மும்பைன்னதும் மக்களுக்கு இங்கே கோலாகலமா நடக்கற பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வராம இருக்காது . பத்து நாளும் மும்பை முழுக்க ரொம்பவும் சந்தோஷமா கொண்டாடற இந்தப் பண்டிகைக்காக மக்கள் வருஷம் முழுக்கக் காத்திருப்பாங்க. ஒவ்வொரு தடவையும் பண்டிகை முடிஞ்சதும், அடுத்த சதுர்த்தி எப்போ வரும்ன்னு ரொம்ப ஏக்கமா இருக்கும். ஒவ்வொரு பகுதிகள்லயும் குடியிருப்புகள்லயும் இருக்கற பிள்ளையார்களை தினமும் நண்பர்கள் குழுமத்தோட போயிப் பார்த்துட்டு வர்றது ரொம்பவே ஜாலியான விஷயம். கொண்டாட்டங்கள் முடிஞ்சு புள்ளையாரை வழியனுப்பி வெச்சுட்டு வந்தப்புறம் அந்தக் காலியிடத்தைப் பார்க்கறதுக்கு மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும்.
சின்னதுலேர்ந்து பெரூசு வரைக்கும் விதவிதமான அளவுகள்ல வாங்கிட்டு வரும் கணபதிகளை அவரவர் வசதிக்கேற்ப மூணு, அஞ்சு ஏழுன்னு ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரும் தினங்கள்ல கரைப்பாங்க. சில வீடுகளில் வெறும் ஒண்ணரை நாள் மட்டும் வெச்சுட்டு சத்ய நாராயணா பூஜை முடிஞ்சதும் கரைச்சுருவாங்க. எங்க குடியிருப்பில் ஏழு நாள் வரைக்கும் வெச்சிருந்தோம். அஞ்சாம் நாள் சத்ய நாராயண பூஜை அமோகமா நடந்தது. ஏழாம் நாள் மஹா கணபதி ஹோமம், நட்சத்திர பூஜை, லக்ஷ்மி பூஜை எல்லாம் நடத்தி, மதியம் மஹா பிரசாதமா சாதம், சாம்பார், உசிலி, வடை, அப்பளம், ஊறுகாய், மோர், பால் பாயசம், பூரி பாஜியோட புள்ளையார் சாப்பாடு போட்டார். அன்னிக்கு சாயந்திரமே அவரை வழியனுப்பிட்டு வந்ததும் என்னவோ, கலகலன்னு இருந்த கல்யாண வீடு எல்லா விருந்தாளிகளும் கிளம்பினப்புறம் ஒரு வெறுமையோட இருக்குமே. அப்டி இருந்தது..
இது எங்க குடியிருப்புக்கு இந்த வருஷம் வந்த புள்ளையார். ராஜ கம்பீரமா தலைப்பாகையோட எவ்ளோ அழகாருக்கார்.
முந்தி மாதிரி இல்லாம இப்பல்லாம் ரூம் போட்டு ஜிந்திச்சு புள்ளையாரை புதுப்புது டிசைன்கள்ல உருவாக்கறாங்க. எல்லா மண்டலிகள்லயும் போயிப் பார்த்துட்டு வர்றதுங்கறது முடியாத காரியம். சுருக்கு வழியா, கரைக்கிற இடத்துக்கே போயிட்டா நமக்கு அங்கியே வந்து தரிசனம் கொடுத்துட்டு அப்றமாத்தான் கைலாயம் போவார். இப்பல்லாம் புள்ளையாருக்கு மேட்சா மண்டலிக்காரங்களும் காஸ்ட்யூம் போட்டுக்கறாங்களாம். யாராச்சும் கூட்டத்துல தொலைஞ்சு போனா கண்டு பிடிக்க ஈஸியா இருக்கும் பாருங்க :-). இங்கியும் அப்டித்தான் வயலட் நிறமே.. வயலட் நிறமேன்னு புள்ளையாரும் பக்தர்களும் மேட்சிங்கா இருக்காங்க. கிரிக்கெட்ல மட்டுந்தான் மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கணுமா என்ன?.. இங்கியும் இருக்குது :-))
என்னோட காமிராவான பீரங்கி அடிக்கடி மக்கர் செய்ய ஆரம்பிச்சுருச்சு. சரின்னு கடாசிட்டு, நிக்கான் 5100க்கு மாறிட்டேன். புதுக்காமிராவால நிறையப் புள்ளையார்களைப் பிடிச்சுட்டு வர்றதுக்காக மும்பையின் கிர்காம் சௌபாட்டி(பீச்)க்குப் போலாம்ன்னு நானும் ரங்க்ஸும் ப்ளான் செஞ்சுருந்தோம். லால்பாக்ச்சா ராஜா, மும்பைச்சா ராஜா எல்லோரும் வருவாங்க, பார்க்கலாம்ன்னு ஐடியா. ஆனா, திடீர்ன்னு பையரோட காலேஜுக்கு அவசரமா நான் போயே ஆக வேண்டிய சூழல்,. அதனால என்னோட அஸிஸ்டெண்ட் போட்டோகிராபரான ரங்க்ஸை அனுப்பி வெச்சேன்.. ஆட்டோவுலயே எல்லாப் படங்களையும் சுட்டுட்டு வந்துருக்கார். முதல் படம் மட்டுந்தான் என்னோடது. மீதி எல்லாம் என் மறுபாதியின் கை வண்ணம் :-))
முன்னாடி கணபதி இருக்கார். பின்னாடி என்ன பார்க்கறாங்க????
ஆனைமுகனுக்கு ஆளுயர அருகம்புல் மாலை..
ஒட்டிப்பிறக்காத ட்வின்ஸ்.. அடையாளம் கண்டுபிடிக்கறது சுலபம்தான் :-))
எங்கூரு ராஜா.. தங்கக்கையால அள்ளி அள்ளிக்கொடுப்பார் வரங்களை :-)
தேங்காய்ல ஒரு மூடி இங்கே இருக்கு. இன்னொண்ணு எங்கே??
ஞானப்பழப் பஞ்சாயத்தே இன்னும் தீரலை.. அதுக்குள்ள தேங்காயைக் கொண்டாந்துருக்காரே இந்த நவீன நாரதர் :-))
க்ருஷ் மாமா மாதிரியே வேஷம் போட்டிருக்கேன்.. நல்லாருக்கா?..
புள்ளையாரப்பா.. காணாமப்போன உன்னோட வாகனத்தை கூகிளில் தேடுனா சட்ன்னு கிடைச்சுரும். அதை விட்டுட்டு எங்களைத் தேடச்சொல்றது ஞாயமாப்பா?.. குனிஞ்சு தேடித்தேடி முதுகு வலிக்குது..
TV-9 சேனல் காரர்கள் கொண்டாந்த சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத புள்ளையார்.
புள்ளையாரே,.. மின்வெட்டு இனிமே இருக்காதா. காமெடி பண்ணாதேப்பா :-)))
தேமேன்னு அரச மரத்தடியில உக்காந்துருந்தேன். கூட்டிட்டு வந்து இங்க வெச்சுட்டாங்க.
(தொடரும்.... இல்லையில்லை, அடுத்த பகுதியில் முடியும் :-))
