேஷத்தைக் கலைத்து அடையாளம் காட்டியும், மூடிய மாசெரித்து மின்னவும் வைத்து விட்டு தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறுகுழந்தையின் கையிலகப்பட்ட லட்டைப்போல் நொறுங்கிக் கரைந்து கொண்டிருக்கும் அம்மலையின் விலாவில் கிச்சுக்கிச்சு மூட்ட முயல்கிறது ஒரு இயந்திரம்.

கேட்கக் காதுகள் இல்லாவிடத்தில் துயரம் தன்னைக் கண்ணீரால் வரைந்து கொள்கிறது. கண்ணுடையவன் பார்க்கக் கடவன்.

உளுத்துப்போன பேழையில் காக்கப்படும் பொக்கிஷத்தையொத்ததே, தகுதியில்லார் மேல் வைக்கப்படும் நம்பிக்கை. இரண்டுக்குமே உத்தரவாதமில்லை.

உண்மைத்தன்மை சோதித்தறியும் நோக்கில் தோலுரிக்கப்பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் நிலையிலும் மனங்கசிந்து நேசிக்கும் ப்ரியத்தின்முன் குற்றவுணர்வு கொள்கிறது நப்பாசை. கை வீசி அப்பால் விலகிச்செல்கிறது நம்பிக்கையின்மை.

நிதர்சனத்தை எதிர்கொள்ள அஞ்சுபவர்களே முப்பொழுதும் கற்பனையுலகில் சஞ்சாரித்துக் கிடப்பர். அல்லாதோர் எதிர்கொண்டு வென்று கடப்பர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails