Saturday, 5 January 2019

நெகிழி வதம்.. ஆரம்பம்.

தறி கெட்டு ஓடும் குதிரையைக் கட்டுப்படுத்த கடிவாளம் போட்டு இழுத்துப்பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வருவதைப்போல், பூமியின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தும் ஆபத்தாக விளங்கும் ப்ளாஸ்டிக்கின் உபயோகத்தையும் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம் என்பதை உலக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப்பற்றி முன்பொரு முறை எழுதிய கட்டுரை இங்கே. இந்தியாவைப்பொறுத்தவரை அவ்வப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதைப்பற்றி விவாதித்தாலும், ஒரு நல்ல முடிவு எடுக்கப்படாமலே இருந்து வந்தது. கடைசியில், பூனைக்கு மணி கட்டும் விதமாக டில்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிசா, பிகார் என ஒவ்வொரு மாநிலமும் தத்தம் பகுதிகளில் ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை அமல்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தப்பட்டியலில் நம் தமிழகமும் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி.

எனக்குத்தெரிந்து எண்பதுகளின் பிற்பகுதியில்தான், சரியாகச்சொன்னால் 1989ல்தான் கேரிபேக் எனப்படும் ப்ளாஸ்டிக் பைகள் புழக்கத்துக்கு வந்தன. மங்கலான வெள்ளைப்பின்னணியில் நீலம், குங்குமக்கலர், பச்சை, மஞ்சள் என வெவ்வேறு கலர்களில் பட்டைக்கோடுகள் போட்டதோ, அல்லது தனிக்கலர்களிலோ வர ஆரம்பித்தன. முதற்கட்டமாக காய்கனிகள் விற்பவர்கள் பொருட்களை அதில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்த கட்டமாக மளிகைப்பொருட்களை ப்ளாஸ்டிக் பைகளில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். சில கடைகளில் இன்னும் ஒரு படி மேலே போய், பொருட்களை ஐம்பது கிராமில் ஆரம்பித்து ஒரு கிலோ வரையிலான அளவுகளில் நிறுத்து ஆயத்தமாகப் பாக்கெட் போட்டு வைத்தார்கள். வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அப்படியே எடுத்துக்கொடுத்தால் ஆயிற்று. அதன்பின், ஒவ்வொரு வியாபார ஸ்தலமாக தன் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக்கொண்டே சென்றது ப்ளாஸ்டிக். தேக்கிலையில் பூவைப்பொதிந்து கொடுத்துக்கொண்டிருந்த வியாபாரிகள் சிறு பையில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்ததுதான் இதன் உச்சகட்டம். இந்த ப்ளாஸ்டிக் கேரி பேகுகள் இலவசமாகக் கிடைத்ததுதான் இவை பெருமளவில் பரவி இன்றைய சீர் கேடுகளுக்கு வழி வகுத்தன என்றால் மிகையல்ல.
மஹாராஷ்ட்ராவில் தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் பைகள். இவற்றில் பாலிதீன் பை 50மைக்ரானுக்கு மேற்பட்டது.
அது நாள் வரை, துணிப்பைகள், வயர் கூடைகள், பிக் ஷாப்பர் எனும் கட்டைப்பைகள் சகிதம் கடைகளுக்குச் சென்றவர்களுக்கு, 'இனிமேல் அப்படி எதையும் தூக்கிச்சுமக்கத் தேவையில்லை, அழுக்குப்படிந்த பைகளைச் சுத்தம் செய்து பத்திரப்படுத்த வேண்டியதுமில்லை, பொருட்களை வாங்கி வந்து வீட்டில் சேமித்ததும், பைகளை தூர எறிந்து விடலாம்' என்ற நினைப்பே இனித்தது. காய்கறிகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றையும் தனித்தனி கேரிபேகுகளில் வாங்கிக்கொண்டால், வீட்டிற்கு வந்ததும், ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து மறுபடி அதே பைகளில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளும் பழக்கம் பெருகியது. மல்லிகைப்பூவின் வாசனை தோசைமாவு, வத்தக்குழம்பு இன்ன பிற அயிட்டங்களில் பரவாமை கண்டு மகிழ்ந்தனர். மும்பையைப் பொறுத்தவரை, ஆபீசுக்கு மதிய உணவாக சப்பாத்தி செய்து அதை பால் கவர்களில் கட்டி கொண்டு சென்றவர்கள், ப்ளாஸ்டிக் கேரிபேகுகளுக்கு மாறினார்கள். ஒரு தடவை உபயோகித்தபின் தூக்கி எறிந்த பைகளால் ஊர் நிரம்பியது.  ப்ளாஸ்டிக் கேரிபேகுகளின் ஆயிரம் உபயோகங்கள் என வீட்டுக்குறிப்புகள் எழுதுமளவுக்கு அவற்றை விதவிதமாகப் பயன்படுத்தினர் மக்கள். இதற்காகவே, காய்கறிகள் வாங்கும்போது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தனி கேரிபேக் கேட்டு வாங்கத்தொடங்கினர். இரண்டு எலுமிச்சம்பழங்கள் வாங்கினால் கூட அவற்றையும் தனிப்பையில் போட்டுக்கொடுக்க வேண்டும். கடைக்காரர்களும் சளைத்தவர்களல்ல.. சுண்டல் வினியோகம் கெட்டது போங்கள்... அய்யா வாங்க... அம்மா வாங்க.. என அள்ளியள்ளிக்கொடுத்தார்கள். திடீர் மழை வந்தால் தலை நனையாதிருக்க கேரிபேகை மாட்டிக்கொண்டவர்கள் அனேகம் பேர். ஒரு சில மக்கள், ஹெல்மெட்டுக்குப் பதிலாக, கேரிபேகை உபயோகித்ததாகவும் கேள்வி.

இப்படியெல்லாம் கொடுத்துப் பழக்கியபோது, இந்த ப்ளாஸ்டிக் பின்னாளில் ஓர் அழிக்க முடியாத அசுரனாக உருவெடுக்கும் என்பதை யாரும் உணர்ந்தாரில்லை. அந்நாளில் ஃபேஸ்புக், வாட்சப் போன்றவை இல்லாதிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். மும்பையில் பெரு வெள்ளம் வந்து அவதிப்பட்டபோது, மழை நீர் வடிகால்களில் ப்ளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக்கொண்டதால்தான் வெள்ளம் வடியவில்லை என்று கண்டுபிடித்தபோது, இனிமேல் கடைகளில் 50 மைக்ரானுக்கு அதிகமான அளவுள்ள ப்ளாஸ்டிக் பைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. வெளியான சூட்டில் ஆங்காங்கே சோதனைகளும் நடந்து முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பெற்றது. ஆனால், பெருவாரியான எதிர்ப்பால் இந்த விழிப்புணர்வு சீக்கிரமே வலுவிழந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது ஆர்வலர்கள் தீயை ஊதி ஊதி கனன்று கொண்டிருக்கச் செய்து கொண்டிருந்தார்கள்.

நாளாக நாளாக, பொது மக்களிடையேயும் விழிப்புணர்வு மெல்ல பரவத்தொடங்கியது. ஒரு சிலர் வீட்டிலிருந்து பைகளை முன்போல் எடுத்துச்செல்லத்தொடங்கினோம். கடைகளில் ப்ளாஸ்டிக் பைகள் கொடுத்தாலும் மறுத்தோம். கடைக்காரர்கள் மற்றும் சக மக்களின் வினோதமான பார்வையை அலட்சியம் செய்தோம். சந்தையிலிருந்து திரும்பும்போது, எங்கள் கட்டைப்பைகளில் அவரையும் தக்காளியும் கொத்துமல்லியும் பச்சைமிளகாயும் கலந்துதான் கிடக்கும். வீட்டிற்கு வந்ததும், அவற்றை வகை பிரித்து ஃப்ரிஜ்ஜில் அடுக்கினோம். தப்பித்தவறி கிடைக்கும் கேரிபேகுகளையும், முடிந்த வரை மறு உபயோகம் செய்தோம்.

இனி பொறுப்பதில்லை என முடிவு செய்த அரசு, கடந்த 2018ம் வருடம் மார்ச் வாக்கில், ஒரு சில அத்தியாவசிய பொருட்களைத்தவிர மற்ற அனைத்து ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதும் தடையுத்தரவு பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பொருட்களின் பட்டியல் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வழியாக அறிவிக்கப்பட்டது. தவிரவும் கடைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அறிவிப்புப்பட்டியல் ஒட்டப்பட்டது.  மூன்று மாத கால அவகாசமளித்து, அக்கால கட்டத்தில் தங்களிடமிருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை முறையாக ஒழிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. மும்பை மாநகராட்சியின் தலைமையலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில், நகரில் ஆங்காங்கே சேகரிப்புத்தொட்டிகள் அமைக்கப்பட்டன. குடியிருப்புகள் தங்கள் பகுதி மக்களிடம் சேகரித்து அவற்றை நகராட்சியிடம் ஒப்படைத்தன. ப்ளாஸ்டிக்குக்கு மாற்று ஏற்பாடுகள் என்னென்ன என்று ஒரு கண்காட்சி நடத்தி மக்களுக்கு தெளிவுறுத்தப்பட்டது. துணி, சணல் பைகள், மறுபடி முழு உபயோகத்திற்கு வந்தன. வீட்டு அடுக்களைகளில் கண்ணாடி, எவர்சில்வர் பாத்திரங்கள், பாட்டில்கள் மறுபடி இடம் பிடித்தன. எங்கள் வீட்டில் மளிகைப்பொருட்கள் இன்றும் ப்ளாஸ்டிக் பெட் ஜார்களில்தான் இருக்கின்றன. தேன் முதலானவை வரும் பாட்டில்களைச் சுத்தம் செய்து அதில் பொருட்களை நிரப்பி வைத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கும் கண்ணாடிக்கும் ஏழாம் பொருத்தம்.
தடை செய்யப்பட்ட மற்றும் படாத ப்ளாஸ்டிக் பொருட்களின் பட்டியல்
இதனாலெல்லாம் மஹாராஷ்டிரத்தில் ப்ளாஸ்டிக் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டதா? என்றால், அதுதான் இல்லை. அறிவிப்பு வந்த புதிதில் அதிகாரிகள் கடைகள், சந்தை, சிறு வியாபாரிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் முழு வீச்சில் சோதனை நடத்தி, 50 மைக்ரானுக்கும் குறைந்த பைகள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். நெல்லைச்சீமையில், “புது மாடு குளிப்பாட்டுதல்” என்றொரு சொல் உண்டு. எதுவும் புதிதாக இருக்கையில் விழுந்து விழுந்து கவனித்து விட்டு, பழசான பின் கண்டு கொள்ளாமல் விடுவதை அப்படி எகத்தாளமாகக் குறிப்பிடுவார்கள். ப்ளாஸ்டிக் ஒழிப்பும் அப்படித்தான்… மறுபடி நிறைய இடங்களில் ப்ளாஸ்டிக் பையைத்தவிர பிற ப்ளாஸ்டிக்கின் உபயோகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால், சற்றே கட்டுக்குள் இருக்கிறதென்றே சொல்லலாம்.

ப்ளாஸ்டிக்  உபயோகம் பெருமளவில் கட்டுக்குள் வந்து விட்டாலும், இந்த அறிவிப்பால் அதிருப்தி கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சின்ன கடைகளில் கேரிபேகுகளையும் ப்ளாஸ்டிக் கவர்களையும் தடை செய்து விட்டு பெரிய கடைகளில் ப்ராண்டட் பொருட்களைப் ப்ளாஸ்டிக்கில் பொதிந்து விற்பனைக்கு வைத்திருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனிந்த பாரபட்சம் என அவர்கள் கேட்கிறார்கள். தவிரவும், இன்றும் காய்கறிக்கடைகளுக்குச் சென்று கேரிபேக் கேட்டு அடாவடியாகச் சண்டை போடும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடைகளில், காகிதம், டிஷ்யூ, சணல், மற்றும் துணிப்பைகளில் பொருட்களைப்போட்டுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சில கடைகளில் காகிதத்தில் பொதிந்தும் கொடுக்கிறார்கள். இவற்றில் சணல் மற்றும் துணிப்பைகள் அவற்றின் அளவுக்கேற்ப விலையில் கிடைக்கின்றன. துணிக்கடைகளில் கூட, காசு கொடுத்தால்தான் பை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து பை கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். காகிதம், மற்றும் சின்ன அளவு டிஷ்யூ பைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இலவசமாகக் கிடைக்கின்றன என்பதாலேயே மக்களும் டிஷ்யூ பைகளுக்கு பாலிதீன் கேரிபேகுகளுக்குக் கொடுத்த அதே வரவேற்பை அளிக்கிறார்கள். அதான்.. அதேதான். வாங்கிக்குவிக்கவும், ஒரு முறை உபயோகித்தபின் தூக்கியெறியவும் ஆரம்பித்திருக்கிறார்கள். தனித்தனி டிஷ்யூ பைகளில் போட்டுத்தரச்சொல்லி காய்கறிச்சந்தையில் சில வாடிக்கையாளர்கள் சண்டை போடுவதும், கடைக்காரர் மறுப்பதும் கண் கொள்ளாக் காட்சி.

காகிதப்பைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து விடுமே? மரங்களை அதிகம் வளர்க்க வேண்டிய இப்போதைய சூழலில், ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டினால் என்னாகும்? என இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. தவிரவும், ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எறியப்படும் டிஷ்யூ பைகள் மட்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காதா? அவை, மழை நீர் வடிகால்களில் சென்று அடைத்துக்கொள்ளாதா? என்னதான் இப்பைகள் விரைவில் மக்கி விடும் என்றாலும், இவற்றையும் அளவில்லாமல் குப்பையாகச் சேர்ப்பது சரிதானா? என பல கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. 

Monday, 31 December 2018

சாரல் துளிகள்

இருந்திருக்கலாம்.. சாதகமாயொன்றுமில்லை. இல்லாமற் போனதால் பாதகமாயுமொன்றுமில்லை.

சூழ் உறவுகளிடை விதிக்கப்பட்ட தனி வாழ்வு போல் நன்னீர் நடுவே தாகித்திருக்கிறதொரு நீர்க்காகம்.

ஆகாயக்கோட்டையானாலும் ஏதோ ஓர் அஸ்திவாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுப்பப்படுகின்றன.

காரிருள் மறைத்த கருநாகம் போன்று மனதில் ஔிந்து கிடக்கும் வஞ்சம். வெளிப்படும் நேரம் வரை எதுவும் தெரிவதில்லை.

ஒருமித்த குரலில் பாடும் பள்ளிப்பிள்ளைகள் போல் கூட்டமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றன குருவிகள்.

அப்பேர்க்கொத்த நிலவுட்பட, காணும் யாவற்றிலும் களங்கம் கண்டுபிடிக்கும் மனித மனதை விட களங்கம் மிக்கது வேறொன்றுமில்லை.

காற்றிற்பறக்கும் பதராய்ப் பிறப்பினும், குருவியின் அலகிடைக் கொறிபடும் நெல்மணியாய்ச் சிறத்தல் இனிது.

விஷந்தோய்ந்தவற்றை விட, அமுதில் நனைந்த அம்புகளே அதிகம் பலிகொள்கின்றன.

சிறகிழந்த தும்பியைப்போல் தத்தித் தவ்விக்கொண்டிருக்கிறது வாலறுந்த ஒரு பட்டம்.

பாசி படர்ந்த குளத்து நீரென மூடிக்கிடக்கும் ஞாபகங்களின் மேல், யாரோ கல்லெறிந்த பின், அல்லது உள்ளிருந்தொரு மீன் குதித்து வெளியுலகம் பார்த்துச் சென்றபின், கலைவதை விட அதி விரைவாக மூடிக்கொள்கிறது குளம்.

Thursday, 27 December 2018

மண் கோட்டையானாலும் மலைக்கோட்டையாக்கும்..


"Diwali killa".. மஹாராஷ்ட்ராவில் தீபாவளி தோறும் குழந்தைகளால் தத்தம் குடியிருப்புப்பகுதிகளில் கட்டப்படும் சின்னஞ்சிறு கோட்டைகளே திவாலி கில்லா.. அதாவது தீபாவளிக்கோட்டை என அழைக்கப்படுகிறது. மராட்டிய மன்னரான சிவாஜி மஹராஜை நினைவு கூரும் விதமாக குழந்தைகள் இக்கோட்டையைக் கட்டுகிறார்கள்.


பொதுவாக ஒரு சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் அங்கிருக்கும் கோட்டைகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நிலம், நீர், மலை, பாலைவனம் என ஒவ்வொரு பகுதியிலும் கோட்டை கட்டி பாதுகாப்பைப் பலப்படுத்துவார்கள் அரசர்கள். மலைப்பகுதி நிறைந்த மஹாராஷ்ட்ராவில் சுமாராக 150க்கும் மேற்பட்ட கோட்டைகளை சிவாஜி மஹராஜ் கட்டுவித்தார். அவற்றில் பெரும் எண்ணிக்கையிலான கோட்டைகள் மலைகளில்தான் அமைக்கப்பட்டுள்ளன. மராட்டா சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதில் மலைக்கோட்டைகள் பெரும்பங்கு வகித்தன என்றால் மிகையாகாது.

சிறு வயதில் சிவாஜி மஹராஜ் தன் விளையாட்டுத்தோழர்களுடன் சேர்ந்து, சிறு கோட்டை கட்டி போர் விளையாட்டு விளையாடுவதில் பெரு விருப்பம் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பெற்ற பயிற்சியும் இப்பகுதியிலுள்ள மலைகளின் மூலை முடுக்குகளைப் பற்றிய பரிச்சயமும் அவருக்கு எதிரிகளுடன் போரிடுவதில் பெரிதும் துணை நின்றன. மலைகளில் ஔிந்திருந்து கொண்டு, யாரும் எதிர்பாரா சமயத்தில் திடீரென வெளிப்பட்டு எதிரிகளைத் தாக்கி விட்டு மறுபடியும் மலைகளில் ஔிந்து கொள்வார். அவரது அப்போதைய எதிரிகளான முகலாயர்களால் அவரை எளிதில் பிடிக்கவே முடியவில்லை. இத்திறமைகளால் அவர் "மலை எலி"எனவும் அழைக்கப்பட்டார். சஹ்யாத்ரி மலைத்தொடரில் இருக்கும் ராய்கட் கோட்டையில்தான் அவர் மன்னராக முடி சூட்டிக்கொண்டு ராய்கட்டை தன் தலைநகராக அறிவித்தார். இங்கிருந்துதான் மராட்டா சாம்ராஜ்யம் தமிழகத்தின் தஞ்சை வரை விரிவடைந்தது. இக்கோட்டையில்தான் சிவாஜி மஹராஜின் சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஷிவ் ஜெயந்தியன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டும் வருகிறது. இன்றளவும் மஹாராஷ்ட்ராவின் ஹீரோவாக சிவாஜி மஹராஜே விளங்குகிறார்.

அரையாண்டுத்தேர்வு முடிந்ததுமே குழந்தைகள் கோட்டை கட்டுவதைப் பற்றி கலந்தாலோசிக்கத் துவங்கி விடுவார்கள். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பிருந்து வேலை ஆரம்பமாகும். பல வித அளவுகளிலான கற்கள், உடைந்த செங்கற்கள், டைல் துண்டுகள், கோணி, மற்றும் மண் போன்றவை சேகரிக்கப்படும். கோட்டை கட்டப்படும் இடத்தில் முதலில் கற்கள், செங்கற்கள் மலை போல் குவிக்கப்பட்டு அதன் மேல் கோணியால் மூடுவார்கள். மலை போல் தோற்றமளிக்கும் பொருட்டு சற்று ஒழுங்கற்ற வடிவிலேயே இது செய்யப்படும். அதன்பின் மண்ணைக் குழைத்து, கோணியின் மேல் நன்கு பூசி விடுவார்கள். மண் ஈரமாக இருக்கும்போதே மலையுச்சியை சற்றே சமதளமாக்கி டைல் துண்டு ஒன்றை அதில் வைப்பார்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்படும். மலையின் ஒரு பகுதியில் சிறை ஒன்று அமைக்கப்படும். துடைப்பக்குச்சிகள் சிறைக்கம்பிகளாக உருமாறும். மலையைச் சுற்றி கோட்டைச்சுவரும் மண்ணைக் குழைத்து அமைக்கப்படும். கற்பனையைச் சற்றே நீட்டினால் மலைக்கும் கோட்டைச்சுவருக்கும் இடையே அகழி ஒன்றும் அமைக்கப்பட்டு முதலைகள் விடப்படும். ஊற வைத்த கடுகு, வெந்தயம் போன்றவற்றைஏராளமாகத் தூவி விட்டால் இரண்டு நாளில் அவை முளைத்து வளர்ந்து அடர்த்தியான காடாக மாறியிருக்கும். இப்போது மலை ரெடி.

தீபாவளி சமயத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் சிவாஜி மஹராஜ், மற்றும் பீரங்கிகள், மாவல் எனப்படும் சிப்பாய்கள், குடி மக்கள், புலி, அஃப்ஸல் கான் ஆகிய பொம்மைகள் கிடைக்கும். இவற்றை வாங்கி வந்து கோட்டைச் சுவரில் ஆங்காங்கே பீரங்கிகளையும் காவலர்களையும் நிறுத்துவர். அஃப்சல்கானை சிறையிலிட்டு வாசலில் இரண்டு புலிகளை நிறுத்தி விட்டால் தப்பிக்கும் எண்ணம் கனவில் கூட வராது. இறுதியாக மலையுச்சியில் காவலர்கள் புடை சூழ சிவாஜி மஹராஜை அமர்த்தி, ஆங்காங்கே குடி மக்களையும் நிறுத்தினால், அசல் தர்பார் கெட்டது போங்கள்.

இதன்பின் தினமும் காலை, மாலை கோட்டை வாசலில் வண்ணக்கோலமிட்டு அகல் விளக்குகளை ஆங்காங்கே ஏற்றி வைப்பார்கள். ஆகும் எல்லாச் செலவுகளையும் குழந்தைகள் மொத்தமாகப் பகிர்ந்து செய்வார்கள். நரக சதுர்த்தசி வரை இந்த வைபவம் தொடரும். வடக்கர்களின் தீபாவளியான லஷ்மி பூஜை தினத்தன்று விடிகாலையில் அத்தனை குழந்தைகளும் குளித்து தயாராகி வந்தபின், மலையில் ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் சிறு பள்ளத்தில் ஒரு அணுகுண்டை வைத்து வெடிப்பார்கள். கோட்டை மொத்தமும் வெடித்துச்சிதறும். அதன்பின் மற்ற வெடிகளை வெடித்து கோட்டை தரை மட்டமாக்கப்படும். பொம்மைகள் அடுத்த தீபாவளிக்கென எடுத்து பத்திரப்படுத்தப்படும். இப்படியாகத்தானே தீபாவளி கோலாகலம் ஆரம்பிக்கும்.

பிள்ளைகளிடையே ஒற்றுமையுணர்ச்சி, வேலைகளைப் பகிர்ந்து செய்தல், கற்பனைத் திறன் மேம்படுதல், கணக்கு வழக்குகளைத் திறம்படக் கையாளுதல், விட்டுக்கொடுத்தல், நட்புணர்வு போன்ற திறன்கள் மேம்படுவதோடு குறைந்தது ஒரு வாரத்துக்கு பிள்ளைகளை மேய்க்கும் பொறுப்பிலிருந்து பெற்றோருக்கும் சற்று ஓய்வு கிடைக்கும். இப்போதெல்லாம் மண்பாண்டங்கள், பீங்கான் ஜாடிகள் செய்பவர்கள் சிறு கோட்டைகளையும் செய்து விற்கிறார்கள். இட நெருக்கடியுள்ள குடியிருப்புகளில் இதை மட்டும் வைத்து விடுகின்றனர். கொஞ்சம் இட வசதியிருந்தால் இதைச்சுற்றிலும் கோட்டையை மேலும் விரிவாக்கம் செய்கின்றனர். கற்பனைத் திறனுக்கு வானம் கூட எல்லையில்லைதானே?..

Monday, 10 December 2018

சிறுபயறுடன் கூட்டணியமைத்த பூசணி.

புட்டு செய்யலாமெனவோ, சிறுபயிறு சப்பாத்தி செய்யலாமெனவோ அட.. வெறுமனே அவித்துத் தாளித்துத் தின்னலாமெனவோ திட்டமிட்டு சிறுபயிறை ஊற வைத்தபின் திட்டமாறுதலேற்பட்டு விட்டதா? கவலை வேண்டாம்.

சாம்பார், கூட்டுக்கறி, அல்லது அல்வா என ஏதாவது செய்யலாமென வாங்கி வைத்த பூசணிக்காயின் சிறுபகுதி மீதமாகி விட்டதா?.  ஃப்ரிஜ்ஜில் வைத்தாலும் கெட்டுப்போகும் அபாயமோ அல்லது நாட்கணக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு நீர்ச்சத்தெல்லாம் இழந்து சுருங்கி, கடைசியில் குப்பையில் அடைக்கலமாகும் தலையெழுத்தோ ஏற்படலாம். என்ன செய்யலாமென சுணங்கி நிற்கிறீர்களா?.. அஞ்சற்க. உதிரிக்கட்சிகள் இணைந்து ஒரு பலமான கூட்டணி அமைப்பது வழக்கம்தானே. அந்தப்படி பயிறையும் பூசணியையும் ஒன்று சேர்த்து கூட்டுக்கறி சமைத்து விடலாம்.

ஒரு கப் பயிறு இருந்தால், கால் கிலோ பூசணிக்காய், பாதி வெங்காயம், மூன்று பல் பூண்டு, மற்றும் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை போதும். தலா கால் டீ ஸ்பூன் அளவு கடுகு, ஜீரகம் போதும் தாளிப்பதற்கு. உப்பு காரம் அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்துச் சூடாக்கி, ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கிக் கொண்டு அதில் கடுகு ஜீரகம் கால் ஸ்பூன் வீதம் போட்டுப் பொரிய விடவும். பொரிந்தபின் முதலில் பொடியாக நறுக்கி வைத்த பூண்டைப்போட்டு சிவ்வக்க வதக்கி, அதற்கடுத்தாற்போல் நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும். 

வெங்காயம் வதங்கி லேசாகச் சிவக்க ஆரம்பிக்கும்போது, ஊறிய பயிறை அதிலிட்டு ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து அரை வேக்காடு வரும் வரை வேக விடவும். பயிறைப்போடும் முன்பாக சிட்டிகை பெருங்காயத்தூளும் சேர்த்தால் வீடே மணக்கும். அதன் பின், பூசணித்துண்டங்களை அத்துடன் சேர்த்து முக்கால் ஸ்பூன் அல்லது ருசிக்கேற்ப உப்பிட்டு வேக விடவும். பயிறு முக்கால் வேக்காடு ஆனதும் மஞ்சள் தூளும், மிளகாய்த்தூளும் சேர்த்து, கறிவேப்பிலையையும் உருவிப்போடுங்கள். எல்லாம் சேர்ந்து கொதித்து நன்கு வேகட்டும். அள்ளி வைத்தால் அங்கிங்கு ஓடாமல் ஒரு இடத்தில் சமர்த்தாக இருக்க வேண்டும். அதே சமயம் உலர்ந்து பொரியல் பக்குவத்திலும் இருக்கக்கூடாது. ஆகவே, கூட்டு பதத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அவ்வளவு இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். பயிறு வெந்து மலர்ந்து வர வேண்டும், அதே சமயம் அதிகம் குழைந்து கூழாகி விடக்கூடாது. நல்ல மணம் வரும் இப்பொழுதில் அடுப்பை அணைத்து வாணலியை மூடி விட வேண்டும். ஐந்து நிமிடங்களாவது அப்படியே விட்டு வைத்து பின் பரிமாறினால் ஆஹா.. ஓஹோ!!!

இது சப்பாத்தியுடனும் சாதத்துடனும் மட்டுமே ஒத்துப்போகும். சாதத்தில் மேலாக ஊற்றிப் பிசைந்து கொண்டு, வறுத்த கேரள பப்படத்தைத் தொட்டுக்கொள்ளல் சுவை. ஊற வைத்த பயிறு மட்டுமே இந்த முறையில் சமைக்க ஏற்றது. கூடுதல் சத்திற்காக முளை கட்டிய பயிறை ஒரு முறை உபயோகித்தபோது அத்தனை சுவை கிடைக்கவில்லை. தவிரவும், தோல் தனியாகவும் பருப்பு தனியாகவும் மிதந்து வரும் அபாயமுண்டு. சின்ன குக்கரில் நேரடியாகத் தாளித்து, அதில் இதர பொருட்களைச் சேர்த்து ஒரு முறை செய்தேன். அதிகமில்லை ஜெண்டில்விமென்.. ஒர்ரே ஒரு விசில்தான். அது கூடப்பொறுக்காமல் குழைந்து விட்டது. வேண்டாம் விஷப்பரீட்சை என இப்பொழுதெல்லாம் நேரடியாக பாத்திரத்தில்தான் இதைச் சமைக்கிறேன். சற்றே கோபத்துடன் பார்த்தால், அந்த உஷ்ணத்திலேயே வெந்து விடுமளவுக்கு மென்மையானது சிறு பயிறு. ஆகவே அங்கிங்கு நகராது அண்டையிலேயே இருந்து சமைக்கவும்.

செய்முறையை ஒரு சிறிய வீடியோவாகவும் பகிர்ந்திருக்கிறேன். கண்டு உய்யவும்.
சப்பாத்தி, சாதம் தவிர மற்ற உணவுகளுடன் பொருந்திப்போகுமா என்று பரிசோதிப்பதானால், அவரவர் சொந்தப்பொறுப்பில் சூனியம் வைத்துக்கொள்ளலாம். வயிற்றுக்குள் கலவரம் ஏதேனும் ஆனாலோ, நா தன் சுவையறியும் வேலையை இழந்தாலோ கம்பேனி பொறுப்பேற்காது.

Sunday, 11 November 2018

சாரல் துளிகள்

அச்சிற்று உடையும் இறுதிக்கணத்திலும் இன்னொரு மயிற்பீலியைச் சுமத்தியபடி, பொறுமையைப் போதிக்கும் இவ்வுலகு.

நிழலுருவங்களில் நிஜத்தைப் பொருத்தி கற்பனையாய் உருவம் கொடுத்துக் குதூகலிக்கும் சிறுபிள்ளை விளையாட்டை பெரியவராய் ஆனபின்னும் அக்குழந்தை விட மறுக்கிறது.

அன்பைச் செலுத்த மட்டுமல்ல, அப்பேரன்பைப் புரிந்து கொள்ளவும் மதிக்கவும் கூட அன்புமுகிழ் மனத்தாலேதான் இயலும்.

வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் தட்டுப்படுகின்ற சில பிம்பங்களின் பிரதிபலிப்புகள், நினைவுகளையும் பிரதிபலித்து பயணத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச்செய்கின்றன.

நிலவூரும் அவ்வனத்துள் தனிமையின் அசைவின்மையில் சலசலக்கும் ஒற்றையிலையொன்று மட்டும் இல்லாது போமோ!!!

பாலைப்பூவின் தைலவாசனையுடன் சொட்டிக்கொண்டிருக்கும் இப்பொழுதோடு கூட்டணி கொண்ட சாரல்காற்று கருணையற்றது.

அத்தனை பிரம்மாண்டமான உடலின் வால் நுனியில் மட்டும் முடியை வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னது வலி பொறுக்கவியலா யானை.

முணுக்கென்றால் தன்னைத்தானே ஊதிப்பெருக்கிக் கொண்டு மல்லாக்க மிதக்கும் அம்மீனை பகையேதும் நெருங்கவில்லை,.. போலவே நட்புகளும்.


கிளர்ந்தெழும் மண்வாசனை போல் மூச்சடைக்க வைக்கும் நினைவுகள், சில நொடி ஊசலாட்டத்தின் பின் அமைதியுறும் மனக்குரங்கின் தோள்களில்.

இங்கே சில நொடி, அங்கே சில நொடிகளென தவ்வித்தவ்விப் பறக்கிறதந்தக் குருவி, புதிதாய் சைக்கிள் விடப் பழகும் குழந்தை போல்.

Wednesday, 24 October 2018

ராமலஷ்மியின் பார்வையில் - சிறகு விரிந்தது.

இணைய உலகில் தோழி ராமலஷ்மியைத் தெரியாதவர்கள் மிகவும் குறைவு. "முத்துச்சரம்" என்ற வலைப்பூவில் எழுதி வரும் ராமலஷ்மி ஒளிப்பட வல்லுநரும் ஆவார். இவருடைய படைப்புகள் பல்வேறு இணைய இதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் வெளியாகியுள்ளன. "அடைமழை" என்ற சிறுகதைத்தொகுப்பையும், "இலைகள் பழுக்கா உலகம்" என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். எனது கவிதைத்தொகுப்பான  "சிறகு விரிந்தது" பற்றி "திண்ணை" இணைய இதழில் வெளியான அவரது மதிப்புரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை

கவிதைகளை மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன. உரக்கச் சொல்லவில்லை எதையும். ஆனால் உணரச் செய்கின்றன அழுத்தமாக. நூலிம் 91 கவிதைகளையும் நாம் கடந்து வரும்போது இது புரிய வரும். இயற்கையின் உன்னந்தங்கள், சமூகத்தின் அவலங்கள், இயந்திரமான நகர வாழ்வில் தொலைந்து போன அருமைகள், அன்றாட வாழ்வின் அவதானிப்புகள், வாழ்க்கையில் மாற்றவே முடியாது போய் விட்ட நிதர்சனங்கள் என நீள்கின்றன இவரது பாடுபொருட்கள்.

அழகிய மொழி வளமும், கற்பனைத் திறனும் இவர் கவிதைகளின் பலம்.

மனதைக் கவருகிறது ‘மகிழ்வின் நிறம்’:
“எந்தவொரு புதினத்தையும் விட
சுவாரஸ்யமாகவேயிருக்கிறது

ஜன்னல்களினூடே விரியும்
யாருமற்ற ஏகாந்த வெளியில்
ஒன்றையொன்று துரத்தும்
ஜோடி மைனாக்களின்
கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்

காற்றில் வழிந்து வரும்
புல்லாங்குழலை விட
இனிமையான மழலையின் நகைப்பும்….”

அவரவர் துயரத்தின் போது அடுத்தவர் வேதனையையும் எண்ணி பதைக்கும் ஒரு மனதைப் பார்க்க முடிகிறது ‘எவரேனும்’ கவிதையில் எழுப்பட்டக் கேள்வியில்..
“தலை சாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின்கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்

பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
யாரேனும் இருக்கக் கூடுமோ?”

சமுதாயத்தில் அது, இது, எதுவுமே சரியில்லை எனும் எந்நாளும் சலித்துக் கொள்ளும் நாம் சரியில்லாத ஒன்றை சந்திக்க நேரும்போது செய்வதென்ன என்பதை கேட்கிறது, ‘சொல்வதெளிதாம்’. “விட்டு வந்த வயலும் வீடும் குளமும் குயில் கூவும் தோப்பும் கனவுகளாய் இம்சிக்க” ‘நகரமென்னும்’ மாயையான சொர்க்கத்தில் மயங்கி நாம் கிடப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

“காடுகளை அழித்து இன்னொரு காடு” ஆக ‘கான்க்ரீட் காடு’கள்:
“விருட்சங்கள் கூட
எங்கள் வீடுகளில்
இயல்பைத் தொலைத்து
குறுகி நிற்கின்றன

வாழ்விடம் போலவே
மனமும் குறுகிப்போய்
கான்க்ரீட் காடுகளில் வாழும்
நாங்களும் ஆதிவாசிகள்தாம்”

சபிக்கப்பட்ட்டவர்களாய் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் குழந்தைகள் பரம பதத்தில் முன்னேறி சிம்மாசனத்தைப் பிடிக்கிறார்கள் ‘தாயம்’ கவிதையில். ஆனால் காலம் மாறினாலும் சமூகம் முழுவதுமாகவா மாறி விடுகிறது? இன்றும் அங்கே இங்கே எனத் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது கள்ளிப்பால் கதைகள். ‘சன்னமாய் ஒரு குரல்’ பிசைகிறது மனதை:
“உணவென்று நம்பி அருந்திய பால்
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே
உறக்கம் கொண்டு விட்டோம்
கள்ளித்தாய் மடியிலேயே
பெற்றவளின் முகம் கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி
என் முகம் அவள் பார்த்த
தருணமென்றொன்று இருந்திருக்குமா.”

தேர்ந்த நிழற்படக் கலைஞரான இவர் எடுத்த படமே சிறகை விரித்து சிட்டுக் குருவியாய் நிற்கிறது அட்டையில். அனைத்து உயிர்களுக்குமான பூமியை மனிதன் சுயநலத்தோடு ஆக்ரமித்துக் கொள்ள அலைக்கழியும் சிட்டுக்குருவிகளின் ஆதங்கத்தை வடித்திருக்கிறார் ‘பிழைத்துக் கிடக்கிறோம்’ கவிதையில். நெகிழ வைக்கிறது, ‘அந்த இரவில்’ மகனுக்கும் தந்தைக்குமானப் பாசப் பிணைப்பு. மனிதர்கள் சுமந்து திரியும் ‘முகமூடிகள்’, ‘தொடங்கிய புள்ளியிலேயே’ நிற்கிற காலம், மீனவர் துயர் பேசும் ‘ரத்தக் கடல்’, மனசாட்சியை உறுத்த வைக்கும் ‘இன்று மட்டுமாவது’, அன்பெனும் ‘மந்திரச் சொல்’, கடவுளின் ‘கையறு நிலை’, ஆழ்மன வேதனையாய் ‘கணக்குகள் தப்பலாம்’ எனத் தொகுப்பில் கவனிக்கத் தக்கக் கவிதைகளின் பட்டியல் நீண்டபடி இருக்கிறது.

பால்ய காலத்துக்கே அழைத்துச் சென்ற ‘ரயிலோடும் வீதிகள்’ ஏற்படுத்திய புன்னகை வெகுநேரம் விலகவில்லை:
“..அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில் அலறிக்கொண்டு”

அழகியலோடு வாழ்வியலும், அவலங்களோடு ஆதங்கங்களும் வெளிப்படும் கவிதைகளுக்கு நடுவே மனித மனங்களில் நம்பிக்கையை விதைக்கச் செய்ய வேண்டியக் கடமையை மறக்கவில்லை ஆசிரியர். இளையவர் பெரியவர் பாகுபாடின்றி சந்திக்கும் எல்லாத் தோல்விகளுக்கும் தேடித் தேடிக் காரணம் கண்டு பிடித்து, பிறரைக் குறை சொல்லி, தம் தவறுகளை நியாயப்படுத்தியபடியே இருக்கிற உலகம் இது:
“விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்
பெருங்கடலாயினும் குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக் கற்றுக் கொண்ட மீன்கள்.”

ஆசிரியரின் கவிதை மீதான நேசமும் உணர்வுப் பூர்வமான வரிகளும் நம் எண்ணங்களின் சிறகை விரிய வைத்திருக்கின்றன.

வாழ்த்துகள் சாந்தி மாரியப்பன்!

‘சிறகு விரிந்தது’
சாந்தி மாரியப்பன்
‘அகநாழிகை’ வெளியீடு
96 பக்கங்கள், விலை ரூ.80/-
தபாலில் பெற்றிட:
aganazhigai@gmail.com
இணையத்தில் வாங்கிட:
http://aganazhigaibookstore.com

அருமையான மதிப்புரைக்கு மிக்க நன்றி ராமலஷ்மி. மதிப்புரையை அவரது வலைப்பூவிலும் வாசிக்கலாம்.

Tuesday, 2 October 2018

வீதிவலம்.. (நெல்லையப்பர் கோவில்)

சிறு கோவிலோ பெரிய கோவிலோ… அதைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் நடந்தே பார்த்து ரசிப்பது பிடித்தமான ஒன்று. கோவிலை வலம் வந்தாற்போலவும் ஆயிற்று, சுற்றியுள்ளவற்றைப் பார்வையிட்டாற்போலவும் ஆயிற்று என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதுவும் அவ்வீதிகள் ரதவீதிகளாக அமைந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ரதவீதிகளுக்கென்றே ஒரு அமைதியான அழகு இருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, தரிசனம் முடித்து வெளியே வந்ததும் ரதவீதிகளில் உலா வந்தோம்.

கீழரத வீதியில் தெற்கு நோக்கி நடக்கும்போது, நெல்லையப்பர் கோவிலின் எதிரிலிருக்கும் உணவகத்தையொட்டினாற் போலிருக்கும் இருட்டுக்கடையை அறியாதவர் இருக்க முடியாது. பகல் முழுவதும் பூட்டிக்கிடக்கும் கடை மாலை ஆறு மணியளவில் திறந்து வெகு விரைவிலேயே மூடிவிடும். அக்குறுகிய கால இடைவெளிக்குள் அல்வாவை வாங்கி விட வேண்டுமென்று பெருங்கூட்டம் காத்துக்கிடக்கும். முன்பு மாதிரி முண்டியடிக்காமல் இப்பொழுதெல்லாம் மக்கள் வரிசையில் நின்று வாங்கிச்செல்ல ஆரம்பித்திருப்பதால் அப்பகுதியில் நெரிசலும் தள்ளுமுள்ளும் குறைந்திருக்கிறது. நல்ல விஷயம்தான். 
 நெல்லை ஜங்க்ஷனிலிருக்கும் லஷ்மி விலாஸ் இனிப்பகம்

ஜங்க்ஷனிலிருக்கும் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.
கீழரத வீதியிலேயே இன்னும் சற்று நடந்தால் வலப்பக்கம் சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட் உள்ளது. உள்ளே நுழைந்து கொஞ்சம் உடங்குடிக்கருப்பட்டியும் சின்ன வெங்காயமும் வாங்கிக்கொண்டு முறுக்கு வாசனை அழைத்த வழியில் மேலே நடந்தோம். மூன்றடிக்கு மூன்றடி இருந்த அந்தக் குறுகிய இடத்தில் விறகடுப்பில் கைமுறுக்குகள் வெந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்து நடத்தும் கடை அது. வாசனையே பிரமாதமாக இருந்ததால் கொஞ்சம் கைமுறுக்கு வாங்கிக்கொண்டோம். எப்படியிருக்குமோ என்று பயந்ததற்கு மாறாக சுவையாகவே இருந்தது. அடுத்த தடவை செல்லும்போது இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த மார்க்கெட் வீதியில் பார்க்க ஏதுமில்லாததால் திரும்பி நடந்து ரதவீதிக்கே வந்தோம். 
கோவில் வாசல்.

நெல்லையப்பர் கோவில் ராஜகோபுரம்

கீழ ரத வீதியும் தெற்கு ரதவீதியும் சந்திக்குமிடத்தை வாகையடி முக்கு என அழைக்கிறார்கள். அங்கிருக்கும் வாகைமரத்தின் கீழ் கோவில் கொண்டிருக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளாம். கோவிலின் வெளியே இருந்த கடையில் மும்பையில் பொங்கல் சமயம் மட்டுமே காணக்கிடைக்கும் கருப்பு கரும்பின் ஜூஸ் கிடைத்தது வெயிலுக்கு இதமாக இருந்தது. வாகையடி முக்கிலிருக்கும் லாலா கடை, இனிப்புக்கும் பலகாரங்களுக்கும் பெயர் போனதென்று உள்ளூர் மக்கள் சொல்லக்கேள்வி. அங்கிருந்து தெற்கு ரதவீதியிலேயே சில தப்படிகள் நடந்தால் உள்ளூரில் அல்வாவுக்கிணையாகப் புகழ் பெற்ற “திருப்பாகம்” என்ற இனிப்பு விற்கப்படும் கடையொன்று இருக்கிறது. ஒரு சில மளிகைக்கடைகளைத் தவிர அவ்வீதியில் குறிப்பிட்டுச்சொல்லும்படியாக ஏதும் காணப்படவில்லை. 
வாகையடி முக்கு.

தெற்கு ரதவீதி முடிவடைந்து மேற்கு ரதவீதி ஆரம்பிக்கும் முக்கில் சந்திப்பிள்ளையார் கோவில் இருக்கிறது. இரு வீதிகளும் சந்திக்கும் இடத்தில் கோவில் கொண்டிருப்பதால் அவருக்கு அக்காரணப்பெயர். கோவில் திறந்திருக்கும் சமயமானால் உள்ளே சென்று வணங்கலாம். அவ்வாறில்லையெனில் வெளியில் நின்றே மானசீகமாக வணங்கி தோப்புக்கரணமிட்டு குட்டிக்கொண்டு நகரலாம். எவ்வாறாயினும் அவர் அருள் பாலிப்பார். அவர்தான் கருவறையிலும் இருப்பார், கோபுரத்திலும் இருப்பவராயிற்றே. 
மேலரத வீதியில் சிறிதும் பெரிதுமாக நகைக்கடைகள் அதிகமும் காணப்படுகின்றன. வீதியிலிருந்து பிரிந்து செல்லும் சந்துகளுக்கு சமயப்பெரியவர்களான அப்பர், சுந்தரர் இன்னும் பலரின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. “முடுக்கு” என்று தெற்கத்தி மக்கள் அழைக்கும் சந்துகளில் ஒரு சிலவற்றில் பொற்கொல்லர்களின் கடைகள் இருக்கின்றன. ஒரு சமயம் நெல்லை சென்றிருந்த போது ஒரு நகையை ரிப்பேர் செய்ய வேண்டியிருந்தது. பெரிய கடைகளில் ரிப்பேர் வேலைகளை எடுப்பதில்லை எனக்கூறி, அங்கிருந்த பணியாள் ஒருவர் கை காட்டிய போதுதான் பொற்கொல்லர்களின் பட்டறைகள் அங்கிருப்பதை அறிந்தேன். எதிர்பார்த்ததை விட திருப்தியாகவே செய்து கொடுத்தனர். வீதிவலத்தால் கிடைத்த பலன்களில் இதுவுமொன்று.

இலக்கிய மணம் கமழும் பெயர்களைத்தாங்கியுள்ள மேலரத வீதியில் அமைந்திருந்திருக்கிறது அடுக்கு சுடலைமாடன் கோவில். இக்கோயிலில் அய்யன் சுடலைமாடன் பீடம், 21 படிகள் கொண்டு அடுக்கடுக்காக பிரமிடு  போன்ற அமைப்புடன் உள்ளதால் அடுக்குச்சுடலை என்ற காரணப்பெயர் கொண்டது. இவ்வீதியிலிருந்து உட்செல்லும் சுடலைமாடன் கோவில் தெரு மிக முக்கியமானது. //தமிழகத்தின் முக்கியப் படைப்பாளிகளும் அரசியல் தலைவர்களும் வந்து சென்ற சிறப்புடையது. இத்தெருவில்தான் திரு. தி.க.சி. ஐயா அவர்கள் வசித்து வந்தார். தெருவின் இறுதியில், உயர்ந்த அந்தக் காரை வீட்டின் சந்துக்குள் சென்றால், பெரிய வானவெளி தென்படும். அந்தப் பெரிய வளவினுள் கடைசியாய் இருக்கும் வீட்டில் தி.க.சி ஐயா இருந்தார்.//(வரிகளுக்கு நன்றி நாறும்பூ நாதன் அண்ணாச்சி) அவரது தனயனும் மனதை வருடும் எழுத்துக்குச் சொந்தக்காரருமான வண்ணதாசன் ஐயா, கலாப்ரியா அண்ணாச்சி, போன்றோர் வசித்ததும் இவ்வீதியில்தான். சுடலைமாடன் கோவிலிலிருந்து வடக்கு நோக்கி நடந்தால் சற்றுத்தொலைவில் வரும் வைரமாளிகை உணவகத்தை சுகாவின் எழுத்தில் வாசகர்கள் தரிசித்திருக்கக்கூடும்.
மேலரத வீதியும் வடக்கு ரத வீதியும் சந்திக்கும் முக்கிலிருக்கும் பஸ் ஸ்டாப்பின் எதிரேயிருக்கும் டீக்கடையில் டீ நன்றாக இருக்கும் என்ற அரிய தகவலை இங்கே பதிவு செய்வது அதி முக்கியமானதாகும். இவ்வளவு நேரமும் நடந்த களைப்பைப் போக்க சூடாக டீ அருந்தி விட்டு வலத்தைத் தொடர்வது முக்கியம். ஏனெனில் ஆரெம்கேவி, போத்தீஸ், ராம்ராஜ் போன்ற ஜவுளிக்கடல்களும், சின்னச்சின்ன ஜவுளிக்கடைகளும் ஒரு சில நகைக்கடைகளும் இருக்கும் ஆபத்தான இப்பகுதியைக் கடக்க மிகுந்த மனத்துணிவும் உடற்தெம்பும் தேவை. லிஸ்டும் நாலைந்து கோணிகளும் தேவையான பணமும் கொண்டு வந்தால் ஒரு கல்யாணத்துக்குத் தேவையான நகை, மளிகை, ஜவுளி என எல்லாப்பொருட்களையும் இந்த ஒரு வீதியிலேயே வாங்கி விடலாம். வற்றல் வடகத்துக்கென்று பிரத்தியேகமாக இருந்த கடையில் மோர் மிளகாய், சீனியவரைக்காய் வற்றல், மிதுக்கு வற்றல், பாகற்காய் வற்றல் என ஒவ்வொன்றும் அணி வகுத்திருந்தது என் போன்ற நாக்கிற்கு அடிமையானவர்களுக்கு கண் கொள்ளாக்காட்சி. அங்கிருந்து வாங்கி வந்த மிதுக்கு வற்றல் செம ருசி. ரோஜாக்களுக்குப் போட வாங்கிய கடலைப்பிண்ணாக்கு எங்களுடன் மும்பைக்குப் பயணித்தது. ஆனால், வந்தபின் மழையில் நனைந்து வீணானது தனிக்கதை. ரயிலில் கட்டுச்சோறு கட்டுவதற்கான சில்வர் ஃபாயில் டப்பாக்கள் வற்றல் வடகம் கடையிலேயே கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. ஏனெனில் ஒவ்வொரு சமயம் இதெல்லாம் நெல்லையில் எங்கே கிடைக்கும் எனத்தெரியாமல் தேடியலைந்த சிரமம் எனக்குத்தான் தெரியும். 
ஆரெம்கேவியின் புதிய கிளை வண்ணாரப்பேட்டையில் திறந்தாலும் பழைய கடை இன்னும் இயங்கி வருகிறது. கைராசி உள்ள கடை என அக்கம்பக்கம் கிராமத்தார் இன்னும் இதைத்தான் தேடி வருவதாக முன்பொருமுறை அங்குள்ள பணியாளர் சொன்ன ஞாபகம். அவர்களுக்காக பட்டுப்புடவைப்பிரிவு இங்கும் இயங்குகிறது. அருகிலேயே ராயல் டாக்கீசை இடித்துக்கட்டப்பட்ட போத்தீஸ் கம்பீரமாக நிற்கிறது. டீ மற்றும் சிறுதீனிகள் விற்கும் கடைகள், பூ, பழங்கள் விற்கும் வண்டிகள், கரும்பு ஜூஸ், லொட்டு லொசுக்கு சாதனங்கள் விற்பவர்கள் என எப்பொழுதும் இந்த வீதி ஜே ஜே என இருக்கிறது. சீசன் சமயங்களில் கண்ணாடிப்பெட்டிக்குள் மின்னும் நாவல் பழம் வண்ணதாசன் ஐயாவை நினைவு படுத்தியதென்னவோ உண்மை. போத்தீஸின் எதிரே விற்றுக்கொண்டிருந்த பட்டாணி சுண்டல் சூடும் சுவையுமாக இருந்ததில் மகிழ்ச்சி. ஒரு பொட்டலம் வாங்கிக் கொறித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு எத்தனை நேரமானாலும் நடக்கலாம். மல்லி, பிச்சி போன்ற பூக்களுக்கு அலந்து கிடக்கும் மும்பை வாழ்க்கையில் உழன்ற என் போன்றவர்களுக்கு அவற்றைக் கூடை கூடையாகப் பார்ப்பதிலேயே மனம் நிறைந்து விடும்.
வீதிவலம் இங்கே நிறைவுற்றது
ராயல் டாக்கீஸ் முக்கிலிருந்து வலப்பக்கம் திரும்பி, கீழ ரத வீதிக்குள் நுழைந்தால் ஆண்டி நாடார், வேலாயுதம் நாடார் பாத்திரக்கடல்கள் வரவேற்கின்றன. பித்தளை, எவர்சில்வர் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக்கடைகள். எத்தனை கடைகள் வந்தாலும், ஆண்டி நாடார் கடையின் பித்தளைப்பாத்திரங்களுக்கு இன்றும் மவுசு இருக்கிறது. பட்டாணிக்கடலையைக் கொறித்துக்கொண்டே மெல்ல நடந்து கோவில் வாசலை வந்தடைந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டபின் கோவிலின் எதிரில் மண்டபத்திலிருக்கும் வளையல், சுவாமி அலங்காரப்பொருட்கள் மற்றும் கொலு பொம்மைக்கடைகளைப் பார்வையிட்டு வேண்டியதை வாங்கிக்கொண்டு கூட்டுக்குத் திரும்பினோம். 

இருட்டுக்கடை அல்வா வாங்கவில்லையா? எனக் கவலைப்படும் சமூகத்திற்கு… அதெல்லாம் ஜங்ஷனில் லஷ்மி விலாசிலேயே வாங்கியாயிற்று. லஷ்மியும் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்சும் ஜங்க்ஷனில் எதிரெதிரே இருப்பது எத்தனை வசதியாயிருக்கிறது தெரியுமா?.

LinkWithin

Related Posts with Thumbnails