Thursday, 14 January 2010

பொங்கல் பொங்கிருச்சு



எங்க வீட்டுக்கு பொங்கல் வந்தாச்சே..!!!!.
ஏற்கனவே அனுப்பிய பொங்கல் வாழ்த்து கிடைச்சுதா?..கண்டிப்பா கிடைச்சிருக்கும்..உங்களுக்காக பொங்கல் தயாராகுது.. வந்து சாப்புட்டு போங்க..

பொங்கல் பொங்கப்போவுது.....


பொங்கிருச்சேய்....!!!....


காக்கா புடிக்கதான் கஷ்டமா போச்சு..


நைவேத்தியம் காண்பிச்சாச்சு... எல்லோரும் சாப்பிடலாம்..


மஞ்சக்குலை எங்க வீட்டு வெள்ளாமை..அடுத்த வருஷம் இந்த உருளைக்கிழங்குலதான் சாம்பார் செய்யப்போறேன்.

Tuesday, 12 January 2010

மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்





உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம், தை பிறந்தா வழி பிறக்கும், இதெல்லாம் பொங்கல் பண்டிகையை நினைவு படுத்தும், சில பொன் மொழிகள். நம் ஊரில் தைமாசம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுக்க உழைத்த, தனக்கு உதவிய ஜீவன்களுக்கு நன்றி சொல்லி,ஆதவனை ஆராதிக்கும் பண்டிகையிது .

ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வீடு, வாசல் கழுவி , வீட்டை தூய்மைப்படுத்தி, சாதனங்கள் சேகரித்து என்று, பண்டிகை களை கட்ட ஆரம்பித்து விடும்.கிராமங்களில் கட்டி அடுப்பு என்று ஒன்றை வீட்டிலேயே செய்வார்கள். மண்ணைக்குழைத்து, வேண்டிய அளவிலிருக்கும் பழைய, ஓரடி உயரத்திலிருக்கும் பக்கெட்டோ, பாத்திரமோ எடுத்து, மண்ணை அதில் அழுத்திஅடைத்து அப்படியே திருப்பி பின்னால் ஒரு தட்டு... துண்டாக வந்து விழும் கட்டியை அப்படியே காய விட்டுவிடுவார்கள்.வேண்டிய எண்ணிக்கையில் செய்து காயவிட்டு வீட்டுக்கு அடிக்கும் சுண்ணாம்பில் அதற்கும் கொஞ்சம் பூசி, காவிப்பட்டையால் அலங்கரித்து வைப்பார்கள்.

பொங்கலன்று இந்த அடுப்பில் பானையை ஏற்றி, சாஸ்திரத்துக்கு ரெண்டு பனைஓலையை வைத்து அடுப்பை ஆரம்பிச்சுட்டு அப்புறம் , விறகுகளின் துணை கொண்டு பொங்கல் கொதிக்க ஆரம்பிக்கும். விறகுகளின் இடையே சில பனங்கிழங்குகளை செருகி விட்டால் பிறகு கடித்துக்கொள்ளலாம்.சமயம் பார்த்து காற்றும் சோதனை செய்யும்... புகையுடன் போராடி, பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி, சூரியனுக்கு படையல் செய்வார்கள்.இஞ்சி மஞ்சளின் பச்சைமணமும், கரும்பின் இனிப்பும் கூடுதல் மகிழ்ச்சி தருது..

பொங்கல் பண்டிகை கிராமங்களில் மண்மணத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த அளவு இல்லை என்றாலும், நகரங்களிலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. அடி நாதமாய் அது இரண்டு இடங்களிலும் ஊடாடிக்கொண்டுதான் இருக்கிறது.




மஹாராஷ்டிராவில் பொங்கல் 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பச்சை காய்கறிகள், வெளிறிப்போயிருக்கும் கரும்பு ,எல்லாம் இங்கேயும் உண்டு. அரிசியும் பயத்தம்பருப்பும் போட்டு செய்யற கிச்சடிதான் இன்றைய ஸ்பெஷல். நம்மூர் வெண்பொங்கலாச்சேன்னுதானே நினைக்கிறீங்க. எஸ்ஸ்.. ஆனால், மைனஸ் மிளகு, மைனஸ் சீரகம், மைனஸ் முந்திரிப்பருப்பு. ஆனா, டேஸ்ட்டு மட்டும் ப்ளஸ்.. ப்ளஸ்.. காலை பூஜை முடித்ததுமே சாயங்காலத்துக்கு ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து விடும்.

இரண்டு நாட்களுக்கு முன்னாடியே பொருட்கள் சேகரிக்கப்பட்டுவிடும். தெரிந்தவர்கள்.. நண்பர்களுக்கு...அழைப்பு அனுப்பப்பட்டுவிடும்.

சாயந்திரம் நன்கு அலங்கரித்துக்கொண்டு, சிறிதாக நறுக்கப்பட்ட காய்கறிகள், கரும்பு இவற்றின் கலவையை ஒரு சிறிய மண்பானையில் போட்டு வைத்துக்கொண்டு,இதனுடன் எள்ளுமிட்டாய்,சர்க்கரையை வைத்து தயாரிக்கப்படும் எள்ளுருண்டை,பூ, பழம், பூ,தாம்பூலம், வைத்துக்கொடுக்க ஏதேனும் ஒருபொருள், இவற்றுடன் தயாராக காத்திருப்பார்கள்.


ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் அளித்து, எள்ளுமிட்டாய், சீனிஉருண்டை கலவையை"தில் குட் க்(G)யா.....கோ(G)ட்....கோ(G)ட்....போ(b)லா.." என்று சொல்லி கொடுப்பார்கள். அதாவது "இனிக்கும் எள்ளை எடுத்துக்கிட்டு இனிமையாக பேசு" என்று அர்த்தம்.வயதில் சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளும் ஒரு டப்பாவில் சீனி, எள் உருண்டைகளை போட்டுக்கொண்டு க்ரூப்பாக கிளம்பி விடுவார்கள். வீடுவீடாக சென்று எல்லோருக்கும் கொடுத்து  பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்று வருவார்கள். அவர்கள் ஒருவயது கூடுதலானவர்களாக இருந்தால் கூட பெரியவர்கள் என்ற பதவி அளிக்கப்பட்டுவிடும் . நிறைய வீடுகளில் இவர்களுக்காக இனிப்புகள் வாங்கி வைத்திருந்து, கொடுப்பார்கள்.


எந்த இடத்தில் இருந்தாலும், எந்தப்பெயரில் கொண்டாடினாலும் பண்டிகை மகிழ்ச்சியையும், இனிமையையும் தரட்டும்.


எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

டிஸ்கி: படங்கள் வலை(போட்டு)யில் பிடித்தவை.

Monday, 11 January 2010

விடையில்லை

என்னை,
என் எண்ணங்களை,
எனக்கு
அறிமுகப்படுத்திய,
என்
எழுத்துக்கு நன்றி.

விரல்களில் வழியும்
எறும்புகளைப்போல்,
விட்டு விடாமலும்
பற்றிக்கொள்ளாமலும்,
ஓர்
அவஸ்தை!!!...

கரையேறும் வழி
தெரிந்தபின்,
ஆழங்கள்
அமிழ்ந்து போகின்றன.

சாரலடிக்கும் பொழுதுகளில்
கைக்குட்டையாய்,
சூறாவளியில்
அனல் காற்றாய்,
உருமாற்றம் கொள்கிறது!.

அதுவோ!,
இதுவோ!, என்று
மயக்கம் கொள்ளும்போது,
எதற்கும் பிடிபடாமல்,
காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது
ஓர் புதிர்!!.


Sunday, 10 January 2010

எனக்கு எதிரா நடந்த சதி



சாயங்காலம் 5,6 மணி இருக்கும். தமிழ்மணத்தில் மூழ்கியிருந்.....என்னாச்சு...புது ஜன்னல் தெறக்க மாட்டேங்குது... ரீலோட் பண்ணு.... திருப்பி திருப்பி முயற்சி செய்யறேன். oops....லிங்க் கட்டாயிட்டுதுன்னு செய்தி சொல்லுது.சில சனி, ஞாயிறுகளில் இதுவேற சீண்ட்ரம்.(மெயிண்டெயின் செய்வாங்களாம்).சரி... நாளைக்கு பாக்கலாம்.

காலை 11மணி ஆகுது.. இன்னும் இணையம் சரியாகல்லை. கூப்பிடு.. பரம்ஜீத்தை..

"மேடம்.. போட்டிக்காரன்(மரியாதை என்ன வேண்டியிருக்கு), செஞ்ச வேலை... வயரை அத்து உட்டுட்டான்!!!. சாயங்காலத்துக்குள்ள வேற ஒயர் போட்டுடறேன்,சே... கஷ்டகாலம்ப்பா.."...

'இவர் யாரைச்சொல்றார்'... எனக்கு புரியலை..

"சரி..நீ அழுவாத... நான் அவர்கிட்டே பேசறேன்".

விஷயத்தை ரங்க்ஸ் கிட்ட சொல்லி, போட்டிக்காரன்(ர்)நம்பருக்கு போன் செஞ்சோம். மணி அடிக்குது..எடுக்க மாட்டேங்கிறார். 'அடப்போய்யா!!!... நான் கஸ்டமர் கேர் செண்டருக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லிக்கிறேன்'. அவங்க 'ஆகட்டும்.. பாக்கலாம்'ன்னு வழக்கமான பதிலை சொன்னாங்க.

எதுக்கும் லோக்கல் ஆளுக்கு இன்னோருக்கா போன் செஞ்சா என்ன?.. ஆ.....ப்டுட்டார்.!!!. அவர்கிட்டே விஷயத்த சொல்லி "இப்டில்லாம் அத்து... அத்து... வெளையாடாதேப்பா...அப்புறம் நாங்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்" ன்னு ஒரு சின்ன எச்சரிக்கை.... பையர் ஒத்துக்க மாட்டேங்கிறார். " நா செய்யவேல்லை....நா செய்யவேல்லை..இப்பவே உங்க வீட்டுக்கு வந்து பாக்றேன்"ன்னார். 'சரி... வாங்க..' ன்னு சொன்னோம்.

அவர் வர்றவரை ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்....

இணைப்பு எடுத்து ஒண்ணரை வருஷம் வரை ஒரு பிரச்சினையில்லை. ஒரு நாள் திடீர்ன்னு இணைப்பு கட்... விசாரிச்சா அப்போத்தான் போட்டிக்காரரோட கைவரிசை ஆரம்பம்னு தெரியவந்தது.. என்ன பண்ணுவார்னா... மெயிண்டெயின் செய்யப்போறதா செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு, ரெஜிஸ்டரில் தேதி.. பேரு... நேரம்... எல்லாம் எண்டர் பண்ணிட்டு(இல்லாட்டா பில்டிங் உள்ளேயே விட மாட்டார்) மொட்டைமாடிக்கு போய் நைசா கட் செஞ்சுட்டு வந்துடுவார்...

இது பெரிய பிரச்சினையாகி பஞ்சாயத்தெல்லாம் நடந்து முடிஞ்சுது.. ஆனா, நம்மாளு நெறைய நஷ்டப்பட்டுட்டதால கம்பெனிய தற்காலிகமா மூடிட்டார். போட்டிக்காரர் நெனைச்சது நடந்தது... நெறையப்பேர் அவங்க கிட்ட இணைப்பு எடுத்தாங்க. இப்படித்தான் புள்ளை பிடிக்கிறாங்களா..ஹூம்.. மேலிடத்தை திருப்திப்படுத்த இப்படி ஒரு வழி.10..15.நாள் பொறுத்து பாத்துட்டு நாங்களும் வேற வழியில்லாம அங்கயே போனோம்.டெபாசிட்டில் 1000ரூபாய் சலுகை..பழைய இடத்துலேர்ந்து போனவங்களுக்கு மட்டும்தான் இந்த சலுகையாம்..மத்தவங்களுக்கு...வழக்கமான தொகை.இது எப்படி இருக்கு.!!!.சர்வீசும் சரியில்லை....சரியான பாடாவதி சர்வீஸ். மாசத்துல 10நாள் இணைப்பு இருந்தாலே உலக அதிசயம்!!!. இலவசமாய் வைரஸ் சப்ளை வேற. பாதி நாள் எங்க சிஸ்டம் பிறந்தகம் போய் சீராடிட்டுதான் வரும்.

பழைய ஆள்கிட்டயே கேட்டுப்பாக்கலாம்ன்னு விசாரிச்சா.....
அப்பா!!!.... வயித்துல பால் வார்த்தமாதிரி பதில்.....

"சரி பண்ணிட்டோம் மேடம்.. நாளைக்கு இணையம் வந்துடும்"..

அப்புறம் போட்டிக்காரர்கிட்டே விஷயத்தை சொல்லி இணைப்பை கட் செஞ்சாச்சு.. பழைய கம்பெனியிலேயே இணைப்பி தேர் ஒழுங்கா ஓட ஆரம்பிச்சிருக்கு... இப்போ மறுபடியும் முட்டுக்கட்டை.ஆமா!!!... போட்டிக்காரர்தான் செஞ்சதுன்னு எப்டி தெரியும்.. அனுப்பு உளவுப்படையை...தகவல் ஏற்கனவே சேகரிக்கப்பட்டாச்சாம்.."மேடம்,.. நான் விசாரிச்சிட்டேன். நேத்து,சாயந்திரம் அவங்க ஆள் பக்கத்து பில்டிங் போயிருக்கார்.. ரிஜிஸ்டரில் எண்ட்ட்ரி ஆகியிருக்கு.கரெக்டா அப்போதான் எல்லா வீடுங்களுக்கும் கனெக்ஷன் கட் ஆகியிருக்கு."

கொஞ்ச நேரத்துல போட்டிக்காரர் வந்தார்.. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். ரெண்டு பில்டிங்க்கோட மொட்டை மாடியையும் இணைச்சு வெச்சிருந்த ஒயர், இப்போ திறப்பு விழாவில் வெட்டப்பட்ட ரிப்பன்போல் தொங்குது. அப்பவும் ஒத்துக்க தயாரில்லை.."ஏம்ப்பா... உங்க கம்பெனி சர்வீஸ் சரியில்லைன்னுதான் வேற கம்பெனிக்கு போறோம், அதையும் கெடுத்தா எப்படி?..பிரச்சினைன்னு போன் பண்ணினா ஆள் வர்றதில்லை... வந்தாலும் என்ன பிரச்சினைன்னு கண்டுபிடிக்க தெரியாம ரெண்டு மூணு ஸ்க்ரூவை கழட்டி மாட்டிட்டு போயிடுறாங்க. இதுக்கு ஒரு நியாயம் சொல்லு"ன்னு கேட்டோம்.

பையர் இங்கே பார்ட்டைம் வேலை பாத்துக்கிட்டே படிக்கிறாராம். சரி.. நல்லா இருக்கட்டும்...ஆனா மத்தவங்களைப்பத்தியும் கொஞ்சம் நினைக்கணுமில்லே.இணையத்தையே சார்ந்திருப்பவர்களுக்கு எவ்வளவு இழப்பு ஆகியிருக்கும்.நான் ஒரு இடுகையாவது போட்டிருப்பேனே:).

இன்னும் தப்பை ஒத்துக்கிடலை.. மெதுவா கேட்டார்...'நாங்கதான் கட் செஞ்சோம்னு யார் சொன்னா'..விவரத்தை சொன்னதும் பேச்சுமூச்சில்லை.
நைசா கிளம்பிட்டார். நம்ம தலைவலி நமக்கு.. கீபோர்டுக்கு மேலே நெறைய வேலையிருக்கு!!.நம்ம கம்பெனிக்கு போன் செஞ்சு கேட்டா, இன்னும் நாலு நாளாவது ஆகும்.. எல்லா ஒயரையும் கட் அண்ட் பேஸ்ட் பண்ணணுமே அப்டிங்கிறார். நா....லு....நாளா!!.பதிவு எதையும் படிக்கமுடியாதே...அய்யோ.!!!!.

ஆலோசனை நடக்குது... கார்ட்லெஸ் வாங்கிரலாமான்னு ஒரு யோசனை... ஆனா மழைசமயம் இடிமின்னலால் பாதிப்பு வருமோன்னு பயம், "உள்ளதும் போச்சுன்னா?... நாலு நாள் நெட் இல்லைன்னா பரவாயில்லை..நெட்டே இல்லைன்னாலும் பரவாயில்லை." இது சதியாலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு. அப்போ என் பிளாக்கோட கதி..ஆரம்பத்திலேயே சங்கா.!!!...எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான் சதிவேலையில் இறங்கியிருக்காங்களா.!!!

போனுக்கு மேல போனப்போட்டு டார்ச்சர் கொடுத்ததில் ரெண்டே நாளில் இணைப்பு வந்துவிட்டது... இப்ப என்ன செய்வீங்க.!!!... இப்ப என்ன செய்வீங்க.!!!..

டிஸ்கி: பையர் வார்த்தை உபயம், துளசிடீச்சர்.

Friday, 8 January 2010

பெயர் போன பதிவர்

ஆகக்கூடி கடைசியில் நானும் பதிவர் ஆகிட்டேன்.வாசிப்புங்கிறதே ஒரு சுகமான அனுபவம். அதுவும் பாடப்புத்தகத்துக்கு உள்ளே மறைச்சு வெச்சு படிக்கிறதுங்கறது எம்புட்டு த்ரில் தெரியுமா!!!

வாராந்திர, மாத பத்திரிகைகள்தான் முதல் அறிமுகம்.அப்புறம் பாக்கெட் நாவல் வந்த புதிதில் அதையும் விட்டதில்லை. காலேஜ்லதான் மொதமொத லைப்ரரிக்கு போற பாக்கியம் கெடைச்சுது.பாலகுமாரனோட 'மெர்க்குரிப்பூக்கள்',கல்கியோட 'பொன்னியின் செல்வன்',சிவகாமியின் சபதம்,தியாகபூமி' அப்புறம் இன்னும் எக்கச்சக்கம்.(பெரிய லிஸ்ட், நெறைய பேரு கூட மறந்து போச்சு).

மஹாராஷ்ட்ரா வந்ததுக்கப்புறம்,தமிழில் வாசிக்க வாரப்பத்திரிக்கைகளை தவிர எதுவும் கெடைச்சதில்லை. கெடைக்குமாயிருக்கும்... கொஞ்சம்மெனக்கெடணும்.
அப்படியிருந்ததுக்கு, வலையில் தமிழ் படிக்கமுடியும்னு தெரிஞ்சதும் ...ஆஹா!!!!
அப்பிடியே தட்டித்தடவி மரத்தடியை கண்டுபுடிச்சேன்.

துளசிடீச்சர் அவங்க செல்லங்களைப்பத்தி எழுதியிருந்தாங்க.படிச்சிட்டு ஒரே கஷ்டமாப்போச்சு.ரொம்ப நாளா மனசுக்கு ஏதோ மாதிரி இருந்தது. மறுபடியும் படிக்க நெனைச்சு தேடினா லிங்க் மறந்து போச்சு. அதனாலென்னன்னு, கூகிள் கிட்டயே கேட்டேன், அது கொண்டுவிட்டது துளசி தளத்துக்கு.ஆரம்பத்துல படிச்சிட்டு சிரிச்சிட்டு போயிடுவேன்.அப்புறம் மனசுக்கு பட்டதை
சொல்லணும்னு தோணிச்சு.

'ஐம்கூல்' அப்பிடிங்கிற பேர்ல பின்னூட்டம் மட்டும் போட்டுட்டிருந்தேன்.அப்பத்தான் ஒரு நாள் ரங்க்ஸ் 'மக்கா..நீயும் ஏன் எழுதக்கூடாது'அப்பிடீன்னு ஒரு மின்னலை தூக்கிப்போட்டார்(எவ்வளவு நாள்தான் இடின்னே சொல்லி ஏமாத்துறது). என்டே அம்மே!!...இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை...நமக்கு அந்த தகுதி இருக்கா... இல்லைன்னாலும் வளத்துக்கிட கண்டிப்பா முயற்சி செய்வேன்.

ஏதோ கல்லூரி நாட்களில் கொஞ்சம் கிறுக்குவேன். கவிதைன்னு ஒன்னு எழுதினதுக்கு பொழைச்சுபோட்டும்ன்னு ஆறுதல் பரிசொண்ணு குடுத்தாங்க. அப்புறம் நான் க....வி....தை.... ன்னு கூட எழுதினதில்லை.

ஒரு முடிவெடுத்தா அப்புறம் நம்ம பேச்ச நாமே கேக்கக்கூடாது. வலைப்பூ ஆரம்பிப்பது இவ்வளவு ஈஸியா!!!.பேரு வைக்கும் படலம் ஆ...ரம்பம்.. புதுசா இருக்கணும், அழகா இருக்கணும்... 'ஐம்கூல்' என்ன ஆச்சா?.... அடப்போங்க... இதழ்கள் இல்லாமல் பூவான்னு பசங்க பேரைச்சேத்துக்கிட்டு 'ஐம்கூல்பாசு'
ஆனேனா.... டீச்சர் பயமுறுத்திட்டாங்க.... பெயரில் பாதி ஏற்கனவே இருக்கார்ன்னு அவங்க சொல்லவும் கூகிளாண்டவர் சன்னிதியில் போய் நின்னா... 'ஆம்..மகளே... ஆனா அவரு பீட்டரு'ன்னாரு. இம்போர்ட்டட் ஆட்டோ வந்துடுமோன்னு பயந்து தங்க்ஸும் ரங்க்ஸுமா 'அமைதிச்சாரல்' ஆகிட்டேன்.
பேரு போனது வருத்தமாத்தான் இருக்கு.( டீச்சர் 'அசிஸ்டெண்ட் க்ளாஸ் லீடர்'
பதவியெல்லாம் ஆஃபர் பண்ணாங்க).

முட்டி மோதி அங்க இங்க தேடிக்கண்டுபிடிச்சு, பட்டை மொதக்கொண்டு அடிச்சாச்சு. ஆனா புது இடுகையை இணைக்க முடியாம கஷ்டப்பட்டு, கடைசியில் தமிழ்மணத்துக்கே ஒரு விண்ணப்பம் வெச்சு .... சுபம்.

ஆதரவை நாடும்,
அமைதிச்சாரல்.








Wednesday, 6 January 2010

3-idiots




இன்றைய கல்வி முறையில் காணப்படும் குறைபாடுகளை தேன் தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

காணாமல் போன தனது நண்பனை கண்டுபிடிக்க, விமானத்தை அவசரக்கால தரையிறக்கம் செய்து மாதவனும்,ஷர்மன் ஜோஷியும் ஒரு போன் காலை நம்பி வருகின்றனர்.நண்பன் நண்பனைத்தேடி வந்த அவர்களுக்கு சைலன்சர்(ஓமி)ஏமாற்றத்தைக்கொடுத்து, தான்தான் அவர்களை வரவழைத்ததாக கூறுகிறான்.தான் போட்ட சபதத்தை நினைவூட்டுகிறான்.

'நான் என்னவாக ஆசைப்படுகிறேன் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை' என்று மாதவன் புலம்பும்போதுதான் உண்மையில் படம் ஆரம்பிக்கிறது.wild life போட்டோகிராபராக ஆக விரும்பும் மாதவனும், குடும்பத்தை சுமக்க தயார் படுத்தப்படும் ஜோஷியும் பெற்றோர் விருப்பத்திற்காகவே ,விருப்பமில்லாமல் படிக்கிறார்கள்.வந்த அன்றே சீனியர் மாணவர்களுக்கு ஷாக் கொடுக்கும் மாணவனாக அறிமுகமாகிறார் அமீர்கான்.அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அவரது சேட்டைகள்.

வீரு சகஸ்ரபுத்தே,சுருக்கமாக 'வைரஸ்'.. இது பொ(b)மன் இரானி.புது மாணவர்களுக்கு, அறிமுக உரைகொடுக்கும்போது, தனது கல்லூரியின் அருமை, பெருமைகள் மற்றும் தனது விரிவுரையாளர் தனக்கு கொடுத்த, விண்வெளியில் புவிஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் கூட எழுதும் பேனாவை தன்னைப்போல் ஒரு புத்திசாலி மாணவனிடம் கொடுக்க வருடக்கணக்கில் காத்திருப்பதாக கூறுகிறார். அப்போது 'பென்சிலை ஏன் உபயோகிக்கக்கூடாது'என்று கேட்கும் அமீர்கானுக்கு க்ளைமாக்ஸில் பதில் கூறுகிறார்.

கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணும் முறையை அமீர்கான் கிண்டல் செய்யும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது. 'புத்தகத்தில் இருப்பதை வரிக்குவரி எழுதினால்தான் மதிப்பெண், சொந்தமாக எழுதினால் ஒத்துக்கொள்ள முடியாது' என்று விரிவுரையாளர் சொல்லும்போது நிறைய சோகக்குரல்கள்.புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்யும் முறை தவறு என்று உணர்த்துவதற்காக சதுர்(ஓமி) தயார் செய்து வைத்திருக்கும், வரவேற்புரையில் சில வார்த்தைகளை அமீர்கான் மாற்றி விட, அவமானப்படும் சதுர் 'இன்னும் பத்து வருடம் கழித்து இதே இடத்துக்கு வருவோம்.வாழ்க்கையில் யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்' என்று சவால் விடுகிறான்.அதே நேரத்தில் மாதவனுக்கும்,ஜோஷிக்கும் வேலை கிடைப்பது கஷ்டம் என்று பொமன் இரானியும், அமீர்கானிடம் சவால் விடுகிறார். இவர்கள் சவால் என்னவானது, என்பதுதான் மீதிக்கதை.

அமீர்கானின் கலாட்டாக்கள் ரசிக்கவைக்கின்றன.அவருக்கு இணையாக இருக்கிறது சதுரின் பாத்திரப்படைப்பு.படம் முழுக்க வந்தாலும்கூட, 'என்னுடன்சேர்ந்தால்உன்னைக்காப்பாற்றுகிறேன், ஆனால் உன்நண்பனை கல்லூரியிலிருந்து நீக்குவதாக,உன் கைப்பட கடிதம் தயார் செய்ய வேண்டும் 'என்று வைரஸ் கூறும்போது, நண்பனுக்காக, உயிரையே கொடுக்கத்துணியும் ஜோஷி , நெகிழ வைக்கிறார். .வைரஸுக்கும் அமீர்கான்&கோவிற்கும் இடையே நடக்கும் போட்டிகள் கலகலப்பு.கடைசியில் அமீர்கானைப்புரிந்துகொண்டு, தனது பேனாவைத்தரும் இடம் உணர்ச்சிகரம்.

மோனா சிங்(கரீனாவின் அக்கா) கிற்கு பிரசவம் பார்க்கும் காட்சியில் மும்பை மழை முக்கிய பங்கு வகிக்கிறது.கரண்ட் கட்டான நிலையில் அமீர்கானின் புத்திசாலித்தனத்தால் தாயும் சேயும் நலம்.

க்ளைமாக்ஸில் வைரஸ் சொல்லும் பதில்:விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பென்சில் முனை உடைந்தால் அது சுற்றிக்கொண்டே வரும். அது எந்த வகையிலாவது கஷ்டம் கொடுக்கலாம்'.
கடைசியில் அமீர்கான் உண்மையில் யார் என்பது வெளிப்படும் இடம் சுவாரஸ்யம்.டைரக்க்ஷன் அருமை.'All is well' பாடல் தாளம் போட வைக்கிறது.




இது ஒரு மீள் பதிவு.

Friday, 1 January 2010

இன்னுமொரு புத்தாண்டு.


இதோ,

இன்னுமொரு புத்தாண்டு.

வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம்.

சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே.மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகிவிடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகிவிடாமல்,புது வருடத்திற்கும், புதுவாழ்க்கைக்குமாய்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Happy New Year

LinkWithin

Related Posts with Thumbnails