Saturday, 5 September 2026

நெஞ்சிலோர் நண்டு - சுதாகர் கஸ்தூரி (புத்தக மதிப்புரை)

நூல்: நெஞ்சிலோர் நண்டு
ஆசிரியர்: சுதாகர் கஸ்தூரி
வெளியீடு: சுவாசம் பதிப்பகம் - 2026
பக்கங்கள்: 150
விலை: ரூ. 152/

'நெஞ்சிலோர் நண்டு' எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதிய மிகச்சிறந்த மருத்துவ விழிப்புணர்வுப் புத்தகப் பகிர்வாகும். இப்புத்தகம் ஆண்களுக்கு ஏற்படும் மிக அரிதான மார்பகப் புற்றுநோய் பற்றி மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் பேசுகிறது. தனக்கு ஏற்பட்ட அந்த நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்ததில் இருந்து அதன் தீவிரத்தை உணரும் வரை உள்ள நிலைகளையும் சிகிச்சை முறைகள், நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்தது என எல்லாப் படிநிலைகளையும் ஆசிரியர் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார்.

நண்டு என்ற குறியீடு புற்றுநோயின் வலியையும், அது நோயாளியின் உடலை எவ்வாறு ஆக்கிரமிக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய “நண்டு” நாவலின் நினைவு வந்தது. மருத்துவ உலகம் சாதாரண மனிதர்களுக்குப் புரியாத பல புதிர்களைக் கொண்டது என்பதை இந்தப்புத்தகம் தெளிவுபடுத்துகிறது. நோயாளியின் மன உளைச்சல், பயம் மற்றும் விரக்தி, நோயின் தன்மையை எவ்வாறு எதிர்கொள்வது ஆகியவற்றை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் உணர்வுப்பூர்வமாக ஆசிரியர் எழுதியுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், அன்பும் ஒரு நோயாளியை எவ்வாறெல்லாம் மீட்டெடுக்க உதவும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் மருத்துவத் துறையில் உள்ள சவால்களையும், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் அவசியத்தையும் இப்புத்தகம் வலியுறுத்துகிறது.

புற்றுநோய் சம்பந்தப்பட்ட மருத்துவக் கலைச்சொற்களைக் கலந்து அதே சமயம், அவற்றை எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியிருப்பது இதன் மிகப்பெரிய பலமாகும். ஆற்றொழுக்குப்போன்ற நடை சுதாகர் கஸ்தூரியின் மிகப்பெரிய பலம். நடுநடுவே கம்ப ராமாயணம் கலந்து எழுதியிருப்பது ஆசிரியரின் இலக்கியப் பரிச்சயத்தையும், ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் நகைச்சுவை அவரது நகையுணர்வையும் காட்டுகிறது. இப்புத்தகம் வெறும் பகிர்வு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்குத் தேவையான ஒரு விழிப்புணர்வு ஆவணமாகவும் திகழ்கிறது. வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் பல கேள்விகளை இப்புத்தகம் தன் பக்கங்கள் வழியே எழுப்புகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரிக்கும் ஒவ்வொரு குடும்பத்தாரும் கண்டிப்பாக வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பல வாழ்வியல் வழிகாட்டுதல்கள் இதில் அடங்கியுள்ளன.

ஒரு கொடிய நோய் மனித உடலைத் தாக்கும் போது, நோயாளியின் மனநிலை எவ்வாறு உடைகிறது என்பதை ஆசிரியர் ஆழமாகப் படம்பிடித்துள்ளார். பயம், விரக்தி, மற்றும் எதிர்காலம் குறித்த பொருளாதாரக் கவலைகள், தன் சந்ததியினராவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அக்கறை போன்றவை ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் வாட்டுகின்றன என்பதை புத்தகம் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது. உடல் வலியைக் காட்டிலும், நோயாளியின் மன உளைச்சல் எவ்வளவு கொடியது என்பதை உணர்கிறோம். ஹார்மோன் சிகிச்சையின்போது அவர் அடைந்த உணர்வு அலைக்கழிப்புகளை வாசிக்கையில் அதைக்கடந்து வர அவர் பட்ட பாடுகளை விவரிக்கையில் அவரது போராட்டக்குணத்தை நாம் நம்மையறியாமல் மனதாரப் பாராட்டுகிறோம்.

நெருக்கடியான காலங்களில் குடும்ப உறுப்பினர்களின் பாசமும், அரவணைப்பும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புத்தகம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அன்பான வார்த்தைகளும், நம்பிக்கையூட்டும் வாழ்க்கைத்துணையும், ஆதரவான குடும்பமும், இடுக்கண் களையும் நட்பும் ஒரு நோயாளியைப் பாதியளவு குணப்படுத்திவிடும் என்ற வாழ்வியல் உண்மையை அனுபவப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். சரியான மருத்துவரை அணுகுவதும், சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதும் எவ்வளவு பெரிய சவால் என்பதையும் விளக்கியிருக்கிறார்.

புத்தகத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையளித்த மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை, சிகிச்சை முறைகள் போன்றவை மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அறியாமையில் இருக்கும் ஒரு நோயாளிக்கோ அவரது குடும்பத்தினருக்கோ இத்தகவல்களால் ஒரு வழிகாட்டுதல் கிடைக்குமெனில் அதுவே இப்புத்தகத்தின் வெற்றி எனலாம். ஒரு நோயாளி எதிர்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகள், அங்குள்ள அமைதி, பயம் கலந்த சூழல் மற்றும் மருத்துவக் கருவிகளின் இயக்கம் ஆகியவை மிக எதார்த்தமாக விவரிக்கப்பட்டுள்ளன. இது வாசகர்களுக்கு ஒரு நிஜமான மருத்துவமனைக்குள் இருக்கும் உணர்வைத் தருகிறது. பல வரிகளை வாசிக்கையில் அந்த உணர்வுகளின் தாக்கத்தைக் கடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. 

வெளிப்புற இடங்களைக் காட்டிலும், எழுத்தாளரின் 'மனம்'தான் இங்கே மிக முக்கியக் களமாகச் செயல்படுகிறது. அவரது எண்ண ஓட்டங்கள், தனக்குள் அவர் பேசிக்கொள்ளும் சுய உரையாடல்கள், வலியால் அனுபவித்த வேதனைகளை அவர் எதிர்கொண்டு சமாளித்த விதம் மற்றும் சிந்தனைகள் போன்ற அக உலகப் போராட்டங்களை நேர்மையாக வெளிப்படையாக நம்முன் வைத்திருக்கிறார். வேண்டாத சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவர் உருவாக்கிய TUFAN என்பது என்னவென்று புத்தகத்தை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் பயனுள்ள ஒன்று. துஃபான் என்றால் சூறாவளி என்று அர்த்தம், ஆனால், இந்த சூறாவளி நம்மை அமைதிப்படுத்தும்.

புற்றுநோய் என்றில்லை.. எந்த நோய் வந்தாலும் எத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது, நோயை எதிர்த்துப் போராடும் மன உறுதி, வாழ வேண்டும் என்ற அவா, மற்றும் போராட்டக் குணம் ஆகியவை வேண்டும் என்பன புத்தகம் வலியுறுத்தும் மிக முக்கியக் கருத்துகளாக அமைந்திருக்கின்றன. உடலில் தோன்றும் சிறிய மாற்றங்களையும், அசாதாரணமான அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது உயிரைக் காக்கும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. மார்பகப் புற்று நோய் என்பது பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் தாக்கும் என்பதே பலருக்குத் தெரியாத நிலையில் அந்நோயை எவ்வாறு எதிர்கொள்வர்? அப்படிப்பட்டவர்களின் பயத்தைத் தெளிவித்து நம்பிக்கையூட்டும்  பகிர்வே இப்புத்தகம்.

LinkWithin

Related Posts with Thumbnails