Monday, 15 June 2015

சாரல் துளிகள்


சோடியம் விளக்கிலிருந்து 
கொட்டிக்கொண்டிருந்த பெருமழையில்
நனைந்து கொண்டிருந்த மஞ்சள் மாடொன்றின்
முதுகிலிருந்து குதித்த
நீலத்தவளை சொல்லிப்போயிற்று
மழை 
வானத்திலிருந்தும் பொழிந்து கொண்டிருப்பதை.

வட்டத்திற்குள் கட்டமும்
கட்டத்திற்குள் சதுரமும்
ஒன்றையொன்று சிறைப்படுத்தியும்
விட்டு நீங்கியும், முழுமைப்படுத்தியும்
ஒன்றுக்குள் ஒன்றாயும்
அன்னியப்பட்டும்..

கரடிக்குட்டியும் ஷ்ரெக்கும் 
சிண்ட்ரெல்லாவின் பொருட்டு நடத்தும் மௌனயுத்தத்தை 
வேடிக்கை பார்த்தவாறு பாடிக்கொண்டிருக்கின்றன டால்மேஷியன்கள் 
பொம்மைக்கூடைக்குள்..

நினைத்தாற்போல் கலைந்து
திடுமென நினைத்துக்கொண்டு மூடும்
மழைக்கருமேகங்களுக்கும்
எதற்காக அழ ஆரம்பித்தோமென்பதை மறந்து
அவ்வப்போது ரீங்காரமிட்டு வைக்கும்
குழந்தைக்கும் அதிக வித்தியாசமில்லை.

நேற்று வரை வெயிலடிக்கிறது எனவும்
இன்று முதல் மழையடிக்கிறது எனவும்
பிறர் கூரையோரமாய் ஒதுங்கும்
தனக்கெனக் கூரையற்றவனை
மௌனசாட்சியாய் வெறித்துக்கொண்டிருக்கிறது கூரை

கடந்து செல்லும் கால்களைத் 
தட்டித்தட்டிக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது
பாதையில் புதைந்திருந்த கல்.

இந்த வழியாகச் சென்றிருக்கலாம்
அந்த வழியாகக்கூட சென்றிருக்கலாம்
இரண்டும் முட்டிக்கொள்ளும் 
கூட்டுப்பாதைச்சந்திப்பில்
எதிர்பாராத ஏதோவொன்றைச் 
சந்திக்க நேரிடுமெனில்
எந்தப்பாதை வழியாகச்சென்றால்தான் என்ன?

குளிர்ந்த இரவுக்குளத்தில் அல்லிகளாய்ப் பறிப்பாரற்றுப் பூத்திருக்கின்றன நட்சத்திரங்கள்.

தின்னும் தனிமைக்கு எண்ணங்களை இறைத்தவன் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பிக்கிறான் இன்னொரு முறை.

வளர்ப்பவனை நம்பாமல் வெட்டுபனை நம்பிய ஆடுகளின் கடைசிக்கணத்தில் கொலைவாளில் பிரதிபலித்தன அவை இழந்த அத்தனையும்.

Saturday, 30 May 2015

வாங்கி பாத் (கத்தரிக்காய் சாதம்)

அதென்ன “வாங்கி பாத்” “வாங்காத பாத்” என்று குழம்ப வேண்டாம். கத்தரிக்காயை மராட்டியில் “வாங்கி” என்று சொல்வார்கள். பாத் என்றால் சாதம். “தால் பாத்” என்பது பருப்பு சாதத்தைக் குறிக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் அரிசியைக்குறிக்கும் “சாவல்” என்ற சொல்லையே எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறார்கள். எங்களூரில் இப்பொழுதெல்லாம் எல்லா வீட்டிலும் தால் சாவலே சாப்பிடுகிறோம். நம்மூரிலும் முன்னெல்லாம் சோறு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது வழக்கொழிந்து இப்பொழுதெல்லாம் எங்கெங்கு காணினும் சாதமே பரிமாறப்படுகிறது. 

அதிலும் இப்பொழுதெல்லாம் “வெள்ளை சாதம்” என்றொரு பெயர் கிளம்பி கிலியடிக்க வைக்கிறது. ஒரு விருந்தில் என்னிடம் “வெள்ளை சாதம் வைக்கட்டுமா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பேய்முழி முழித்தேன். மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு இலையில் பரிமாறப்பட்ட அந்த வஸ்துவைக்கண்டதும் கொஞ்சம் ஆசுவாசமும், கொஞ்சம் திடுக்கிடலும் ஏற்பட்டது. வெறுஞ்சோறு என்று அதுகாறும் அறியப்பட்டதே வெள்ளை சாதம் என்று புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது. இப்பொழுதெல்லாம், சைவ, அசைவ பிரியாணிகள் பரிமாறப்பட்டதும் அடுத்த ரவுண்டுக்கு வெறுஞ்சோற்றுடன் ரசமோ அல்லது சாம்பாரோ பரிமாறப்படுகிறதாம். சரி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அப்பாலிருந்து எப்பொழுதாவது ஊருக்கு வரும்போது இம்மாதிரியான திடுக்கென்ற திடுக்கிடல்கள் ஏற்படுவது ஜகஜமே. வேறென்னென்ன அயிட்டங்கள் என்னென்ன பெயர்களில் மாற்றப்படக்காத்திருக்கின்றனவோ. 

சூப்பர் மார்க்கெட்டில் எம்.டி.ஆர் மசாலாக்கள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரிப்பக்கம் சென்றபோதும் இப்படித்தான், “பிசிபேளா பாத்” என்ற பெயரைக்கண்டதும், அட!!.. இது நம்மூர் கூட்டாஞ்சோற்றுக்கு தங்கையல்லவோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கண்ணை ஓட்டியபோது தென்பட்ட “வாங்கிபாத்” பாக்கெட்டை வாங்கி வந்து செய்து பார்த்தேன். ருசி பரவாயில்லை ஆனால் வாயில் வைக்க முடியாத அளவுக்குக் காரம். பொதுவாகக் காரம் என்றாலே ஒதுக்கி விடும் மகளுக்கு இது ரொம்பப் பிடித்து விட்டது. செய்து தரச்சொல்லி அடிக்கடி கேட்பாள். ஆனால் என்ன காரணத்தாலோ மார்க்கெட்டில் எம்.டி.ஆரின் வாங்கி பாத் கிடைக்கவேயில்லை. கிடைத்த ரெசிப்பிகளையெல்லாம் முயற்சித்தாலும் ‘அந்த’ ருசி வரவேயில்லை. கிட்டாத பழம் ரொம்பவே புளித்ததால் அதன்பின் முயற்சிக்கவேயில்லை.

சமீபத்தில் நம் கீத்தா மாத்தாஜியின் வலைப்பூவில் இதன் செய்முறை கிடைத்தது. அதன்படி செய்து பார்த்தேன். ஆஹா!!.. அபார ருசி போங்கள். செய்முறையை இங்கேயும் தருகிறேன்.

கத்திரிக்காய் கால் கிலோ

வெங்காயம் பெரிது 2 (இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.)

பச்சை மிளகாய்  2  குறுக்கே கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

மஞ்சள் பொடி

உப்பு தேவையான அளவு

தாளிக்க வறுக்கத் தேவையான எண்ணெய்

ஒரு டீஸ்பூன் நெய், கடுகு, ஜீரகம், வேர்க்கடலை தோல் நீக்கியது இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையானால்.

பச்சைக் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

மசாலாப் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:

மி.வத்தல் நான்கு

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு, உபருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்

மிளகு அரை டீஸ்பூன்

கொப்பரைத் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள் இரண்டு டீஸ்பூன்

வேர்க்கடலை வறுத்துத் தோல் உரித்தது  ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்

லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு

சோம்பு ஒரு  டீஸ்பூன்

ஏலக்காய் பெரியது ஒன்று,

கிராம்பு ஒன்று.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்து ஆற வைத்துப் பொடி செய்து கொள்ளவும்.

உதிரி உதிரியாக சாதம் வடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதிலே கறிவேப்பிலை, பச்சைமிளகாயப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயைச் சேர்க்கவும். கத்தரிக்காயைச் சற்று நேரம் எண்ணெயிலே வதக்கவும். பாதி வெந்திருக்கும் நேரம் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்க்கவும். சற்று வதக்கவும். இப்போது வறுத்துப் பொடித்துள்ள பொடியை அளவாகச் சேர்க்கவும். பொடியைச் சேர்க்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். சற்று நேரம் கிளறவும். பின்னர் எடுத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டுக் கலக்கவும். தேவையானால் அரை டீஸ்பூன் உப்பு சாதத்திற்கு மட்டும் தேவைப்படும்படி சேர்க்கவும். நன்கு கிளறவும். இன்னொரு வாணலியை அடுப்பில் ஏற்றி ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கடுகு, ஜீரகம் சேர்க்கவும். வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையை அந்த நெய்யில் போட்டு உடனே அடுப்பை அணைத்துவிடவும். இவற்றை அந்த சாதத்தின் மேலே போட்டுக் கொத்துமல்லியும் தூவிவிட்டுக் கிளறவும்.  இதற்குக் காரட் துருவல், வெங்காயத் துருவல் போட்ட தயிர்ப்பச்சடி தொட்டுக்கொளள நன்றாக இருக்கும்.


ஆஹா!!.. அபார ருசி போங்கள். அரிசியை உபயோகித்துச் செய்தது வெற்றியடைந்ததால் பையருக்காக கோதுமை ரவையை உபயோகித்துச் செய்தேன். அளவாகத் தண்ணீர் வைத்து அதிலேயே கொஞ்சம் உப்புப்போட்டுக் கொதிக்க வைத்தபின் கோதுமை ரவையைப் போட்டு வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு, கோதுமை ரவையை அப்படியே ஆற விடவேண்டும். கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கும் தண்ணீரும் உறிஞ்சப்பட்டு பொலபொலவென சாதம் வெந்து விடும். அதன் பின் செய்முறையின்படி சாதத்தைத் தயாரிக்க வேண்டியதுதான். பையருக்கும் இது ரொம்பவே பிடித்துப்போனது. தொட்டுக்கொள்ள மாங்காய்இஞ்சி ஊறுகாய் இருந்தால் அதிக ருசி.

எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வயிற்றில் "வாங்கி பாத்" வார்த்த மாத்தாஜிக்கு ஜே :-)

Monday, 11 May 2015

பெருவாழ்வு

அன்பு, கருணை, காதல், மனிதாபிமானம் என பலப்பல நதிகளை இணைத்துக்கொண்டு பெருநதியாய்ப் பெருக்கெடுத்தோடுகிறது இவ்வாழ்வு.

கொழுந்து விட்டெரிய வைக்கும் நொடியை எதிர்நோக்கி காற்றுக்காகக்காத்திருந்த பேரார்வம் கொண்ட சிறுபொறி பெரு வனத்தை விழுங்கிப் பசியாற்றிக்கொண்டது.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் சில விஷயங்களை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தவறான நேரத்தில் சொல்லப்பட்டால் சரியான சொற்களும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன.

திட்டமிட்டுச்செய்யும் முயற்சிகள் எந்த முன்னேற்றமும் காணாத நிலையில், திட்டமிடப்படாமலே சில தங்களைத்தாங்களே நடத்திக்கொண்டு விடுகின்றன.

ஒவ்வொரு விடையிலும் முன்னெப்போதோ தேடிய இன்னுமொரு விடையையும் விடுவித்துக்கொண்டே போகிறது வாழ்வெனும் குறுக்கெழுத்துப்புதிர்.

சுறுசுறுப்பு ஒரு நூலிழை அதிகமாகும்போது பதட்டத்தை நோக்கி இட்டுச்செல்கிறது. முன்னது ஆக்கும், பின்னது தள்ளாட வைக்கும்.

எவ்விதத்துன்பத்தையும் தாங்கிக்கொள்பவர்களால்கூட, தனக்கு இழைக்கப்பட்ட  துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

காரணமில்லாமல் காரியமில்லை, ஆனால் அந்தக்காரணத்தைக் கேட்பதற்கு சில சமயங்களில் மனதும் நேரமும் இருப்பதில்லை.

இருண்ட பக்கங்கள் மட்டுமே கொண்ட வாழ்வு விதிக்கப்பட்டவர்கள் ஒளியை நோக்கிச் செல்லுமிடமெல்லாம் அவ்விருள் ஒரு நாய்க்குட்டியைப்போல அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Sunday, 5 April 2015

ஈடுபாடு..

சாக்குப்போக்குகளைச் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மனநிலை வந்து விட்டால் அதன்பின் செய்யும் வேலையில் முழு ஈடுபாடு வராது.

வெறுமனே கவலைப்படுவதால் வீணாகும் நேரத்தையும் ஆற்றலையும், அடுத்து செய்ய வேண்டிய செயலுக்கான சிந்தனையில் செலவழித்தால் குறைந்த பட்சம் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதற்கான வழியாவது தோன்றும்.

'வலி' என்ற உணர்வு மட்டும் இல்லாவிடில், மனிதன் மரணத்திற்கும் அஞ்சமாட்டான். 

விதைத்த கற்களையெல்லாம் வீடுகளாய் விளைவித்து நல்ல மகசூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது தன் கடமை மறவாத முன்னாள் வயல்.

எதிலும் நிறைவுறா மனங்களைத் திருப்திப்படுத்தும் முயற்சிகள் எல்லாமே விரிசலுற்ற பாத்திரத்தின் ஒழுக்காய் கசிந்து பயனில்லாமல் சென்று விடுகின்றன.

இரவின் நீள் தனிமையில் இன்னிசைத்துக்கொண்டிருந்த பூச்சியின் கச்சேரி தடைபட்டதற்கு சுவற்றுப்பல்லி வருந்தவேயில்லை. 

சொல்லப்படும் கருத்திலிருக்கும் கனத்தை விட, சொல்லும் குரலிலிருக்கும் கனமே முதலில் அதைக்கவனிக்க வைக்கிறது.

தனக்குச் சாதகமான சொற்களை மட்டுமே கேட்டுக்கொண்டு, தனக்குப் பலன் தருபவற்றை மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் சிலரது அறிவுத்திறன் அமையப்பெற்றிருப்பதுவும் கூட இறைவனின் திருவிளையாடலே.

கடமையைச் செய்தபின், கிடைத்த அனுபவம் மட்டுமே சில சமயங்களில் பலனாக எஞ்சுகிறது.

முயல்பவன் முன்னேறுவான், முயலாதவன் தலைவிதி மேல் பழி போட்டு முடங்கிக்கொள்வான்.

Tuesday, 17 March 2015

சாரல் துளிகள்

வெயிலில் உருகிய மேகத்துளிகளைச் சுவைத்துக்கொண்டிருக்கிறது மும்பை பூமி..

எத்தனை நெரிசலான போக்குவரத்திலும் வாகனங்களின் வகைகளைக் கண்டுணரும் ஆணின் திறமையையும், பார்த்த மாத்திரத்திலேயே சேலையின் வகைகளைக் கண்டுபிடித்துவிடும் பெண்ணின் திறமையையும் படைத்த இறைவனின் திறமையை நான் வியக்கேன்..

அமாவாசை வானின் நட்சத்திரங்களுக்கு நிலாக்குட்டிகள் என்று பெயரிட்டது குழந்தை. புதுப்பெயருக்காக வரிசை கட்டி நின்றன பால்வீதியில் அலைந்த அனைத்தும்..

பண்டிகை நாட்களில் பெண்கள் மட்டுமல்ல கடவுளரும் ஓவர்டைம் பார்க்க நேரிடுகிறது..

தூங்கும்போது குழந்தைகள் அழகுதான், அதே சமயம் ' அப்பாடா.. ' என்றொரு நிம்மதியை உணர்வதையும் தடுக்க முடிவதில்லை :-))

தூக்கத்தினுள் நழுவிய இரவுக்காவலாளிக்கு, தூக்கம் தொலைத்த காகம் நினைவுறுத்தியது. 
கா.. கா.. கா.

குழந்தைகளின் பள்ளி ஆண்டுவிழாவின் போது நடன நிகழ்ச்சிகளுக்காக குழந்தைகளை ஒருங்கிணைப்பவருக்கும், சர்க்கஸின் ரிங் மாஸ்டருக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டு பேருக்குமே நாக்கு தள்ளி விடுகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒருவரோடொருவர் நின்று பேசிக்கொள்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக மின்தூக்கி பழுது பட்டிருக்கும் நாளாகத்தான் இருக்கும்.

(காதில் விழுந்தது)
முதலாமவர்(முறைப்பாக): எங்கிட்ட வெச்சுக்காதே.. நான் எத்தன ஊரு தண்ணி குடிச்சவன்னு உனக்குத்தெரியாது..
இரண்டாமவர்(அமைதியாக): ஏண்ணே!.. தண்ணி குடிக்கதுக்குன்னே ஊரூரா போனீங்களா?
முதலாமவர் கப்சிப்.

சோதனைக்காக ரத்தத்தின் மாதிரியை எடுத்த வல்லுநரை விட்டு, அழைத்து வந்த தந்தையைக் குரோதத்துடன் முறைக்கிறது குழந்தை..

Wednesday, 11 March 2015

தினகரன் கேலரியில் எனது ஒளிப்படங்கள்..

இரண்டு வருடங்களுக்கு முன் குங்குமம் தோழியிலும் தினகரன் நாளிதழிலும் எனது பேட்டி வெளியானதும் அதைத்தொடர்ந்து உங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து நான் கொண்டாடி மகிழ்ந்ததுமான அந்த சரித்திர முக்கியத்துவம் மிக்க சம்பவங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :-)) தொடர்ந்து தினகரன் நாளிதழின் மின்பதிப்பிலும் பேட்டி வெளியானதும் ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியர்கள் மெர்வின் மற்றும் சுந்தரராஜன் அறிவித்து சந்தோஷக்கடலில் ஆழ்த்தினர். 

குங்குமம் தோழியில் வெளியான படங்கள் தவிர நான் எடுத்த ஒளிப்படங்களிலிருந்து மேலும் பல படங்களையும் தினகரன் நாளிதழின் மின்பதிப்பில் வண்ணப்படங்களின் அணிவகுப்பாக "கேலரி" பகுதியில் வெளியிட்டுச்சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தினகரன்.

வெளியான படங்கள்:














 






படங்களை தினகரன் கேலரியிலும் கண்டு களிக்க இங்கே சொடுக்குங்கள்..

தினகரன் நாளிதழின் மின்பதிப்பில் வந்த பேட்டி..

குங்குமம் தோழியில் படங்களுடன் வெளியான அதே பேட்டி..

Sunday, 8 March 2015

குங்குமமும் பிடித்த கவிதையும் பின்னே சாரலும்..

"போற்றவும் வேண்டா 
தூற்றவும் வேண்டா
சரிசமமாய் நடத்தப்படுவதெப்போ?''
முனைவர் அண்ணா கண்ணனின் "உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு" என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த கவிதையின் சில வரிகள் குங்குமம் இதழ் சென்ற வருடம் மகளிர்தின சிறப்பாக வெளியிட்ட 'பிடித்த பெண் மொழிக்கவிதை' பகுதியில் வெளியாகியிருந்தது.. அண்ணா கண்ணனின் அத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த இன்னொரு கவிதையை அவரது தளத்திலேயே வாசிக்கலாம்.
குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளில் பொறுமை எல்லை மீறும்போது அது நாள்வரை தாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் திருப்பித்தாக்கத்தொடங்குகிறார். அப்படித்தாக்கத்தொடங்கும் புள்ளிக்கு வருவதற்கு முன் அவர் தன்னளவில் நிறைய மனத்தடைகளையும் தன்னுள்ளேயே எழுப்பப்பட்ட கேள்விகளையும் தாண்டியே வந்திருப்பார். ஆதலால் அவரது கொந்தளிப்பைச் சமாளிக்க மற்றவர்களால் நிச்சயமாக இயலாது. அடி பணிந்தே ஆகவேண்டும். இதைத்தானே “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளும் அப்படித்தான். இதற்கு மட்டும் ஜாதி, இன, மத, நாடு வேறுபாடுகளே கிடையாது. ஏதாவதொரு அளவில் எல்லா நாடுகளிலும் ஏதாவதொரு வகையில் அவள் வன்முறைக்குள்ளாகிக்கொண்டே இருக்கிறாள். ஆகவேதான் துணிந்து எதிர்க்குரலெழுப்பும் பெண்களையும், 'இதென்ன ஊர்ல நடக்காததா? வீட்டுக்கு வீடு வாசப்படி. பொம்பளைன்னா பொறுத்துத்தான் போகணும்" என்று சுலபமாக அடக்கி விடுகிறார்கள். உட்செலுத்தப்படும் காற்றின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டேபோகும்போது சட்டென்று வெடித்துவிடும் பலூனைப்போல் ஒரு கட்டத்தில்  அவள் வெடித்தெழும்போது இவளால் என்ன செய்து விட முடியும் என்று அலட்சியமாக அதுகாறும் ஆதிக்கத்துக்குட்படுத்தி வந்த கூட்டம் திகைத்துத்தான் போய் விடுகிறது.

முற்காலம் போல் தற்சமயம் எல்லாப்பெண்களும் கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு அடுத்தவர்களின் கருத்துகளுக்குத் தலையாட்டுவதில்லை. அன்பினால் சிலர் கட்டுண்டிருந்தனர் என்றால் தங்களது சுயநலத்திற்காக அவர்களைச் சிந்திக்கத்தெரியாதவர்களாய்,  எல்லாவற்றிற்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி ஆக்கியிருந்தவர்களிடம் சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். இதனால் தங்கள் வாழ்க்கை, பொருள், நிம்மதி என்று தொலைத்தவர்களும் அதிகமே. இப்பொழுதோ பெண்கள் நல்லது கெட்டதை சுயமாகச்சிந்திக்கிறார்கள், திருமணம் போன்ற தங்கள் வாழ்க்கை முடிவுகளைத் தாங்களே எடுக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னை விட பொறுப்பும் அதிகரித்திருக்கிறது.

பெண்களின் நிலை எந்தளவு மேம்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு முறை அலசும்போதும், பெண்சிசுவை வெறுத்தல், வரதட்சணைக்கொடுமை, பொருந்தாத்திருமணங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற அம்சங்களில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்ற நிலையே தெரிகிறது. வரதட்சணை கேட்கும் தாயை மகன் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஒரு பக்கம் என்றால் அப்படித்தடுக்கும் மகனை தாயே கடுஞ்சொற்கள் கூறியும், பயமுறுத்தியும் பணிய வைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. பெண் பிறந்தால், 'என் பிள்ளை பாரம் சுமக்க வேண்டி வருகிறதே' என்று புலம்பும் மாமியார்கள் அதே பிள்ளைக்கு திருமணத்திற்காகப் பெண் தேடி அலைந்த சரித்திரத்தையெல்லாம் வெகு வசதியாக மறந்தே விடுவார்கள். இதில் பெண்ணின் நிறம் கருப்பாக இருந்தால் அவ்வளவுதான்.. மனச்சித்திரவதை செய்தே அவளைச் சாகடித்து விடுவார்கள். சமீபத்தில் கூட குமரி மாவட்டத்தில் தன்னை கருப்பாக இருப்பதாக அடிக்கடி இடித்துக்கூறி வந்த கணவனின் கொடுமை தாங்க மாட்டாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.

அடுப்பங்கரையிலேயே அடைந்து கிடந்த பெண்கள் வெளியே வந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. அப்பெருங்கல்லைப் புரட்டிக்கொடுக்கும் நெம்புகோலாக இருந்த பெண்கள் எத்தனையோ பேர். குடும்பம், வேலை என்று இரட்டைச்சுமையுடன் சிரமப்பட்டபோதிலும், பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக நிற்கும் காலகட்டத்தில் வாழ நேர்ந்த போதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் புரிந்து சிகரங்கள் தொடுகிறார்கள் பெண்கள். அவர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அப்படியென்றால் காலம் மாறவேயில்லையா?.. நிச்சயமாக மாறுகிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக... பெண்களுக்கு திருமணப்பத்திரிகையில் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளவோ, அல்லது வேலைக்குப்போய் சம்பாதிக்கவெனவோ வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் அளிக்காமல் தற்காப்புக்கலை, தன்னம்பிக்கை, தனக்கு நேரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம், அவற்றை நல்ல முறையில் தீர்க்கும் அறிவு என்று அனைத்தும் கற்றுக்கொடுத்து வளர்க்கப்பட வேண்டும். சில இடங்களில் படித்த பெண்களை விட படிக்காதவர்களே தைரியமாக தங்களுக்கு நேரும் அநியாயத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். தலையெழுத்து என்று முடங்குவதை விட்டு தங்களது நியாயமான உணர்வுகளை பெண் எப்போது வெளிப்படுத்துகிறாளோ, அப்போது நிச்சயமாக செவிகள் திறந்தே தீரும். அப்படித்திறக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருப்போம்.
வால்: பிடித்த பெண்மொழிக்கவிதையையும், சாரல் துளியையும் வெளியிட்ட குங்குமம் இதழுக்கு நன்றி.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்..

LinkWithin

Related Posts with Thumbnails