Monday 19 February 2024

"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பு வெளியீடு.


"நல்லாச்சி" கவிதைகளை எழுத ஆரம்பிக்கும்போது ஆச்சி இப்படி அழுத்தமாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்வாள் என அறியவில்லை. சொல்ல நினைப்பவற்றை போகிற போக்கில் பேத்தியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வேடிக்கையும் விளையாட்டுமாகச் சொன்னபடி, அனைத்தும் அறிந்த அனுபவஸ்தியானாலும் பேத்தியின் முன் எதுவுமே தெரியாதவளாய் திருதிருவென விழித்துக்கொண்டு அவள் வந்தபோதே தெரிந்து விட்டது நல்லாச்சி தனிக்காட்டு ராணியாகத்தான் வலம் வரப் போகிறாளென. 

சில வருடங்களுக்கு முன் துளித்துளியாக எழுத ஆரம்பித்தாலும் ஒருகட்டத்தில் சற்றேறக்குறைய தினமுமே அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சுடுபாதையில் குளிர்தருவாக அவளே ஆறுதலளித்தாள். முன்னட்டையை அலங்கரிக்கும் என் அம்மாவின் அம்மா "பொன்னம்மாச்சி" எனக்கு உந்துதலாக இருந்தாலும் என்னைச்சுற்றியிருந்த பல்வேறு நிஜமும் கற்பனையுமான ஆச்சிகளும் இந்நூலில் நடமாடுகிறார்கள். 

எனக்கு இந்த வருட பொங்கல் பரிசாக அமைந்திருக்கும் "நல்லாச்சி" கோதை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. மிக்க நன்றி தேனாச்சி. பபாசியின் துணைத்தலைவர் திரு. புருஷோத்தமன் கைகளில் "நல்லாச்சி"யைக் கண்ட தருணம் மகிழ்வானது, மறக்க முடியாதது.

எனது முதல் கவிதைத்தொகுப்பான "சிறகு விரிந்தது" வெளியான சமயம் என்னால் போக இயலாத சூழல், ஆகவே இந்தத்தடவை எப்படியும் சென்னை புத்தகத்திருவிழாவுக்குச் செல்ல வேண்டுமென்று கிளம்பி விட்டேன். ஜனவரி 16ம் தேதி மாலை எழுத்தாளர் கலாப்ரியா அண்ணாச்சியின் திருக்கரங்களால் "நல்லாச்சி" எனும் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பு இனிதே வெளியிடப்பட்டது. தோழிகள் ஜெயந்தி நாராயணன், வல்லபா ஸ்ரீநிவாசன், திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் நட்புகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

புத்தகத்தை வாங்க கோதை பதிப்பகத்தின் 9080870936 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாவது கவிதைத்தொகுப்பு வெளியீடு - மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல நூல்கள் வெளிவரட்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails