Sunday 2 July 2023

கூட்டாஞ்சோறு

வீட்டுக்குப் பக்கத்தில் எங்கேயாவது ஒரு நாள் பயணமாக சுற்றுலாவோ, பக்தி உலாவோ சென்று வர வேண்டுமா? ஒன்றிரண்டு குடும்பங்கள் மட்டும் கூடிக்களிக்கும் தினங்களா? எங்கேயாவது தோட்டம், அருவிக்கரை போன்ற இடங்களுக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் கொண்டு சென்று அங்கேயே சூடாகச் சமைத்துச் சாப்பிட்டு பொழுதைக்கழித்து வர விரும்புபவர்களா? புது மணமக்களுக்கான விருந்தா?... முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னெல்லாம் மக்களின் ஒரே விருப்பமாக கூட்டாஞ்சோறும் இருந்து வந்துள்ளது. 

சில சமயங்களில் கிளம்புவதற்கு முதல்நாள் இரவில் வீட்டுப்பெண்கள் கண் விழித்து ஆளுக்கொரு வேலையாகச்செய்து கூட்டாஞ்சோற்றைக் கிளறி தூக்குவாளிகளில் அடைத்து மேலாக வாழையிலை போட்டு மூடியால் இறுக மூடி விடுவர். தொட்டுக்கொள்ள கூழ்வற்றல், வெங்காய வடகம், பப்படம், ஊறுகாய், துவையல்கள் என பக்கவாத்தியங்களும், எல்லோருக்குமாக அளவாக நறுக்கப்பட்ட வாழையிலைத்துண்டுகளும் கூடவே பயணிக்கும். பயணம் போன இடத்தில் கொஞ்சம் சடவாறிவிட்டு, பக்கவாத்தியங்களுடன் மெயின் அயிட்டமான கூட்டாஞ்சோற்றையும்  வெளுத்துக்கட்டுவர். பேச்சும் சிரிப்புமாகக் கலகலவென உணவுநேரம் அமையும்போது கணக்கேயில்லாமல் கவளங்கவளமாக உணவு உள்ளே போகும். 

காலப்போக்கில், "எங்க போனாலும் இந்த அடுப்பங்கரையையே கெட்டிக்கிட்டு அளணுமா?" என பெண்கள் முணுமுணுக்கத் தொடங்க, 'போற எடத்துல என்னமும் கௌப்புக்கடையில சாப்புட்டுக்கலாம்' என மக்களின் மனநிலை கொஞ்சங்கொஞ்சமாக மாறத்தொடங்கி விட்டது. ஆனாலும் எப்போதாவது நினைவின் ருசி மேலோங்கும்போது 'சாப்புடணும் போல இருந்திச்சின்னு அவ்வோ கேட்டா' எனவோ 'பிள்ளேளுக்கு ஒரு நல்ல சோறுகறி வச்சிக்குடுக்காண்டாமா?' எனவோ சொல்லிக்கொண்டு சமைத்துப் பரிமாறப்படுகிறது. 

நல்ல புழுங்கலரிசியில் சமைக்கப்பட்ட கூட்டாஞ்சோறு இன்னும் ருசி மிகுந்தது. ஆனால், எங்கள் வீட்டில் புழுங்கலரிசியில் சமைத்தால் அதை நான் மட்டுமே சாப்பிட வேண்டியிருக்கும். ஆகவே பச்சரிசியில் செய்தேன். 

எந்த அரிசியானாலும் அதோடு நாலுக்கு ஒரு பங்கு துவரம் பருப்பைக் கலந்து வையுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்றிவிட வேண்டாம்.

1 முருங்கை, 2 கத்தரி, கைப்பிடி சீனியவரை, 2 பெரிய வெங்காயம், 10 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 4 பச்சை மிளகாய்கள், பாதி மாங்காய், 2 உருளைக்கிழங்குகள், பாதி வாழைக்காய், 1 கேரட் என இவையெல்லாவற்றையும் பெரிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சையளவு புளியை ஊற வைத்து நன்கு கசக்கிப்பிழிந்து ஒரு தம்ளர் அளவில் புளித்தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லித்தழையை நறுக்கியும், கறிவேப்பிலை இணுக்கை உருவியும், கைப்பிடி முருங்கைக்கீரையை ஆய்ந்தும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்கீரை கிடைக்காத சமயங்களில் நான் வெந்தயக்கீரையை நறுக்கிச் சேர்ப்பதுண்டு.

ஒரு தம்ளர் அரிசிக்கு அரை தம்ளர் அளவு தேங்காய்த்துருவல் எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கூடுதலானாலும் பாதகமில்லை. அத்தோடு ஒரு பல் பூண்டு(விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்) ஒரு ஸ்பூன் சீரகம், காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். 

முன்னேற்பாடுகள் தயாரெனில் இனி களம் புகலாம்..

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பிலேற்றி சூடானதும் அரிசிபருப்பை இரண்டே இரண்டு முறை களைந்து போடவும்.

சோறு அரைவேக்காடானதும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை மொத்தமாக அதனுடன் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நடுத்தரமான தீயில் வேக விடவும். பெரிய துண்டங்களாகச் சேர்ப்பதால் எல்லாம் ஒரே சமயத்தில் வெந்து விடுகிறது.

காய்கள் முக்கால் வேக்காட்டை நெருங்கும்போது புளித்தண்ணீரைச் சேர்த்து அடிமேலாகக் கிளறி விடவும். பச்சைவாடை போய் சாதமும் வெந்திருக்கும் பொழுதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் முருங்கைக்கீரையையும், கொஞ்சம் காயப்பொடியையும் சேர்த்து காய்கள் உடையாமல் ஒருசேர கிளறி விட்டு மூடி சிறு தீயில் வேக விடவும். முருங்கைக்கீரை இளசாக இல்லையெனில் புளித்தண்ணீர் ஊற்றும்போதே அதையும் சேர்த்து விடவும். கீரை வேகாமல் இருந்தால் ஜீரணமாகாது. 

எல்லாம் ஒன்று சேர வெந்ததும் லேசாகத் தளர்வாக இருக்கும்போதே இறக்கி வைத்து நறுக்கிய கொத்துமல்லி இலையையும் கொஞ்சம் தாராளமாக நெய்யையும் ஊற்றவும். கடைசியாக கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு தாளித்துக்கொட்டி லேசாகக் கிளறி, கூட்டாஞ்சோற்றின் ஒவ்வொரு அணுவிலும் தாளிதத்தின் ருசி பரவச்செய்யவும். நேரமாக ஆக சோறு இறுகிக்கொள்ளும். பருப்பு வெந்து ரொம்பவும் குழைந்து விடாமல் லேசாக முழித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் எனக்குப் பிடிக்கும்.

இதைச் சூட்டோடு சாப்பிடுவது ஒரு ருசியெனில், வெச்சு சாப்பிடுவது தனி ருசி. ஒரு நாளைக்கு மேல் தாங்காது ஆகவே சீக்கிரம் தீர்த்துக்கட்டி விடவும்.

ஊரிலிருந்து போன வருஷம் கொண்டு வந்த நார்த்தங்காய்களை நானே ஊறுகாய் போட்டேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். நார்த்தங்காய் ஊறுகாயெல்லாம் கடைசியாக அம்மை கையால் 1989க்கு முன்னால் சாப்பிட்டது.



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails