கொட்டு முழக்கத்துடன் பிறர் எதிர்காலத்தைக் குறி சொல்லும் பூம்பூம் மாட்டுக்காரனை மௌனமாகத் தொடர்கிறது தன் எதிர்காலம் அறியா மாடு.
அத்தனை ஈரத்தையும் அள்ளிப்பருகிய அக்னித்துளிகளைச் சேகரித்த மனது, உருகியுருகி இறுகியது.
பேசிப்பேசியே ஒன்றை நீர்த்துப் போகவும் செய்ய முடியும், அடர்த்தியாக்கவும் முடியும். சலிக்காமல் பேசித்தள்ளுகின்றன வாய்கள், அலுக்காமல் செய்தியைக் கடத்துகின்றன கண்களும் காதுகளும், ஒன்று விடாமல் சேமித்துக்கொள்கிறது மூளை. முடிவெடுக்க வேண்டிய மனமோ திணறிக் களைத்து கடைசியில் ஜடநிலைக்குப்போய் எல்லாவற்றுக்கும் 'ஆமாம்' எனத் தலையாட்ட ஆரம்பிக்கிறது.
காலில் பட்டு நசுங்கவேண்டியிருக்கும், உலர்ந்து சருகாக வேண்டியிருக்கும் என்ற இயற்கை நியதிகளைப் பொருட்படுத்தாமல் தன்பாட்டுக்கு மலர்ந்து உலகைப் பார்க்கின்றன மலர்கள்.
ததும்பும் நீரைத் தளும்பிச் சிந்திவிட்டு ஓடுகிறது லாரி. பொசுங்கிய பாதங்கள் ஒற்றியொற்றி ஏந்திக்கொள்கின்றன அன்பின் துளிகளை.
அவரவருக்கென்றோர் இடத்தை
அடையப்போராடும் கிளியந்தட்டில்
தனக்குரிய பீடத்தை
எப்படியோ கண்டறிந்து
அமர்ந்து விடுகின்றன சாமிகள்.
அன்பு எதையும் வற்புறுத்தாது, அன்பின் பெயரால் நடத்தும் ஆக்கிரமிப்போ ஒன்றுமில்லாமல் வழித்துத் துடைத்துவிடும்.
கனிகளின் இனிமையை மட்டும் சிலாகிப்பவன், அதன் பின்னிருக்கும் இயற்கையின் உழைப்பை அறிந்தும் அறியாதவனாகவே காட்டிக்கொள்கிறான்.
காலம் எறிந்து சென்ற
காயங்களை எல்லாம்
கவிதையாக்கிப் பருகிவிடலாம்
கசப்பை இனிப்பாக்கும் வித்தையோடு.
No comments:
Post a Comment