Thursday, 21 July 2011

சேவை செய்யறவங்களுக்கொரு சேவை..

( நன்றி- இணையம்)

"ட்ராபிக் ஜாம் ஆனா என்ன செய்யணும்.."
"ப்ரெட் வாங்கிட்டு வந்து அதுல தடவி, சாப்பிடணும்.."

ஜோக்குக்காக சொல்லப்பட்டாலும், மாநகரங்கள்ல போக்குவரத்து நெரிசல்ல, அதுவும் சிக்னல் இல்லாத இடங்கள்ல மாட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே.. அப்பப்பா!!!.. இஞ்ச் இஞ்சா ஊர்ற வாகனங்கள்ல இருந்துக்கிட்டு போக்குவரத்து காவலர்களை கரிச்சுக்கொட்டுவோம். (இங்கே சிலசமயங்கள்ல காவலர்கள் இல்லாத நேரங்கள்ல நெரிசல் இல்லாம அழகா வாகனங்கள் தானே வழி ஏற்படுத்திக்கிட்டு போறதும், காவலர் ஒழுங்கு படுத்துற நேரங்கள்ல நெரிசல் ஏற்படறதும் விந்தையான ஒண்ணுதான் :-))

ஆனா, அவங்கல்லாம் வெப்ப நிலை மாறுபாடுகளையும், இரவு பகல்களையும் பொருட்படுத்தாம நடுரோட்டுல தூசுதும்புகளுக்கு மத்தியிலும், வாகனப்புகை ஏற்படுத்தும் மாசுகளுக்கு மத்தியிலும் வேலை பார்க்கறதை எத்தனை பேரு ஊன்றிக்கவனிச்சிருப்போம். அதான் 'சம்பளம்' வாங்கறாங்கல்லன்னு மனசாட்சி முனகுனாலும், அது வாய்ல ப்ளாஸ்டரை ஒட்டிவெச்சுட்டு எத்தனை பேரு யோசிச்சிருப்போம்.. நான் உட்பட :-))

ஆனா, செம்பூரைச்சேர்ந்த சூரஜ் ஷா, கொளுத்தும் வெய்யில்ல போக்குவரத்து நெரிசல்ல மாட்டிக்கிட்டு, சரியாகிறதுக்காக காத்திருந்தப்ப இதை யோசிச்சார். அதன் பலனா உருவானதுதான் 'வெப்பத்தை முறியடிப்போம்'ங்கற அமைப்பு. மும்பை ஃப்லிம்சிட்டியின் Rotaract க்ளப்பின் தலைவரான ஷா,.. போக்குவரத்து காவலர்களைப்பத்தி மட்டும் யோசிக்காம, வெய்யில்ல இறங்கி வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்துல இருக்கற மத்த தொழிலாளர்களான, தெருக்கூட்டும் துப்புரவாளர்கள், ரயில்வே ஸ்டேஷன்கள்ல வேலை செய்யற துப்புரவுத்தொழிலாளிகள், ரோடு போடுறவங்க, பஸ் ட்ரைவர்+கண்டக்டர்கள்ன்னு எல்லோரையும் பத்தி யோசிச்சதுதான் அற்புதமான விஷயம்.

அவங்களுக்கெல்லாம்,.. தன்னோட அமைப்புல உள்ளவங்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு, குடிநீர், சிற்றுண்டிகள், எலுமிச்சை ஜூஸ்ன்னு விளம்பி சந்தோஷப்படுத்தியிருக்கார். கொஞ்சமா வெய்யிலும் வெப்பமும் கூடுதலானாலே நாமெல்லாம் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ள தஞ்சமாயிடறோம். போக்குவரத்து நெரிசல்ல சிக்கிக்கிட்டாக்கூட வாகனங்களோட குளிர்சாதன வசதியை சட்ன்னு உபயோகிக்க ஆரம்பிச்சுடறோம்.

அப்படியிருக்க அவஸ்தைகளையெல்லாம் தாங்கிக்கிட்டு, பொது நலத்தோட நமக்காக உழைக்கிற அவங்களுக்கு இந்த சின்ன உதவியை செஞ்சா தப்பேயில்லை. இப்போதைக்கு தெற்கு மும்பை மற்றும் புற நகர்களின் சிலபகுதிகள்ல மட்டும் ஆரம்பிச்சிருக்கற இந்தத்திட்டம் அடுத்த கோடையில் இன்னும் விரிவாக்கப்படலாம்ன்னு சொல்றாங்க...

முக்கியமா போக்குவரத்து காவலர்களுக்காகவே அரசாங்கத்தோட சார்பா ஸ்பெஷலா, இன்னொரு திட்டமும் கொண்டுவரப்பட்டிருக்கு. சென்ற மழைக்காலத்துல பதினஞ்சு ஆப்பீசர்களுக்கு 'லெப்டோஸ்பைரோசிஸ்'ன்னு சொல்லப்படற ஒருவகைக்காய்ச்சல் வந்துருக்கு. இது தேங்கி நிற்கிற மழைத்தண்ணீர்ல விலங்குகளோட கழிவுகள் கலக்கறதுனால பெருகும் 'லெப்டோஸ்பைரோ'ங்கற ஒருவகைக்கிருமியினால வருது. ரோட்டுல அந்தத்தண்ணியில நின்னு வேலை பார்க்கிறதால அவங்களை இந்தக்காய்ச்சல் தாக்கறதுக்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த மழைக்காலத்துலயும் இதுமாதிரி வராம இருக்கறதுக்காக போக்குவரத்துத்துறை அவங்களுக்காக முழங்கால் வரைக்கும் உயரமுள்ள கம்பூட்ஸ்களையும், மருந்துகளையும் ஏற்பாடு செஞ்சுருக்காங்களாம். கொட்டற மழையிலும் நடுரோட்டுல வெள்ளத்துல நின்னு கடமையைச்செய்யற அவங்களுக்கு செய்யப்படும் இந்த வசதிகள் பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். அப்படியே வெள்ளத்தால கஷ்டப்படும் பொதுமக்களையும் அரசாங்கம் கொஞ்சம் கவனிச்சா தேவலைன்னு ஒரு நினைப்பு மனசோரத்துல எட்டிப்பார்க்கறதை தவிர்க்க முடியலை...

Tuesday, 19 July 2011

எதிர்பாராத வேளையில்..

'க்ணிங்..க்ணிங்..' என்ற மணிச்சத்தத்தோடு சைக்கிளை வாசலில் நிறுத்திய தபால்காரர், சைக்கிளில் இருந்தபடியே தபாலை வீட்டுக்குள் விசிறிவிட்டுப்போனார்.

நாற்காலியில் அமர்ந்தபடி நகம் வெட்டிக்கொண்டிருந்த நாராயணனுக்கு லேசான மேல்பார்வையிலேயே.. தபால் எங்கிருந்து வந்திருக்கிறதென்று புரிந்துபோனது. 'அப்பா கவனிக்காமல் இருக்கவேண்டுமே!!..' என்ற வேண்டுதலுடன் அந்த கவரை எடுக்க குனிந்தான். முதுகைத்துளைத்த பார்வையை உணர்ந்து ஓரக்கண்ணால் பக்கவாட்டிலேயே லேசாக தலையை திருப்பினான். எதிர்பார்த்ததுபோல, செய்தித்தாளை லேசாக தாழ்த்தி அவனையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா.

அவன் பார்த்ததும் லேசாக புன்னகைத்தார். சட்டென தபாலை பிரிப்பதுபோல பாவனை செய்துகொண்டே தன்னுடைய அறைக்கு நகர்ந்துவிட்டான்.. ' இதுவும் திரும்பிவந்துடுச்சா??...' அவருடைய பார்வைக்கு இதுதான் அர்த்தம். பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்புவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். கதை, கவிதை, கட்டுரைகள் என்று ஏதாவது அனுப்பிக்கொண்டேயிருப்பான். அவர்களும் சளைக்காமல், 'பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற ஒற்றைவரியில் அவனுடைய கனவுகளை சுக்கு நூறாக தகர்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆயினும், என்றாவது ஒரு நாள் தன்னுடைய படைப்புகளும் பத்திரிகைகளில் வெளியாகும் என்று நம்பினான். நம்பிக்கைதானே வாழ்க்கை??.. அவனுடைய அப்பாவுக்கோ இதெல்லாம் வெட்டியாக செய்யும் காரியமாக பட்டது.  எதையாவது எழுதி எழுதி, சரியாக வரவில்லையென்றால் கசக்கிவீசும் காகிதங்களுக்காக எத்தனை மரங்கள் கொலைசெய்யப்பட்டனவோ?.. சாப்பாட்டில் கவனமில்லாமல், எதையாவது யோசித்துக்கொண்டு சோற்றை அளைந்துகொண்டிருப்பான். கேட்டால் அவன் சொல்லும் பதில்..,'நல்ல ஒரு தாட் வரும்போது கட் பண்ணாதீங்க'

அப்பாவால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ஆரம்பத்தில் அவர் ஊக்குவிக்கத்தான் செய்தார், ஆனால் நடைமுறை வாழ்க்கையையும் கவனிக்கவேண்டும் என்ற நடைமுறை தெரிந்தவர் அவர். அதனால், பையனின் கனவு நனவாக வேண்டுமென்று விரும்பினாலும், வெளிப்பார்வைக்கு கிண்டலும் கேலியும் செய்துகொண்டேயிருப்பார். அப்படியான ஒரு நேரத்தில்தான் அவனிடம் கேட்டார்.

"சரி!!... உன்னோட படைப்புகள் பத்திரிக்கையில் வெளியாகுதுன்னே வெச்சுக்குவோம். வர்ற சன்மானத்தில் எனக்கென்ன வாங்கிக்கொடுப்பே.."

"உங்களுக்கு என்னவேணும்ன்னு மொதல்ல சொல்லுங்க. வாங்குறதை அப்புறம் பார்ப்போம்"

"ம்ம்.... வேற ஒண்ணும் வேணாம். எனக்கு ஒரு சால்வை வாங்கிக்கொடு. அப்புறம் இந்தத்தெருவுல இருக்கிறவங்களுக்கெல்லாம் ஸ்வீட்டும் கொடு,.. எம்பையன் ஒரு படைப்பாளின்னு பெருமையா சொல்லிப்பேன்.. அதுபோதும் எனக்கு"

"கொடுக்கிறேனா.. இல்லியான்னு பாருங்க"

வழக்கம்போல சிரித்துக்கொண்டார். அப்படிப்பட்ட அப்பா இறந்துவிட்டதாகத்தான் ஆபீசுக்கு, வீட்டிலிருந்து தொலைபேசியில் தகவல் வந்தது. அலறியடித்துக்கொண்டு ஓடினான். அவன் வீட்டுக்குள் நுழையும்போதே அழுகுரல் அவனை வரவேற்றது.

ஆபீசிலிருந்து அவன் சாயந்திரம் வீட்டுக்குள் நுழையும்போது, 'வாடா... கைகால் கழுவிட்டு வா.. காப்பி சாப்பிடலாம்' என்று வரவேற்கும் அப்பா... அறைக்குள் அவன் இறைத்துவிட்டுப்போன புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் ஒழுங்குபடுத்தி வைக்கும் அப்பா.. ஆயிரம்தான் கிண்டல் செய்தாலும், மகனுடைய வாசிப்பிற்காக தேடித்தேடி புத்தகங்கள் வாங்கிக்கொடுத்த அப்பா... இப்போது அவன் வீட்டுக்குள் வந்ததே தெரியாமல் படுத்துக்கிடந்தார். எப்பொழுதும் வரவேற்கும் வாய் இன்று ஏனோ ஊமையாகிவிட்டிருந்தது.

எவ்வளவு நேரம் அப்பாவின் பக்கத்தில் அவர்முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் என்று நினைவில்லை. முகத்தையும் கண்ணீரையும் ஒருங்கே துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், கைப்பையை வைப்பதற்காக தன்னுடைய அறைக்கு சென்றான். மேசையின்மேல் வைக்கும்போதுதான் காற்றில் பறந்துவிடாமலிருக்க பேனாஸ்டாண்ட் மேலே வைக்கப்பட்டிருந்த அந்த தபாலை பார்த்தான். வழக்கம்போலத்தான் இருக்கும் என்ற அசிரத்தையும், அப்போது அவனிருந்த மனநிலையும் ஒருசேர, கவரை கையிலேயே வைத்துக்கொண்டு நின்றான். பின் தன்னையறியாமலேயே மெதுவாக பிரித்து, உள்ளிருந்த கடிதத்தை படித்தவன் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினான். அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஐநூறு ரூபாய்க்கான காசோலை நழுவி கீழேவிழுந்தது.

அன்றைக்கு அவன் நடந்துகொண்டதை பார்த்தவர்கள் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நம்பினார்கள். இறந்த தகப்பனுக்கு சால்வை போர்த்தியதுகூட அவர்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால், அழுதுகொண்டே வீடுவீடாக சென்று இனிப்புகொடுத்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நீங்களே சொல்லுங்கள்... அவன் பைத்தியமா??.....

டிஸ்கி: இந்தக்கதையை வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி..



Thursday, 14 July 2011

1+1=22

வழக்கம்போல இந்த வருஷமும், இந்த நாளை மறந்ததுபோல நடிச்சு, சர்ப்ரைஸா பாதுஷாவும் கையுமா மத்தியானமே வந்து நின்ன ரங்க்ஸுக்கு சர்ப்ரைஸா நானும் ட்ரீட் கொடுத்தேன்... (நேத்திய மும்பை கோரத்தால விஸ்தாரமா கொண்டாட மனசு வரலை.. இன்னிக்கும் ரங்க்ஸ் வீட்டுக்கு வந்து சேர்றவரைக்கும் மனசுக்குள்ள பக்.. பக்ன்னு இருந்தது)

உங்க எல்லோருக்காகவும் விருந்து ரெடி செஞ்சுருக்கேன். இருந்து சாப்பிட்டுட்டு மறக்காம மொய்யெழுதிட்டுத்தான் போகணும் :-)))



Monday, 4 July 2011

இதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா!!!..



கொஞ்ச நாளைக்கு முன்னாடி,.. 'F.A.L.T.U' அப்டீன்னு ஒரு இந்திப்படம் வந்துது. இந்தப்படம் நிறைய கேள்விகளை பொதுமக்கள் மனசுல எழுப்பியது. படத்தோட கதை என்னன்னா, பரீட்சையில குறைச்சலான சதவீதத்துல தேறின நாலஞ்சு மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு எந்தக்காலேஜுலயும் இடம் கிடைக்கலை. அப்பா,அம்மாவோ கரிச்சுக்கொட்டறாங்க. அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிச்சுடறாங்க.

இது எல்லாத்துலேர்ந்தும் தப்பிக்கிறதுக்காக, போலியா ஒரு காலேஜை உருவாக்கி,  போலியான அட்மிஷன் கடிதமெல்லாம் தயார்செஞ்சு பெத்தவங்களை ஏமாத்துறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா, அந்த காலேஜ் உண்மைன்னு நம்பி குறைச்சலான சதவீதத்துல தேறின எக்கச்சக்கமான மாணவர்கள் அட்மிஷனுக்காக வந்துடறாங்க. வந்தப்புறம்தான், கல்லூரிக்கட்டிடம் முதற்கொண்டு எல்லாமே போலின்னு தெரியுது.

படிக்கவும் முடியாம, வீட்டுக்கு திரும்பிப்போய் பெத்தவங்க முகத்துல முழிக்கவும் முடியாம, தர்மசங்கடமான நிலையில் இருக்கற அவங்கல்லாம் ஒண்ணுகூடி... வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கறதில்லை, ..அவங்கவங்களோட தனித்திறமைகளை வளர்த்துக்கிட்டாலும் பிரகாசிக்கலாம்ன்னு, பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் பாடம் புகட்டறாங்க. அதுக்கு பரிசா அவங்க நடத்திக்கிட்டிருந்த போலியான காலேஜுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்குது.

3 idiotsக்கு அப்புறம், மாணவச்செல்வங்களோட மனவலியை உணரச்செய்த இந்தப்படத்தோட கதை நிஜமாவே நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.  ஆண்டுதோறும் ஒவ்வொரு காலேஜ்லயும் அட்மிஷனுக்காக 'கட்-ஆஃப் மார்க்' நிர்ணயிக்கறது வழக்கம். பொதுவா மொத்தம் மூணு மெரிட் லிஸ்ட் வெளியிடறாங்க. இதுல காலேஜ் நிர்ணயிச்ச உச்சவரம்பு கட்-ஆஃப் மார்க் எடுத்தவங்களோட பேரு, முதல் லிஸ்டுல வந்துடும். இஷ்டமிருந்தா மறுநாளே போய் சேர்ந்துக்கலாம். இல்லைன்னா விருப்பப்பட்ட காலேஜ்ல ரெண்டாவது மெரிட் லிஸ்ட் வர்றவரைக்கும் காத்திருப்பாங்க. இந்த ரெண்டாவது மெரிட் லிஸ்ட், முதலாவதைவிட இன்னும் கொஞ்சம் தளர்த்தப்பட்டதாயிருக்கும். அதாவது,.. முதல் மெரிட் லிஸ்ட் 95%அல்லது அதுக்கு மேல் எடுத்தவங்களுக்கானதாயிருந்தா, ரெண்டாவது லிஸ்ட் 93-95க்குள்ளாக இருக்கும். இந்தசமயங்கள்ல92.50 எடுத்திருந்தாக்கூட சீட் கிடைக்காம திரும்பவேண்டிய அவல நிலை ஏற்படறதுண்டு.

வழக்கமா இதெல்லாம், professional coursesன்னு சொல்லப்படற பொறியியல், மருத்துவம்,மற்றும் இன்னபிற படிப்புகளுக்குத்தான் நடக்கும். ஆனா, இங்கே எல்லா பட்டப்படிப்புகளுக்குமே அட்மிஷன் இப்படித்தான் நடக்குது. அதுலயும் ஒவ்வொரு வருஷமும், முந்தைய வருஷத்தைவிட கட்-ஆஃப் மார்க் எப்பவும் கூடுதலாத்தான் இருக்கும். இதனால மாணவர்களுக்கும் பெத்தவங்களுக்கும் டென்ஷன் கூடுதலாகத்தான் செய்யுது. விரும்பிய படிப்பை விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்கணும்ன்னா, அவங்க எதிர்பார்க்கற உச்சவரம்பு மதிப்பெண்களை எடுத்துத்தான் ஆகணும். இது மறைமுகமா பசங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்குது. இந்த மனஅழுத்தம் விரும்பத்தகாத விளைவுகளுக்கும் காரணமா அமைஞ்சுடறதுதான் ஏத்துக்கவேமுடியலை.

முன்னெல்லாம் ஒருத்தர் 60-70% வாங்குனாலே, 'அடேயப்பா... பெரிய படிப்பாளிதான்!!!' அப்படீன்னு மூக்கு மேல வெரலை வெச்சு நாக்கு நோக பேசித்தீர்ப்போம். அப்றம் கொஞ்ச காலத்துக்கப்புறம் மதிப்பெண்கள் ஏறுமுகமாக ஆக... இப்பல்லாம் மாணவர்கள் சர்வசாதாரணமா 95%க்கு மேல வாங்கறாங்க. ரெண்டுவருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் 85% எடுத்தா, இருந்த மதிப்பு, இப்போ அவ்வளவா இல்லை.

 'இதெல்லாம் போறாது.. இன்னும் மார்க் வாங்கு.. வாங்கு'ன்னு பசங்க உயிரை வாங்கறாங்க. இதுல பிரச்சினை என்னன்னா, எல்லோருமே அவ்வளவு மார்க் வாங்குவாங்கன்னு சொல்லமுடியாது. சுமாரா படிக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க. அப்படீன்னா,.. 50% மார்க் வாங்குனதாலயே அவள்/ன் எதுக்கும் லாயக்கில்லைன்னு ஆகிடுமா என்ன!!. ஒருத்தருக்கு படிப்பு வராது.. ஆனா நல்லா ஓவியம் வரைவார், ஆடை அலங்காரத்துல நிபுணரா இருப்பார், இன்னபிற திறமைகள் ஏதாவது இருக்குன்னு வெச்சுப்போம். நிறைய மார்க் வாங்காததால அவர் கிட்ட இருக்கற திறமைகளும் இல்லைன்னு ஆகிடாதே. அந்தத்திறமைகள் மூலமாக கூட முன்னுக்கு வரலாமே.

 "வெறும் மதிப்பெண்களை மட்டுமே வெச்சு ஒருத்தர் திறமைசாலியா இல்லையான்னு முடிவு செய்யக்கூடாது. 100% மார்க் வாங்குனதாலேயே ஒருத்தர் வாழ்க்கையில முன்னுக்கு வந்துடமுடியாது".. இதைச்சொல்லியிருப்பவர் தாதரைச்சேர்ந்த ப்ரத்தமேஷ் ஜெயின். மும்பை டிவிஷனில் இந்தவருஷம் பத்தாம் வகுப்புத்தேர்வில் 100% எடுத்த பத்து மாணவமாணவியரில் இவரும் ஒருத்தர்.

இதையெல்லாம் பத்தி பசங்களோடயும், தோழியின் பசங்களோடயும் பேசிக்கிட்டிருந்தப்ப கொட்டித்தீர்த்துட்டாங்க. ஏன்னா, இந்த வருஷம் மும்பையின் 'சில' காலேஜ்கள்ல 100% எடுத்தவங்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுக்கறாங்க. இந்த நிலை மத்த காலேஜ்களுக்கும் பரவினா என்னாகும்!!!.. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டப்ப, "அட்மிஷனுக்காக பசங்க மனப்பாடம் செஞ்சு, உருப்போட்டு படிக்கிற நிலையையும், டியூஷன் செண்டர்களை முழுக்கமுழுக்க சார்ந்திருக்க வேண்டிய நிலையையும்தான் இது உருவாக்குமே தவிர வேற பிரயோசனமில்லை. அட்மிஷன் கிடைச்ச எல்லாப்பசங்களுமே முழு மதிப்பெண்கள் வாங்கறவங்களாயிருந்தா, காலேஜ்க்கும் ஒழுங்கா வரமாட்டாங்க. டியூஷன் செண்டர்களே கதின்னு கிடக்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே நிறையப்பேரு காலேஜை பங்க் பண்ணிட்டுபோயிடறாங்க. கேட்டா.. அதெல்லாம் நாங்க க்ளாஸ் போயி படிச்சு மார்க் வாங்கிடுவோம்ன்னு சொல்றாங்க."

"அதேமாதிரி, சுமாரா படிக்கிறவங்களுக்குத்தான் ஆசிரியரோட கற்பித்தல் தேவைப்படும்.. ரொம்ப நல்லா படிக்கிறவங்களுக்கு எதுக்கு?ன்னு ஆசிரியர்களும் நினைச்சுட்டா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கல்வித்தரம் குறைய ஆரம்பிச்சுடாதா?.."ன்னு அவங்க மனசுல எக்கச்சக்க கேள்விகள். பொதுவாவே பரீட்சைன்னாலே, பசங்களுக்கு டென்ஷன் வந்து மனசுல டெண்ட் போட்டு உக்காந்துடும். இந்த நிலைமையில 100% எடுத்தாத்தான் கல்லூரில இடம் கிடைக்கும்ன்னு சொல்றது அவங்களை மன உளைச்சல்ல தள்ள வாய்ப்பிருக்கு.

 'F.A.L.T.U' படத்தோட க்ளைமாக்ஸ்ல , "இவ்வளவு மார்க் எடுத்தாத்தான் அட்மிஷன்னு நீங்கள்லாம் வரம்பு வெச்சிருக்கறப்ப எதுக்கு 35% எடுத்தாப்போதும்,.. நீங்க பாஸ்ன்னு சொல்றீங்க?.. அதையும் கூடுதலாக்கிடுங்களேன்.."ன்னு நொந்துபோயி சொல்றதுதான், நிறைய பசங்களோட மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு.

இந்த விஷயத்தைப்பொறுத்தவரை ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் நிச்சயமா மாறுபடுது. 'பசங்கல்லாம் நிறைய மார்க் வாங்கறதாலதான் நாங்களும் உச்சவரம்பை கூட்டுறோம்,  அதாவது பசங்களோட படிப்புல ரொம்ப நல்ல முன்னேற்றம் இருக்குது.. இது பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே'ன்னு காலேஜும்,...  'நீங்க உச்சவரம்பு மதிப்பெண்களை கூடுதலா வெச்சிருக்கறதாலதான், எப்படியாவது மேல்படிப்புக்கு இடம் கிடைக்கணுமேன்னு நாங்க உயிரைக்கொடுத்து படிக்கறோம்ன்னு பசங்களும் அவரவர் கருத்தை சொல்றாங்க.

 படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா'ங்கற மாதிரி, இதுவும் அவ்வளவு எளிதா முடிவு செய்யப்பட முடியாமலேயே இருக்கு...




Tuesday, 28 June 2011

நிழலின் அருமை..


 
மெல்லிய உறுமலுடன் நகர ஆரம்பித்த பஸ்ஸில் ஓடி வந்து தொற்றிக்கொண்டாள் சாருமதி. வெற்றிப்பெருமிதத்துடன் பஸ்ஸினுள்ளே சுழலவிட்ட பார்வை, 'நான் இங்கேயிருக்கேன்' என்பதுபோல் கையை உயர்த்திக்காண்பித்த லாவண்யாவிடம் வந்து நிலைபெற்றது. அவளருகில் காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்த சாருமதியை, 'இன்னிக்கும் லேட்டா??..' என்பதுபோல் வினவியது லாவண்யாவின் பார்வை. ஒரு அசட்டுச்சிரிப்புடன் அதை எதிர்கொண்டவள், "காலைல எல்லாரையும் தயார் செஞ்சுட்டு வரதுக்குள்ள போதும்போதும்ன்னு ஆயிடுது".. என்று சமாளித்தாள்.

"பசங்க வளந்தப்புறமும் நீயேதான் எல்லாமும் செய்யணுமா??.. அவங்களையும் கொஞ்சம் தன்னோட காரியங்களை செய்ய பழக்குன்னு சொன்னா, கேக்க மாட்டேங்குறியே. எல்லாம் நீ கொடுக்கற செல்லம். நீயும் ஒண்ணும் சின்னப்பொண்ணில்லை, உனக்கும் உடம்பில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்குறதை ஏனோ மறந்துடறே".. உரிமையுடன் கோபித்துக்கொண்டாள் லாவண்யா.

அவர்கள் அலுவலகத்தை அடைய இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. அதற்குள் இவர்களைப்பற்றி சின்ன அறிமுகம்.. ஏனென்றால் ஆபீசுக்கு போய்விட்டால் வேலையில் மூழ்கிவிடுவார்கள். இருவரும் ஒத்த வயதுடைய சினேகிதிகள். ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள்.. இருவரின் எண்ணங்களும் கூட ஒரே அலைவரிசையில் ஒத்துப்போவதால் நல்ல புரிதலும் இருந்துவந்தது. ஆகவே, மனம்விட்டு பேசி குழப்பங்களை தீர்த்துக்கொள்வார்கள். அது அலுவலகம் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது குடும்பம் சம்பந்தப்பட்டதாகவோகூட இருந்தாலும்.

சாருமதிக்கு கல்லூரி செல்லும் வயதில் மகனும், மகளும், வயதான மாமியாரும் உண்டு. கணவரோ வீட்டுக்கு வரும்போதே எக்கச்சக்க கோப்புகள் வடிவத்தில் அலுவலகத்தை வீட்டுக்கே சுமந்து வருவார். சாப்பாட்டு நேரத்தில் மட்டும்தான் மற்றவர்களுக்கு தரிசனம். ஆன்மீகத்தில் நாட்டமுள்ள மாமியாருக்கு கோயில்களுக்கு போவதிலும், பஜனைகளில் கலந்துகொள்வதிலும் நேரம் சரியாகிவிடும். பிள்ளைகளோ வீட்டிலிருக்கும் நேரத்தில் தொலைக்காட்சி அல்லது கணினி முன் தவம்செய்துகொண்டிருப்பார்கள். ஆக மொத்தம், வீட்டுச்சுமை அத்தனையும் சாருமதி தலையில்தான். அதுவும் சுகமான சுமைகளாகத்தான் அவளுக்கு இருந்தது. ஒவ்வொருவருக்கும் வேண்டியதைச்செய்வதிலும், வீட்டைப்பார்த்துக்கொள்வதிலும் அவளுக்கு அலாதி இன்பம்.

நிறுத்தத்தில் இறங்கி, அலுவலகத்தை அடைந்து அவரவர் இருக்கையை நோக்கிச்சென்றனர் இருவரும். மேஜை மேல் இருந்த கணினியை தொட்டுக்கும்பிட்டுவிட்டு ஒரு நிமிடம் மௌனமாக பிரார்த்தனை செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தாள் சாருமதி. உற்சாகமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், அவளால் அப்படியிருக்கமுடியவில்லை. இன்று காலை நடந்ததும், 'எல்லாம் நீ கொடுக்கற செல்லம்' என்று லாவண்யா சொன்னதும் மாற்றிமாற்றி அவள் மனக்கண்ணில் வந்து போனது.

இன்று காலையில் எழுந்திருக்கும்போதே லேசாக தலை சுற்றுவது போலிருந்தாலும் சமாளித்துக்கொண்டு, காலையுணவை தயார் செய்துகொண்டிருந்தாள். அடடே!!.. சட்னிக்கு தேங்காய் இல்லையே என்று நினைத்துக்கொண்டு, மகனைக்கூப்பிட்டாள்.

"கண்ணா.. ஒரு எட்டு கடைவரைக்கும்போய் தேங்காய் வாங்கிட்டு வந்துடேன்"

"போம்மா.. உங்களுக்கு வேற வேலையில்லை. எனக்கு தேங்காயெல்லாம் பார்த்துவாங்கத்தெரியாது. அவ சும்மாதானே உக்காந்துக்கிட்டிருக்கா. அவளை அனுப்புங்க"

அதற்குள் மகள் பாய்ந்தோடி வந்து, "உனக்கு போகமுடிஞ்சா போ, இல்லைன்னா விடு. என்னை ஏன் நடுவுல இழுக்கறே??.. என்னால போக முடியாது" என்றாள்.

அதற்குள் ஆபத்பாந்தவியாக வந்த மாமியார் அவசரமாக, 'பரவாயில்லைம்மா.. சாம்பாரே வெச்சுடலாம், டிபனுக்கும் மதியத்துக்கும் ஆச்சு. நான் செய்யறேன், நீ வேணா கொஞ்சம் உக்கார்ந்துக்கோ.. தீபு, கொஞ்சம் வெங்காயம் உரிச்சுத்தரயாம்மா?. அப்படியே சமையலும் கத்துக்கலாம்" என்று பேத்தியை ஆசையாசையாக அழைத்தார்.

"வெங்காயம் உரிக்கறதா!!.. நானா??.. நெவர். என் நெயில்பாலிஷெல்லாம் பாழாயிடும். வீட்ல இருந்தாலே இப்படித்தான் ஏதாவது வேலை ஏவிக்கிட்டே இருப்பீங்க. நான் காலேஜ் கேண்டீன்லயே சாப்பிட்டுக்கறேன்.. பை.. பை.." என்று கையசைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

ஒருவழியாக காலையை சமாளித்து அலுவலகமும் வந்தாயிற்று.. ஆரம்பத்திலேயே எல்லாத்தையும் கையிலேயே கொடுத்துப்பழக்கிவிட்டு இப்போது திடீரென்று எல்லாத்தையும் அவர்களேசெய்துக்கணும் என்று எதிர்பார்ப்பது தப்பு என்றே தோன்றியது. இருந்தாலும், இப்போதும் ஒன்றும் கை மீறிவிடவில்லை. எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வார்கள். ஆனால், எப்படிச்சொல்வது என்றுதான் தெரியவில்லை.மதியம் லஞ்சுக்காக எழுந்தவள், திடீரென்று ஏற்பட்ட தலைசுற்றலால் அப்படியே அமர்ந்துகொண்டாள். வேகவேகமாக அருகே வந்த லாவண்யா, தண்ணீர் கொடுத்து மெல்ல ஆசுவாசப்படுத்தி, காண்டீனுக்கு அழைத்துச்சென்றாள். தொண்டையில் இறங்கிய சூடான காபி கொஞ்சம் தெம்பை கொண்டுவந்தது.

அகால நேரத்தில் ஒலித்த அழைப்பொலியால் மதியத்தூக்கம் கலைந்த எரிச்சலுடன் கதவைத்திறந்த பர்வதம்மாள் சாருமதியையும், அவளை கைத்தாங்கலாக பிடித்திருந்த லாவண்யாவையும் கண்டு திடுக்கிட்டாள். சாருமதியை மெல்ல படுக்கையில் கிடத்திய லாவண்யா, வாங்கிவந்த பழங்களை பக்கத்து டீபாயில் வைத்தபடியே, "ஆபீஸ்ல திடீர்ந்து மயங்கி விழுந்துட்டா, பக்கத்துலயே டாக்டர் கிட்ட காமிச்சுட்டுத்தான் வரேன். இரத்த அழுத்தம் தாறுமாறா எகிறிப்போயிருக்கறதால நாலு நாளைக்காவது பெட் ரெஸ்ட் எடுக்கணும். படுக்கைய விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசையாம பார்த்துக்கோங்க. மறுபடியும் மயக்கம் போட்டா, ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகவேண்டியிருக்கும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்." என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

சாயந்திரம் ஒவ்வொருத்தராக வந்த குடும்பத்தினருக்கு விபரம் சொல்லப்பட, கேட்டுக்கொண்டதுக்கு அடையாளமாக கண்களை உயர்த்திப்பார்த்துவிட்டு மறுபடியும் ஃபைலில் மூழ்கிவிட்டார் கணவர். "பாட்டி.. பசிக்குது. நைட் என்ன டிபன்??.." என்று குரல் கொடுத்தார்கள் குழந்தைகள் இருவரும்.

"மதியம் மீந்த சாப்பாடுதான் இருக்கு. பாட்டியால ஒண்ணும் பண்ணமுடியாதுப்பா.. மாவு ஃப்ரிஜ்ஜில் இருக்கு. வேணும்ன்னா தோசை ஊத்திக்கிறியா செல்லம்.. சட்னி எப்படிப்பண்றதுன்னு நான் சொல்லித்தரேன்" என்ற பாட்டியை முறைத்துவிட்டு, வெளியே கிளம்பிய தீபு திரும்பி வரும்போது கையில் இருந்த பார்சல், அவள் ஹோட்டலிலிருந்து வாங்கி வந்திருக்கிறாள் என்று சொல்லாமல் சொன்னது.

மறுநாள் காலைக்காப்பியை எதிர்பார்த்து,வராததால் டேபிளுக்கு வந்த பரசுராம், "தீபுக்குட்டி, இன்னிக்கு நீ அப்பாவுக்கு காபிபோட்டு தருவியாம்.. என் செல்லமில்லே"

"இவளா.. காபியா??.. அப்பா, இவ போட்ட காபியை விட பினாயில் ரொம்ப நல்லாருக்கும்" என்று உசுப்பேற்றினான் பிரபு.

"எனக்கு காபி போட தெரியாதுங்கறயா??.. உலகத்தரத்துல போட்டுக்காட்டறேன். சேலஞ்ச்??.." என்று கட்டைவிரலை உயர்த்திக்காட்டினாள் தீபு.

"சேலஞ்ச்.." பதிலுக்கு கட்டைவிரலை உயர்த்தினான் பிரபு.

சமையலறையில் நுழைந்த தீபுவுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போலிருந்தது. முன்னேபின்னே கிச்சன் பக்கம் வந்திருந்தால்தானே. நடப்பது அனைத்தையும் நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த பாட்டியிடம் உதவி கேட்கவும் ஈகோ தடுத்தது. ஈகோவை பார்த்தால் பிரபுவை எப்படி ஜெயிப்பது. கடைசியில் பாட்டியிடம் சரண்டரானாள். கமகமவென முன்னே வைக்கப்பட்ட காபியின் சுவையில் மயங்கியவர்கள், அடுத்த அரைமணி நேரத்தில் டேபிளில் வைக்கப்பட்ட மல்லிகைப்பூ இட்லியையும், தக்காளிச்சட்னி, சாம்பார் வகையறாக்களையும் பார்த்ததும் வியப்பின் உச்சிக்கே போனார்கள்.

"என் பொண்ணு முதன் முதலா சமைச்சதுக்கு அன்பளிப்பு" என்று சொல்லி அப்பா கொடுத்துவிட்டுப்போன ஆயிரம் ரூபாய் நோட்டைப்பார்த்ததும், "அப்பா, இனிமே உங்களுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் செலவு வரப்போவுது.. ஏன்னா, அட்லீஸ்ட் ஒருவேளையாவது நான் சமைக்கலாம்ன்னு இருக்கேன்" என்ற மகளிடம், "ஏடிஎம் மிஷினை நம்ம வீட்டு வாசல்லயே வைக்கச்சொல்லலாம்ன்னு தோணுது" என்று பதிலுக்கு கிண்டலடித்து மகிழ்ந்தார் பரசுராம். மனைவி படுத்திருந்த அறைக்குள் போய் ஐந்து நிமிடம் பேசிவிட்டு அலுவலகம் கிளம்பினார்.

வீட்டினுள் வந்த தீபு, "டேய் அண்ணா, நைட்டுக்கு மஷ்ரூம் பிரியாணி செய்யப்போறேன். வேணுங்கறதை லிஸ்ட் போட்டுத்தரேன். மார்க்கெட்டுல போயி வாங்கிவா.. என்ன முழிக்கறே.. நான் சமைக்கறப்ப நீ கொஞ்சம் ஹெல்ப் செய்ய மாட்டியா ப்ளீஸ்.. "என்று கொஞ்சலாக கேட்கவும், "ராட்சசி.. பிரியாணி மட்டும் போதுமா??.. எனக்கு சாத்துக்குடி ஜூஸும் வேணும். அதையும் லிஸ்டுல சேரு. ஆமா!!.. இதெல்லாம் நீ எப்படி செய்வே?. உனக்குத்தான் உப்புக்கும் சர்க்கரைக்குமே வித்தியாசம் தெரியாதே." என்று கேட்டான்.

"இண்டர்நெட்டிருக்க பயமேன்... சமையல் சம்பந்தமா எக்கச்சக்க தளங்கள் இருக்கு தெரியுமா?. அத்தோட பாட்டியும் ஒரு நடமாடும் சமையல் நூலகமாச்சே. ஜமாய்ச்சுட மாட்டேன்!!.." என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் தீபு.

"அம்மா,. நீங்க ஒருத்தராவே செஞ்ச வேலைகளை நாங்க பகிர்ந்துக்கிட்டு செய்யும்போதுதான், நீங்க எங்களுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கீங்கன்னு புரியுது. இப்ப, நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் சமைக்கப்போற பிரியாணியை சாப்பிட்டுட்டு உங்க உடம்பு சரியாயிடும் பாருங்க.." கழுத்தைக்கட்டிக்கொண்டு கொஞ்சிய மகள், இன்று பெரிய மனுஷிபோல் பேசுவதை வியப்புடனும், பெருமிதத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள் சாருமதி.

ஒரு வாரம் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று சாருமதியை பார்க்க வந்த லாவண்யா திகைத்துத்தான் போனாள். வீடே மாறியிருந்தது. பாட்டியை உட்கார வைத்துவிட்டு, தானே காபியுடனும், வெங்காயபஜ்ஜியுடனும் வந்த தீபு, தட்டை லாவண்யாவிடம் வைத்தாள். அம்மாவின் தலையணையை சரிசெய்து, லேசாக நிமிர்ந்து உட்காரவைத்தாள். பின் சாருமதிக்கு மாத்திரைகளை எடுத்துக்கொடுத்தவாறே, "ஆன்ட்டி, நானே செஞ்ச பஜ்ஜி. பயப்படாம சாப்பிடுங்க" என்று கண்ணடித்தபோது, நம்பமுடியாமல் தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டாள்.

ஜூஸுடன் உள்ளே வந்த பரசுராம், தம்ளரை மனைவிடம் நீட்டியபடி, "இப்போ எப்படிம்மா இருக்கு.." என்று அன்புடன் விசாரித்தார். லாவண்யாவுக்கு தலைசுற்றியது பிரமிப்பால்.

"ஆன்ட்டி, இருந்து டின்னர் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்" என்றபடி ஹாலுக்கு வந்த தீபு, "அண்ணா, வரவர காய்கறி வாங்கறதுல நீ நல்லாவே தேறிட்டே. இன்னிக்கு வாங்கிவந்த பிஞ்சுவெண்டைக்காய் சூப்பர் போ.. ஸ்பெஷலா, உனக்காகவே அதை பொரியல் செய்யப்போறேன்.." என்றாள்.

"தாங்க்யூ.. என் தங்கச்சியே.... பாட்டி, மெஷின்ல இருந்த துணியெல்லாம் காயப்போட்டாச்சு. வேற வேலை ஏதாவது இருக்கா?.. " என்றபடி பாட்டியின் அருகில் அமர்ந்தான் பிரபு. 

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த லாவண்யா, பிரமிப்பு மாறாமல், "எப்படிடீ இந்த மாயமெல்லாம். ஏதாச்சும் மந்திரம் போட்டியா!!" என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.

லேசான புன்சிரிப்புடன் அவளைப்பார்த்தாள் சாருமதி. "சிலசமயங்கள்ல நாம நம்ம குடும்பத்துல இருக்கறவங்களை தவறா எடைபோட்டுடறோம். நாம இல்லைன்னா அவங்களால ஒண்ணுமே செய்யமுடியாதுன்னு தப்புக்கணக்கு போட்டு, எல்லா பாரத்தையும் சுமந்துக்கிட்டு அவதிப்படறோம். அப்பறம் தாங்கமுடியாம அவங்க கிட்ட எரிஞ்சுவிழுந்து உறவையும் பாழாக்கிக்கறோம். இதைத்தான் இத்தனை நாளா நானும் என்னையறியாமலேயே செஞ்சுக்கிட்டு வந்திருக்கேன். இப்போ, நான் படுக்கையில் படுத்ததுமே, முதல்ல வேண்டா வெறுப்பா செய்ய ஆரம்பிச்சாலும், அப்புறம் ஒரு ஆர்வம் வந்து அவங்களுக்கே பொறுப்பு வந்துடுச்சு. என்னோட கஷ்டத்தையும் உணர்ந்துக்கிட்டாங்க.. அது போதுமே"

என் கணவரும், முதல்ல கடமைக்காக ஐந்து நிமிஷம், பத்து நிமிஷம் பேசிக்கிட்டிருந்தவர் இப்போ, எங்கிட்ட பேசாம ஆபீஸ் போறதில்லை. வீட்டுக்கு வந்ததும் ஆபீஸ்ல நடந்த விபரங்களை சொல்லலைன்னா அவருக்கு தலை வெடிச்சுடும். என்னைக்கவனிக்கணும்கறதுக்காகவே வேலையெல்லாம் ஆபீஸ்லயே முடிச்சுட்டு வந்துடறதால, குடும்பத்தோட நேரம் செலவிடறார். இது அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்காம். இத்தனை நாளா இந்த சந்தோஷத்தையெல்லாம் மிஸ் செஞ்சுருக்கேனேன்னு சொல்றார். நீ கொடுத்த யோசனைப்படி தலைசுற்றல் டிராமா போட்டதுக்கு ரொம்பவே பலன் இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் லாவ்ஸ்.." என்றபடி நன்றியுடன் லாவண்யாவின் கைகளைப்பற்றிக்கொண்டாள்.

"அப்புறமென்ன,.. திங்கட்கிழமையிலேர்ந்து ஆபீஸ் வந்துடுவேயில்லே"

"கண்டிப்பா.. வியாதியொண்ணுமில்லாம சும்மாவே படுத்துக்கிடந்து எனக்கும் போரடிச்சுடுச்சு. ஆனா, நீ கொடுத்த விட்டமின் மாத்திரைகள்லயும், டானிக்லயும், என்னோட உடம்பும் நல்லாவே தேறிடுச்சு. புதுத்தெம்பு வந்தாப்ல இருக்கு.." என்று குறும்புடன் கண்ணைச்சிமிட்டினாள் சாருமதி. கலகலவென்ற அவளது சிரிப்பில் லாவண்யாவும் சேர்ந்துகொண்டாள். 



டிஸ்கி: நான் எழுதிய இந்தசிறுகதை, ஜூன் மாத 'இவள் புதியவள்' இதழில் வெளிவந்திருக்கு. சிறுகதையை வெளியிட்ட 'இவள் புதியவள்' இதழுக்கு நன்றி :-)




Thursday, 23 June 2011

ஷாஹி பாலக் குருமா

எதுக்கும் இருக்கட்டும்ன்னு விதைச்சு வெச்ச அரைக்கீரையும், பொன்னாங்கண்ணியும் இப்ப பெஞ்சுக்கிட்டிருக்கிற மழையில் நல்லா தளதளன்னு வளர்ந்து நிக்குது. சத்துள்ளதா இருக்கணும்ன்னு இரசாயனக்கலப்புள்ள உரங்கள் எதுவும் போடாம, இயற்கை உரத்துலயே வளர்த்தது. வீணாக்காம வாரம் ஒரு முறை சமையல்ல சேர்த்துடுவேன். வழக்கமான அயிட்டங்களைத்தவிர கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்ன்னு செஞ்சதுதான் இந்த பாலக் குருமா.

தேவையானவை:

 பொடியா நறுக்கின கீரை - 1 கப்
உருளைக்கிழங்கு - 1(நடுத்தர அளவில்)
வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - அஞ்சாறு
தக்காளி -1 (பெரிய அளவில்)

மசாலாவுக்கு தேவையானவை:
பட்டை - சின்னத்துண்டு
கிராம்பு -3
ஏலக்காய் - 2
அன்னாசிப்பூ - 1
பெருஞ்சீரகம்(சோம்பு) - அரைத்தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1/2 இஞ்ச் அளவு
பூண்டு - ரெண்டு பற்கள்

தேவையான மசாலாப்பொடிகள்:

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி அளவு அல்லது காரத்துக்கேற்ப.
மல்லித்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப

விழுதுக்கு:
முந்திரிப்பருப்பு - 7 எண்ணிக்கையளவில்+வறுத்து தோலுரிச்ச நிலக்கடலை கால்கப்.

தாளிக்க எண்ணெய் - 1 மேசைக்கரண்டியளவு.

எப்படி செய்யறதுன்னு இப்ப பார்க்கலாம்...

மொதல்ல, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பெருஞ்சீரகம் இதெல்லாத்தையும், சட்னி ஜார்ல போட்டு நல்லா பவுடர் செஞ்சுக்கோங்க. அப்றம் அதுகூடவே பச்சைமிளகா, இஞ்சி, பூண்டையும் சேர்த்து தண்ணீர் விடாம நல்லா அரைச்சுக்கோங்க. இதை ஒரு கிண்ணத்துல தனியா எடுத்து வெச்சுட்டு, முந்திரிப்பருப்பையும் வறுத்த நிலக்கடலையும் அதே ஜார்ல போட்டு ஒரு சுத்து சுத்திட்டு ஒரு தேக்கரண்டி அளவுக்கே தண்ணீர் சேர்த்து விழுதா அரைச்சு வெச்சுக்கோங்க.

தக்காளியை பொடியா நறுக்கிக்கோங்க. வெங்காயத்தை மெல்லிசா ஸ்லைஸ் செஞ்சுக்கலாம். அல்லது உங்க விருப்பப்படியான அளவுல நறுக்கிக்கலாம். உருளைக்கிழங்கையும் கொஞ்சம் சின்னச்சின்ன அளவுல நறுக்கிக்கோங்க. சின்ன வெங்காயத்தை சட்னி ஜார்ல போட்டு, ஜஸ்ட் ஒரு சுத்து.. அவ்ளோதான். வெங்காயத்தை துருவினமாதிரியான எஃபெக்ட் கிடைச்சுடும், அது போதும்.

இப்ப அடுப்பில் ஒரு பாத்திரத்தை சூடாக்கி, ஒரு மேசைக்கரண்டியளவு எண்ணெயை சூடாக்குங்க. அதுல, அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவைச்சேர்த்து, பச்சைவாசனை போகறவரை லேசா கிளறுங்க. இப்ப வெங்காயத்தையும்,உருளைக்கிழங்கையும்போட்டு, வெங்காயம் பொன்னிறம் வர்றவரைக்கும் வதக்குங்க.. ஆச்சா!!.. அடுத்தாப்ல தக்காளியையும் போட்டு நல்லா வெந்து, மசியறவரைக்கும் கிளறுங்க.

இப்ப இந்த கலவைகூட மசாலாப்பொடிகளை சேர்த்து லேசா கிளறிட்டு, கொரகொரன்னு அரைச்சுவெச்ச சின்னவெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்க. அடுத்தாப்ல கீரையை சேருங்க. கீரை அரைவேக்காடு அளவுக்கு வதங்கினதும், ஒண்ணரைகப் தண்ணீர் சேருங்க. (விருப்பப்பட்டா கூடக்குறைய சேர்த்துக்கலாம்). எல்லாம் சேர்ந்து கொதிச்சு வந்ததும், தணலை மிதமா எரியவிடுங்க. எல்லாம் உருளைக்கிழங்கு வேகறவரைக்கும்தான். வெந்ததும் முந்திரி+நிலக்கடலை விழுதைச்சேர்த்துடலாம். சும்மா... ஒரு கொதி வரட்டும். அதுக்குள்ள கொத்தமல்லி,புதினா,கறிவேப்பிலை இலைகளை பொடியா அரிஞ்சு வெச்சுக்கோங்க.

குருமா லேசா திக்கானதும் இறக்கி பரிமாறும் பாத்திரத்துக்கு மாத்திடுங்க. பொடியா நறுக்கிவெச்ச இலைகளை மேலாக தூவி அலங்கரிக்கலாம். இது வாசனையையும் தூக்கலா காண்பிக்கும் (டூ இன் ஒன்). சாதவகைகள்,புலாவ், பிரியாணி,கிச்சடி, சப்பாத்தி, இட்லி தோசை, ஆப்பம்,இடியாப்பம்... இன்னும் ஏதாவது விட்டுப்போயிருக்கு??!!.. :-))). எல்லார்கூடவும் கூட்டணி சேர்றதுல நம்மாளு கில்லாடி :-)

கீரை உடம்புக்கு எவ்ளோ நல்லதுன்னு சொல்லித்தெரியவேண்டியதில்லை. கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு. கீரையில் சர்க்கரை கிடையாது ஆகவே ரத்தத்துல சர்க்கரையோட அளவு அதிகமா இருக்கற நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது.(கீரையோட ரெண்டுபல் பூண்டும் ஒரு சிட்டிகை பெருங்காயமும் சேர்த்து வேகவெச்சு மசியல் செஞ்சு பாருங்க. அருமையா இருக்கும்.

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுது. அதுல, அரைக்கீரை, பாலக்கீரை தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை இதெல்லாம் முக்கியமான வகைகள்.கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டிருக்கு.கீரைகள்ல சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவை நிறைய இருக்கு.

கீரைகள்ல குறிப்பா இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்கள் நிறைய அளவுல இருக்கு. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையை ஏற்படுத்துது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அப்றம் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியம். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துகிட்டா, இரத்த சோகை வர்றதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்

இந்தியாவுல ஒவ்வொரு வருடமும் அஞ்சு வயசுக்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வையை இழக்கும் நிலை ஏற்படுதாம்... பாவமில்லையா :-(

கீரைகள்ல இருக்கற கரோடின்களை பாதுகாக்க,  ரொம்ப நேரம் வேகவைக்கறதை தவிர்க்கணும். ரொம்ப நேரம் வேகவைச்சா கரோடின் அழிஞ்சுடும். அப்றம் கீரை சாப்பிட்ட பயன் இருக்காது.கீரைகள்ல பி-காம்ளக்ஸ் வைட்டமின்களும் நிறைய இருக்குது. இதுவும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. கீரைகள்லஇருக்கிற கரோடின், உடலில் ஜீரணமானதுக்கப்புறம் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுது.

அதான்,..வருஷம் முழுக்க மார்க்கெட்டுல கிடைக்குதே.. வாங்கி விதவிதமா சமைச்சு, ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க :-))



Wednesday, 22 June 2011

சோகமா ஒரு சொந்தக்கதை..

ஒரு வழியா லீவு முடிஞ்சு வந்துட்டேன்.  புது இடுகையை எதிர்பார்த்து தெனமும் ஆவலோட என் தளத்துக்கு வந்த(அப்டீன்னு நம்பறேன் :-)) கோடானு கோடி நல்ல உள்ளங்களுக்கு மொதல்ல நன்றி. திடீர்ன்னு காணாமப்போயிட்ட என்னைக்கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கற அளவுக்கு போயிட்டதா கேள்விப்பட்டதும், அப்படியே கண்ணுல தண்ணி வந்துடுச்சு. (வெங்காயம் நறுக்கினதாலதான் கண்ணீர் வந்ததுங்கற விவரம் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது :-)). அதான் ஓடியாந்துட்டேன். இந்த இடுகையையே என்னோட விடுமுறை விண்ணப்பமாவும், மருத்துவ சான்றிதழாவும் எடுத்துக்கணும்ன்னு தாழ்மையோட மிரட்டிக்கேட்டுக்கறேன்..

விடுமுறைன்னா விருந்தாளிங்க வர்றது சகஜம்தான்னாலும், இந்தத்தடவை எல்லோரும் ஒட்டுமொத்தமா வந்து அலற வெச்சுட்டாங்க. எப்பவும் தனியாவர்த்தனமா கச்சேரி நடத்தற இரத்த அழுத்தம், இந்தத்தடவை தன்னோட நண்பர்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு நடத்துன அமர்க்களமான ஜூகல்பந்தியால, நிலைமை தாறுமாறாகி, பயங்கரமான மூச்சுத்திணறல்ல கொண்டுபோய் முடிஞ்சது. திடீர் திடீர்ன்னு அட்டாக் மாதிரி வந்து சுமார் இருபது நிமிடங்களுக்காவது படுத்தியெடுக்கும். அப்படியே படுத்துடுவேன். சும்மா உக்காந்திருக்கக்கூட முடியாது. எப்பவாவது இப்படின்னா சரி.. எப்பவுமே இப்படித்தான்னா எப்படி ?!! :-)))

ரங்க்ஸ்தான் கொஞ்சம் பயந்துட்டார். வேண்ணா என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் செஞ்சுடலாமான்னு ஒரு ஐடியா.. "நீ நல்லா ஹெல்த்தியா இருந்தாத்தானே எங்களுக்கு தைரியமா இருக்கும்"ன்னெல்லாம் அவர் பேசப்பேச, என்னை சக்கர நாற்காலியில உக்கார வெச்சு,"சுமை தாங்கி சாய்ந்தால்,.. சுமை என்ன ஆகும்.."ன்னு பாட்டுப்பாடிக்கிட்டே நாற்காலியை தள்ளிக்கிட்டு போறமாதிரியெல்லாம் ஒரு கற்பனை வெள்ளத்துல மூழ்கிட்டேன் :-)))

எனக்கு உடம்பு சரியில்லாத துக்கத்துல சிஸ்டமும் மண்டையை போட்டுடுச்சு.. அதையும் தட்டிக்கொட்டி, சரிபண்ணி ஒரு வழியா செட்டிலாயாச்சு.. இந்த களேபரத்துல, லீவுக்கு வைஷ்ணோதேவி கோயிலுக்கு போகணும்ன்னு போட்டு வெச்ச திட்டம் பணால்.. இன்னொரு லீவு கிடைக்காமலா போயிடும்!!.




LinkWithin

Related Posts with Thumbnails