Tuesday, 4 April 2023

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை (அம்பை) - புத்தக மதிப்புரை


அம்பையின் எழுத்தை நான் முதன்முதலில் வாசித்தது “அழியாச்சுடர்கள்” தளத்தில்தான். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை மூலம் எனக்கு அவர் அறிமுகமானார். தொடர்ந்து அவரது எழுத்துகளில் சிலவற்றைத் தேடித்தேடி வாசித்தேன். அவற்றில் ஒன்றுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற “சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு.

அம்பை தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல, மேகங்களும் பறவைகளும் கதைகளாய் ஆண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகக் குதித்து வருவதைப்போன்றே, பல்வேறு வடிவங்களில் வண்ணங்களில் உலகம் துண்டு துண்டாகப் பெண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகவும் குதித்து வருகிறது. அம்பை குறிப்பிட்டிருக்கும் விதவிதமான வடிவங்களில் அமைப்புகளில் இருக்கும் புற ஜன்னல்களைப்போலவே, பெண்களின் மனதிலும் நிறைய அக ஜன்னல்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக, அவள் காண்பதை, அவள் உணர்வதை அவள் கண்ணோட்டத்தின் வழியாகவே அம்பை தன் எழுத்துகளின் மூலம் வெளிக்கொணர்கிறார். 

இத்தொகுப்பிலிருக்கும் பெரும்பான்மையான சிறுகதைகள் மும்பையைக் கதைக்களமாகக்கொண்டவை. பல்வேறு பகுதிகளிலிருந்தும் எக்கச்சக்கமான கனவுகளைச்சுமந்து கொண்டு மக்கள் மும்பைக்கு வருகின்றனர். அம்மக்களின் கனவுகளை உண்டு செரித்தும் எரித்துச்சாம்பலாக்கியும் அதையே அடித்தளமாகக்கொண்டு இப்பெருநகரம் தன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே போகிறது. போனால் போகிறதென்று ஒரு சிலரின் கனவை நனவாக்கியும் வைக்கிறது. இதில் மும்பைக்குப் பதிலாக எந்தப்பெருநகரத்தின் பெயரையும் எழுதிக்கொள்ளலாம். அந்நகரத்திலும் ஒரு மரத்தை அடையாளம் கண்டு கொண்டு, எரிவதற்கு முன் அம்மரத்தின் அருகே இருந்த தன் வீட்டை நினைத்துக் கண் கலங்கியபடி ஒரு கம்லி இருப்பாள். தன் தந்தை வேலை செய்த ஆலையை நினைத்துப்பாடியபடி ஒரு கம்மு இருப்பாள்.

நோய்மை பீடித்தவர்களுக்கு எவ்வளவு துன்பமோ அவ்வளவே துன்பத்தை, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தரும். தனக்குப் பிரியமானவர்கள் தன் முன்னே துடிப்பதைக் கண்டும் ஒன்றும் செய்யவியலாத கையறு நிலைக்குப் பெயரே நரகம். மறதி நல்லதுதான், ஆனால் அதுவே ஒரு நோயாகும்போது வாழும் ஒவ்வொரு நொடியும் நோயாளியும் சார்ந்தவர்களும் செத்துச்செத்துதான் பிழைக்கின்றனர். விதி வசமாக நோயாளி இவ்வுலகில் இல்லாமல் போய்விட்டாலும் அவர்களை நினைவூட்டுவது போல் ஏதேனும் சம்பவிக்கும்போது தாங்கவியலாமற் போகின்றது. தொண்டை புடைத்த காகம் தன் தந்தையை நினைவூட்டியபோது தாங்கவியலாமல் கதவைச்சாத்திய கல்யாணியும் நாம்தான். வாத நோய் முடக்கிப்போட்ட காமும்மா எழுதிய நூலைத்தேடி டெல்லி வரை போகும் அனன்யாவும் நாம்தான். மாமியாரைப்பார்த்துக்கொள்ள இயலாமல், அதே சமயம் அவளை முதியோர் இல்லத்திலும் விட முடியாமல் தவித்து, கடைசியில் தீக்கு தன்னைத்தின்னக்கொடுக்கும் ஊர்மிளாவும் நாமேதான். தேன்மொழி என்ற பச்சைப்பறவையின் கூவல் தொண்டையில் அடைபட்டிருப்பது குறித்துத் தவித்து, அதன் ஒலியைக் கேட்க முயன்று, பின் ஒலியே அப்பறவைக்கு ஓர் ஆக்கிரமிப்பாக இருப்பதை உணர்ந்து வீடு நீங்கும் கூங்கா பாபாவாகிய வசந்தும் நாம்தான்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டிக்கான சிகிச்சை பலனின்றி இறந்த கணவனுக்குப் பின் தானும் காலாவதியாகும் முடிவுக்குப்போகும் கமலாவின் மகன் ஆதிக்கும், கடைசி காலத்தில் மறதியால் அவதிப்பட்டு இறந்த தந்தைக்குப்பின் தங்கள் தாய்க்கு ஒரு துணை வேண்டுமென்று சுயம்வரம் ஏற்பாடு செய்யுமளவுக்கு பரந்த மனம் கொண்டு, அதே தாய் தனது கல்லூரிக்கால நண்பனுடன் சேர்ந்து வாழ முடிவெடுப்பதை ஒப்புக்கொள்ள இயலாமல் தவிக்கும் பிள்ளைகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அவரவர் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சுயநலத்தின் கைப்பாவைகள்தான் அவர்கள். “உயிரை நீடிக்கறதுல என்ன பிரயோசனம்?” எனக்கேட்டு தந்தையின் ட்ரக்கியோஸ்டமியை நிறுத்தும் ஆதியும், பிறகு சிக்கல் வராமலிருக்க “அவரவர் சொத்துகள் அவரவர் குழந்தைகளுக்குத்தான் எனப் பத்திரப்படுத்தி விட்டு மறுமணம் செய்து கொள்” எனும் சாந்தியின் குழந்தைகளும் தாய் எனும் பெண்ணின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள எவ்வனத்தின் எப்பொய்கையில் மூழ்கி எழ வேண்டியிருக்குமோ!

பதின்மூன்று சிறுகதைகளைக்கொண்ட இத்தொகுப்பில் “சிங்கத்தின் வால்” என்ற கதை பிரமிக்கச்செய்கிறது. இந்தியச்சமூகத்தில் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளையும், அவர்களின் அறிவு புறக்கணிக்கப்படுவதையும், அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்கங்களையும் திணிக்கப்படும் கற்பிதங்களையும் அதை அவர்கள் தாங்களாகவே ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் நெருக்கடிகளையும் பற்றிப் பெரிதும் பேசுகின்றன அம்பையின் எழுத்துகள். அம்பையை வாசித்தல் என்பதும் பெண்ணை, அவள் உலகை, இன்னும் நுணுக்கமாக அணுகி அவள் நோக்கிலேயே புரிந்து கொள்ளலேயாம்.

Wednesday, 15 March 2023

சாரல் துளிகள்



எண்ணுந்தோறும் புதிதாய் முளைத்துப் பெருகும் நட்சத்திரங்களுக்கு, தேர்வடம் பிடிக்கும் மக்களின் முகங்கள். எப்படியும் நிலையம் சேர்ந்துவிடும் நிலா.

அங்கிங்கெனாதபடி வியாபித்து தீரா வினை தீர்த்து அருள்புரியும் சொள்ளமாடனுக்கொரு திருநீற்றுக்கொப்பரை காணிக்கையாய் இன்னும் வரவில்லையாம், கழுத்து வரை குறையுடன் குமுறும் மாடனுக்கு மற்றதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

'என்னை நினைவிருக்கிறதா?' எனக்கேட்ட, சிதைந்த பெருந்தேர் வடங்களில் ரதவீதிகளின்  வாசனை.

சொற்களுக்கப்பாற்பட்ட வெறுமை, மௌனத்தைக்கொண்டு தன்னைப் போர்த்திக்கொள்கிறது.

அத்தனைக்கும் பிறகும் மீதமிருக்கும் வாழ்வின் கட்டங்களில் இன்னும் எத்தனை ஏணிகளும் பாம்புகளுமோ! வீழவும் மீளவும் எத்தனை தாயங்களோ! பகடைகளும் காய்களும் உருள்கின்றன அதனதன் விதிப்படி.

முகம் வருடி, கூந்தல் கலைக்கும் மந்தமாருதம் வேண்டிய ஜன்னல் பயணத்தில், குப்பையும் புழுதியும் நாற்றமுமாக மூச்சடைக்க வைக்க, இடைவெளியின்றிச் சாத்தப்பட்ட ஜன்னலுக்கு இப்பக்கம் வெறும் பார்வையாளனாகக் கடந்து போக வேண்டியிருப்பதெல்லாம் தற்செயலோ!! முற்செயலோ!!

விதவிதமாயும் புதிது புதிதாயும் ஏமாறுவதில்தான் மனிதனுக்கு எத்தனை உற்சாகம். 'இனிமேல் ஏமாற மாட்டேன்' எனக்கூறிக்கொண்டே அடுத்த ஏமாற்றத்துக்குத் தயாராகிறான் அவன்.

நான்தான் செய்தேன், என்னால்தான் நடந்தது, என்னைத்தான் அணுகினர் என புகழுக்குப்போட்டியிடும் அதே மனிதர்கள்தான் இகழ் நேரிடும்போது கல்லெறி பட்ட காக்கைக்கூட்டமாய்ப் பறந்து அகன்று விடுகின்றனர்.

அத்தனை பேரையும் உறங்க வைத்து விட்டு, சாலை உறங்குகிறது. கலைக்க மனமில்லாத வழிப்போக்கன் சுருண்டு படுத்துக்கொள்கிறான் மரத்தடியில்.

அற்ற குளம் போல் வெறிச்சோடிக்கிடக்கிறது நட்சத்திரங்களற்ற வானம். கால்களால் தடவித்திரியும் ஒற்றைக்கொக்கைப் போல் தனிமையில் திரிகிறது நிலா.

Monday, 9 January 2023

சுகிரா - புத்தக மதிப்புரை (ஜெயந்தி நாராயணன்)

“சுகிரா” சிறுகதைத்தொகுப்பு
ஆசிரியர்: ஜெயந்தி நாராயணன்
பதிப்பகம்: சுஜா பதிப்பகம்
விலை: 99

ஒரு நல்ல சிறுகதையென்பது வாசகரை ஆரம்ப வரியிலேயே கட்டிப்போட்டு, கடைசி வரி வரை தன்போக்கிலேயே இழுத்துச்செல்ல வேண்டும். முடிந்த பின்பும் வண்டாய் மனதில் ரீங்கரிக்க வேண்டும். முடிவு ஒப்புதலில்லையெனில் “ஏன்?” என சுயபரிசீலனை செய்ய வைக்க வேண்டும். சிறுகதைகள் சுபமாகவோ அசுபமாகவோ முடிந்தேயாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. கண்டிப்பாக அது ஒரு நீதியைப் புகட்டியாக வேண்டுமென்ற நியதியுமில்லை. இன்னும் சொல்லப்போனால் சில சிறுகதைகள் எழுத்து வடிவில் முடிந்தாலும் வாசகர் மனதில் தொடர்வதுண்டு. அங்கே அதன் முடிவு ஒவ்வொரு வாசகரின் எண்ணத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது.

சிறுகதைகளுக்கான கருக்கள் நம் தினப்படி வாழ்விலேயே கொட்டிக்கிடக்கின்றன. நாம் சந்திக்கும் மனிதர்கள், பரிமாறிக்கொள்ளும் கருத்துகள், காண மற்றும் கேட்க நேரும் ஒவ்வொரு சம்பவங்கள் என கதைக்கருக்களுக்குப் பஞ்சமேயில்லை. அவற்றை, கேட்பவர்கள் சலித்துக்கொண்டு கொட்டாவி விடா வண்ணம் சுவைபடச்சொல்வதுதான் ஒரு கதைசொல்லியின் திறமை. ரசனையுடன் எழுதும் கதைசொல்லியால் அவை சுவாரஸ்யமான சிறுகதைகளாகவும் மலர்கின்றன.

எழுத்தாளர் ஜெயந்தி நாராயணனின் “சுகிரா” சிறுகதைத்தொகுப்பில் உள்ள கதைகளும் அத்தகையவே. புத்தகத்தைக் கையிலெடுத்தால், கடலையுருண்டையில் ஒவ்வொரு கடலையாக ரசித்து ருசிப்பதைப்போல் ஒவ்வொரு கதையும் ரசித்து வாசிக்க வைக்கிறது. மனித மனம் விந்தையானது.. கலைடாஸ்கோப்பைப்போல் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டேயிருப்பது. அப்படி தன்னுரு மாறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் உருக்கொடுத்து ரத்தமும் சதையுமான கதை மாந்தர்களாக உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர்.

வண்ணத்துப்பூச்சியின் உருமாற்றம் என்பது இயல்பாக நிகழ வேண்டும். அப்படியில்லாமல் அந்த மாற்றம் தான் விரும்பியபடியே நிகழ வேண்டுமென வன்முறையைப் பிரயோகித்தால் என்னாகும்? ஹரிணிக்கு நிகழ்ந்ததுதான் நடக்கும். வாழ்வில் எதை வேண்டுமானாலும் மீட்டுக்கொண்டு விடலாம், சிறு வயதில் அனுபவிக்கத்தவறியவற்றைக்கூட. ஆனால், போய் விட்ட இளமையை எங்ஙனம் கடந்த காலத்திலிருந்து மீட்டெடுப்பது? ராஜியைப்போல் பிச்சியாகவே அலைந்து மடிய வேண்டியதுதானா? இவ்வாழ்வின் இக்கணம் மட்டுமே உறுதியானது, அதை வாழ்வதை விடுத்து வேண்டாத சந்தேகத்தை வளர்த்துக்கொண்டு அல்பாயுசில் மடிந்த திவ்யாவைப்போல் இருப்பதால் யாருக்கு என்ன லாபம்?

அன்பு ஒன்றே நிலையானது என்பதை மனிதர்கள் பெரும்பாலும் காலம் போன கடைசியில்தான் உணர்ந்து சுற்றம் சூழ வாழ விரும்புகிறார்கள். அதுவரையில் சந்தீப்பைப்போல் கூடப்பிறந்தவர்களுக்கே ஊறு விளைவிக்கவோ அல்லது பெற்றோர் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தான் நன்றாக இருந்தால் போதும் என்றிருப்பவர்களாகவோ பணத்தாசை, பேராசை, பொறாமை போன்ற தீக்குணங்களால் தீண்டப்படுபவர்களாகவோதான் பெரும்பாலோனோர் இருக்கின்றனர். மதம், இனம், செல்வம் போன்ற எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் மாச்சரியங்களுக்கும் அப்பாற்பட்ட மனிதர்களும் இச்சிறுகதைகளில் உலவுகின்றனர். தானாக விரும்பி, மனம் கலைந்தவளைப்போல் நடிக்கும் ராஜியும், வயோதிகத்தால் கடந்த கால நினைவுகள் அனைத்தையும் மறந்த.. ஆனால், “சுகிரா”வை மட்டும் ஞாபகம் வைத்திருக்கும் சுந்துவும் கண்களில் நீர் திரையிடச்செய்து விட்டார்கள். 

தேவையற்ற அலங்காரங்கள், அலுப்பூட்டும் வர்ணனைகள் ஏதுமின்றி மிக இயல்பான மொழி நடையில் சொல்லப்பட்டிருக்கும் இக்கதைகள் ரசிக்க வைக்கின்றன. “அன்னை” சிந்திக்கவும் வைத்தது. மீனா அவள் செய்தது தவறா? குற்றமா? என நிறையப்பேரை யோசிக்க வைப்பாள்.

Sunday, 1 January 2023

மரவள்ளிக்கிழங்கு என்ற ஏழிலைக்கிழங்கு என்ற கப்பை வத்தல்..


"அத்தே.. சாந்திய பம்பாய்க்கு (சம்பவம் நடந்தது மும்பை ஆகாத 1989ல்) கொண்டு விட வரச்செல 'ஏழெலக்கௌங்கு வத்தல்' வாங்கிட்டு வாங்க" என மை ரங்க்ஸ் சொல்லவும் அம்மைக்கு முதலில் புரியவில்லை. நெல்லையைப் பூர்வீகமாகவும் கன்யாரியை வாழிடமாகவும் கொண்ட மாமியாருக்கு, கன்யாரியைப் பூர்வீகமாகவும் நெல்லை மண்ணில் பெருங்காலம் வாழ்ந்திருந்த மருமகன் தொண்டைத்தண்ணி வற்ற விளக்கியபின் அம்மைக்கு லேசாகப் பிடி கிடைத்தது.

"மரச்சீனிக்கௌங்கு வத்தல சொல்லுகேளா?" என்றாள் அம்மை.

"ஒங்கூட்டுக்கு வந்துருக்கச்செல வறுத்துக் குடுத்தீங்கல்லா.. அதாம்" என்றார் மை ரங்க்ஸ்.

'சரிதான்' என நினைத்துக்கொண்டு 'வாங்கிட்டு வாரேன்' என்ற அம்மை, என்னைக் கொண்டு விடும்போது 'ரெண்டு மாசம்ன்னாலும் வச்சி வறுத்துத் திங்கட்டும்' என ஒரு பெரிய பை நிறைய்ய வாங்கித்தந்தாள்.

முதல்தடவை மொறுமொறுவென வறுத்துத் தந்தாள் அம்மை. இரண்டாம் தடவை வறுக்கும்போது   கொஞ்சம் பிசகாகி விட்டது. எண்ணெய் ரொம்ப சூடாகி விட்டதென பம்ப் ஸ்டவ்வில் தீயைக் குறைக்க.. சூடு ரொம்பவே குறைந்து விட்டது. அதைக்கவனிக்காமல் ஒரு கை வற்றலை அள்ளிப்போட, அது சரியாக வேகாமல் கடுக்முடுக் என வந்து விட்டது. நம்மாள் ஒன்றும் சொல்லவில்லை.

அம்மை ஊருக்குத் திரும்பிப் போனபின் ஒருநாள், "வத்தல் வறுக்கட்டுமா?" எனக் கேட்டுவிட்டு ஒரு ஈடுதான் வறுத்திருப்பேன். "இரி.. நான் வறுக்கேன்" என்று அடுக்களைக்குள் வந்தவர் ஒரு பாத்திரம் நிறைய்ய வற்றலை வறுத்தெடுத்துக்கொண்டு நகர்ந்தார். "ஒனக்கும் வறுக்கத்தெரியல, ஒங்க அம்மைக்கும் வறுக்கத்தெரியல.. நான் வறுத்தது எப்டி பொருபொருன்னு வந்துருக்கு பாரு. எண்ண நல்ல சூடாகாண்டாமா? அதுக்குள்ள அவசரப்பட்டு பொசுக்ன்னு வத்தல போட்டா என்னத்த பொரியும்?" என்று பாடம் எடுத்தார்.

மார்ச் மாதம் நாகர்கோவிலில் கோட்டாற்றில் இருக்கும் 'கம்போளம்' போய் வாங்கி வந்த வத்தல். எங்களூரில் இன்றும் மரவள்ளிக்கிழங்கை இப்படித்தான் வற்றலுக்கு நறுக்குவார்கள்.

இன்றைக்கு நன்கு பொருபொருவென வறுத்து வைத்திருக்கிறேன். மும்பைக்கு வரும்போதெல்லாம் பொட்டணம் போட்டு அனுப்பி வைத்தவளும் இன்றில்லை, பொருபொருவென வறுக்கச் சொல்லித் தந்தவரும் இன்றில்லை..

Friday, 4 November 2022

துணை.. (அகநாழிகையில் வெளியானது)

சிலுசிலுவென ஜன்னல் வழியாக பேருந்தின் உள்ளே வீசிய காற்று கண்ணைச்சொக்க வைத்தது, சற்று தலை சாய்த்து உறங்கினால் நன்றாயிருக்கும்தான், ஆனால் முடியாது. பருவ வயதிலிருக்கும் மகளை அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறாள், அதுவும் நேரங்கெட்ட நேரத்தில். கடைத்தெருவில் ஷாப்பிங் சுவாரஸ்யத்தில் ‘ஆ’வென வாயைப் பிளந்து கொண்டு கடைகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்த மகளை கைப்பிடியாக இழுத்துக்கொண்டு வந்தும் கடைசி பஸ் கிளம்பி மெல்ல நகர ஆரம்பித்து விட்டிருந்தது. இரண்டு பெண்கள் ஓடி வருவதைக் கண்ட டிரைவர் பஸ்ஸை நல்ல வேளையாக பஸ்ஸை நிறுத்தினார். ஏறியமர்ந்து படபடப்புக் குறைந்ததும் ஒரு வாய் தண்ணீரைக் குடித்துக்கொண்டாள்.

அவள் புருஷனுக்கு மாதாமாதம் தன் பெற்றோரைப்பார்த்தே ஆக வேண்டும். தனியாகவும் அவ்வப்போது குடும்பத்தோடும் வருபவன், இந்த முறை பக்கத்து ஊர் திருவிழாவுக்கென குடும்பத்தை இழுத்து வந்திருந்தான். “அரப்பரீச்ச வருதுப்பா.. படிக்கணும்” என சிணுங்கிய மகளுக்கு, ரங்கராட்டினம், ஜவ்வு மிட்டாய் என ஆசை காட்டியிருந்தான். அவன் மட்டும் இப்போது கூட வந்திருந்தால் பயமில்லாமல் இருந்திருக்கும். கடைசி பஸ் போய்விட்டால் கூட ஆட்டோவிலோ, காரிலோ ஊருக்குப் போய் விடலாம். இந்நேரத்துக்கு இப்படி ஓடிச்சாட வேண்டியதில்லை.  “அக்கா மகளுக்கு சடங்கு வெச்சிருக்கு, நீயே போயி புடவை எடுத்து வா” என அனுப்பி விட்டான். “தொணைக்கி ஒரு பொம்பளையாளு கூட வராம ஒத்தைக்கி எப்பிடிப்போக?” என்றவளிடம், “இந்தா… இந்த பெரிய மனுசியைக் கூட்டிக்கிட்டுப் போ, நல்லா செலக்ட் பண்ணுவா” என மகளைத் தள்ளி விட்டு விட்டான். ஷாப்பிங் போகும் உற்சாகத்தில் அதுவும் ஒட்டிக்கொண்டு விட்டது. சொந்தக்காரப் பெண்கள் யாரையாவது அழைத்துக்கொண்டு போகலாமென்றால், “ஏ… அவளுக வந்தா இஷ்டத்துக்கு எடுப்பாளுக, நம்ம பட்ஜெட்ல முடியாது. சத்தங்காட்டாம போயிட்டு வான்னா கிராக்கி பண்ணுதியே?” என புருஷன் முறைக்கவும் கிளம்பி விட்டாள்.

கடைத்தெருவுக்கு வந்து புடவை, இதர துணிமணிகள், அலங்கார சாமான்கள் என எல்லாவற்றையும் வாங்கும் வரை எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. அப்புறம்தான் மகளரசி கடைத்தெருவை அளக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு கடையாக ஏறி “ஷோ கேஸ்ல பாக்கச்செல நல்லாருந்துது, கிட்ட போய்ப்பாக்கைலதான் பவுசு தெரியுது” என இறங்கிக்கொண்டிருந்தாள். “எம்மா.. மல்லிப்பூவு” என்றவளுக்கு வாங்கிக்கொடுத்து, “எங்கியோ பலாப்பழம் மணக்கு” என வாசம் பிடித்தவளுக்காக தெருமுனை வரை தேடி வாங்கிக்கொடுத்து, கூடவே தான் ரொம்ப நாளாய் ஆசைப்பட்ட வெங்கலப்பானைக்காக பாத்திரக்கடைக்குள் நுழையும்போது இருட்ட ஆரம்பித்திருந்தது. முழுசாக ஒரு மணி நேரத்தைச் செலவிட்டு விட்டு வெளியே வரும்போதுதான், “எப்பா… கடைசி பஸ்ஸு போயிருமே” என உறைத்தது.

முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டவள் பஸ்ஸுக்குள் சுற்றுமுற்றும் நோட்டமிட்டாள். அரிசியும் உளுந்தும் விரவினாற்போல் ஆணும் பெண்ணுமாய் இருந்த கூட்டம், ஒவ்வொரு நிறுத்தத்திலும் கரைந்து ஆண்கள் மட்டுமே அதிகமாகக் காணப்பட்டனர். அவளுள் கிளம்பிய பயஊற்று வியர்வை ஆறுகளை உற்பத்தி செய்தது. “இன்னும் நாலஞ்சு ஸ்டாப்தானே.. ஊருக்குப் போயி இறங்கிரலாம்” என மனம் சமாதானம் செய்தாலும், “பயவுள்ளை பராக்குப் பாத்துக்கிட்டு இவ்வளவு நேரம் ஆக்கலைனா எப்பமோ பத்தரமா போயிருக்கலாம், நீ ஊருக்கு வா,… ஒன்ன செரியாக்குதேன்” என ஒரு பக்கம் கறுவிக்கொண்டும், “வளந்த பொம்பள எனக்கே ஆசய அடக்கத்தெரியல, கூடச்சேர்ந்து திரிஞ்சிக்கிட்டு, இப்ப சின்னப்புள்ளயச்சொல்லி என்ன பலன்?” என இன்னொரு பக்கம் மனதை ஆற்றிக்கொண்டும் இருந்தாள்.

‘டமால்’ என தலை முன்னிருக்கைக் கம்பியில் இடிபட, சிந்தனை கலைந்து நிமிர்ந்து அமர்ந்தாள். பஸ் கும்மிருட்டில் நின்றிருந்தது மட்டும்தான் புரிந்ததே தவிர எந்த ஊர்ப்பக்கம் நிற்கிறது எனத்தெரியவில்லை. கண்களைக்கொட்டித்தட்டி வெளியே இருட்டில் நோக்கினாள். ஏதோ ஓர் ஊர் விலக்கில் உறுமிக்கொண்டே பஸ் நின்றிருந்தது. கூர்ந்து நோக்கினாள்.. இவர்களது ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டரிலிருக்கும் ஊர்தான். ‘அப்பாடி!! ஊர் கிட்ட வந்துட்டுது’ என சற்று ஆசுவாசப்பட்டது நிலைக்கவில்லை.

“பஸ்ஸு எங்க ஊருக்குள்ள போயே ஆவணும், அதெப்படி ஊருக்குள்ள போவாம இருக்கும்ண்ணு பாத்துருகேன்” ஒருத்தன் நடத்துனரிடம் சலம்பிக்கொண்டிருந்தான்.

“ஏ.. காருக்குள்ள ஏறச்செலயே சொன்னம்லா? பஸ்ஸு ஊருக்குள்ள போவாது, வெலக்குலதான் நிக்கும்ன்னுட்டு. அப்பம்லாம் மண்டைய ஆட்டிட்டு இப்பம் எகுறுனா எப்பிடிரே?”

“அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது. பஸ்ஸு ஊருக்குள்ள போகணும்ன்னா போய்த்தான் ஆகணும், இல்லண்ணு வைய்யி… நாளப்பின்ன ஒம்பஸ்ஸு ரோட்டுல ஓடாது பாத்துக்க” வாய் குழறச்சொன்னான் ஒருத்தன்.

“ஆமா மாப்ளே.. ஊர்ல திருழா நடக்கு, இந்த நேரம் ஊருக்குள்ள பஸ்ஸுல போயி எறங்கினாத்தான் கெத்து. வெலக்குல எறங்கி நடந்தம்ண்ணு கேட்டா ஒரு சொந்தக்காரனும் மதிக்க மாட்டான்” என குழறலுடன் ஆமோதித்தான் அடுத்தவன்.

“சொந்தக்காரன் மதிக்கணும்ன்னா சொந்தக்கார்ல போவெண்டியதுதான? எறங்கவும் செய்யாம எங்க உசிர எடுக்குதியே?. எண்ணேன்… இவுனுவோ எறங்கலைன்னா கெடக்கட்டும், நீங்க பஸ்ஸ எடுங்க”  நடத்துனர் ஓட்டுநரைப்பார்த்துச்சொன்னார்.

சட்டென எகிறினான் ஒருவன் “வண்டி ஒரு அடி பைபாஸ்ல நவுந்திச்சி… அவ்ளோதான், குதிச்சிருவேன்” 

ஓட்டுநர் செய்வதறியாது திகைத்தார். பாயிண்ட் டு பாயிண்ட் போகும் பஸ் எனத்தெரிந்தும், ஏறி விட்டு வம்பு பண்ணுகிறார்கள். இன்றைக்கு இவர்களுக்காக ஊருக்குள் பஸ்ஸை விட்டால், நாளைக்கு இதைப்போல் இன்னும் பலரும் நினைத்த இடத்தில் பஸ்ஸை நிறுத்தச்சொல்வார்கள், வேலைக்கும் ஆபத்து வரும். “சவத்தெளவு தண்ணியைப்போட்டுட்டு நம்ம உசுர வாங்குதுகள்” எரிச்சலுடன் இஞ்சினை ஆஃப் செய்தார். “ஊருக்குள்ளல்லாம் பஸ்ஸு வராது, வேலையக்கெடுக்காம ஒழுங்கா எறங்கிப்போங்க, இவுனுவோ எறங்கற வரைக்கும் பஸ்ஸு நவுராது” பயணிகளைப்பார்த்து பொதுவாகச்சொல்லி விட்டு நெட்டி முறித்தார்.

இவளுக்கு சொரேரென்றது. ‘நல்லா வந்து மாட்டிக்கிட்டோமே’ என அழுகையாக வந்தது. சுற்றுமுற்றும் பஸ்ஸுக்குள் பார்த்தாள். நாலைந்து ஆண்கள் மட்டுமே இருந்தனர். வயிற்றில் புளி கரைத்தது, “இவுனுவள வெலக்கி விடாம ஓரோருத்தனும் வேடிக்க பாத்துட்டிருக்கதப்பாரு.” மகளிடம் முணுமுணுத்தாள்.

“எம்மா.. சும்ம இரும்மா”

பரிதவிப்புடன் ட்ரைவரைப்பார்த்தாள், அவன் எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பி வைத்திருந்தான்.

“உள்ள நேரம் அம்புடும் ஊரு சுத்திட்டு, இப்பப் பாரு, நல்லா வந்து மாட்டியிருக்கோம். கொஞ்சமாது வடவருத்தம் இருந்தா சட்டுனு பொறப்பட்டுருப்பே” எல்லா எரிச்சலையும் மகள் மேல் திருப்பினாள்.

“நாம் மட்டுந்தானா? நீங்களுந்தான் பாத்திரக்கடைல..” 

“சரி சரி.. வாய மூடு. பதிலுக்குப்பதுலு பேச மட்டும் படிச்சு வெச்சிருக்கே. எல்லாம் அப்பனூட்டு புத்தி”

ட்ரைவர் பின்னால் திரும்பிப்பார்த்த ஒரு சமயம், ‘தயவு செஞ்சு வண்டிய எடுப்பா’ என விழிகளால் கெஞ்சியபடி அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் கையெடுத்துக்கும்பிட்டாள்.

ஒரு கணம் பதறிய அவன், சண்டையை விலக்கி விடப்போவது போல் எழுந்து நடத்துனரிடம் போனான், கிசுகிசுவெனப்பேசினான். மறுபடி வந்து ஒன்றுமே நடவாவது போல் இருக்கையில் அமர்ந்து, பக்க வாட்டில் சொருகி வைத்திருந்த ஒரு அழுக்குத்துணியை எடுத்து, பஸ்ஸின் கண்ணாடிகளைத்துடைக்க ஆரம்பித்தான்.

அவளுக்கு பஸ் உடனே கிளம்புமென்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னும் நேரமானதென்றால் புருஷனிடமும் புகுந்த வீட்டாரிடமும் பேச்சு வாங்க வேண்டி வரும். ஊரிலுள்ள தெய்வங்களையெல்லாம் துணைக்குக் கூப்பிட்டாள். இரவு நேரம் அவையெல்லாம் தூங்கப்போய் விட்டதோ என்னவோ ஒரு தெய்வமும் அவளுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்க்கவில்லை. அவளுக்குப் படபடப்பாக வந்தது. பிபி எகிறும் போல் இருந்தது. பாட்டிலிலிருந்த தண்ணீரைக்குடித்துக்கொண்டாள்.

“ஏட்டி.. அப்பாக்கு போன் போட்டு விஷயத்த சொல்லு, முடிஞ்சா கெடைக்கற வண்டிய எடுத்துட்டு வரச்சொல்லு”

“எம்மா.. சார்ஜ் இல்லாம மொபைலு எப்பமோ ஆஃப் ஆயிட்டு”

“எப்பம் பாத்தாலும் அதயே நோண்டிக்கிட்டிருந்தா? ஒரு அவசரத்துக்கு ஆவுமுன்னு வாங்கிக்குடுத்தா, இப்பிடியா கால வாரும்!? இப்ப என்ன செய்ய?”

“எம்மா.. நீ கொஞ்சம் அமைதியா இரு, இப்பிடி படபடன்னு வந்தா ஒண்ணும் பிரயோசனமில்ல. பொறுமையா இரும்மா, நீ பதட்டப்பட்டா எனக்கும் பதட்டமாவுதுல்லா”

“அவுனுவோ எறங்கற மாரியும் தெரியல, பஸ்ஸு கெளம்பற மாரியும் தெரியல, அர மணிக்கூரா சண்ட புடிச்சிட்டிருக்கானுங்க. ஏட்டி… ஊரு கிட்டதாம் வந்துருக்கோம். எறங்கி நடந்துருவோமா?” மகளிடம் கேட்டாள்.

“இந்த இருட்டுக்குள்ளயா?”

“இருட்டு என்ன இருட்டு? சர்ரு சர்ருன்னு ரோட்டுல பஸ்ஸும் லாரியுமா ஓடிட்டுதான இருக்கு? வெளிச்சத்துல நடந்துரலாம்”

“பயமா இருக்கும்மா..” 

இவளுக்கும் பயமாகத்தான் இருந்தது. திருவிழாவை சாக்கிட்டு சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. வயசுப்பெண்ணுடன் பத்திரமாக ஊர் போய்ச்சேர வேண்டும். ‘எங்கள பத்தரமா வீடு சேத்துரு முத்தாலமா, ஒனக்கு பொங்கலு வைக்கேன்’ இழுத்து மூச்சு விட்டு படபடப்பை சமப்படுத்திக்கொண்டாள். 

“அம்மை நானிருக்கையில் ஒனக்கெதுக்கிட்டி பயம்? வா..”

குனிந்து காலடியில் இருந்த கட்டைப்பைகளை எடுத்துக்கொண்டாள், சேலையை இழுத்துச்செருகிக்கொண்டாள். மகள் பின்தொடர பஸ்ஸை விட்டிறங்கி விறுவிறுவென நடந்தாள். ரோட்டில் ஓடிய வண்டிகளின் முன்விளக்கு வெளிச்சத்தால் மரங்களின் நிழல்களும் நெளிந்து வளைந்து ஓடியது கிலியைக்கிளப்பியது. மகளைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டாள். இன்னும் சற்று தூரம்தான், கூப்பிடு தூரத்திலிருக்கும் கலுங்கைக் கடந்து ஐம்பது தப்படிகள் நடந்து விட்டால் போதும் இவர்களது ஊர் வந்து விடும், அதன்பின் பயமில்லை. ஆனால் கலுங்கை ஒட்டினாற்போல் நிற்கும் ஆலமரத்தைக் கடக்கத்தான் பயமாயிருந்தது. தலைக்குக்குளித்த பெண்ணொருத்தி கூந்தலை விரித்துக் காய விட்டிருப்பது போல் விழுதுகள் அடர்ந்து தொங்கி திகிலூட்டின.

“எங்களுக்கு நீதான் தொண ஆத்தா..” வாய்க்குள் முணுமுணுத்தவாறு பர்சில் வைத்திருந்த குங்குமப்பிரசாதப் பொட்டலத்தைத் தடவி எடுத்துப் பிரித்து ஒரு கிள்ளு எடுத்து மகளுக்குப் பூசி விட்டு, தானும் இட்டுக்கொண்டு தலையைக்குனிந்து கொண்டு விறுவிறுவென நடக்கலானாள். ஊர் முகப்புக்கு வந்ததும்தான் மூச்சே வந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் பைகளைப் போட்டு விட்டு “அப்பாடி..” என தளர்ந்து அமர்ந்தாள். 'பத்தரமா வந்து சேந்துட்டமே' என உற்சாகமாகவும் தன்னை நினைத்துப் பெருமிதமாகவும் இருந்தது. இவ்வளவு நேர மனக்கலவரத்தில் கவனத்துக்கு வராத அடிவயிற்றுக்கனம் ‘என்னைக் கவனி’ என்றது. எழுந்து கொல்லைப்புறத்திலிருந்த பாத்ரூமுக்கு நடந்தாள்.

“பொறவாசல்ல லைட்டு இல்ல, ஒத்தையில போகாத.. பயப்புடுவ. இன்னா கணேசன தொணைக்கி வரச்சொல்லுதேன் கூட்டிட்டுப்போ. லேய் மக்கா கணேசா.. அத்த கூட போலே”

‘தைரியமா ரோட்டுல முக்காஇருட்டுக்குள்ள மக கூட ரெண்டு ஊர கடந்து வந்த நாப்பது வயசு பொம்பளைக்கி, நாழி ஒசரம் கூட இல்லாத ஆம்பளப்பய தொணையா? அதுவும் வீட்டு காம்பவுண்டுக்குள்ளயே!!.. சர்தாம் போ’

அழுவதா சிரிப்பதா என அவளுக்குத்தெரியவில்லை. அவ்வளவு நேரமும் இருந்த உற்சாகம் பொசுக்கென்று வடிந்து விட்டிருந்தது, பெருமிதம் உடைந்து விட்டிருந்தது. அதை உடைத்த விரல்களை முறித்துப்போட விரும்பினாள். 'முறித்துப்போடப்போட இன்னும் உடைப்பார்கள். கடந்து செல்' என்றது உள்ளிருந்து ஒரு குரல். தான் சற்று நேரம் முன் நிகழ்த்திய சாகசத்தைக்கூட முட்டாள்தனமாகத்தான் சொல்வார்கள், 'போகட்டும்..  ஒரு பெரும் பொக்கிஷம் போல் அதை மனதுக்குள் பத்திரப்படுத்திக்கொள்' என்றது அது.

அவள் தெளிவானாள்..

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி.


Wednesday, 12 October 2022

உப்புமா கவியரங்கம்..


அப்படியே உண்பேம் அருகில் வடையுண்டு
உப்புமாவிற் கேற்ற துணை

முந்திரி உப்புமா மூக்குவரை தின்னாலும்
எந்திரி என்னாதே நாவு

சுந்தரியைத் தள்ளுவோ ராயினும் தள்ளாரே
முந்திரி உப்புமா காண்

அடையிட்லி யாப்பம் அரங்கில் இலையேல்
தடையுடைத் துப்புமா போம்

சம்பா ரவையொடு சேமியா சவ்வரியாம்
ஏம்பா மறந்தீர் அவல்

சிறுபசியோ தீப்பசியோ ஐயமிலை உப்மா
உறுபசி தீர்க்கும் உணவு

ஏங்கிய உப்புமா வின்துணை யாகவே
இங்கே யமர்ந்த வடை.

டிஸ்கி: ஃபேஸ்புக்கில் தம்பி ஐயப்பனின் டைம்லைனில் நடந்த காலட்சேபம் இங்கேயும் மறு பதிப்பாக.

Thursday, 8 September 2022

அக்கா (துளசி கோபால்) - புத்தக மதிப்புரை

புத்தகம்: அக்கா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
ஆசிரியர்: துளசி கோபால்

பதிவுலகில் எங்கள் அனைவராலும் அக்கா என அன்போடு அழைக்கப்படும் துள்சிக்கா என்ற துளசி கோபால், தனது அக்காக்களோடும் அண்ணனோடும் கழித்த இளம்பிராயத்து அனுபவங்களைக் கட்டுரைகளாகத் "துளசி தளம்" என்ற தனது வலைப்பூவில் எழுதி வந்தார். அவ்வனுபவங்களின் தொகுப்பே “அக்கா” என்ற தலைப்பில் தனி நூலாக மலர்ந்திருக்கிறது. அக்கா என்றதும் எனக்கு கலாப்ரியா அண்ணாச்சியின்,

“கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்குமென்று
தங்கச்சிப் பாப்பாக்களைத்
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்காக் குழந்தைகள்”

என்ற புகழ்பெற்ற கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. அக்காக்கள் அப்படித்தான். அக்கா என்பவள் இன்னொரு தாயும் கூட. 

அக்காக்களின் கதையைச்சொல்ல வந்த துள்சிக்கா, அதனுடன் தன் கதையையும் பின்னியே சொல்லியிருக்கிறார். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும் மூன்று சகோதரிகளின் வாழ்வும் மூன்று வெவ்வேறு திசைகளில் பயணித்திருக்கின்றன. அக்காக்கள் என்றால் அவர்கள் தனி மரமா? மாமாக்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் வாழ்க்கை முறை என எல்லாமும் சேர்ந்த தோப்புதான் அக்கா.

அக்கா என்றால் இன்னொரு அம்மாதானே? துள்சிக்காவின் பெரியக்காவைப்பற்றி வாசிக்கும்போது எனக்கு அவர் துள்சிக்காவின் இன்னொரு அம்மா என்றுதான் தோன்றியது. அந்தப்பகுதியை வாசிக்கும்போது துள்சிக்காவின் ஞாபகசக்தியை வியந்தேன். எவ்வளவு சிறுசிறு விஷயங்களைக்கூட ஞாபகம் வைத்து எழுதுகிறார்!. முக்கியமாக, நீளமான எலி போன கதை, அக்கா வீட்டில் மெழுகிக்கோலம் போடும் முறை, வீட்டில் என்ன நடந்தாலும்“நானு” என எல்லாவற்றுக்கும் குழந்தை ரேணு சொல்லும் விதம், முக்கியமாக அக்காவின் கல்யாணக்கூரையான பனாரஸ் பட்டுப்புடவையைக் கட்டிக்கிழித்தது, முத்தாய்ப்பு வைத்தது போல் அப்பா தனது கடைசி நாட்களை மூத்த மகள் வீட்டில் கழித்தது என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

சின்னக்காவிற்கும் அண்ணனுக்குமிடையே அகப்பட்டுக்கொண்டு சின்ன துள்சிக்கா பட்ட பாடு நமது உடன்பிறப்புகளிடையே ஏற்படும் விளையாட்டுச் சண்டைகளைக் கண்டிப்பாக நினைவூட்டும். இருவருக்கும் சமரசம் ஏற்பட்டிருக்ககூடாதா என்ற ஏக்கம் தோன்றியது நிஜம். சின்னக்காவையும் அவரது நறுவிசான காரியங்களையும் வாசிக்க வாசிக்க, அவரைக்கொண்டு போன எமன் மேல் கோபம் வந்தது. சின்னக்காவுடன் துள்சிக்கா பூவுக்குப் பங்கு கேட்கும் முறையையும், அம்மா மற்றும் அக்காக்களுடன் சினிமாவுக்குக் கிளம்பும் வைபவம் பற்றியும் விவரித்திருப்பதை வாசிக்கும்போது, அந்த உணர்வை நம்முள் நேரடியாகக் கடத்திவிடுகிறார். சிறந்த கதை சொல்லியான துள்சிக்கா.

மருத்துவரான அம்மா இருந்த வரைக்கும், கதம்பமாய் ஒற்றுமையாய் இருந்த உடன்பிறப்புகள், அவரின் இறப்புக்குப்பின் சிதறிப்போவதும், அந்தக்குடும்பம் கொஞ்சங்கொஞ்சமாய்க் கலைவதும் வாசிக்கும்போதே வலி தருகிறது. அக்காக்களின் கல்யாணம் பற்றி விவரிக்கும்போதே, அம்மா வழி குடும்பத்தையும் சற்று நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அம்மம்மாவுடன் நிகழ்த்தும் “நடு வீடு” கலாட்டா நகைக்க வைத்தது.

அக்காக்கள் என்பவர்கள் நிச்சயமாக அபூர்வப்பிறவிகள்தான், இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக அவரவர் அக்காக்கள் நினைவுக்கு வருவது உறுதி. தனது வலியைக்கூட புன்னகையுடன் நகைச்சுவையுணர்வுடன் சொல்வது எங்கள் துள்சிக்காவின் சிறப்பியல்பு. இப்புத்தகத்திலும் அது வெளிப்பட்டுள்ளது. கையிலெடுக்கும் ஒவ்வொருவரும் புன்னகை தவழ வாசித்து முடிப்பது உறுதி.

LinkWithin

Related Posts with Thumbnails