Wednesday, 11 March 2015

தினகரன் கேலரியில் எனது ஒளிப்படங்கள்..

இரண்டு வருடங்களுக்கு முன் குங்குமம் தோழியிலும் தினகரன் நாளிதழிலும் எனது பேட்டி வெளியானதும் அதைத்தொடர்ந்து உங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து நான் கொண்டாடி மகிழ்ந்ததுமான அந்த சரித்திர முக்கியத்துவம் மிக்க சம்பவங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :-)) தொடர்ந்து தினகரன் நாளிதழின் மின்பதிப்பிலும் பேட்டி வெளியானதும் ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியர்கள் மெர்வின் மற்றும் சுந்தரராஜன் அறிவித்து சந்தோஷக்கடலில் ஆழ்த்தினர். 

குங்குமம் தோழியில் வெளியான படங்கள் தவிர நான் எடுத்த ஒளிப்படங்களிலிருந்து மேலும் பல படங்களையும் தினகரன் நாளிதழின் மின்பதிப்பில் வண்ணப்படங்களின் அணிவகுப்பாக "கேலரி" பகுதியில் வெளியிட்டுச்சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தினகரன்.

வெளியான படங்கள்:














 






படங்களை தினகரன் கேலரியிலும் கண்டு களிக்க இங்கே சொடுக்குங்கள்..

தினகரன் நாளிதழின் மின்பதிப்பில் வந்த பேட்டி..

குங்குமம் தோழியில் படங்களுடன் வெளியான அதே பேட்டி..

Sunday, 8 March 2015

குங்குமமும் பிடித்த கவிதையும் பின்னே சாரலும்..

"போற்றவும் வேண்டா 
தூற்றவும் வேண்டா
சரிசமமாய் நடத்தப்படுவதெப்போ?''
முனைவர் அண்ணா கண்ணனின் "உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு" என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த கவிதையின் சில வரிகள் குங்குமம் இதழ் சென்ற வருடம் மகளிர்தின சிறப்பாக வெளியிட்ட 'பிடித்த பெண் மொழிக்கவிதை' பகுதியில் வெளியாகியிருந்தது.. அண்ணா கண்ணனின் அத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த இன்னொரு கவிதையை அவரது தளத்திலேயே வாசிக்கலாம்.
குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளில் பொறுமை எல்லை மீறும்போது அது நாள்வரை தாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் திருப்பித்தாக்கத்தொடங்குகிறார். அப்படித்தாக்கத்தொடங்கும் புள்ளிக்கு வருவதற்கு முன் அவர் தன்னளவில் நிறைய மனத்தடைகளையும் தன்னுள்ளேயே எழுப்பப்பட்ட கேள்விகளையும் தாண்டியே வந்திருப்பார். ஆதலால் அவரது கொந்தளிப்பைச் சமாளிக்க மற்றவர்களால் நிச்சயமாக இயலாது. அடி பணிந்தே ஆகவேண்டும். இதைத்தானே “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளும் அப்படித்தான். இதற்கு மட்டும் ஜாதி, இன, மத, நாடு வேறுபாடுகளே கிடையாது. ஏதாவதொரு அளவில் எல்லா நாடுகளிலும் ஏதாவதொரு வகையில் அவள் வன்முறைக்குள்ளாகிக்கொண்டே இருக்கிறாள். ஆகவேதான் துணிந்து எதிர்க்குரலெழுப்பும் பெண்களையும், 'இதென்ன ஊர்ல நடக்காததா? வீட்டுக்கு வீடு வாசப்படி. பொம்பளைன்னா பொறுத்துத்தான் போகணும்" என்று சுலபமாக அடக்கி விடுகிறார்கள். உட்செலுத்தப்படும் காற்றின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டேபோகும்போது சட்டென்று வெடித்துவிடும் பலூனைப்போல் ஒரு கட்டத்தில்  அவள் வெடித்தெழும்போது இவளால் என்ன செய்து விட முடியும் என்று அலட்சியமாக அதுகாறும் ஆதிக்கத்துக்குட்படுத்தி வந்த கூட்டம் திகைத்துத்தான் போய் விடுகிறது.

முற்காலம் போல் தற்சமயம் எல்லாப்பெண்களும் கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு அடுத்தவர்களின் கருத்துகளுக்குத் தலையாட்டுவதில்லை. அன்பினால் சிலர் கட்டுண்டிருந்தனர் என்றால் தங்களது சுயநலத்திற்காக அவர்களைச் சிந்திக்கத்தெரியாதவர்களாய்,  எல்லாவற்றிற்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி ஆக்கியிருந்தவர்களிடம் சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். இதனால் தங்கள் வாழ்க்கை, பொருள், நிம்மதி என்று தொலைத்தவர்களும் அதிகமே. இப்பொழுதோ பெண்கள் நல்லது கெட்டதை சுயமாகச்சிந்திக்கிறார்கள், திருமணம் போன்ற தங்கள் வாழ்க்கை முடிவுகளைத் தாங்களே எடுக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னை விட பொறுப்பும் அதிகரித்திருக்கிறது.

பெண்களின் நிலை எந்தளவு மேம்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு முறை அலசும்போதும், பெண்சிசுவை வெறுத்தல், வரதட்சணைக்கொடுமை, பொருந்தாத்திருமணங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற அம்சங்களில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்ற நிலையே தெரிகிறது. வரதட்சணை கேட்கும் தாயை மகன் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஒரு பக்கம் என்றால் அப்படித்தடுக்கும் மகனை தாயே கடுஞ்சொற்கள் கூறியும், பயமுறுத்தியும் பணிய வைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. பெண் பிறந்தால், 'என் பிள்ளை பாரம் சுமக்க வேண்டி வருகிறதே' என்று புலம்பும் மாமியார்கள் அதே பிள்ளைக்கு திருமணத்திற்காகப் பெண் தேடி அலைந்த சரித்திரத்தையெல்லாம் வெகு வசதியாக மறந்தே விடுவார்கள். இதில் பெண்ணின் நிறம் கருப்பாக இருந்தால் அவ்வளவுதான்.. மனச்சித்திரவதை செய்தே அவளைச் சாகடித்து விடுவார்கள். சமீபத்தில் கூட குமரி மாவட்டத்தில் தன்னை கருப்பாக இருப்பதாக அடிக்கடி இடித்துக்கூறி வந்த கணவனின் கொடுமை தாங்க மாட்டாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.

அடுப்பங்கரையிலேயே அடைந்து கிடந்த பெண்கள் வெளியே வந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. அப்பெருங்கல்லைப் புரட்டிக்கொடுக்கும் நெம்புகோலாக இருந்த பெண்கள் எத்தனையோ பேர். குடும்பம், வேலை என்று இரட்டைச்சுமையுடன் சிரமப்பட்டபோதிலும், பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக நிற்கும் காலகட்டத்தில் வாழ நேர்ந்த போதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் புரிந்து சிகரங்கள் தொடுகிறார்கள் பெண்கள். அவர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அப்படியென்றால் காலம் மாறவேயில்லையா?.. நிச்சயமாக மாறுகிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக... பெண்களுக்கு திருமணப்பத்திரிகையில் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளவோ, அல்லது வேலைக்குப்போய் சம்பாதிக்கவெனவோ வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் அளிக்காமல் தற்காப்புக்கலை, தன்னம்பிக்கை, தனக்கு நேரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம், அவற்றை நல்ல முறையில் தீர்க்கும் அறிவு என்று அனைத்தும் கற்றுக்கொடுத்து வளர்க்கப்பட வேண்டும். சில இடங்களில் படித்த பெண்களை விட படிக்காதவர்களே தைரியமாக தங்களுக்கு நேரும் அநியாயத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். தலையெழுத்து என்று முடங்குவதை விட்டு தங்களது நியாயமான உணர்வுகளை பெண் எப்போது வெளிப்படுத்துகிறாளோ, அப்போது நிச்சயமாக செவிகள் திறந்தே தீரும். அப்படித்திறக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருப்போம்.
வால்: பிடித்த பெண்மொழிக்கவிதையையும், சாரல் துளியையும் வெளியிட்ட குங்குமம் இதழுக்கு நன்றி.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்..

Wednesday, 4 March 2015

மலைத்தேனும் மாத்தேரனும்..


சுற்றுலாவோ அல்லது சாதாரணப் பயணமோ.. நாம் சென்று வரும் ஒவ்வொரு ஊரும் தனது நினைவுத்தடங்களை நமது மனதில் பதித்து விடுகின்றன. பழைய நினைவுகளை அசைபோடும் தருணங்களில் பனியின் பின்னிருந்து மெல்ல மெல்ல புலப்படத்தொடங்கும் உருவங்களாய் ஒவ்வொரு ஊரின் நிகழ்வுகளும் மெல்ல மெல்ல ஒன்றைத்தொட்டு ஒன்றென மேலெழும்பி வருகின்றன. சுருக்கமாய்ச் சொன்னால் வாழ்நாள் முழுவதும் அந்த ஊர்களை மனதில் சுமந்து கொண்டுதான் நாம் திரிகிறோம். நிகழ்வுகளைப்பொறுத்தோ அல்லது ஏதாவதொரு காரணத்தாலோ சில ஊர்களின் மேல் நம்மையறியாமல் ஏதோ ஒரு பிடிப்பு ஏற்பட்டு மறக்க முடியாததாக்கி விடுகிறது. 

அவ்வப்போது சொந்தங்களின் ஊர்களுக்கும் ஒரு நாள் விசிட்டாக ஒரு சில ஊர்களுக்கும் போய் வந்திருந்தாலும், பக்காவாகத் திட்டம் போட்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு எங்குமே அதுவரையிலும் பிக்னிக் சென்றதில்லை. இந்தக்குறையை நிவர்த்தி செய்ய பக்கத்திலிருக்கும் மலைப்பிரதேசங்களான ‘மாத்தேரன்’ போகலாமா? அல்லது ‘மஹாபலேஷ்வர்’ போகலாமா என்று ஹாலில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தோம். மாத்தேரனுக்கு அதிகபட்ச ஓட்டுகள் விழுந்ததால் அந்த வாரத்தின் சனி,ஞாயிறை மாத்தேரனுக்கு நேர்ந்து விட்டோம். 

கிளம்புவது என்று முடிவானதும், ரிஸார்ட்கள், ஹோட்டல்கள் எதிலும் தங்கவேண்டாம், அங்கிருக்கும் பேயிங் கெஸ்ட் வசதி கொண்ட வீடுகளில்தான் தங்குவது என்ற முக்கியமான முடிவும் எடுக்கப்பட்டது. அது எவ்வளவு சரியானது என்பதை அங்கே போனதும் உணர்ந்தோம். அழகான அந்தக் கிராமத்துச் சூழல் அட!!.. அட!! அட.. இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நகரத்துச் சூழலையே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு அந்த மலைக்கிராமம் எத்தனையோ குளுமையாக இருந்தது 

 மாத்தேரனுக்குள் வாகனங்கள் எதையுமே அனுமதிப்பதில்லை. நம் ஊட்டி ரயிலைப்போன்று ஒரு பொம்மை ரயில் மட்டுமே நேரல் ஸ்டேஷனிலிருந்து மாத்தேரனுக்குத் தைரியமாகச் சென்று வருகிறது. மற்றபடி புகையில்லாக் கிராமம்தான் மாத்தேரன். சுற்றுலா வரும் பயணிகளுக்கு இடங்களைச் சுற்றிக்காண்பிப்பதற்காக நிறையக் குதிரைகளையும், மட்டக்குதிரைகளையும் கூட்டிக்கொண்டு வீரர்கள் வலம் வந்து கொண்டே இருப்பார்கள். போக வேண்டிய இடங்களைச் சொல்லி பேரம் படிந்தால் குதிரைகளில் பயணிக்கலாம். இல்லையெனில் மூட்டு பலமுள்ளவர்களுக்காக இருக்கவே இருக்கிறது 11-ம் நம்பர் பஸ்.. அது வேறொன்றுமில்லை, நம் கால்கள்தான் :-)

 விடியற்காலையில் போய் இறங்கியதும் ஒரு வீட்டைப் பிடித்து, மூட்டை முடிச்சுகளை அங்கே போட்டோம். அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய படுக்கையறை மட்டுமே மொத்த ரூமும். வீட்டின் ஒரு பகுதியை இப்படி மாற்றியமைத்து வாடகைக்கு விடுகிறார்கள். போய் வர நமக்குத் தனி வழி. வீட்டுக்காரர்கள் ஒரு பக்கத்தில் வசிப்பார்கள். வேண்டியதைச்சொன்னால் சமைத்தும் கொடுப்பார்கள் என்பது முக்கியமான ஒன்று. காந்தாபோஹா,.. பாக்ரியுடன் கூடிய மஹாராஷ்ட்ரியன் தாலி என்று சிம்பிளான அதேசமயம் ருசியுடன் கூடிய சுத்தமான வீட்டுச்சாப்பாடு கிடைத்ததால் வயிறும் பாதிக்கப்படவில்லை. 

இயற்கை சிலம்பாட்டமாடும் மாத்தேரனில் ஒவ்வொரு இடமும் பார்க்க வேண்டியவைதான் என்றாலும் முக்கியமான ஒரு சில இடங்கள் மட்டும் பாயிண்ட்ஸ் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சில பாயிண்டுகளில் பைனாகுலர் வைத்து மலையும் அடுத்துள்ள சமவெளியும் சுற்றுலாப்பயணிகளுக்குக் காண்பிக்கப்படுகின்றன. இந்த மலையிலிருந்து லோனவ்லாவை வெறும் கண்ணாலேயே பார்க்க முடியுமாம். அவசியம் பார்க்க வேண்டிய புண்ணியஸ்தலமென்று அங்கிருந்த கைடு எங்களுக்குக் காட்டியது ‘மனிஷா கொய்ராலாவின் பண்ணை வீடு’.

படம் - இணையத்திலிருந்து
மாத்தேரனில்  மொத்தம் 28 பாயிண்டுகள் எனப்படும் பார்வையிடங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகத்தூரத்தில் அமைந்திருக்கும் one tree point எனப்படும் இடத்திற்கு குதிரையில் மட்டுமே செல்ல இயலும்.  ஒவ்வொரு பாயிண்டிலும் பாயிண்டுகளின் மேப்பும் செல்லும் வழியும் பேனராக வைத்திருக்கிறார்கள். ஆகவே அவ்வளவு பெரிய காட்டில் வழி தவறும் வாய்ப்பில்லை. ஒரு சில உள்ளடங்கிய பகுதிகளில் பழங்குடியினரும் வசிக்கிறார்கள். அவர்களது முக்கியத்தொழிலே தேனெடுப்பதுதான். மலைகளின் செங்குத்தான பகுதிகளில் தேனடைகள் இருக்கும் பகுதிகளில் நூலேணிகள் மூலமாகப் போய் தேனெடுத்து வருவார்களாம். ஒரு சில நூலேணிகள் அபாயகரமான கோணங்களில் தொங்கிக்கொண்டிருப்பதை பைனாகுலர் மூலம் பார்த்த போது நடுக்கமாக இருந்தது. மலைத்தேனுக்கு இருக்கும் கிராக்கிதான் இவர்களை இப்படிக் கஷ்டப்படச்செய்கிறது என்பதை அறிந்து மலைத்தேன். 

மாத்தேரன் மொத்தத்தையும் சுற்றிப்பார்த்து இயற்கைச்சூழலில் திளைத்து வர குறைந்தது 3 அல்லது 4 நாட்களாவது தேவை. நாங்கள்  சென்ற முதல் நாளில் கால்களில் வலுவிருந்ததால் நடந்தே நிறைய இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். மறுநாள் ‘இதுக்கு மேல முடியாது சாமி’ என்று கால்கள் எங்களைக் கெஞ்சியதால் குதிரைகளின் உதவியை நாட வேண்டியதாகி விட்டது. கால்வலி போதாதென்று குதிரைப்பயணம் கொடுத்த இடுப்புவலியும் சேர்ந்து கொண்டது தனிக்கதை.

லோனாவ்லாவைப்போலவே இங்கேயும் கடலை, பாதாம், ராஜ்கீரா, இவற்றைத்தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ செய்யப்படும் 'சிக்கி' எனப்படும் இனிப்புப்பண்டம் மிகப்பிரபலம். சுற்றுலாப்பிரதேசங்களில் அந்தந்த இடங்களில் கிடைக்கும் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவது இயல்பு. அந்த வகையில் இங்கே கடைகளில் தேன், சிக்கி, மற்றும் பருவ காலங்களில் ஸ்ட்ராபெர்ரியும் கிடைக்கின்றன.

இதற்குப்பின் கொடைக்கானல், ஊட்டி என்று எத்தனையோ பிரயாணங்கள் சென்று வந்து விட்டாலும் மாத்தேரனின் கிராமச்சூழல், விடியலின் விலகாத பனி, உச்சிக்கு ஏறிச்சென்றால் நட்சத்திரங்களையே பறித்து வந்து விடலாம் போன்ற உயரமான மரங்கள், சூரியனின் உறக்கம் கலைத்த கொக்கரக்கோ சேவல் என்று விடுமுறையுடன் கிராமச்சூழலையும் குழந்தைகளும் நாங்களும் அனுபவித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.. எப்போதும் இருக்கும். :)

வால்: தேனக்காவின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அளித்த பேட்டியை இன்னும் சற்றுக்கூடுதல் விவரங்களுடன் இங்கே கல்வெட்டிலும் செதுக்கி வைக்கிறேன். நன்றி தேனக்கா.

Monday, 23 February 2015

சாரல் துளிகள்

1)நகரத்தின் குறுக்கு மறுக்கான தெருக்களை ஒத்திருக்கும் இலை நரம்புப்பின்னலில், வழி தவறி அலைகிறது ஒரு பொன்வண்டு.

2)பயணியர் இருக்கையில் அமர்ந்திருக்கும் வரையில் வெறிச்சோடிக்கிடப்பதாய்த் தோன்றும் சாலை, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நொடியிலிருந்து நெரிசல் மிகுந்ததாகத் தென்படத் தொடங்கி விடுகிறது.

3)மகளின் சமையலைச் சுவைத்த அம்மாக்களுக்கே தெரியும், ருசியென்பது நாவில் இல்லையென்பது..

4)எத்தனைதான் பாசமாக இருந்தாலும், அப்பாவைப் பெற்றவர்களை விட அம்மாவைப் பெற்ற ஆச்சிகள் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிப்போவதில் ஏதோவொரு கெமிஸ்ட்ரி இருக்கத்தான் செய்கிறது 

5)அடிக்கும் அலாரத்தை நிறுத்திவிட்டுத் தூங்கி, வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்த யாரோ ஒரு மகானுபாவர்தான் ஸ்னூஸ் வசதியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்..

6)குழந்தையொன்று சிந்திச்சென்ற புன்னகைகளைச் சேமிக்கத்தொடங்கிய கணத்திலிருந்து உயிரொளி வளர்க்கத்தொடங்கியது அமாவாசை நிலவு.

7)'இந்தச்சாலைகள் இப்பொழுதிருப்பதைப்போலவே பல காலம் உறுதியுடன் இருக்கும்' என்றுரைத்த அரசாங்கத்தின் சாயம் முதல் மழையிலேயே கரைந்து ஓடிக்கொண்டிருந்தது.

8)பெரியவர்களின் கண்ணாடியையும், காலணிகளையும் ஒரு தடவையேனும் விரும்பி அணிந்திடாத குழந்தை உலகில் இன்னும் பிறந்திடவில்லை.

9)கூரையில் சொட்டும் மேல்தளத் தொட்டி நீர் ஞாபகப்படுத்துகிறது மழையின் தாளத்தை.

10)காலத்தின் எந்த நொடிக்கும் உடனடியாக மனதளவில் இழுத்துச்சென்று விடுகின்றன ஒளிப்படக் கால இயந்திரங்கள்.

Thursday, 19 February 2015

நாஞ்சில் நாட்டு சமையல் (வெள்ளரிக்காய் கிச்சடி)

நாஞ்சில் நாட்டின் விருந்துச்சமையலில், முக்கியமாக கல்யாண விருந்துகளில் கட்டாயம் இடம்பெறும் அயிட்டங்களில் வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியும் ஒன்று. மஹாராணிகளும் இளவரசிகளும் வீற்றிருக்கும் அரசவையில் ஒரு ஓரமாக ஆனால் தனக்குரிய மதிப்புடன் வீற்றிருக்கும் அரசகுல மகளிரைப்போல், அவியலும் எரிசேரியும் கொலுவிருக்கும் இலையில் இதுவும் உரிய மதிப்புடன் பரிமாறப்பட்டிருக்கும்.

நன்கு விளைந்த, காய்ப்பருவத்திலிருக்கும் கெட்டியான வெள்ளரிக்காய்தான் இதற்கு உகந்தது. வடக்கில் சாலட்டுக்கென்று குட்டிக்குட்டி வெள்ளரிகள் கிடைப்பதால் வித்தியாசம் காட்டுவதற்காக இதை இங்கே ‘மெட்ராஸ் காக்டி’ என்று அழைக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் எங்கும் காணக்கிடைக்கும் பரம்பொருளான இது முன்பெல்லாம் தென்னிந்தியக்காய்கறிகள் கிடைக்கும் கடைகளில் மட்டும்தான் கிடைத்துக்கொண்டிருந்தது. வாங்கியபின் வெகு நாட்களாக ஃப்ரிஜ்ஜில் ஆழ்ந்த துயிலில் இருந்த காரணத்தால் உருக்குலைந்திருந்தாலோ, மென்மைப்பட்டிருந்தாலோ அது பச்சடிக்கு உதவாது. இதை மேல்தோலைச்சீவி விட்டு நான்காக வகுந்து கொண்டு விதைகளைக் ‘கவனமாக’ நீக்கவும். பச்சடி சாப்பிடும்போது பல்லிடுக்கில் விதை அகப்படுவதென்பது பாயசத்திற்கு கடுகு தாளிப்பதற்குச் சமம். விதை நீக்கியபின் காயை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய்யை (உத்தேசமாக இரண்டு ஸ்பூன்) சூடாக்கிக்கொள்ளவும். இதற்கு நல்லெண்ணெய் ஆகவே ஆகாது. சூரியகாந்தி எண்ணெய் உபயோகிக்கலாம்... தேங்காயெண்ணெய் உத்தமம் என்று சொல்பவர்களும் உண்டு. எண்ணெய் காய்ந்து  கடுகு போட்டு வெடித்ததும் உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக சிவக்க விடவும். பின் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை சொய்ங்க் என்று உருவிச் சேர்த்து, பொரிந்ததும் கால் டீஸ்பூன் பெருங்காயப்பொடியைச் சேர்த்து கரண்டியால் OOO என்று கிண்டும் நேரத்துக்கே கிளறி வெள்ளரித்துண்டுகளைச் சேர்க்கவும். பச்சடியின் மணம் எழுந்து வருவதை இப்பொழுதே அனுபவிக்கலாம். ருசிக்கேற்ப உப்பு சேர்த்து துண்டுகள் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெள்ளரித்துண்டுகள் முக்கால் வேக்காடு ஆகும் சமயம் தண்ணீர் வற்றியிருக்க வேண்டும், அதற்கேற்ப தண்ணீரை முதலிலேயே கவனமாகச் சேர்க்க வேண்டும்.

கேரளத்தைப்போலவே நாஞ்சில் பகுதியிலும் தேங்காயைச் சற்றுத் தாராளமாகவே.. அதாவது வட்டார வழக்கில் சொல்லப்போனால் ‘கொழூக்க்க’ சேர்ப்போம். காய் வேகும் சமயத்திலேயே அரை மூடி துருவிய தேங்காயுடன் மூன்று பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து மையாக அரைத்து மசாலா தயார் செய்து கொண்டு விடலாம். காய் முக்கால் வேக்காடு ஆனதும் மசாலாவைச்சேர்த்து தேவைப்பட்டால் கால் கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். காய் வெந்து தண்ணீரும் சுண்டியதும் இறக்கி விடலாம். இறக்கி வைத்ததும் உடனே தயிரைச்சேர்த்து விடக்கூடாது. ஆக்கப்பொறுத்தவர்கள் சற்று ஆறவும் பொறுக்க வேண்டும். 

தயிர்ப்பச்சடியில் தயிர்தான் அதற்கான தனி ருசியைக்கொடுக்கிறது என்பதால் அதன் தரத்தில் சமரசம் செய்து கொள்ளலாகாது. தயிர் என்ற பெயரில் கெட்டி மோரைச்சேர்த்தால் பச்சடியானது அவியல், துவரன், மோர் மிளகாய் போன்றவற்றுடன் இலையில் இரண்டறக்கலந்து விடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். சூடாக இருக்கும்போது தயிரைச்சேர்த்தாலும் அதே கதிதான். ஆகவே, பச்சடி அறை வெப்பநிலைக்கு வந்த பின் அல்வாத்துண்டு மாதிரியிருக்கும் தயிரைச்சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கிளறினால் தளதளவென்றிருக்கும் தயிர்ப்பச்சடி இலையில் அடக்கவொடுக்கமாக அமர்ந்திருக்கும்.

செய்முறை ஒரு சிறிய வீடியோவாக..

Wednesday, 4 February 2015

இப்பொழுது இரண்டாமிடம்.. ச்சாய்ஸில் எப்போதும் முதலிடம்.

முத்து, மணி, என்று ஏதோ ஒரு பெயரில் கிராமங்களில் வளர்பவையாகட்டும், ஜிம்மி, ஜானி, சாக்லெட், ஃபேஸ்புக்,, ரூஷி என்று பெயரிடப்பட்டு நகரங்களில் வளர்க்கப்படுபவையாகட்டும் மனிதர்களோடு பிரிக்க முடியாத ஒரு அன்புப்பிணைப்பை ஏற்படுத்தி விடுகின்றன இந்த ஜீவன்கள். கிராமங்களைப்பொறுத்தவரை முதலில் காவலுக்காகத்தான் வளர்க்க ஆரம்பிக்கப்படுகின்றன. அதனாலென்ன,.. காவலரும் நம் குடும்பத்தில் ஒருவர்தானே.

எங்கள் தாத்தா வீட்டில் ஒரு நாய் வளர்ந்தது. தாத்தாவின் கூடவே அதுவும் விடியற்காலையில் வயலுக்குப்போய் கொக்குகளை விரட்டுவது, வரப்பில் முடங்கித்தூங்குவது போன்ற மேல்வேலைகளைப் பார்த்து விட்டு, இரவில் களைத்துத்தள்ளாடியபடி வரும். பகலில் ஆளையே காணாது. என்றாவது ஒரு நாள் தாத்தா சீக்கிரம் வந்து விட்டாலும் அது தனது வழக்கமான நேரத்துக்குத்தான் வரும். “கஞ்சிய நேரத்தோட ஊத்துனாத்தான் என்னா?” என்ற அலுப்பு தொக்கிய முகத்துடன் போய் கோழிக்கூட்டின் மேல்திண்ணையில் போய் முடங்கிக்கொள்ளும்.

சிறுவயதில், அப்போது கைக்குழந்தையாக இருந்த என் தம்பியை இடுப்பில் வைத்துக்கொண்டு படிக்கட்டில் படுத்துக் கண் வளர்ந்து கொண்டிருந்த நாயைக்காட்டி “பட்டி பாரு.. த்ச்.. த்ச்.” என்று விளையாட்டுக்காட்டிக்கொண்டிருந்தேன். கனவில் என்னத்தைக்கண்டதோ!!.. என் ஆள்காட்டி விரலைக்கவ்வி விட்டது. பல் பதிந்து ரத்தம் கொடகொடவென்று கொட்ட திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்த என்னைக்கண்டதும் அந்த வீட்டம்மா தரதரவென்று வீட்டினுள் கிட்டத்தட்ட இழுத்துச்சென்றார். ஒரு துண்டு கருப்பட்டியைக் கொடுத்து மென்று தின்னச்சொல்லி, ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய்யையும் கொடுத்து குடிக்கச்சொன்னார். கடிபட்டவருக்கு நாயின் உரிமையாளர் வீட்டிலிருந்து இதெல்லாம் செய்யவேண்டுமென்ற சம்பிரதாயமாம். கருப்பட்டியைக்கண்டு அகமகிழ்ந்தாலும் நல்லெண்ணையைக் கண்டதும் ஓடப்பார்த்தேன். விடாப்பிடியாகப் புகட்டி விட்டு என் வீட்டிற்குத்தகவல் சொல்வதற்காக கூடவே ஒரு ஆளையும் அனுப்பி வைத்தார்கள். ஆரம்பித்ததைய்யா வினை..

மறுநாள் அரசாங்க ஆஸ்பத்திரிக்குப்போய் ஒரு ஊசி, ஒரே ஒரு ஊசி போட்டு விட்டு வந்தேன். அன்றிலிருந்து நாற்பத்தொரு நாட்களுக்கு உப்பில்லாத பத்தியச்சாப்பாடுதான். சிறு பயிறை உப்பில்லாமல் அவித்துத் தின்னத்தருவார்கள். அதை உப்புப்போட்டு அவித்துத்தந்தாலே அப்பொழுதெல்லாம் சாப்பிடமாட்டேன். பற்றாக்குறைக்கு நான் சாப்பிட்டதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து தினமும் அந்த நாய்க்கும் போடுவார்கள். என்னைக் கடித்த தவறுக்காக அந்த நாயும் தினமும் உப்பில்லாப்பத்தியம் இருந்தது. போதாக்குறைக்கு வேறு யாரையும் கடித்து விடக்கூடாதென்று அதற்கு வீட்டுச்சிறை வேறு.
Great dane என்றும் அறியப்படும் German Mastiff இனத்தைச்சேர்ந்த இவரைப்பற்றிய தகவல்கள்  வலையில் நிறையக்கிடைக்கின்றன.
நாய் வளர்க்க வேண்டுமென்று ஆசையாக இருந்தாலும் இந்த சாங்கியங்களால் ஆசையை முளையிலேயே கிள்ளி விடுவதுண்டு. இருந்தாலும் எப்பொழுதாவது அப்பொழுதுதான் கண் திறந்த குட்டிகள் எங்கள் வீட்டிற்கு வந்து இரண்டொரு மாதங்கள் வளர்ந்து விட்டு வேறு எங்காவது போய் விடும். 

பக்கத்து வீட்டில் இருந்த அல்சேஷனுக்கு ரொம்பவும் குழந்தை மனசு. யார் லிப்டில் போனாலும் தன்னையும் கூட்டிப்போகச்சொல்லி அடம்பிடிக்கும். லிப்ட் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடி வந்து மேலே மோதும், இழையும். மனிதர்களிடம் கொண்டிருக்கும் தன் பிரியத்தைக் காண்பிப்பதற்காக அது செய்யும் வித்தைகள் இருக்கிறதே அட!! அட!! அட!! மகளுக்கு நாய் வளர்க்க ஆசையாக இருந்தாலும், கிட்டே நெருங்கப்பயப்படுவாள். அவள் கல்லூரி விட்டு வரும் நேரத்தில் நான் வாசற்கதவைத்திறந்தே வைத்திருப்பேன். லிப்ட் கதவின் கண்ணாடி வழியே பார்த்து விட்டு நாய் இல்லையென்றால் ஒரே பாய்ச்சலாய் வீட்டுக்குள் ஓடி வந்து விடுவாள். இல்லையென்றால் நான் பாதுகாப்பாய் கூட்டி வர வேண்டியிருக்கும். இதுவே ரங்க்ஸ் வரும்பொழுது பின்னாடியே எங்கள் வீட்டுக்குள்ளும் வந்து விடும். ஐந்து நிமிடமாவது கொஞ்சிக்குழைந்த பின் மனமேயில்லாமல் தன் வீட்டுக்குப்போகும்.

வீட்டுக்குக்கூட்டி வந்து வளர்த்தால்தான் வளர்ப்புப்பிராணியா? தெருக்களில் ஆதரவற்றுத்திரியும் நாய்க்குட்டிகள் எத்தனையோ இருக்கின்றன. பாசத்தை அவற்றுக்கும் கொஞ்சம் பங்கிட்டுக்கொடுக்கலாமே. வீட்டருகில் ஒரு நாய் ஐந்து குட்டிகளை ஈன்றிருந்தது. எலும்பும் தோலுமாக மடியே இல்லாமல் இருந்த அந்தத்தாயால் குழந்தைகளின் வயிற்றை நிரப்ப இயலவில்லை. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் பால், பிஸ்கட், ப்ரெட், சப்பாத்தி என்று கொண்டு வந்து ஊட்டுவார்கள். ஆனாலும் அது தன் கடமையை விடாமல் செய்தது. குழந்தைகள் பசித்திருக்கக் கண்டிருக்கும் தாய்மையும் உண்டா என்ன? தான் என்ன துன்பப்பட்டாலும் தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதானே தாய்மை. இம்மாத பிட் தளத்தின் மாதாந்திரப்போட்டியும் இந்தத்தலைப்பையொட்டியே வந்ததால் நான் அனுப்பிய இந்தப்படம் இரண்டாம் இடத்தை வென்றது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்பொழுதும் நாய் வளர்க்க வேண்டுமென்ற மகளின் ஆசையை பராமரிப்பைக் காரணம் காட்டித்தான் நொறுக்கிப்போடுகிறேன். அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் நாய் வளர்க்க அனுமதி கிடையாது. கிடைத்தாலும் அவர்கள் போடும் விதிமுறைகளில் அந்த ஆசை தானாகவே அழிந்து போகும் என்பது இரண்டாவது காரணம். வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டு சரியாகப் பராமரிக்காமல் விடுவதை விட, அது நல்லதொரு பராமரிப்பாளரின் கையில் சென்று சேர்வது நல்லதல்லவா?..

Monday, 2 February 2015

சாரல் துளிகள்


1)  பலவீனமாக்குவதல்ல,.. மேலும் உறுதிப்படுத்துவதே அன்பு.

2) கட்டைவிரல் குறிப்பால் தாகத்தை உணர்த்திய சாலை வியாபாரிக்கு, புத்தம்புது தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துச் சென்ற வாகன ஓட்டுனர் உணர்த்திச்செல்கிறார் மனிதம் இன்னும் செத்து விடவில்லையென்பதை..

3) தெருவில் போகும்போது "டாய்ய்ய்ய்.. " என்று வலிய அழைத்து 'டாட்டா ' சொல்லிச் சிரிக்கிறது இளம்பிஞ்சொன்று # இந்த நாள் இனிது#

4) திரைப்படம் ஆரம்பிக்குமுன் ஒலித்த தேசியகீதத்துடன் தானும் கூடச்சேர்ந்து பாடிக்கொண்டிருக்கிறது கை கால் முளைத்த ஒரு புல்புல்..

5) எதிர்முனையிலிருக்கும் நபரின் நிலைமையைச் சற்றும் சிந்தியாமல், “ஏன் போனை உடனே எடுக்கலை?” என்று தேம்பும் அப்ரண்டீஸ்களைத் தேற்றியே பாலன்ஸ் தீர்ந்து விடுகிறது.

6) கூடை நிறைந்திருக்கிறது.. ஒவ்வொன்றாய் உண்கிறான் பசி பொறுக்காத வியாபாரி.

7) மெலிந்த கைகளை நீட்டி வானிடம் சில துளிகள் யாசகம் கேட்க ஆரம்பிக்கிறது மரம்.. கோடைகாலம் ஆரம்பம்.

8) காலோடு தலை போர்த்திக்கொண்டால் பேய் பிசாசால் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணும் குழந்தையின் அறியாமை ரசிக்கவே வைக்கிறது.

9) இளவெயிலில் உலர்ந்து கொண்டிருந்த வானவில்லிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன வண்ணங்கள். உத்திரவாதம் வெளுத்துப்போயிற்றே இந்திரனே.

10) முதல் மழைத்துளியை அருந்திய நிலத்திலிருந்து வெளிப்பட்ட ஆவியாய் எங்கிருந்தோ மணத்துக்கொண்டிருக்கிறது ஒரு புல்லாங்குழல்.

LinkWithin

Related Posts with Thumbnails