Thursday 15 February 2024

சங்க காலத்து வெயில் - கலாப்ரியா


நவீன கதைமுகங்களில் மிக முக்கியமானவர் ‘சோமசுந்தரம்’ என்ற இயற்பெயர் கொண்ட “கலாப்ரியா” அண்ணாச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார். நவீன கவிதைகளின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அப்போதைய கவிதைகளின் வெகுஜனப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்ததில், இன்றைய புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரான இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. "சங்க காலத்து வெயில்" எனும் இந்நூல் உட்பட  கவிதைத்தொகுப்புகள், கட்டுரைத்தொகுப்புகள், நாவல்கள், சிறுகதைத்தொகுப்பு என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

கலாப்ரியாவின் கவிதைகள் முற்றிலும் சிறப்பானவை, தனித்துவம் கொண்டவை, பெரும்பாலான கவிதைகள் தன்னளவில் வெளிப்படையான காட்சிவடிவமும், அகத்தே உள்ளோட்டமாகக் காத்திரமான குறியீடும் கொண்டவை.

“சித்தார்த்தா
என்றழைத்த
முதுகுரல் கேட்டுத்
திரும்பிய புத்தன்
சிரித்துக்கொள்கிறான்
சொல்லைத் தாண்ட முடியாது
ஞானத்தால் என்று”

“கடலின் மேல்மட்டத்திற்கு
வரும்போதெல்லாம்
ஆகாயத்தின் உயரம்
பார்த்துப் பயந்து
வேகமாய் ஆழம் புதைகிறது
மீன்”

“நின்று பார்ப்பவனுக்குத்தான்
சித்திரம் வரைந்து காட்டுகிறது
இயற்கை”
போன்ற கவிதைகளை உதாரணமாகச்சொல்லலாம்.

“இலக்கியவாதியின் சட்டி
கையைச் சுடுவதே இல்லை
அவன் கைகள்
விட்டு விடுவதுமில்லை”
என்ற கவிதையில்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள்.

வென்றவர்களைப்பற்றி மட்டுமே இவ்வுலகம் எப்போதும் பேசும், ஆனால், தோல்வியுற்றவர்களை அது நினைவில் வைத்திருப்பதில்லை, சொல்லப்போனால், அவர்களைச் சித்திரத்திலிருந்தே முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விடுகிறது. அத்தகைய உலகில், இசை நிற்கிறபோது இசை நாற்காலி விளையாட்டிலிருந்து விலகும் நாற்காலியைக் குறித்து வருத்தம் யாருக்கேனும் உண்டா? என கவிஞர் வினவும்போது அந்த நாற்காலி சற்றே ஆறுதல் கொண்டிருக்கும்.

கலாப்ரியாவின் கவிதைகளில் காட்சிகளாய்த் திரண்டு விரிகிறது உலகம். தான் கண்டவற்றை, உணர்ந்தவற்றை அப்படிக்கப்படியே அதிகப்படியான வர்ணனைகள், வெற்று அலங்காரச்சொற்கள் ஏதுமின்றி எளிய வாக்கியங்களில் வாசகனுக்குக் கடத்துபவை அவரது கவிதைகள். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எளிய வரிகளுக்குப் பின்னால் ஒவ்வொரு திறப்பாகத் திறந்து கொண்டு புதிய தரிசனம் கிடைக்கிறது.

“ஊர் திரும்பும்போது
பார்வையில் பட்டால்
மகிழ்ச்சியை வழங்கும்
ஊரைப்பிரிகையில்
வருத்தம் பகிரும்
மைல் கற்களால்
வேறென்ன செய்ய முடியும்
நின்று கொண்டேயிருப்பதைத்தவிர” மேலோட்டமாக எளிதாகத் தோன்றும் இக்கவிதையின் மைல் கற்கள் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க அச்சித்திரம் மறைந்து, கவிதை சொல்லும் கதையால் மனம் அலைவுறுகிறது. 

“ரசிக்கப்படும் போதெல்லாம்
செதுக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதன்
பேர்தான் கலையோ” எனில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். மானுட வாழ்க்கைக்குக் கலையும் இன்றியமையாதது.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

ஒரு முறை தில்லி நிகழ்விற்கு வந்தபோது சந்தித்து இருக்கிறேன். இவரது சில நூல்கள் வாசித்ததுண்டு. நல்லதொரு நூல் அறிமுகம்.

LinkWithin

Related Posts with Thumbnails