Friday, 4 November 2022

துணை.. (அகநாழிகையில் வெளியானது)

சிலுசிலுவென ஜன்னல் வழியாக பேருந்தின் உள்ளே வீசிய காற்று கண்ணைச்சொக்க வைத்தது, சற்று தலை சாய்த்து உறங்கினால் நன்றாயிருக்கும்தான், ஆனால் முடியாது. பருவ வயதிலிருக்கும் மகளை அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறாள், அதுவும் நேரங்கெட்ட நேரத்தில். கடைத்தெருவில் ஷாப்பிங் சுவாரஸ்யத்தில் ‘ஆ’வென வாயைப் பிளந்து கொண்டு கடைகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்த மகளை கைப்பிடியாக இழுத்துக்கொண்டு வந்தும் கடைசி பஸ் கிளம்பி மெல்ல நகர ஆரம்பித்து விட்டிருந்தது. இரண்டு பெண்கள் ஓடி வருவதைக் கண்ட டிரைவர் பஸ்ஸை நல்ல வேளையாக பஸ்ஸை நிறுத்தினார். ஏறியமர்ந்து படபடப்புக் குறைந்ததும் ஒரு வாய் தண்ணீரைக் குடித்துக்கொண்டாள்.

அவள் புருஷனுக்கு மாதாமாதம் தன் பெற்றோரைப்பார்த்தே ஆக வேண்டும். தனியாகவும் அவ்வப்போது குடும்பத்தோடும் வருபவன், இந்த முறை பக்கத்து ஊர் திருவிழாவுக்கென குடும்பத்தை இழுத்து வந்திருந்தான். “அரப்பரீச்ச வருதுப்பா.. படிக்கணும்” என சிணுங்கிய மகளுக்கு, ரங்கராட்டினம், ஜவ்வு மிட்டாய் என ஆசை காட்டியிருந்தான். அவன் மட்டும் இப்போது கூட வந்திருந்தால் பயமில்லாமல் இருந்திருக்கும். கடைசி பஸ் போய்விட்டால் கூட ஆட்டோவிலோ, காரிலோ ஊருக்குப் போய் விடலாம். இந்நேரத்துக்கு இப்படி ஓடிச்சாட வேண்டியதில்லை.  “அக்கா மகளுக்கு சடங்கு வெச்சிருக்கு, நீயே போயி புடவை எடுத்து வா” என அனுப்பி விட்டான். “தொணைக்கி ஒரு பொம்பளையாளு கூட வராம ஒத்தைக்கி எப்பிடிப்போக?” என்றவளிடம், “இந்தா… இந்த பெரிய மனுசியைக் கூட்டிக்கிட்டுப் போ, நல்லா செலக்ட் பண்ணுவா” என மகளைத் தள்ளி விட்டு விட்டான். ஷாப்பிங் போகும் உற்சாகத்தில் அதுவும் ஒட்டிக்கொண்டு விட்டது. சொந்தக்காரப் பெண்கள் யாரையாவது அழைத்துக்கொண்டு போகலாமென்றால், “ஏ… அவளுக வந்தா இஷ்டத்துக்கு எடுப்பாளுக, நம்ம பட்ஜெட்ல முடியாது. சத்தங்காட்டாம போயிட்டு வான்னா கிராக்கி பண்ணுதியே?” என புருஷன் முறைக்கவும் கிளம்பி விட்டாள்.

கடைத்தெருவுக்கு வந்து புடவை, இதர துணிமணிகள், அலங்கார சாமான்கள் என எல்லாவற்றையும் வாங்கும் வரை எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. அப்புறம்தான் மகளரசி கடைத்தெருவை அளக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு கடையாக ஏறி “ஷோ கேஸ்ல பாக்கச்செல நல்லாருந்துது, கிட்ட போய்ப்பாக்கைலதான் பவுசு தெரியுது” என இறங்கிக்கொண்டிருந்தாள். “எம்மா.. மல்லிப்பூவு” என்றவளுக்கு வாங்கிக்கொடுத்து, “எங்கியோ பலாப்பழம் மணக்கு” என வாசம் பிடித்தவளுக்காக தெருமுனை வரை தேடி வாங்கிக்கொடுத்து, கூடவே தான் ரொம்ப நாளாய் ஆசைப்பட்ட வெங்கலப்பானைக்காக பாத்திரக்கடைக்குள் நுழையும்போது இருட்ட ஆரம்பித்திருந்தது. முழுசாக ஒரு மணி நேரத்தைச் செலவிட்டு விட்டு வெளியே வரும்போதுதான், “எப்பா… கடைசி பஸ்ஸு போயிருமே” என உறைத்தது.

முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டவள் பஸ்ஸுக்குள் சுற்றுமுற்றும் நோட்டமிட்டாள். அரிசியும் உளுந்தும் விரவினாற்போல் ஆணும் பெண்ணுமாய் இருந்த கூட்டம், ஒவ்வொரு நிறுத்தத்திலும் கரைந்து ஆண்கள் மட்டுமே அதிகமாகக் காணப்பட்டனர். அவளுள் கிளம்பிய பயஊற்று வியர்வை ஆறுகளை உற்பத்தி செய்தது. “இன்னும் நாலஞ்சு ஸ்டாப்தானே.. ஊருக்குப் போயி இறங்கிரலாம்” என மனம் சமாதானம் செய்தாலும், “பயவுள்ளை பராக்குப் பாத்துக்கிட்டு இவ்வளவு நேரம் ஆக்கலைனா எப்பமோ பத்தரமா போயிருக்கலாம், நீ ஊருக்கு வா,… ஒன்ன செரியாக்குதேன்” என ஒரு பக்கம் கறுவிக்கொண்டும், “வளந்த பொம்பள எனக்கே ஆசய அடக்கத்தெரியல, கூடச்சேர்ந்து திரிஞ்சிக்கிட்டு, இப்ப சின்னப்புள்ளயச்சொல்லி என்ன பலன்?” என இன்னொரு பக்கம் மனதை ஆற்றிக்கொண்டும் இருந்தாள்.

‘டமால்’ என தலை முன்னிருக்கைக் கம்பியில் இடிபட, சிந்தனை கலைந்து நிமிர்ந்து அமர்ந்தாள். பஸ் கும்மிருட்டில் நின்றிருந்தது மட்டும்தான் புரிந்ததே தவிர எந்த ஊர்ப்பக்கம் நிற்கிறது எனத்தெரியவில்லை. கண்களைக்கொட்டித்தட்டி வெளியே இருட்டில் நோக்கினாள். ஏதோ ஓர் ஊர் விலக்கில் உறுமிக்கொண்டே பஸ் நின்றிருந்தது. கூர்ந்து நோக்கினாள்.. இவர்களது ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டரிலிருக்கும் ஊர்தான். ‘அப்பாடி!! ஊர் கிட்ட வந்துட்டுது’ என சற்று ஆசுவாசப்பட்டது நிலைக்கவில்லை.

“பஸ்ஸு எங்க ஊருக்குள்ள போயே ஆவணும், அதெப்படி ஊருக்குள்ள போவாம இருக்கும்ண்ணு பாத்துருகேன்” ஒருத்தன் நடத்துனரிடம் சலம்பிக்கொண்டிருந்தான்.

“ஏ.. காருக்குள்ள ஏறச்செலயே சொன்னம்லா? பஸ்ஸு ஊருக்குள்ள போவாது, வெலக்குலதான் நிக்கும்ன்னுட்டு. அப்பம்லாம் மண்டைய ஆட்டிட்டு இப்பம் எகுறுனா எப்பிடிரே?”

“அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது. பஸ்ஸு ஊருக்குள்ள போகணும்ன்னா போய்த்தான் ஆகணும், இல்லண்ணு வைய்யி… நாளப்பின்ன ஒம்பஸ்ஸு ரோட்டுல ஓடாது பாத்துக்க” வாய் குழறச்சொன்னான் ஒருத்தன்.

“ஆமா மாப்ளே.. ஊர்ல திருழா நடக்கு, இந்த நேரம் ஊருக்குள்ள பஸ்ஸுல போயி எறங்கினாத்தான் கெத்து. வெலக்குல எறங்கி நடந்தம்ண்ணு கேட்டா ஒரு சொந்தக்காரனும் மதிக்க மாட்டான்” என குழறலுடன் ஆமோதித்தான் அடுத்தவன்.

“சொந்தக்காரன் மதிக்கணும்ன்னா சொந்தக்கார்ல போவெண்டியதுதான? எறங்கவும் செய்யாம எங்க உசிர எடுக்குதியே?. எண்ணேன்… இவுனுவோ எறங்கலைன்னா கெடக்கட்டும், நீங்க பஸ்ஸ எடுங்க”  நடத்துனர் ஓட்டுநரைப்பார்த்துச்சொன்னார்.

சட்டென எகிறினான் ஒருவன் “வண்டி ஒரு அடி பைபாஸ்ல நவுந்திச்சி… அவ்ளோதான், குதிச்சிருவேன்” 

ஓட்டுநர் செய்வதறியாது திகைத்தார். பாயிண்ட் டு பாயிண்ட் போகும் பஸ் எனத்தெரிந்தும், ஏறி விட்டு வம்பு பண்ணுகிறார்கள். இன்றைக்கு இவர்களுக்காக ஊருக்குள் பஸ்ஸை விட்டால், நாளைக்கு இதைப்போல் இன்னும் பலரும் நினைத்த இடத்தில் பஸ்ஸை நிறுத்தச்சொல்வார்கள், வேலைக்கும் ஆபத்து வரும். “சவத்தெளவு தண்ணியைப்போட்டுட்டு நம்ம உசுர வாங்குதுகள்” எரிச்சலுடன் இஞ்சினை ஆஃப் செய்தார். “ஊருக்குள்ளல்லாம் பஸ்ஸு வராது, வேலையக்கெடுக்காம ஒழுங்கா எறங்கிப்போங்க, இவுனுவோ எறங்கற வரைக்கும் பஸ்ஸு நவுராது” பயணிகளைப்பார்த்து பொதுவாகச்சொல்லி விட்டு நெட்டி முறித்தார்.

இவளுக்கு சொரேரென்றது. ‘நல்லா வந்து மாட்டிக்கிட்டோமே’ என அழுகையாக வந்தது. சுற்றுமுற்றும் பஸ்ஸுக்குள் பார்த்தாள். நாலைந்து ஆண்கள் மட்டுமே இருந்தனர். வயிற்றில் புளி கரைத்தது, “இவுனுவள வெலக்கி விடாம ஓரோருத்தனும் வேடிக்க பாத்துட்டிருக்கதப்பாரு.” மகளிடம் முணுமுணுத்தாள்.

“எம்மா.. சும்ம இரும்மா”

பரிதவிப்புடன் ட்ரைவரைப்பார்த்தாள், அவன் எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பி வைத்திருந்தான்.

“உள்ள நேரம் அம்புடும் ஊரு சுத்திட்டு, இப்பப் பாரு, நல்லா வந்து மாட்டியிருக்கோம். கொஞ்சமாது வடவருத்தம் இருந்தா சட்டுனு பொறப்பட்டுருப்பே” எல்லா எரிச்சலையும் மகள் மேல் திருப்பினாள்.

“நாம் மட்டுந்தானா? நீங்களுந்தான் பாத்திரக்கடைல..” 

“சரி சரி.. வாய மூடு. பதிலுக்குப்பதுலு பேச மட்டும் படிச்சு வெச்சிருக்கே. எல்லாம் அப்பனூட்டு புத்தி”

ட்ரைவர் பின்னால் திரும்பிப்பார்த்த ஒரு சமயம், ‘தயவு செஞ்சு வண்டிய எடுப்பா’ என விழிகளால் கெஞ்சியபடி அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் கையெடுத்துக்கும்பிட்டாள்.

ஒரு கணம் பதறிய அவன், சண்டையை விலக்கி விடப்போவது போல் எழுந்து நடத்துனரிடம் போனான், கிசுகிசுவெனப்பேசினான். மறுபடி வந்து ஒன்றுமே நடவாவது போல் இருக்கையில் அமர்ந்து, பக்க வாட்டில் சொருகி வைத்திருந்த ஒரு அழுக்குத்துணியை எடுத்து, பஸ்ஸின் கண்ணாடிகளைத்துடைக்க ஆரம்பித்தான்.

அவளுக்கு பஸ் உடனே கிளம்புமென்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னும் நேரமானதென்றால் புருஷனிடமும் புகுந்த வீட்டாரிடமும் பேச்சு வாங்க வேண்டி வரும். ஊரிலுள்ள தெய்வங்களையெல்லாம் துணைக்குக் கூப்பிட்டாள். இரவு நேரம் அவையெல்லாம் தூங்கப்போய் விட்டதோ என்னவோ ஒரு தெய்வமும் அவளுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்க்கவில்லை. அவளுக்குப் படபடப்பாக வந்தது. பிபி எகிறும் போல் இருந்தது. பாட்டிலிலிருந்த தண்ணீரைக்குடித்துக்கொண்டாள்.

“ஏட்டி.. அப்பாக்கு போன் போட்டு விஷயத்த சொல்லு, முடிஞ்சா கெடைக்கற வண்டிய எடுத்துட்டு வரச்சொல்லு”

“எம்மா.. சார்ஜ் இல்லாம மொபைலு எப்பமோ ஆஃப் ஆயிட்டு”

“எப்பம் பாத்தாலும் அதயே நோண்டிக்கிட்டிருந்தா? ஒரு அவசரத்துக்கு ஆவுமுன்னு வாங்கிக்குடுத்தா, இப்பிடியா கால வாரும்!? இப்ப என்ன செய்ய?”

“எம்மா.. நீ கொஞ்சம் அமைதியா இரு, இப்பிடி படபடன்னு வந்தா ஒண்ணும் பிரயோசனமில்ல. பொறுமையா இரும்மா, நீ பதட்டப்பட்டா எனக்கும் பதட்டமாவுதுல்லா”

“அவுனுவோ எறங்கற மாரியும் தெரியல, பஸ்ஸு கெளம்பற மாரியும் தெரியல, அர மணிக்கூரா சண்ட புடிச்சிட்டிருக்கானுங்க. ஏட்டி… ஊரு கிட்டதாம் வந்துருக்கோம். எறங்கி நடந்துருவோமா?” மகளிடம் கேட்டாள்.

“இந்த இருட்டுக்குள்ளயா?”

“இருட்டு என்ன இருட்டு? சர்ரு சர்ருன்னு ரோட்டுல பஸ்ஸும் லாரியுமா ஓடிட்டுதான இருக்கு? வெளிச்சத்துல நடந்துரலாம்”

“பயமா இருக்கும்மா..” 

இவளுக்கும் பயமாகத்தான் இருந்தது. திருவிழாவை சாக்கிட்டு சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. வயசுப்பெண்ணுடன் பத்திரமாக ஊர் போய்ச்சேர வேண்டும். ‘எங்கள பத்தரமா வீடு சேத்துரு முத்தாலமா, ஒனக்கு பொங்கலு வைக்கேன்’ இழுத்து மூச்சு விட்டு படபடப்பை சமப்படுத்திக்கொண்டாள். 

“அம்மை நானிருக்கையில் ஒனக்கெதுக்கிட்டி பயம்? வா..”

குனிந்து காலடியில் இருந்த கட்டைப்பைகளை எடுத்துக்கொண்டாள், சேலையை இழுத்துச்செருகிக்கொண்டாள். மகள் பின்தொடர பஸ்ஸை விட்டிறங்கி விறுவிறுவென நடந்தாள். ரோட்டில் ஓடிய வண்டிகளின் முன்விளக்கு வெளிச்சத்தால் மரங்களின் நிழல்களும் நெளிந்து வளைந்து ஓடியது கிலியைக்கிளப்பியது. மகளைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டாள். இன்னும் சற்று தூரம்தான், கூப்பிடு தூரத்திலிருக்கும் கலுங்கைக் கடந்து ஐம்பது தப்படிகள் நடந்து விட்டால் போதும் இவர்களது ஊர் வந்து விடும், அதன்பின் பயமில்லை. ஆனால் கலுங்கை ஒட்டினாற்போல் நிற்கும் ஆலமரத்தைக் கடக்கத்தான் பயமாயிருந்தது. தலைக்குக்குளித்த பெண்ணொருத்தி கூந்தலை விரித்துக் காய விட்டிருப்பது போல் விழுதுகள் அடர்ந்து தொங்கி திகிலூட்டின.

“எங்களுக்கு நீதான் தொண ஆத்தா..” வாய்க்குள் முணுமுணுத்தவாறு பர்சில் வைத்திருந்த குங்குமப்பிரசாதப் பொட்டலத்தைத் தடவி எடுத்துப் பிரித்து ஒரு கிள்ளு எடுத்து மகளுக்குப் பூசி விட்டு, தானும் இட்டுக்கொண்டு தலையைக்குனிந்து கொண்டு விறுவிறுவென நடக்கலானாள். ஊர் முகப்புக்கு வந்ததும்தான் மூச்சே வந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் பைகளைப் போட்டு விட்டு “அப்பாடி..” என தளர்ந்து அமர்ந்தாள். 'பத்தரமா வந்து சேந்துட்டமே' என உற்சாகமாகவும் தன்னை நினைத்துப் பெருமிதமாகவும் இருந்தது. இவ்வளவு நேர மனக்கலவரத்தில் கவனத்துக்கு வராத அடிவயிற்றுக்கனம் ‘என்னைக் கவனி’ என்றது. எழுந்து கொல்லைப்புறத்திலிருந்த பாத்ரூமுக்கு நடந்தாள்.

“பொறவாசல்ல லைட்டு இல்ல, ஒத்தையில போகாத.. பயப்புடுவ. இன்னா கணேசன தொணைக்கி வரச்சொல்லுதேன் கூட்டிட்டுப்போ. லேய் மக்கா கணேசா.. அத்த கூட போலே”

‘தைரியமா ரோட்டுல முக்காஇருட்டுக்குள்ள மக கூட ரெண்டு ஊர கடந்து வந்த நாப்பது வயசு பொம்பளைக்கி, நாழி ஒசரம் கூட இல்லாத ஆம்பளப்பய தொணையா? அதுவும் வீட்டு காம்பவுண்டுக்குள்ளயே!!.. சர்தாம் போ’

அழுவதா சிரிப்பதா என அவளுக்குத்தெரியவில்லை. அவ்வளவு நேரமும் இருந்த உற்சாகம் பொசுக்கென்று வடிந்து விட்டிருந்தது, பெருமிதம் உடைந்து விட்டிருந்தது. அதை உடைத்த விரல்களை முறித்துப்போட விரும்பினாள். 'முறித்துப்போடப்போட இன்னும் உடைப்பார்கள். கடந்து செல்' என்றது உள்ளிருந்து ஒரு குரல். தான் சற்று நேரம் முன் நிகழ்த்திய சாகசத்தைக்கூட முட்டாள்தனமாகத்தான் சொல்வார்கள், 'போகட்டும்..  ஒரு பெரும் பொக்கிஷம் போல் அதை மனதுக்குள் பத்திரப்படுத்திக்கொள்' என்றது அது.

அவள் தெளிவானாள்..

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி.


Wednesday, 12 October 2022

உப்புமா கவியரங்கம்..


அப்படியே உண்பேம் அருகில் வடையுண்டு
உப்புமாவிற் கேற்ற துணை

முந்திரி உப்புமா மூக்குவரை தின்னாலும்
எந்திரி என்னாதே நாவு

சுந்தரியைத் தள்ளுவோ ராயினும் தள்ளாரே
முந்திரி உப்புமா காண்

அடையிட்லி யாப்பம் அரங்கில் இலையேல்
தடையுடைத் துப்புமா போம்

சம்பா ரவையொடு சேமியா சவ்வரியாம்
ஏம்பா மறந்தீர் அவல்

சிறுபசியோ தீப்பசியோ ஐயமிலை உப்மா
உறுபசி தீர்க்கும் உணவு

ஏங்கிய உப்புமா வின்துணை யாகவே
இங்கே யமர்ந்த வடை.

டிஸ்கி: ஃபேஸ்புக்கில் தம்பி ஐயப்பனின் டைம்லைனில் நடந்த காலட்சேபம் இங்கேயும் மறு பதிப்பாக.

Thursday, 8 September 2022

அக்கா (துளசி கோபால்) - புத்தக மதிப்புரை

புத்தகம்: அக்கா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
ஆசிரியர்: துளசி கோபால்

பதிவுலகில் எங்கள் அனைவராலும் அக்கா என அன்போடு அழைக்கப்படும் துள்சிக்கா என்ற துளசி கோபால், தனது அக்காக்களோடும் அண்ணனோடும் கழித்த இளம்பிராயத்து அனுபவங்களைக் கட்டுரைகளாகத் "துளசி தளம்" என்ற தனது வலைப்பூவில் எழுதி வந்தார். அவ்வனுபவங்களின் தொகுப்பே “அக்கா” என்ற தலைப்பில் தனி நூலாக மலர்ந்திருக்கிறது. அக்கா என்றதும் எனக்கு கலாப்ரியா அண்ணாச்சியின்,

“கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்குமென்று
தங்கச்சிப் பாப்பாக்களைத்
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்காக் குழந்தைகள்”

என்ற புகழ்பெற்ற கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. அக்காக்கள் அப்படித்தான். அக்கா என்பவள் இன்னொரு தாயும் கூட. 

அக்காக்களின் கதையைச்சொல்ல வந்த துள்சிக்கா, அதனுடன் தன் கதையையும் பின்னியே சொல்லியிருக்கிறார். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும் மூன்று சகோதரிகளின் வாழ்வும் மூன்று வெவ்வேறு திசைகளில் பயணித்திருக்கின்றன. அக்காக்கள் என்றால் அவர்கள் தனி மரமா? மாமாக்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் வாழ்க்கை முறை என எல்லாமும் சேர்ந்த தோப்புதான் அக்கா.

அக்கா என்றால் இன்னொரு அம்மாதானே? துள்சிக்காவின் பெரியக்காவைப்பற்றி வாசிக்கும்போது எனக்கு அவர் துள்சிக்காவின் இன்னொரு அம்மா என்றுதான் தோன்றியது. அந்தப்பகுதியை வாசிக்கும்போது துள்சிக்காவின் ஞாபகசக்தியை வியந்தேன். எவ்வளவு சிறுசிறு விஷயங்களைக்கூட ஞாபகம் வைத்து எழுதுகிறார்!. முக்கியமாக, நீளமான எலி போன கதை, அக்கா வீட்டில் மெழுகிக்கோலம் போடும் முறை, வீட்டில் என்ன நடந்தாலும்“நானு” என எல்லாவற்றுக்கும் குழந்தை ரேணு சொல்லும் விதம், முக்கியமாக அக்காவின் கல்யாணக்கூரையான பனாரஸ் பட்டுப்புடவையைக் கட்டிக்கிழித்தது, முத்தாய்ப்பு வைத்தது போல் அப்பா தனது கடைசி நாட்களை மூத்த மகள் வீட்டில் கழித்தது என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

சின்னக்காவிற்கும் அண்ணனுக்குமிடையே அகப்பட்டுக்கொண்டு சின்ன துள்சிக்கா பட்ட பாடு நமது உடன்பிறப்புகளிடையே ஏற்படும் விளையாட்டுச் சண்டைகளைக் கண்டிப்பாக நினைவூட்டும். இருவருக்கும் சமரசம் ஏற்பட்டிருக்ககூடாதா என்ற ஏக்கம் தோன்றியது நிஜம். சின்னக்காவையும் அவரது நறுவிசான காரியங்களையும் வாசிக்க வாசிக்க, அவரைக்கொண்டு போன எமன் மேல் கோபம் வந்தது. சின்னக்காவுடன் துள்சிக்கா பூவுக்குப் பங்கு கேட்கும் முறையையும், அம்மா மற்றும் அக்காக்களுடன் சினிமாவுக்குக் கிளம்பும் வைபவம் பற்றியும் விவரித்திருப்பதை வாசிக்கும்போது, அந்த உணர்வை நம்முள் நேரடியாகக் கடத்திவிடுகிறார். சிறந்த கதை சொல்லியான துள்சிக்கா.

மருத்துவரான அம்மா இருந்த வரைக்கும், கதம்பமாய் ஒற்றுமையாய் இருந்த உடன்பிறப்புகள், அவரின் இறப்புக்குப்பின் சிதறிப்போவதும், அந்தக்குடும்பம் கொஞ்சங்கொஞ்சமாய்க் கலைவதும் வாசிக்கும்போதே வலி தருகிறது. அக்காக்களின் கல்யாணம் பற்றி விவரிக்கும்போதே, அம்மா வழி குடும்பத்தையும் சற்று நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அம்மம்மாவுடன் நிகழ்த்தும் “நடு வீடு” கலாட்டா நகைக்க வைத்தது.

அக்காக்கள் என்பவர்கள் நிச்சயமாக அபூர்வப்பிறவிகள்தான், இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக அவரவர் அக்காக்கள் நினைவுக்கு வருவது உறுதி. தனது வலியைக்கூட புன்னகையுடன் நகைச்சுவையுணர்வுடன் சொல்வது எங்கள் துள்சிக்காவின் சிறப்பியல்பு. இப்புத்தகத்திலும் அது வெளிப்பட்டுள்ளது. கையிலெடுக்கும் ஒவ்வொருவரும் புன்னகை தவழ வாசித்து முடிப்பது உறுதி.

Sunday, 28 August 2022

அளம் - புத்தக மதிப்புரை


கணவன் மனைவி இருவரில் பொருளீட்டும்பொருட்டு மனைவி பிரிந்து சென்றாலோ, குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்காத பொறுப்பற்ற ஊதாரியாய் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, கணவன் மீதி வாழ்க்கையைத் தொடர, குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிக் கரையேற்ற மிகவும் சிரமப்படுவான். அதுவே கணவனின் துணையும் ஆதரவும் இல்லாத சூழலில் வாழ நேர்ந்தால், மனைவியானவள் குடும்பத்துக்கே அச்சாணியாய் இருந்து எப்பாடு பட்டாவது குழந்தைகளை வளர்த்துக் கரை சேர்த்து விடுவாள். அப்படி கரை சேர்க்குமுன் அவள் படும் பாடுகளும் நடத்தும் போராட்டங்களும்தான் எத்தனையெத்தனை!!!! 

சின்னச்சின்ன கவலைகள் வந்தாலும் உடைந்து போவார்கள், தானும் பயந்து துவண்டு பிறரையும் பயத்துக்கு உள்ளாக்குவார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள். ‘பொசுக் பொசுக்கென’ அழுது தீர்ப்ப்பார்கள். ஆகவே, மலரினும் மெல்லியர் பெண்கள் எனக்கூறப்படுவதுண்டு. அப்படி மென்மையான பெண்கள்தான், வாழ்வில் விழும் அடிகளால் கெட்டிப்பட்டு, வலிமையானவளாகவும் பொறுப்பானவளாகவும் மாறுகிறாள். அதுவும், அசாதாரணமான சூழ்நிலைகளில் “அடுத்து என்ன செய்ய?” என கணவன் கலங்கி நிற்கும் சமயங்களில், “பாத்துக்கலாங்க.. சமாளிப்போம்” என அவள் கூறும் வார்த்தைகளில் கணவனுக்கு புதுத்தெம்பே அல்லவா வந்து விடுகிறது!.

ஆண் இல்லாவிட்டாலும் பெண் ஓய்ந்து உட்கார்ந்து விடுவதில்லை. குடும்பத்தைத் தாங்கிப்பிடிக்கப்போராடுகிறாள், ‘பொம்பள வளத்த புள்ளதானே?’ என்றொரு சொல் தன் பிள்ளைகளின் மேல் விழுந்து விடக்கூடாதென பிள்ளைகளை, முக்கியமாகப் பெண்பிள்ளைகளை அடைகாத்து வளர்க்கிறாள். அவளில்லாவிட்டால் குடும்பம் நிச்சயமாக இருண்டுதான் போய்விடுகிறது. நாளொரு பாடு, பொழுதொரு போராட்டமென தினந்தினம் செத்துப்பிழைக்கும் அப்பெண்களின் பிரதிநிதியான சுந்தராம்பாள் மற்றும் அவளது மூன்று மகள்களின் கண்ணீர்க்கதையை “அளம்” நாவலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி.

கப்பலில் வேலை செய்து சம்பாதித்து வருவதாகச்சொன்ன பொன்னையன் நாவலின் இறுதி வரி வரை திரும்பி வரவேயில்லை. வேலைக்குச் சேர்த்து விட்ட இடத்திலிருந்து காணாமல் போய் விடுகிறான். கோயில்தாழ்வு ஊரிலிருக்கும்போதும் குடும்பத்துக்காகச் சம்பாதிக்காமல் வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தவன்தான் ஆகவே அவன் இருந்தாலும் இல்லாமற்போனாலும் உழைத்தாக வேண்டிய பொறுப்பு சுந்தராம்பாளுக்குத்தான். கஷ்டத்தையும் கண்ணீரையுமே சொத்தாகக் கொண்டிருக்கும் அவர்களை இயற்கைச்சீற்றமும் தன் பங்குக்குச் சோதிக்கிறது. எழ நினைக்கும்போதெல்லாம் அடித்து உட்கார வைக்கிறது. வீடு, ஆடு மாடுகள்,  விளைந்து நிற்கும் பயிர் என எல்லாவற்றையும் நந்தன, மன்மத வருடங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தில் பறிகொடுத்து நிற்கிறார்கள். புயல் வீசும் அத்தியாயத்தை வாசிக்கும்போது, “கஜா” புயல் நினைவுக்கு வந்தது.

இரண்டு முறை திருமணம் செய்து கொடுத்தும் விதவையாய்த் தாய்வீட்டுக்கே மறுபடி மறுபடி வந்து சேரும் வடிவாம்பாள், மகிழ்வாய் ஆரம்பித்த மணவாழ்வு கணவன் வேறு திருமணம் செய்து கொண்டதால் கருகி விட, மூன்று குழந்தைகளுடன் தாய்வீட்டுக்குத் திரும்பும் இரண்டாவது மகளான ராசாம்பாள், கல்யாணமாகாத கடைசிப்பெண் அஞ்சம்மாள் என அவர்களது குடும்பமே நிலைகுலைந்து போகிறது. அவர்களது அயராத உழைப்பை மட்டுந்தான் விதியால் பறிக்கவியலவில்லை. சுப்பையன் சிங்கப்பூரில் எங்கோ இருக்கிறான் என்ற நம்பிக்கையிலேயே நாட்களை ஓட்டுகிறார்கள். என்றாவது ஒரு நாள் அவன் திரும்பி வரக்கூடும், தங்களைத் தேடுவான் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதால் கோயில்தாழ்வை விட்டு வெளியூருக்குப் பிழைக்கப்போகாமல் எல்லாச் சோதனைகளையும் தாங்கிக்கொண்டு அங்கேயே இருப்பது நெகிழ வைக்கிறது என்றாலும், குடும்பத்தின் மேல் அக்கறை கொள்ளாத ஒருத்தனுக்காக இவ்வளவு சிரமங்களைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 

வாட்டும் வறுமையில் வயிற்றுப்பாட்டைக்கழிக்க அன்றாடங்காய்ச்சியான அவர்கள் படும் பாடுகள் அநேகம். இயற்கையும் அவர்கள் மேல் கருணை கொண்டு, மின்னிக்கிழங்கு, கொட்டிக்கிழங்கு, கார கொட்டிக்கிழங்கு, அதலை விதைகள், தொம்மட்டிக்காய்களும் பழங்களும் என அள்ளி வழங்கி அரைவயிற்றுக்காவது பசியைத்தீர்க்கிறது. உப்பளத்தில் வேலைக்குச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கெனச் சொந்தமாக ஒரு துண்டு உப்பளத்தை வாங்குகிறார்கள். ஆண் துணையற்ற அக்குடும்பத்துக்கு அந்த உப்பளம்தான் இறுதியில் துணையாகிறது. அதில் விளையும் உப்பில் அவர்களது கண்ணீர் கலந்து இன்னும் கரிக்கலாம், யார் கண்டது?

நாவலில் நெடுக வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளின் வட்டார வழக்கு இடையோடுகிறது. அத்துடன், நெய்தல் நிலமான அப்பகுதிகள் மற்றும் உப்பளங்களின் நிலவியல் அமைப்பை மிகவும் அழகாகவும், அந்த எளிய பெண்களின் போராட்டத்தை யதார்த்தமான தனது எழுத்தால் அழுத்தமாகவும் இந்த வாழ்வியல் நூலில் பதிவு செய்துள்ளார் தமிழ்ச்செல்வி..

நூல்: அளம்
ஆசிரியர்: சு. தமிழ்ச்செல்வி
வெளியீடு: ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

Saturday, 27 August 2022

“நேரா யோசி" - புத்தக மதிப்புரை


திரு. சுதாகர் கஸ்தூரியின் இப்புத்தகம் சுயமுன்னேற்றப் புத்தகமா எனில் ஆம், ஆனால் உளவியல் ரீதியான சுய முன்னேற்றப்புத்தகம் என்று கூறலாம். ஒரு மனிதன் முன்னேற முட்டுக்கட்டையாய், தடைக்கல்லாய் இருப்பது எவ்விதமான வெளிக்காரணியுமல்ல.. முழு முதற்காரணி அவனேதான். அவன் எனில் அவனது மனம், அந்த மனத்தை அவன் கையாளும் விதம், அவன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாங்கு, அவற்றைத் தீர்க்கும் விதம், தன்னைப்பற்றி அவன் கொண்டிருக்கும் சுய மதிப்பீடு, அவனது பொறுப்புணர்வு என பலவும் கொண்டது. அவையே பெரும்பாலும் அவனது வெளித்தெரியாத எதிரிகளுமாகும்.

“எண்ணித்துணிக கருமம்” என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி மனங்குவித்துச் சிந்தனை செய்யப்புகும்போது, இந்த எதிரிகள்தான் தடையாக வந்து நிற்பர். இந்நூலில் அப்படிப்பட்ட 26 எதிரிகளை நமக்கு இனங்காட்டி, அவர்களை வெல்லவும் தாண்டிச்செல்லவும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது, “அட!! ஆமால்ல” என நாமும் ஒத்துக்கொள்கிறோம். நம்மில் உறையும் ஒவ்வொரு எதிரியையும் இனங்காண்கிறோம். இவற்றில் ஒவ்வொரு எதிரியும் முக்கியமானவர்தான் எனினும் என்னளவில், பின்னூட்டமற்ற போக்கு, சுய இரக்கம், விருப்பமும் முன் முடிவுகளும், பிரசார விளைவு மற்றும் செய்தி விளைவு, தேர்ச்சியெனும் பொறி, எல்லையற்ற நற்பண்புகள் போன்றவற்றை மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். “நான் எதைச்செஞ்சாலும் வெளங்காது” என்ற கழிவிரக்கம் நம்மை ஒரு அடி கூட முன்னேற விடாமல் அப்படியே அங்கேயே ஆணியடித்தாற்போல் அமரச்செய்து விடும். அப்புறம் முன்னேற்றமாவது ஒன்றாவது..

மனம், மூளை இரண்டும் ஒன்றா வெவ்வேறா என்ற விவாதம் அவ்வப்போது எழுந்தடங்குவது உண்டு. நம் சிந்தனையின் வேகத்திற்கேற்ப மூளையின் செயல்பாடுகள் மாறுவதும், மூளையிலேற்படும் மாற்றங்களுக்கேற்ப நம் சிந்தனைகள் அமைவதும் உண்டு. Anxiety எனப்படும் மனப்பதற்றப்பிரச்சினை உள்ளவர்களுக்கு, சிறுசிறு பிரச்சினைகள் வந்தால் கூட அதை எதிர்கொள்ள கடினமாக இருக்கும், பயம் வந்து மூடிக்கொள்ளும், இதயத்துடிப்பு எகிற, உடல் முழுதும் வியர்த்து வழிய துவண்டு போவார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்யும், அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஏதோ சிங்கம் புலியை நேரில் கண்டாற்போல் பயப்படுவார்கள். அந்த பயமே அவர்களை சிறைப்படுத்தி விடுவதுமுண்டு. இதெல்லாம் மூளையிலிருக்கும் (Amygdala)செய்யும் வேலை. 

நாம் கற்கால மனிதர்களாக இருந்தபோது இந்த அமைக்டிலாதான், “இங்கே நிற்காதே.. ஓடி உன்னைக்காப்பாற்றிக்கொள்” என எச்சரிக்கை செய்தது, அட்ரீனலினைச்சுரக்க வைத்துப் பரபரப்பூட்டியது. தற்காலத்திலும் அதேபோல்தான், சில செய்திகளைக்கேட்கும்போது அட்ரீனலினைச்சுரக்க வைத்து பரபரப்பூட்டி விடுகிறது. அதிகமான அட்ரீனலின் சுரப்பே anxietyக்கும் காரணமாகிறது. அந்த உணர்ச்சி வேகத்தில் ஓடும் நமது அனிச்சைச்சிந்தனைகளுக்கும், முடிவுகளுக்கும் அட்ரீனலினின் வேகம் சற்றுக்குறைந்த பின் வரும் சிந்தனைகளுக்கும் முடிவுகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. இந்த அனிச்சை எண்ணங்களை மாற்றியமைப்பதற்காக CBT (Cognitive Behaviour Therapy) கொடுப்பதுண்டு. கொஞ்சங்கொஞ்சமாக அமைக்டிலாவின் தாக்கத்தைக் குறைத்து தர்க்கபூர்வமாக சிந்திக்கக் கற்றுத்தருவார் கவுன்ஸிலர். அதாவது எதையும் “நேரா யோசிக்க”க் கற்றுத்தருவார். நேரா யோசிக்கும்போது என்னதான் நாம் பிற காரணிகளால் தூண்டப்பட்டாலும் நிதானமிழக்காமல் இருப்போம். இப்புத்தகத்திலும் அந்த தெரப்பியின் அடிப்படையிலேயே பல்வேறு உத்திகள் சொல்லப்பட்டுள்ளன. “You can’t change, but modify” என கவுன்ஸிலர்கள் சொல்வதுண்டு.

நமது முன்முடிவுகள் காரணமாக, பிரச்சினைகளையும், இவ்வுலகையும் அது எப்படியிருக்கிறதோ அப்படிப்பார்க்காமல், நாம் எப்படிப்பார்க்க விரும்புகிறோமோ அப்படிப்பார்க்கிறோம். இவற்றிலுள்ள பிழைகளைச்சுட்டிக்காட்டி நேராக யோசிக்கக்கற்றுத்தந்து நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது இந்நூல். 

இன்றைய தினம் நம் முன் முக்கியமாக இளைய தலைமுறையினர் முன் நிற்பது “போலிச்செய்திகள்” எனும் மிகப்பெரிய எதிரி. “முன்னோர் ஒன்றும் முட்டாளல்ல” எனவும் “ஷேர் செய்யுங்கள்” என நிபந்தனை விதித்தும் வெளியாகும் பொய்ச்செய்திகள் அனேகம். இப்பொறிக்குள் விழுபவர்கள், பிறர் மீது வெறுப்பு, கோபம், மற்றும் ஆதாரமில்லாத மருத்துவக்குறிப்புகளைப்பின்பற்றுதல் என தங்கள் சமூக, குடும்ப உறவுகளைச் சிதைத்து உடல்நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இளைய தலைமுறையினர் சற்று யோசித்தாலே அதிலிருந்து வெளி வந்து விடுவர். இந்த நூல் அனைத்துத் தரப்பினரும் வாசிக்க ஏற்றதுதான் என்றாலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் வாசித்தால் அவர்களது மனநலம், சிந்திக்கும் திறன், அதன் காரணமாக வாழ்வில் முன்னேற்றம் என எல்லாமும் மேம்படும். கல்லூரிகள், பள்ளிகளில் பாடமாக வைக்கலாம்.

எழுத்தாளர், நண்பர், திரு.சுதாகர் கஸ்தூரி பன்முக வித்தகர். வெண்பா எழுதி வியக்க வைப்பார். தெற்கத்தித் தமிழில் எழுதி ரசிக்க வைப்பார். அறிவியல் கட்டுரைகள் எழுதி அசர வைப்பார். மும்பையில் வசித்தாலும் தூத்துக்குடித் தமிழர். அவரின் நூற்களில், 6174 மற்றும் 7.83 ஹெர்ட்ஸ் என இரு நூல்களையும் வாசித்திருக்கிறேன். இந்நூல் அவரது அனைத்து நூற்களிலிருந்தும் மாறுபட்ட ஒன்று.

Thursday, 4 August 2022

"ஆனந்தவல்லி" - புத்தக மதிப்புரை


முடியாட்சி நடந்து வந்த காலத்தில், வென்றவர் தோற்ற மன்னரின் நாட்டிலுள்ள செல்வங்களை அழித்ததையும், மகளிரைச் சூறையாடிப் பொசுக்கியதையும், கவர்ந்து சென்று தம் நாட்டில் அடிமைகளாக வைத்திருந்ததையும், கைது செய்து கொண்டு வந்த ஆண்களை தம் நாட்டில் அணை, கோவில் கட்டுதல் போன்ற கடினப்பணிகளில் ஈடுபடுத்தியதையும் கேட்டிருக்கிறோம். பிற்காலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் மக்களை அண்டை நாடுகளுக்கு கொத்தடிமைகளாக அனுப்பியதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தக்காலத்தில் அடிமை வாணிகம் சர்வ சாதாரணமாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்த வாணிகம் வெளிநாட்டில் மட்டுமன்றி உள்நாட்டிலும் நடந்திருக்கின்றது, குறிப்பாகப் பெண்களை ராஜாக்கள் விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். இச்சமயம் அரிச்சந்திரன் தன்னையும் தன் மனைவி மற்றும் மகனையும் அடிமைகளாக விற்றுக்கொண்ட கதை நினைவுக்கு வருகிறது. இந்த அவலம் நம் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்திருக்கின்றது என்பது சீரணிக்க சற்றுக் கடினமான ஒன்றே. அப்படி விற்கப்பட்ட.. அதுவும் பெற்ற தகப்பனாலேயே அக்கதிக்கு ஆளாக்கப்பட்ட “ஆனந்தவல்லி” என்பாளின் உண்மைக்கதையே இந்நாவல்.

ஊர்ந்து நடந்து அதன்பின் ஓடத்துவங்காமல், நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலேயே நாலுகால் பாய்ச்சலில் ஓடத்துவங்கி விடுகிறது நாவல். பெரிய நாயக் கொத்தனின் திருவிளையாடல்களையும் அவன் எப்பேர்ப்பட்ட வாய்ஜாலக்காரன் என்பதையும் ஆரம்பத்திலேயே கோடு போட்டுக்காட்டி விடுகிறார் நூலாசிரியர். இப்பேர்ப்பட்ட ஒருத்தனிடமிருந்து அவன் மனைவி பிள்ளைகளை அவன் கூடப்பிறந்தவர்கள் காத்திருக்கக்கூடாதா என்ற அங்கலாய்ப்பு பின்னர் நமக்கு எழுகிறது. குறைந்த பட்சம் அவன் மனைவியாவது எதிர்த்து நின்று அவனைக் கேள்வி கேட்டு, நெறிப்படுத்த முயன்றிருந்தால் பாவம்.. ஒரு பெண்பிள்ளையின் வாழ்வு பிழைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

மீனாட்சியாக இருந்தவள் ஆனந்தவல்லியாக மாறும் வரையிலான வருடக்கணக்கான அவளது அடிமை வாழ்வில், ஐந்து வயதில் தன்னை மணந்த சபாபதிப்பிள்ளையை ஒரே ஒரு முறைதான் நினைத்துப்பார்க்கிறாள். ஆனால், அவனோ அவளை மீட்பதைத்தவிர வேறு சிந்தனையே இல்லாதவன். “அவ வெளிய வந்தாலும் ஒம்பொண்டாட்டியா இருக்கறதுக்கு தகுதியானவளா இருக்க முடியாது” என தகப்பனே ரசக்குறைவாகப் பேசினாலும் “அவள மீறி நடந்த எந்த விஷயத்துக்கும் அவள பொறுப்பாக்க முடியாது” என்ற நிலைப்பாடு கொண்டவன். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆண் அவ்வண்ணம் ஒரு கருத்தைக் கொண்டிருந்தது வரவேற்கத்தக்கதே. அப்படியொரு எண்ணம் இருந்ததால்தானே அவன் மதறாஸ் மாகாணத்தின் கவர்னரின் கதவுகளைத் தட்டும் வரை போயிருக்கிறான். “மொகம் கூட தெளிச்சியா இல்லை, ஆனா அந்தப்பாசத்த மாத்திக்க முடியாதுப்பா” எனும்போது நாமும் கலங்குகிறோம்.

இவ்விருவரின் ஊடேயும் நாவல் முழுக்க இழையோடுகிறது தஞ்சை அரசின் அரசியல் வரலாற்றுச்சிடுக்குகளும், கல்யாண மஹாலின் பதவிஅதிகார அடுக்கும். கத்திக்கல்யாணத்துக்கும், மன்னர் நேரடியாக மணந்த அரசியருக்கும் கூட அதிகாரத்திலும் அவர்கள் வயிற்றிலுதித்த மக்களுக்கான உரிமையின் அடுக்கிலும் வித்தியாசம் இருந்திருக்கிறது. தவிரவும் போகஸ்திரீகளான பாயிகள், அவர்களுக்குப் பணிவிடை புரியும் அக்காமார்கள், இறுதியாக தொண்டூழியம் புரியும் ஏவல் பெண்டுகள் என இத்தனை பேரின் ஊடே அந்தக்கால தஞ்சையைக் காண்கிறோம். 

அக்காலத்தில் பெருமளவில் நிலவி வந்த ‘உடன்கட்டையேறுதல்’ எனும் கொடிய பழக்கத்தை ஆங்கிலேயர் வெறுத்ததற்கு ‘அரசகுடும்பத்துப்பெண் சதிமாதாவானால் அது ஆங்கிலேயருக்கு எதிராக அச்சமஸ்தானம் எழுப்பும் குரல்’ என்ற கண்ணோட்டம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பெண்டிரோ இரு வகைகளில் தூண்டப்பட்டு வந்தனர். சதிமாதாவானால் கிடைக்கும் தெய்வநிலை, நடுகல் வழிபாடு போன்ற உயர்நிலை ஒரு பக்கமெனில், “அக்னிப்பிரவேசம் ஒன்றில்தான் பெண்ணுக்குக் குடிப்பெருமை கிடைக்கும், அப்பெண்ணின் மைந்தனுக்கு அதன்மூலம் கிடைக்கும் அதிகாரம் இணையற்றது” என்ற மனநிலை இன்னொரு பக்கம். அக்காலத்தில் சதிமாதாக்களின் உடலில் இருக்கும் நகையை ஈமக்கடனை நடப்பித்த புரோகிதர்கள் மறுநாள் சாம்பலிலிருந்து எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

அப்போது நம் நாட்டை மெல்ல மெல்ல கைக்குள் கொண்டு வந்து ஆளத்தொடங்கியிருந்த பிரிட்டிஷாரின் நரித்தனம், உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதிகாரம் செய்தல் போன்றவை இந்த நாவலில் நிறையவே விளக்கமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. சொகுசாய் வாழ்வது ஒன்றே குறியாய், மக்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்று வாழ்ந்திருந்த அவர்களிடமிருந்து என்ன நியாயம் கிடைத்து விடும்?. ஆங்கிலேயரின் உண்டு உறைவிடப்பள்ளிக்கு நன்கொடை தருவதாக மஹாராஜா சொன்னபின் அவரை எதிர்த்துக்கொள்வார்கள் என்றோ, மீனாட்சியை விடுதலை செய்து அவள் கணவனுடன் அனுப்பி வைக்கும்படி ராஜாவுக்கு உத்தரவிடுவார்கள் என்றோ எதிர்பார்க்க முடியுமா என்ன?

அசிங்கப்பட்ட உடம்போடு வாழ்வதா? என தற்கொலைக்குத்துணியும் சந்திரம்மாவிடம் ஆனந்தவல்லி கேட்கும் கேள்வி ஒவ்வொரு பெண்ணும் தன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டியது. விசுவாசம் என்பது கூட சமூகத்தின் ஜாதி, பொருளாதார படிநிலைகளுக்கேற்ப மாறுமா என்ன? அப்படித்தான் அப்பெண்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். என்றேனும் ஒரு நாள் தன் அம்மாவைப் பார்த்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் ஆனந்தவல்லி.

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியாத நேர்மையாளரான மோஹித்தே, மீனாட்சியின் நிலை கண்டு, அவள் கணவனுடன் இணைய தடையாக இருந்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பால் வீரம்மா என்ற அக்காவிடம் உதிர்த்த “பவித்ரம்” என்ற ஒரு சொல் மீனாட்சியின் வாழ்வைப் புரட்டிப்போட்டு அவளை அவள் குடும்பத்திடமிருந்தே பிரித்து விடும் என அவர் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. “நான் ஒண்ணும் பரம்பரையா அக்காவா இருக்கறவ இல்ல” என வீரம்மாவை அந்தச்சொல் உலுக்கிப்போடாமல் இருந்திருந்தால் ஒருவேளை மீனாட்சி அவள் குடும்பத்தினருடன் சேருவதைத் தடுக்காமல் இருந்திருப்பாளோ என்னவோ!! ஒரு பெண்ணின் அகங்காரத்தைத் தூண்டிய அச்சொல்லால் இன்னொரு பெண்ணின் வாழ்வையே பலியிடத்துணிகிறாள்.

கொடிகட்டிப்பறந்த அடிமை வியாபாரத்துக்கு எதிராக மன்னரிடமும், அதன்பின் அவர்களையே கேள்வி கேட்கும் அதிகாரம் கொண்ட ஆங்கிலேயரிடமும் புகாரளித்தும்  மீனாட்சியை மீட்க இயலாத சபாபதியின் கையறுநிலை கலங்க வைக்கிறது. காவலனே கள்வனானால் என் செய்ய இயலும்?. சபாபதி மதறாஸ் கவர்னருக்கு எழுதிய கடிதத்தின் மேல் எழுந்து நிற்கிறது இந்நாவல். ஒற்றைக் கடிதத்தை அஸ்திவாரமாய்க்கொண்டு, இதுவரை யாருமே தொடாத புதுக்களத்தில்  பெருங்கோட்டையொன்றை எழுப்பியிருக்கிறார் எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன். இவரது முதல் நாவல் என்று சொல்லவியலாத அளவுக்கு ஆரம்பத்தில் தொடங்கி இறுதி வரிகள் வரை விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நூல்.

ஆசிரியர்:லஷ்மிபாலகிருஷ்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

“வேணுவன மனிதர்கள்” - புத்தக மதிப்புரை


பிஞ்சுப்பிராயத்திலிருந்து பழுத்து உதிரும் காலம் வரை வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம், எத்தனையோ பேர் நம்மைச் சந்திக்கிறார்கள், சிறு பொழுதே சந்தித்துப்பிரிபவர்கள் முதல் அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்க நேர்பவர்கள் முதல் எத்தனையோ பேருடன் பழகினாலும் ஒரு சில மனிதர்கள் தம் தடத்தை லேசாகவோ அழுத்தமாகவோ நம் நினைவுகளில் பதிய வைத்து விடுகிறார்கள். அப்படி தன் நினைவில் பதிந்தவர்களை திரு. நாறும்பூ நாதன் அண்ணாச்சி இந்த வேணுவன மனிதர்களில் ரத்தமும் சதையுமாக உலவ விட்டிருக்கிறார்.

கிணற்றில் விழுந்த பொருட்களைத் துழாவி எடுக்கும் பாதாளக்கரண்டி அதற்கு முன் எப்போதோ விழுந்த பொருட்களையும் சேர்த்து தேடியெடுத்துத்தரும். அதைப்போல், இந்த மனிதர்களைப்பற்றி வாசிக்கையில் நாம் எப்போதோ சந்தித்த மனிதர்களிடம் போய் நிற்கிறது நமது நினைவுத்தடம். அவ்வகையில் இந்நூலும் ஒரு பாதாளக்கரண்டியே. காது கேட்காத, வாய் பேச இயலாத குருவம்மா அப்படித்தான் எங்கள் அம்மை வீட்டில் ஒத்தாசைக்கு வந்து போய்க்கொண்டிருந்த கிட்னம்மாவை ஞாபகப்படுத்தினார். காது கேட்காதே தவிர திக்கித்திக்கி ஓரளவு பேசுவார், எதிராளியின் உதடு அசைவுகளைக் கூர்ந்து கவனித்து ஓரளவு புரிந்து கொள்வார். எம்.ஜி.ஆர் படங்களென்றால் உயிர், பார்த்து விட்டு வந்து மறுநாள் வீட்டுக்காரியங்கள் பார்த்துக்கொண்டே அம்மைக்கும் எங்களுக்கும் கதை சொல்வார்.

பிரியமாய்ப் பழகி பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல் மனதில் ஒட்டிக்கொண்ட இன்னொருவர் “பாஞ்சாலி ஆச்சி’. தினமும் வீட்டுக்கு வருவார், ஆர்ப்பாட்டமாய் நுழைந்து உற்சாகமாய்ப்பேசி கலகலக்க வைத்து விட்டுச் செல்வார். வீட்டில் காய்த்த கொய்யாக்காய்கள், பழங்களை மடி நிறையக் கட்டிக்கொண்டு வருவார். சிறுபிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அவற்றைக் கொடுத்து ரசிப்பார். சில சமயம், வாசலில் வரும்போதே, அம்மையைப்பார்த்து “ஏ பிள்ள… சரஸோதில(சரஸ்வதி) புதுப்படம் போட்ருக்கான், வா, ரெண்டாம்ப்ளே போலாம்” எனக்கேட்டபடி ஆர்ப்பாட்டமாய் நுழைவார். வருகிறாயா? என்றெல்லாம் கேட்பது அவரது அகராதியிலேயே கிடையாது, கைப்பிடியாக இழுத்துக்கொண்டு போய் விடுவார். எல்லோரையும் குசலம் விசாரித்தபடி எல்லோருடனும் இணக்கமாக இருக்க எண்ணிய அவரை சேது ஆச்சி என்றும் சொல்லலாம்.

ஒரு காலத்தில் போட்டோ கிராபர்களுக்கு விசேஷ வீடுகளில் இருந்த வரவேற்பையும், அந்தக்கால ஃபிலிம் காமிராக்களையும், பற்றி திருச்சிற்றம்பலம் அண்ணாச்சியைப் பற்றிய கட்டுரையில் சுவைபடக் கூறியுள்ளார் நூலாசிரியர். இப்போதெல்லாம் “கேண்டிட் போட்டோகிராஃபி” மிகவும் பிரபலமான ஒன்று. அந்தக்காலத்திலேயே கலைநயத்துடன் எடுக்கப்பட்ட அவ்வகைப் போட்டோக்களின் மூலம் மட்டுமல்ல, வேணுவன மனிதர்களில் இடம் பெற்றதன் மூலமாகவும் காலத்துக்கும் நின்று பேசப்படுவார்.

புனைவுகளில் வேறு பெயர்களில் நிழலாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும் பலரை அவர்களின் நிஜத்தோடு நம்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். அவர்களில், நம் அடுத்த வீடுகளில் தினசரி பார்க்க வாய்க்கக்கூடிய எம்.ஜி.ஆர். சங்கரன், கல்யாணி அக்கா, பொன்னையா வாத்தியார், முத்தம்மாள், சிவஞான மாமா, சிகைக்கலைஞர் மகேந்திரன், சூரியன் முதல், கான்சர் வந்து படாதபாடு படும் ஆம்ஸ், தன் நகையேயானாலும் ஏலத்துக்கு வந்தபின் தனக்குச் சொந்தமில்லாத நகையைக் கையில் போடுவதும் தப்பு என்றெண்ணும் அறவுணர்வு கொண்ட அங்கயற்கண்ணி, சிறைப்பட்டிருக்கும் தோழர்களின் குடும்பங்கள் பசியில் வாடாவண்ணம் ஆதரித்த சங்கரப்ப நைனா, சலவைத்தாளை சரட்சரட்டென எண்ணி செலவு செய்ய புது ரூபாய்க்கட்டுகளையே கேட்டு வாங்கும், “சீதேவிய காலடிப்பக்கம் போட்டிருக்கீகளே” என அங்கலாய்க்கும் முத்துக்காளை, பால்யத்தைக் கிராமங்களில் கழிக்க நேர்ந்த ஒவ்வொருவரும் தனது விளையாட்டுத் தோழமையாகக் கண்டிருக்கக்கூடிய சாக்கடை முருகனாக இருந்து தற்போது சாத்தூர் முருகராக இருப்பவர், சவத்து மூதி போன்ற வசவுகளையே கை அசைவுகளில் விளக்கி விடும் பர்வதத்தக்கா வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடம்.
எல்லாக் குடும்பங்களிலும், வேலையிடங்களிலும் பொறுப்பான ஒரு ஏமாளி இருப்பார். பிறர் செய்யத்தயங்கும், அஞ்சும் வேலைகளை நாலு நல்ல வார்த்தை சொல்லி இவர் மேல் சுமத்தி விட்டு, அவர்கள் ஒதுங்கி விடுவார்கள். வேறு வழியில்லாமல் செய்ய நேர்ந்தாலும், தன் மேல் நிஜமான பரிவு காட்டுபவர்களிடம் இளகி விடுபவர்கள் உண்டு.. பொறுப்பு கணேசனைப்போல். ரசிகன் என்ற நிலையைத்தாண்டி, எம்.ஜி.ஆரை ஆராதிக்கும் உபாசகனாகவே இருக்கும் தங்கராசு, மது மயக்கத்தில் தெருவாசிகளுக்குத் தொல்லை கொடுக்கும்போது அவரைத் திசை திருப்பி, நைச்சியமாய் அமைதிப்படுத்த ஒரு எம்.ஜி.ஆர். பாடல் போதும். “சந்திரன்” ரொம்பச்சுருக்கமாகச் சொல்லி விட்டாரோ எனத்தோன்ற வைக்கும் பகுதி. அணிந்துரையில் வண்ணதாசன் ஐயாவே சொல்லியிருப்பது போல் ஒரு நாவலாக விரியக்கூடிய சாத்தியக்கூறுகள் அதற்கு அதிகம். காவிரியைக் குறுமுனி கமண்டலத்தில் அடைத்தது போல் நூலாசிரியரும் சுருக்கி விடாமல் என்றாவது நாவலாகப் பெருகச்செய்வார் என எதிர்பார்ப்போமாக.

குழந்தைகளை வழிக்குக்கொண்டுவர வன்முறையைப் பிரயோகிக்கக்கூடாது என்ற நடைமுறை பள்ளிகளில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் இக்காலப் பிள்ளைகளுக்கு, அந்தக்காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பதுண்டு என்ற செய்தியே புதுமையாகத் தோன்றும். ஆனால், ஆசிரியர்கள் பிள்ளைகளின் கல்வி மீது மட்டுமல்லாமல் ஒழுக்கத்திலும் அக்கறை கொண்டிருந்த காலம் அது. ‘கண்ணு முழிய மட்டும் விட்டுட்டு தோல உரிச்சுருங்க’ என பெற்றவர்களே ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த சமயம். அப்படியிருந்தும், தன்னிடம் கற்கும் மாணவனை அடித்து விட்டதற்காக, கலங்கி அழும், இறைவனிடம் மன்றாடும், தன்னையே அடித்துத்துன்புறுத்திக்கொள்ளும் அன்னத்தாய்கள் அபூர்வப்பிறவிகள்தான். தன்னிடம் பயிலும் பிள்ளைகள் எல்லோருமே தன் மகவுகள்தான் என்றெண்ணும் தாயுள்ளமல்லவா அது.

சுகாவின் எழுத்துகளை வாசிக்கும் அனைவருக்குமே “டவுன் மீனாட்சி” பரிச்சயப்பட்டவர்தான். நெல்லை ஜங்க்ஷன் மற்றும் டவுனில் எந்தெந்தக் கடைகளில் எந்தெந்த சாப்பாட்டு அயிட்டம் நன்றாக இருக்கும் என்ற அரிய தகவல்களைக் குவலயத்திற்கு அறியச்செய்வதில் இவரது பங்கு அளப்பரியது. இவர் அள்ளித்தெளித்திருக்கும் பட்டியலை அறியும்போது, இவ்வளவு கடைகளை எப்படித்தெரிந்து வைத்திருக்கிறாரென்று நூலாசிரியருக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சரியம் வரும். நெல்லை டவுனில் தெற்கு ரத வீதியிலிருக்கும் மாரியம்மன் விலாசின் புகழ் பெற்ற ‘திருப்பாகம்’ என்ற இனிப்பு இவர் சொல்லி நூலாசிரியர் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானது. ருசியும் அபாரம். இலக்கியம் படிக்காவிட்டாலும் மனிதர்களைப் படித்திருக்கும் மீனாட்சி முத்தாய்ப்பாகச் சொன்னதுதான் எல்லாவற்றிலும் உயர்ந்தது. அத்தியாயங்களில் வரவில்லைதான் எனினும் நம்பிக்கை ஒளிவிடுகிறது அரசு அண்ணன் என்னும் ஒளிக்கீற்று. 

“ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ மனிதர்கள் வந்து போயிருப்பார்கள், அவர்களை நினைவூட்டவே இந்த நூல்” என நூலாசிரியர் கூறுவதைப்போல் அனைவரது வாழ்விலும் மனிதர்கள் வந்து போகிறார்கள்தான், ஆனால் ஏதோ ஒரு வகையில், நினைவில் தடமாய் தடயங்களாய் நின்று விடுகிறார்கள் அழியாமல்.

நூலாசிரியர் :திரு. இரா. நாறும்பூ நாதன்.
வெளியீடு; சந்தியா பதிப்பகம்.
விலை: Rs.140/-

LinkWithin

Related Posts with Thumbnails