Tuesday, 14 September 2010

பிள்ளையார் சதுர்த்தி..

ராக்கி கட்டி, நாரியல் பூர்ணிமா கொண்டாடி.. 'ஆலா ரே ஆலா.. கோவிந்தா ஆலா' என்று கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடங்கும் பண்டிகைக்காலம், எங்க ஊர் பிள்ளையார் சதுர்த்தியின்போது களை கட்டிவிடும். வீட்டுக்கு வீடு பிள்ளையார் வந்து ஜம்முன்னு உக்காந்துடுவார். ஹாஸ்டல்லேர்ந்து வீட்டுக்கு லீவுக்கு வந்த மகனைப்போல, ராஜ உபச்சாரம்தான் அவருக்கு :-)))


சதுர்த்திக்கு ஒன்றிரண்டு மாசத்துக்கு முன்னாலேயே.. அதாவது வெய்யில் காலத்துலயே, ஏற்பாடுகளெல்லாம் ஆரம்பிச்சுடும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் வடிவமைப்பதும், வர்ணமடிச்சு அழகுபடுத்துவதுமாக தொழிலாளர்களெல்லாம் பிஸியோபிஸியாகிடுவாங்க... இப்பல்லாம் காகிதக்கூழில் செஞ்சு, வாட்டர் கலர் அடிச்ச eco friendly புள்ளையார் மார்க்கெட்டுக்கு வந்துட்டார். நிறையப்பேர் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க.. ஆனாலும், ஜிகுஜிகுன்னு பெயிண்டில் ஜொலிக்கிற பிள்ளையாருக்கு ஒரு சில மக்கள் மத்தியில இன்னும் வரவேற்பு இருக்குது..


நம்மூர்ல பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்றது மாதிரிதான் இங்கியும் புள்ளையார வீட்டுக்கு கூட்டிட்டு வரமுன்னாடி வீட்டை சுத்தம் செய்வோம். அவரை உட்கார வைக்க சின்னதா மண்டபம் கட்டி, அலங்காரமெல்லாம் செஞ்சு..  ரெடியா வெச்சு, புள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு, 'கண்பதி பப்பா.. மோரியா!! மங்கள்மூர்த்தி மோரியா' என்ற கோஷத்தோட அவரை கூட்டிட்டு வந்து உட்கார வெச்சு, பத்து நாளும் உபச்சாரமெல்லாம் செய்வோம். தினம் ரெண்டுதடவை அவருக்கு ஆரத்தி நடைபெறும். வீட்டுல உள்ளவங்களெல்லாம் ஒன்னா சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுப்போம். அபார்ட்மெண்ட்களில், எல்லோருக்கும் பொதுவான பிள்ளையார் வெச்சு,.. கூட்டு வழிபாடு நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் அவங்க வீட்டுல இருந்து பிரசாதமா, ஷீரா, கரஞ்சி,மோதகம், லட்டுன்னு செஞ்சு கொண்டு வருவாங்க.


பிள்ளையார் வந்ததும், 'சத்ய நாராயண பூஜை' கண்டிப்பா நடக்கும். அபார்ட்மெண்டின் மிக மூத்த தம்பதியோ அல்லது, புதிதாக திருமணமான தம்பதியோ இந்த பூஜையை தம்பதி சமேதரா செய்வாங்க. அன்னிக்கு, லஞ்ச் அல்லது டின்னர் ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. இதை மஹாபிரசாதம்ன்னு சொல்லுவாங்க. தமிழ்க்குடும்பங்கள் நிறைய இருக்கும் இடங்களில் கணபதி ஹோமம் நடக்குறதுண்டு.


பொதுவா, இங்கே 'விசர்ஜன்' எனப்படும் பிள்ளையாரை கரைக்கும் நிகழ்ச்சி, சதுர்த்திக்கான மறு நாள்(ஒன்னரை நாள்ன்னு கணக்கு), மூணாம் நாள், ஐந்தாம் நாளான 'கௌரி கண்பதி' , ஏழாம் நாள், மற்றும் ஒன்பதாம் நாள்.. அதன்பின் பத்தாம் நாளான ஆனந்த சதுர்த்தி அன்று நிறைவு பெறும். 'கௌரி கண்பதி' அன்னிக்கு மகனைப்பார்க்க பார்வதி தேவி வருவதாக ஐதீகம். அன்னிக்கு சிலவீடுகளில், கௌரிபூஜையும், விருந்துச்சாப்பாடும் நடக்கும்.அது முடிந்தபின், கௌரி, மற்றும் கண்பதியை விசர்ஜன் செய்வார்கள். விசர்ஜன் செய்யப்படும் நாட்களில் சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுவிடும். ஊரிலுள்ள எல்லாப்புள்ளையார்களையும் அன்னிக்கு ஆர அமர பார்த்து.. 'பை..பை' சொல்லிட்டு வரலாம்.


ஆனந்த சதுர்த்தி அன்னிக்கு ரோட்டுல எள் போட்டா விழ இடமிருக்காது!!!(எள்ளை ஏன் போடணும்ன்னு சொல்றாங்கன்னே புரியலை.. இருந்தாலும் நானும் சொல்லி வைக்கிறேன் :-))). அவ்வளவு நாள் பயபக்தியா ஆராதிச்ச புள்ளையார்களை அன்னிக்கு க்ரேன்ல கட்டி ஆழமான கடல்ல தூக்கிப்போட்டுடுவாங்க. (அம்பூட்டு உசரமா இருப்பாருங்க). ஆனாலும், கரைச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் மனசுக்கு ஒரு வெறுமை வருமே... அதை சொல்லத்தெரியலை.


எங்க ஊர்ல புள்ளையார் ஆரத்திக்குன்னே ஸ்பெஷல் பாட்டு இருக்குது. இங்கே புள்ளையார் சதுர்த்தி பிரபலமானதுக்கும்.. இந்திய விடுதலைப்போருக்கும் சம்பந்தமிருக்குது. வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல, கூட்டம் கூட தடை போடப்பட்ட காலத்துல...நம்ம பாலகங்காரதர திலகர் கண்டுபிடிச்ச வழிதான் இது. 1892 -லிருந்து இது சமூகவிழாவா கொண்டாடப்பட ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி, மராட்டிய பேஷ்வாக்கள் மட்டுமே, சிறிய அளவில் கொண்டாடியிருக்காங்க.. பேஷ்வாக்களின் அழிவுக்குப்பின்னால, க்வாலியர் மற்றும் குஜராத் அரசர்கள் இதை சாதாரண மக்களிடம் கொண்டு வந்தாங்க.


இங்கெல்லாம் கூடும் கூட்டத்தை பார்த்த திலகருக்கு, இது மக்களை ஒருங்கிணைக்கும் வழியாக தோன்றியது. கடவுளைக்கும்பிட்ட கையோட, அங்கிருந்த கூட்டத்துக்கிட்ட விடுதலை தாகத்தை உண்டாக்க, புள்ளையார் சதுர்த்தி, திலகருக்கு ரொம்பவே வசதியா இருந்தது. இப்பவும், மக்களெல்லாம் ஆரத்தி முடிஞ்சதும், 'பாரத் மாதா கீ... ஜெய்' ன்னு கோஷம் எழுப்ப தவறுவதில்லை. மும்பையில் 'லால்பாக்' என்னும் இடத்துல வைக்கப்படும் புள்ளையார் ரொம்பவே பிரபலமாயிட்டார். திருப்பதி மாதிரியே அங்கியும் வரிசையில நின்னுதான் தரிசனம் செய்யணும். விலையுயர்ந்த நகைகள், பொருட்களெல்லாம்கூட காணிக்கையா கொடுக்கப்படுதாம். இங்கே வந்து போகாத மும்பை வி.ஐ.பிக்களே இருக்கமுடியாது. அவர்கிட்ட கேட்கும் வேண்டுதல்களெல்லாம் நிறைவேறுதுன்னு ஒரு புதுப்பேச்சு கிளம்பியிருக்கு.  'லால்பாக்ச்சா ராஜா' ன்னுஅவருக்கு செல்லப்பேரும் உண்டு. இந்தப்பேருக்கு பேடண்ட் எடுத்திருக்காங்கன்னா அவரு எவ்வளவு பிரபலம்ன்னு பாத்துக்கோங்க.


மஹாராஷ்ட்ராவில் பிரபலமானஆரத்திப்பாட்டு இது.....



இது எங்கவீட்டு புள்ளையார்...


டிஸ்கி: எங்கூர்ல இன்னும் புள்ளையார் சதுர்த்தி முடியலை. இவர் எங்க குடியிருப்பின் பொதுவான புள்ளையார்.கௌரி கண்பதி வரைக்கும் இருப்பார் :-)))))))












Tuesday, 7 September 2010

மழைத்துளிகள்...

ஒவ்வொரு வருஷமும், ' ஸ்.. அப்பாடா!!! என்ன வெயில்.. என்ன வெயில்!!. போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே!!!. ஒரு மழை வந்தா எவ்ளோ நல்லாருக்கும்'ன்னு ஏங்க வைக்கத்தான் செய்கிறது இந்த மழை. லேசாக மாறும் தட்பவெப்பமும், காற்றின் போக்கும், திடீர் புழுக்கமும் சொல்லிவிடும்.. மழை வரப்போவதை..




லேசான காற்றுடன், 'சொட்'டென விழுந்ததும், அப்படியே கம்ம்ன்னு எழுமே மண்மணம். ஆஹாஹா!!!. இதுக்காகவே எப்போடா மழை வரும்ன்னு இருக்கும் :-). முதல் மழையில் நனைஞ்சா, நல்லதாம். வெய்யிலினால் வந்த வேர்க்குரு, இன்னபிற சரும பிரச்சினைகளெல்லாம் ஓடிப்போயிடுமாம். இந்த ஊர்ல சொல்லிக்குவாங்க. அதனால மழைத்துளி விழுந்ததுமே,'ஹே...'ன்னு கூப்பாடோட, பசங்களெல்லாம் ஓடிப்போயி.. மழையில ஆட ஆரம்பிச்சுடுவாங்க. ஆட்டம் மட்டுமல்ல.. பாட்டும் உண்டு :-))


"யே..ரே, யே..ரே பாவுஸா,
துலா தேத்தோ பைஸா;
பைஸா ஜா(zha)லா கோட்டா,
பாவுஸ் ஆலா மோட்டா".


இது குழந்தைகளுக்கான ஒரு மராட்டிப்பாடல். இதுகளை பார்க்கும்போது, நமக்கே உற்சாகமாக இருக்கும். நாமளும் சின்னப்புள்ளையா இருக்கச்சே இப்படித்தானே மழையில் நனைஞ்சு விளையாடியிருப்போம். அதுவும் பள்ளிக்கூடத்துக்கு புறப்படும்போதுதான், கரெக்டா மழை வரும். வகுப்புக்கு லேட்டா போறதுக்கு ஒரு சாக்கு சொல்லலாம் :-)). பள்ளி விட்டு வரும்போது மழை வந்தா, இன்னும் ஜாலி. வீட்டுக்கு நனைஞ்சுக்கிட்டே வந்து, திட்டெல்லாம் வாங்குறதும் ஒரு இனிய அனுபவம்தானே. நமக்கு ஜூரம் வருதோ இல்லியோ, அம்மாக்களுக்கு டென்ஷன் ஜூரம் விறுவிறுன்னு ஏறும். ஆனா..அவங்க கொடுக்கிற சுக்குக்காப்பிக்காகவே அடிக்கடி மழையில் நனையலாம் :-))


எப்போடா வரும்ன்னு ஏங்க வைக்கிற மழைதான், சிலசமயம்.. ஏன்தான் இப்படி பழிவாங்குதோன்னு தோணவைக்கும். தேவையான அளவு பெஞ்சாத்தானே நல்ல முறையில விவசாயம் செய்ய முடியும், குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்காது. மழைக்கப்புறம், பச்சைப்பசேல்ன்னு சுத்துவட்டாரமும், பூத்துக்குலுங்கும் பெயர்தெரியா காட்டுச்செடிகளுமா, ஒரே அமர்க்களமாத்தான் இருக்கு. காத்துல மிதந்து வர்ற சுட்ட மக்காச்சோள வாசனை , மும்பையின் மழைக்காலத்துக்கே இன்னும் அழகைக்கூட்டும்...


இந்த வருஷம், மும்பையில் ஓரளவு மழை பெஞ்சிருக்கு. ரொம்பவும் அடிச்சிப்பெஞ்ச மாதிரியே எனக்குத்தெரியலை. இந்தத்தடவை , மழையில் வெளியில் சுத்த அதிகம் வாய்ப்பு கிடைக்காததும் ,  அப்படி நினைக்கிறதுக்கு ஒரு காரணமா இருக்கலாம் :-))). "ரெண்டு மூணு நாள் விடாம பெஞ்சாத்தான், மழைக்கு அழகு :-)))). இந்தத்தடவை அப்படி ஒண்ணும் பெஞ்ச மாதிரியும் தெரியலை"..   இப்படி சலிச்சுக்கிட்டது அந்த மழைக்கே கேட்டிருச்சோ என்னவோ,.. கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தின நாள் காற்றும், மழையுமா கொட்டோ கொட்டுன்னு கொட்டித்தீர்த்துட்டது.. கண்ணன் பிறந்தப்ப, இதேமாதிரிதான் புயலும் மழையுமா இருந்திச்சாம். அதனால, கிருஷ்ண ஜெயந்தி சமயம், மழை இப்படித்தான் பெய்யும்ன்னு இங்கே வந்தப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன் :-))


ஜூனில், மழை ஆரம்பிக்கும்போதே மழைக்காலத்துக்கான ஷாப்பிங்கும் ஆரம்பிக்கும். பள்ளிகளில் கறுப்பு நிற ரெயின் சேண்டல்கள்தான் கட்டாயம் போடணும். யூனிபார்ம் ஷூ போட்டுக்கிட்டுப்போனா, அபராதம் கட்டச்சொல்லும் பள்ளிகளும் உண்டு. மழையில் ஷூக்களின் உள்ளே, ஊறிப்போன கால்களுடன், கஷ்டப்பட்டுக்கொண்டு குழந்தைகள் இருப்பது இதனால் தவிர்க்கப்படுது. 


எங்கூர்ல 'நாரியல் பூர்ணிமா' வந்தாச்சுன்னா மழைக்காலம் முடியப்போவுதுன்னு அர்த்தம். மழைக்காலத்தில் கடலின் சீற்றம் அதிகமா இருப்பதால், மீன்பிடித்தொழிலுக்கு போகமுடியாம இருக்கிற மீனவ சகோதரர்கள், மறுபடியும் தொழிலுக்கு போகும்முன் கொண்டாடும் பண்டிகை இது. அனேகமா, ரக்ஷா பந்தனும், நாரியல் பூர்ணிமாவும் ஒரே தினத்தில்தான் வரும். அன்னிக்கி மேளதாளத்தோட, சொந்தபந்தம் சூழ கடற்கரைக்கு போவாங்க. அங்கே மழையின் அதிபதியான வருணதேவனுக்கு பூஜை செஞ்சுட்டு, கடலில் ஒரு தேங்காயை காணிக்கையா விட்டுட்டு வருவாங்க.  அதுக்கப்புறம் அவங்க தொழிலுக்கு போக ஆரம்பிச்சுடுவாங்க.


வினாயகர் சதுர்த்தியின் கடைசி நாளை, ஆனந்த சதுர்த்தின்னு சொல்லுவாங்க. அன்னிக்குத்தான் மிச்சம் மீதியிருக்கிற புள்ளையார்களையும் கரைப்பாங்க. அத்துடன் மழையும் முடிஞ்சுடும்ன்னு ஐதீகம். இந்த வருஷம் இப்பவே மழை முடியறதுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சாச்சு. போன வாரம் ரெண்டு நாளா காலையில ஒரே பனிமூட்டம். பனி வர ஆரம்பிச்சாச்சுன்னா, மழை பொட்டியை கட்ட ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அணையப்போற விளக்கு கட்டக்கடைசியா சுடர்விட்டு எரியுற மாதிரி, ஜன்னலுக்கு வெளியே இடியும் மின்னலுமா வெளுத்துக்கட்டிக்கிட்டு இருக்கு. பெய்யும்போது அலுத்துக்கிட்டாலும், இனி இந்த மழையை ரசிக்க, சுட்ட சோளம் சாப்பிட.. அடுத்த வருஷம் வரை காத்திருக்கணுமேன்னு ஏக்கமா இருக்கு. சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் இருக்கு :-)). அடுத்த வருஷமும் வரணும்ன்னு சந்தோஷமா சொல்லிக்கிறோம்...




Thursday, 2 September 2010

இந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.

ரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கிப்பெருகி, merozoites ஆக வெளிவருகின்றன. இவற்றில், ஒரு பாதி மறுபடியும் ரத்தத்தில் கலந்து சிவப்பணுக்களை கபளீகரம் செய்ய ஆரம்பிக்குது. மீதிப்பாதி gametocytes ஆக உருமாறுது. ஏன் இப்படி இதுகள் உருமாறுதுன்னு.. இன்னும் யாராலயும் கண்டுபிடிக்க முடியல. இந்த gametocytes தான் கொசுவின் உடம்பில் புகுந்து, மறுபடியும் மலேரியா கிருமிகளா வெளிவருது.

ஒவ்வொரு வகை மலேரியா கிருமியின் gametocyte-ம் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். உதாரணமாக,
Plasmodium falciparum - நீள்வடிவமாக சாஸேஜ் போல இருக்கும்.
Plasmodium malaria - நீள்வட்ட வடிவமாக,
Plasmodium vivax - உருண்டையாக இருக்கும்.

இரத்தப்பரிசோதனையின் போது, நம்மை எந்த கிருமி தாக்கி இருக்கக்கூடும்ன்னு, இந்த வடிவத்தை வச்சுத்தான் சுமாரா கண்டுபிடிக்கிறாங்க.

gametocytes-ல் ரெண்டு வகைகள் இருக்குது. micro gametocytes,மற்றும் macto gametocytes. முதல் வகையில் உள்ள கரு பெரிதாகவும், பின்னதில் சிறிதாகவும் இருக்கும். இவற்றில் மைக்ரோ, ஆண் அணுவாகவும், மேக்ரோ பெண் அணுவாகவும் பங்கு வகிக்கின்றன.இதுவரைக்கும் மனுஷ உடம்பில் வளர்ந்த இவை இதுக்கு மேல வளரணும்ன்னா கட்டாயம், கொசுவின் உடம்புக்கு போயே ஆகணும். மலேரியாவால பாதிக்கப்பட்ட ஒருத்தரின் ரத்தத்தை கொசு உறிஞ்சும்போது இவை, கொசுவின் வயிற்றுக்குள்ளே போகின்றன.

கொசுவின் உடம்புக்குள்ளே போன இந்தக்கிருமிகளில், மைக்ரோவின் கரு,செல்பிரிதல் என்னும் நிகழ்ச்சி மூலம் ஆறு கருக்களா மாறுது. அவற்றுக்கு வாலும் முளைச்சு, நல்லா வளர்ந்தப்புறம் இவை gametocyteக்கு வெளியே வந்து பிரிஞ்சு போயிடுது.

மேக்ரோ முதிர்ந்து, கருவுறுதலுக்கு தயாராகுது. மைக்ரோவும், மேக்ரோவும் இணைஞ்சதால கரு உண்டாகி, வளருது. இது மொதல்ல உருண்டையாத்தான் இருக்கும். மெதுவா இது புழுவின் வடிவத்துக்கு மாறுது. இது கொசுவின் வயிற்றுப்பகுதியை துளைச்சிக்கிட்டு வெளியேறி, வயிற்றுக்கும்.. கொசுவின் மேல்தோலுக்கும் இடைப்பட்ட இடத்துல ரெஸ்ட் எடுக்குது. ரெஸ்ட் காலத்துல வேணுங்கிற ஊட்டச்சத்தை கொசுவிலிருந்தே எடுத்துக்குது. இதை 'oocyst'ன்னு சொல்லலாம்.

வளரும்போதே, கரு மறுபடியும் நிறைய தடவை பிரிஞ்சு, தனித்தனி உயிர்களாகுது.இவைதான் 'sporozoites'ன்னு சொல்லப்படற கிருமிகள். வளர்ச்சிப்பருவம் முடிஞ்சதும், 'oocyst' உடைஞ்சு, sporocytes கொசுவின் வயிற்றுப்பகுதி திரவத்துல கலக்குது. கொசுவோட உடம்புல புகுந்ததிலிருந்து, இந்த வளர்ச்சிப்பருவம் வர்றதுக்கு மொத்தம் 10 ,12 நாட்களாகும்.

கொசுவின் உடம்புல, ஒரு டூர் அடிச்சிட்டு.. கடைசியா இவை கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளுக்கு வந்து சேருதுகள். பிறகென்ன.. இப்போ, கொசு யாரையாச்சும் கடிக்கும்போது, எச்சிலும்.. அதோட சேர்ந்து கிருமிகளும் உடம்புக்குள்ள போயிடும். மறுபடியும் ஆட்டம் ஆரம்பம்......

ஒருத்தருக்கு மலேரியா அட்டாக் ஆகியிருக்குன்னு சில அறிகுறிகளை வெச்சு தெரிஞ்சுக்கலாம். கடுமையான காய்ச்சல், நடுக்கம், குளிர்தல்,அளவுக்கு மீறிய வியர்வை, கடுமையான உடல்வலி, மற்றும் தசை வலி, வாந்தி, மற்றும் கடுமையான அசதி இதெல்லாம் இருக்கும். சிவப்பணுக்களை இதுகள் தாக்குவதால இரத்தத்தில் ப்ளேட்லட்ஸின் எண்ணிக்கை ரொம்பவே குறையும். சிலசமயம் ஆபத்தான நிலைக்கும் கொண்டுபோயிடும். மருந்து கொடுத்தும் சரியாகலைன்னா,.. அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆஸ்பத்திரியில் அட்மிட் செஞ்சு ரத்தம் ஏத்த வேண்டி வந்துடும். என் பையருக்கும் மலேரியா வந்தப்ப ப்ளேட்லட்ஸ் வெறும் 35,000 த்துக்கு போயிட்டது. நல்ல வேளையா மருந்து கொடுத்ததில் கூடுதலாக ஆரம்பிச்சதால, பயமில்லாம போச்சு. ஆனாலும் பக்க விளைவாக உடம்புவலி ரொம்ப நாள் இருந்தது.

இந்தக்கொசுக்களால மலேரியா மட்டுமல்ல.. யானைக்கால் வியாதி,டெங்கு போன்ற வியாதிகளும் பரவுது. கொசுக்களை நம்மால முடிந்தவரை கட்டுப்படுத்தலாம். 

விடியற்காலை, மற்றும் மாலைக்கருக்கல் நேரங்களில்தான் இவை ரொம்பவே உலாத்தும். இந்த நேரங்களில் வெளியே சுத்துறதை குறைச்சிக்கலாம்.

சுத்துனாலும், உடம்பு முழுக்க மூடியிருக்கிற மாதிரி உடை அணிஞ்சிக்கலாம். முக்கியமா சிறு குழந்தைகளுக்கு..

 நல்ல தரமான கொசுவிரட்டி, கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

இப்பல்லாம் கொசுவலை அடிச்ச ஜன்னல்கள் புழக்கத்துக்கு வந்துட்டது. அவற்றை உபயோகப்படுத்தி, வாசல் கதவுகளை சாயந்திரங்களில் இறுக்க மூடி வைக்கலாம்.

எல்லாத்தையும்விட முக்கியமானது, தண்ணீரை தேங்க விடக்கூடாது. அங்கேதான் கொசுப்பண்ணையே இருக்கும். வீடுகளிலோ, அக்கம்பக்கங்களிலோ உடைஞ்ச டப்பா, டயர், குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறதை பார்த்தா அப்புறப்படுத்தலாம். சிலபேர் அதில் மண்ணெண்ணெய் விடுவாங்க. எதுக்குன்னா,.. கொசுக்கள் செத்துடுமாம்.

அப்படியும் கொசு கடிச்சால் என்ன ஆகும்.. இங்கே வாங்க..

இன்னும் விளக்கமா புரியணும்ன்னா,.. வீடியோவா பாருங்க.






Monday, 30 August 2010

இந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க....

கொசு கடிச்சா என்னாகும்....

சுரீர்னு வலிக்கும், நமநமன்னு ஊறல் எடுக்கும், பட்....டுனு அடிச்சிபோட்டுட்டு அடுத்த வேலையைப்பாக்க போயிடலாம். இப்பல்லாம் அதுங்களை மின் தகனம் செய்யன்னே சைனாக்காரன் bat-ல்லாம் கண்டுபிடிச்சிருக்கான். சுவிட்சை லேசா அழுத்திக்கிட்டு 'பறக்கும்....கொசு பறக்கும்...'ன்னு பாடிக்கிட்டே டென்னிஸ் விளையாடுற நெனப்புல கொசு அடிக்கலாம். ஸ்கோர் செட்டிங்கா.... அது உங்க விருப்பம்.

கடிச்ச கொசு சும்மா போகாதுங்க . டாக்டர் நம்ம கையிலே ஸ்பிரிட்டை தடவி ஊசி போடற மாதிரி, இது எச்சிலைத்தடவி இல்லே குத்திட்டு போயிருக்கு. 'அய்யே.... என்பவர்களுக்கு ஒரு நற்செய்தி,...'இந்த எச்சிலில் கிருமிகள் இருக்கு',.... 'அய்யய்யோ' என்பவர்கள் கவனிக்க... அவை அத்தனையும் மலேரியா கிருமிகள். இதோட மொத்த, சில்லறை வியாபாரங்களுக்கு அணுகுவீர்..' Anopheles' கொசுவை.


வியாபாரம்னா நாலும் இருக்கணும்.... இவர்கிட்டேயும் ,
1.plasmodium vivax... Benign malaria
2.plasmodium malaria -- Quartan malaria
3.plasmodium falciparum-- Malignant tertian
4.plasmodium ovale -- Mild tertian

நாலு வகை இருக்கு. எல்லாமே நாம இருக்கிற இடத்துக்கே வந்து சப்ளை செஞ்சுடுவாங்க.

மலேரியான்னா 'கெட்ட காத்து'ன்னு அர்த்தமாம். இந்த வார்த்தைய 1763-ல் Ford- என்பவர் மொதமொதல்ல உபயோகிச்சிருக்கார். அப்போல்லாம்.. கெட்ட காத்தாலதான் மலேரியா பரவுதுன்னு நம்பிக்கிட்டிருந்திருக்காங்க. Dr.King என்ற புண்ணியவான்தான், காத்துல இருக்கிற கொசுவால பரவுதுன்னு 1883-ல கண்டுபிடிச்சு சொன்னாரு.

'பிறக்க ஓரிடம், பிழைக்க ஓரிடம்' அப்படிங்கறது இதுங்களுக்குத்தான் பொருந்தும். 'மனிதனில் பாதி... கொசுவில் பாதி'ன்னு வளருதுங்களே...

மனுசனைக்கடிச்சதும், அதனோட உமிழ் நீரோடு சேர்ந்து கிருமிகளும் 'சொய்ங்ங்க்'ன்னு மனுச ரத்தத்தில் சேர்ந்து விடும். இப்போ இதோட பேரு 'sporozoites'. ஒத்தைக்கொரு ந்யூக்ளியஸ்... அதைச்சுத்தி எலாஸ்டிக் கியூடிகிள், அவ்ளவுதான் அங்க அடையாளம். (ஆனா இதுங்கதான் மனுசனை 'உன்னைப்பிடி... என்னைப்பிடி'...என்று ஆக்கிடுது.)

இதுங்கள்ளாம் ஜம்முன்னு, ரத்தத்துல மெதந்துகிட்டே... ஈரலுக்கு போய் சேர்ந்துடும். ஏனா?.... ஏன்னா.. அங்கேதான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளரும்..இப்போ அதுங்களோட அடை காக்கும் பருவமாம். இந்த நேரத்துல கூட , அதுங்க ரத்தப்பரிசோதனையில தெரியாது...அதுக்கு இன்னும் காலமிருக்கு. கடைசியில ஈரல்ல இருந்து வெளிய வந்து ரத்தத்துல கலந்துடும்.

சும்மா ஒரு 40-60 நொடிகளில், சிவப்பணுக்களை ஆக்கிரமித்துக்கொள்ளும். இந்த நிலையில் இதன் பேர் Trophozoite. அங்க போய் சும்மா இருக்காது. அதுங்களுக்கு ஊட்டச்சத்து வேணுமில்லே.... கொஞ்சம் கொஞ்சமா சிவப்பணுவின் செல் திரவத்தை உறிஞ்சி வளரும். நம்ம உடம்புல இருக்கிற ஹீமோகுளோபின் கொறைய ஆரம்பிக்கும்.ஹீமோகுளோபின் செரிமானமாவதன் பக்கவிளைவாக, கிருமியோட செல் திரவத்தில் சின்னச்சின்ன புள்ளிகள் தோன்றும். (இந்த புள்ளிகளை haemozoineன்னு சொல்லலாம்). கொஞ்ச நாளுக்கு பிறகு, தன்னோட ஆட்டத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு,, தன்னை ஒரு ரிங் (b)பால் மாதிரி வளையமாக்கிக்கிடும்.

இந்த ரிங்(b)பாலுக்கும்( இனிமே இதை schizont-ன்னே சொல்லலாம்) நம்ம சிவப்பணுதான் உணவு. மனுஷங்களுக்குதான் எல்லா கவலையும். இதுங்களுக்கு என்ன...சாப்பாடு... தூக்கம்... அதுக்குபிறகு என்ன... இனப்பெருக்கம்தான். இப்போ ஒன்னா இருந்த கரு, பலவா பெருகியிருக்கும். கூடவே வெஷத்தன்மையும் உருவாகியிருக்கும். அப்டியே இருந்தா கிருமிங்களோட பேரு கெட்டுப்போகாதா :-) .. அதனால,.. எல்லாம் ரத்தத்துல சேர்ந்துடும். மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கும். இப்டியே.. ஒவ்வொரு செட்டா கொண்டாந்து, ரத்தத்துல சேர்க்கும். எவ்வளவுக்கு செட்டு சேருதோ, அவ்வளவுக்கு காய்ச்சல் வரும். கிருமிங்க ரத்தத்துல நுழையிறதிலிருந்து, காய்ச்சல் வர்ற வரை உள்ள காலத்தை, inoculation' காலம் ..அப்டின்னு சொல்வாங்க.

இதுவே, கொசு உடம்பில் மலேரியா கிருமி நுழைஞ்சா, என்ன ஆகும்...



(அடுத்த பாகத்தில் முடியும்)





Friday, 27 August 2010

ப்ரெட் ஊத்தப்பம்ன்னே சொல்லலாம்...

சமையல் செய்யும்போது, மீதமாக்கி வீணாக்காம அளவா சமைக்கணும். நாட்டுல இப்போ விலைவாசி இருக்கிற நிலைமைல எந்த ஒரு பொருளையும் வீணாக்குறதே தேசத்துரோகம்தான். அதிலும், சாப்பாடு இல்லாம, எத்தனையோ பேர் கஷ்டப்படுறப்போ... உணவுப்பொருளை வீணாக்கலாமா??...அதுக்குத்தான் ஃப்ரிஜ் இருக்கே.. வெச்சிருந்து சூடாக்கி சாப்பிடலாமேங்கிறீங்களா!! ஒருதடவைக்கு மேல சாப்பாட்டை சூடாக்கினாலே, அதோட டேஸ்டும், பயனும் போயிடுது. திரும்பத்திரும்ப சூடாக்கப்படற உணவு கண்டிப்பா விஷத்துக்கு சமம்தான்.

அதுக்காக,..மிஞ்சிக்கிடக்குதேன்னு சாப்பிட்டு வைக்கமுடியுமா.. அது தேவையில்லாத உடல்பருமனைத்தான் கொண்டு வரும். ரெண்டே கரண்டி தோசைமாவு மிச்சம் வந்துடுச்சு,.. சாப்பிடவும் முடியல்லை, வீணாக்கவும் மனசு வரல்லையா!!! கவலையே வேண்டாம்,  ஊத்தப்பம் செய்யலாம். சாயந்திர டிபன் ரெடி..

தேவையானவை;

தோசைமாவு - 1 கப். (கூடுதலா இருந்தாலும் தப்பில்லை :-))
கடலைமாவு-1/2 கப்.
வறுத்த ரவை-2 டீஸ்பூன்.
நறுக்கின வெங்காயம்-1/2 கப்.
நறுக்கின கொத்தமல்லி இலை-ஒரு கைப்பிடி.
மிளகாய்த்தூள்(ருசிக்கேற்ப)-1 டீஸ்பூன் தாராளம்.
உப்பு- ருசிக்கேற்ப.
எண்ணெய்- தேவையான அளவு.
ப்ரெட்-6 ஸ்லைஸ்.
வெண்ணெய்- கொஞ்சூண்டு.

எப்படி சமைக்கிறது!!!

சின்ன வாணலி ஒண்ணை அடுப்பில் வெச்சு, ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை, லேசா வதக்கி எடுத்துக்கோங்க.

ப்ரெட், வெண்ணெய், எண்ணெய் தவிர மிச்சமிருக்கிற பொருட்களை கலந்துக்கோங்க. உப்பு, உறைப்பு சரி பார்த்துக்கலாம்.
தோசைக்கல்லை அடுப்பில் வெச்சு சூடாக்குங்க.
ப்ரெட் ஸ்லைஸ்களின், ரெண்டு பக்கமும் லேசா வெண்ணெய் தடவி, தோசைக்கல்லில் வெச்சு, லேசா வாட்டி எடுத்துக்கோங்க. லேசா பொன்னிறம் வந்தாப்போதும். எல்லா ஸ்லைசுகளையும் இப்படியே தயார் செஞ்சு எடுத்துக்கோங்க.

இப்போ ஒரு ஸ்லைசை தவாவில் வெச்சு அதுமேலே, மாவுக்கலவையை கொஞ்சூண்டு ஊத்தி நல்லா பரத்தி விடுங்க. அப்புறம், அதை திருப்பிப்போட்டு, மறுபக்கத்திலும் மாவுக்கலவையை பூசிவிடுங்க. இப்ப,.. ஸ்லைசை சுத்தி கொஞ்சூண்டு எண்ணெய் விடுங்க. நார்மலா தோசைக்கு ஊத்துவோமில்லையா!! அதுமாதிரி போதும்.

இப்ப... மூடிபோட்டு வேகவிடுங்க. தீ நிதானமா எரியட்டும்.. ஒண்ணும் அவசரமில்லை.

லேசா பஜ்ஜிவாசனை வந்ததும், ஸ்லைசை திருப்பிப்போடுங்க. மறுபடியும் எண்ணையை ஊத்தி, மூடிவிட்டு வேகவிடுங்க. ரெண்டு பக்கமும் நல்லா வேகணும். கொஞ்சம் பொன்னிறமாக்கூட சமைச்சுக்கலாம். கடலைமாவும், வெங்காயமும் சேர்ந்து லேசா பஜ்ஜி வாசனை வரும். ஆஹா!!.. சர்ர்ர்ரியான பதம்.

சும்மா அப்படியே வெச்சு பரிமாறிடக்கூடாது.. ஒவ்வொரு ஸ்லைசையும், கத்தியால குறுக்கு நெடுக்கா துண்டு போட்டு அழகா பரிமாறணும். இங்கே அப்படி இல்லையேன்னு கேக்குறீங்களா!!!. கடிச்சுத்தானே சாப்பிடப்போறோம்ன்னு அப்படியே வெச்சுட்டேன். ஹி..ஹி..ஹி. அடை, பெசரட்டுகளுக்கான மாவு மிஞ்சிடுத்துன்னா இன்னும் வசதி. அப்படியே ப்ரெட்டுல தடவி சுட்டெடுத்துடலாம். தேவையான எல்லாம்தான் ஏற்கனவே அதுல இருக்கே..... ஒரே மாவுல ரெண்டு டிபன் :-)))))) எப்பூடி..........

Saturday, 21 August 2010

நாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)

என் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' என்னை இங்கே கொண்டாந்து நிறுத்திட்டுது. ரொம்ப ஆசைப்பட்டு தேடி வாங்கிய புத்தகமாக்கும். படிச்சிட்டு இருக்கையில,.. எச்சில் ஊறவைக்கும் ஒரு செய்யுள்;

'அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி

சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி
சேனை ஏத்தன் சேர்த்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவை யோடு படைப்புப் போட '

இத்தனை கறிவகைகளும், ஓணம்,விஷூ, பொங்கல், புத்தரிசி பொங்குதல், பின்னே ஒரு நல்ல நாள், பெரிய நாள்கள்ல செய்றது உண்டு. இதுல,..நாடு முழுக்க தேடுனாலும் சரி.. நாஞ்சில் நாட்டு அவியலுக்கும், எரிசேரிக்கும் உள்ள ருசி வேற எங்கியும் கிடைக்காது. பின்னே, இப்ப ஓணம் வேற வருதா, கடைகள்ல அதுக்குண்டான கறிகாய்களும் கிடைக்குது. செஞ்சு பார்த்து ருசியுங்க.

1.கால் கிலோ சேனையை செதுக்கி வெச்சுக்கணும். கவனிக்க: நறுக்கச்சொல்லல. ஒரு ஓரமா ஆரம்பிச்சு,சேனையை உருட்டி, உருட்டி... அப்படியே சின்னச்சின்ன துண்டுகளா செதுக்கிக்கிட்டு வரணும். துண்டுகள் சின்ன பிரமிட் மாதிரி (முக்கோண சைஸ்ல) தானாவே வரும். இதை ஒரு பாத்திரத்துல தண்ணியில போட்டு வைக்கணும். இதே போல ஒரு ஏத்தங்காயையும் செதுக்கி தனியா, தண்ணியில போட்டு வைக்கணும்.

2. அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் நல்லமுளகு ரெண்டையும் உடைச்சு வைக்கணும்.

3. ரெண்டு கப் தேங்காப்பூவை எடுத்துக்கணும். அதுல ஒரு கப் தேங்காப்பூவை முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப்பொடியோட சேர்த்து, பட்டுப்போல அரைச்சு வைக்கணும். மிச்சமிருப்பதை, மிக்ஸியில லேசா, சதைச்சாப்ல சுத்தி எடுக்கணும். இது எதுக்குண்ணாக்க ,.. தேங்காப்பூ, எரிசேரியில கொத்துக்கொத்தா இருந்தா, பல்லுல மாட்டும் மக்ளே :-))).

இப்பம், சேனையை அடுப்புல வெச்சு, தண்ணி ரெண்டு கொதி வரும்வரை சூடாக்கணும். பின்னே, அந்த தண்ணிய இறுத்து எடுத்துட்டு, சேனையை பின்னேயும் ரெண்டு கப் நல்ல தண்ணியில வேகவிடணும். (இது எதுக்குண்ணாக்க,.. சேனையை அப்படியே சமைச்சா, சாப்பிடும்போது, தொண்டையில் கிச் கிச் வரும்).இப்போ இதுகூட, வாழைக்காயை கழுவிப்போடணும்.

இப்பம், மஞ்சப்பொடி, உடைச்ச முளகுப்பொடி.. இது ரெண்டையும் காய்க்கலவையில போட்டு கொதிக்கவிடணும். மறக்காம காய்க்குண்டான உப்பையும் போடணும். அரை வேக்காடு ஆனபின்னே, அரைச்ச தேங்காய்க்கலவையை போடணும். தானமா, தண்ணியையும் சேர்த்துக்கணும். ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை அதுல விட்டு நல்லா வேகவிடணும்.

இப்பம், ஒரு சின்ன சீனிச்சட்டியில(வாணலி)ரெண்டு ஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பின்னே, சதைச்சு எடுத்துவெச்ச தேங்காய் எல்லாத்தையும் போட்டு, தேங்காய் நல்லா சிவந்து வர்றவரை கிண்டணும். கருகிறக்கூடாது. இதை கொதிச்சுக்கிட்டு இருக்கிற எரிசேரிக்கலவையில ஊத்தி, கிளறிவிடணும். பின்னேயும் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். எரிசேரி லேசா குழைஞ்சாப்ல இருக்கணும். உப்பு உறைப்பு சரியா இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க. இப்பம் கடைசியா அரைடீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு , ஒரு இணுக்கு கறியப்பிலையையும் உருவிப்போட்டு மூடிவிடணும். அவ்வளவுதான்.. எரிசேரியை இறக்கிடலாம்.

எரிசேரி ரெடி..

***************

இப்பம்.. அவியல் செய்யலாம்:

தேவையானவை:

சீனியவரைக்காய் - 100 கிராம்.
சேனை - கால்கிலோ.
முருங்கைக்காய் - 1
பேயன் அல்லது சிங்கன் வாழைக்காய் - 1 ( நாட்டு வாழைக்காய்ன்னும் சொல்லுவாங்க )
கத்தரிக்காய் - 2.
புடலங்காய் - சுமார் நாலு இஞ்சு நீளத்துக்கு.
வழுதலங்காய் ( நீளமாக இருக்கும் பச்சைக்கத்தரிக்காய் - 1
வெள்ளரிக்காய் - சின்னத்துண்டு.
தடியங்காய் - சின்னத்துண்டு ( வெள்ளைப்பூசணியைத்தான் சொன்னேன் :-))))
கோவைக்காய் - 5 எண்ணம்.
மாங்காய் - பாதி.

மசாலாவுக்கு:
தேங்காய் - 1 மூடி.
பச்சைமிளகாய் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை.

எப்படி செய்யணும்????

சீனியவரைக்காய், சேனை ரெண்டையும் ஒண்ணரை அங்குல நீளத்துண்டுகளா அரிஞ்சு, தனித்தனி கிண்ணங்கள்ல போட்டு வைக்கணும்.

முருங்கைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், வழுதலங்காய், சிங்கங்காய், (நெல்லை மண்ணில் இதை படத்திக்காய்ன்னு சொல்லுவாங்க) முதலான எல்லாக்காய்களையும் ஒன்னரை இஞ்சு நீளத்துக்கு மெல்லிசா நறுக்கிவைக்கணும்.

மசாலாவை, ஒன்னுரெண்டா சதைச்சு வைக்கணும்.

மொதல்ல, ஒரு வாணலியில ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு அதுல, சீனியவரைக்காயைப்போட்டு லேசா நிறம் மாறும்வரை வதக்கணும். அப்புறம் ஒரு கப் தண்ணீர் விட்டு, அதனுடன் சுத்தம் செஞ்ச சேனையை போடவும். லேசா கொதிவந்ததும் இறக்கி, தண்ணீரை வடிச்சுட்டு, நல்ல தண்ணியில ரெண்டு தடவை அலசி, தண்ணீரை இறுத்துக்கணும்.

இன்னொரு பாத்திரத்தில் எல்லாக்காய்களையும், சுத்தம் செஞ்சு போட்டு, அரை டீஸ்பூன் உப்பிட்டு வேகவைக்கணும்.இதோட சேனை, சீனியவரையையும் சேருங்க. காய்களிலிருக்கும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டா ரெண்டு ஸ்பூன் தண்ணீரை மருந்து மாதிரி விடணும். அதுக்கு மேல விட்டா குழம்பாயிடும். அவியல் செஞ்சு முடிக்கிறவரை, அடுப்பு மிதமாவே எரியட்டும்.

மாங்காய் கல்லுப்போல இருந்தா, எல்லாக்காய்கறிகளோடவே போட்டுடலாம். கொஞ்சம் பிஞ்சா இருந்தா, மசாலா போடும்போது சேர்க்கலாம். மாங்காய் போடுறதா இல்லைன்னா, ரெண்டு ஸ்பூன் தயிரைச்சேருங்க. ஏன்னா காயில் லேசா புளிப்பு வரணும்.

முக்கால் வேக்காடு வந்ததும், அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவை காய்களோட சேர்த்து, இன்னொரு அரைஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெய், உருவிய கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து லேசா கிளறி, மூடி போட்டு வைச்சிடுங்க. அவியல்ல இருக்கிற காய் நல்லா வெந்தப்புறம், இறக்கி ஆறினபிற்பாடு ரெண்டு ஸ்பூன் தயிரைவிட்டு லேசா கலந்துடுங்க. சூடா இருக்கும்போது தயிரை சேர்த்தா, நீர்த்துப்போயிடும்.. அவியல் நல்லாருக்காது . கவனமா இருங்க.அவ்வளவுதான்... அவியல் மணம், சாப்பிடணும்ன்னு கொதியை உண்டாக்கும் :-))))))

தமிழ் நாட்டின் மத்த பகுதிகள்லயும், கேரளாவுலயும் எப்படியோ??.... நாஞ்சில் நாட்ல இப்படித்தான் செய்வாங்க.
அவியல் ரெடி...
படம் நாளக்கழிச்சு, ஓணத்துக்கு அவியல், எரிசேரி செய்யும்போ... எடுத்துப்போடுகேன் :-)))))).

படம் போட்டாச்சு..

Friday, 20 August 2010

ஆத்தா... நான் கவிதை எழுதிட்டேன்!!!..............

அது ஒரு அழகிய இளவேனில் காலம். அதாவது சூரியன் சுட ஆரம்பிக்காத காலைப்பொழுது. வழக்கம்போல கல்லூரிக்கு வந்தப்புறம்தான், வழக்கம்போல ஸ்ட்ரைக் நடக்குதுன்னு தெரிஞ்சது. இன்னிக்கி என்ன காரணம்ன்னு தெரியலை. காண்டீன் டீயில, உப்பு குறைச்சலா இருக்குதுன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஒரு வேளை அதுக்காக இருக்கலாமோ.. சீச்சி, அது போனவாரம்... இது இந்தவாரம். என்னத்துக்குன்னு தெரியலை, ஆனா நாலு நாளா நடக்குது.

வழக்கம்போல வகுப்புகள் நடக்காத அறையில் வந்து உக்கார்ந்தோம். ஒவ்வொரு வகுப்பிலும் பேருக்கு ஒரு ஆறேழு மாணவிகள்தான் உண்டு. பசங்கதான் மெஜாரிட்டி. எல்லாரும் ஸ்ட்ரைக்குக்காக வெளியே போயிட்டதால, நாலஞ்சு பேருக்கு.. என்னத்தை வகுப்பு எடுக்கிறதுன்னு, விரிவுரையாளர்களும் சும்மா வகுப்புக்கு வந்துட்டு போயிட்டு இருந்தாங்க.

காரிடாரில், 'லெஃப்ட்.. ரைட், லெஃப்ட்.. ரைட்'ன்னு சத்தம். உண்மையில் அது கல்லூரிக்கு முன்னால இருந்த மைதானத்துல இருந்து வந்துட்டு இருந்தது. கூடியிருந்த மாணவர் கூட்டத்தை 'பெருமையோட' பாத்துட்டு தன்னோட அறைக்கு, நடந்து போயிட்டிருந்த ப்ரின்சிபாலைப்பாத்துதான் பசங்க அப்படி சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க. அவரோ எதையும் சட்டை செய்யாம தன்னோட ரூமுக்கு போயிட்டு இருந்தாரு.

அப்ப, எங்க வகுப்பறைக்குள்ளாற எங்க இங்கிலீஷ் விரிவுரையாளர் வந்தார். 'பாடம் நடத்தமாட்டேன்.. அதுக்கு வேற எதையாவது உருப்படியா பண்ணலாம். இப்ப, உங்களுக்கே தெரியாம நிறைய திறமைகள் உங்களுக்குள்ள பெட்ஷீட்டை போத்திக்கிட்டு ஒளிஞ்சிருக்கும். அதையெல்லாம் கண்டுபிடிச்சி, வெளிய கொண்டுவரணும். அதனால, அவரவருக்கு என்னென்ன எழுதணும்ன்னு தோணுதோ.. கதை, கவிதை, கட்டுரை.. இப்படி ஏதாவது எழுதுங்க'ன்னு சொல்லிட்டு அவர் கொண்டுவந்திருந்த நாவலை படிக்க ஆரம்பிச்சிட்டார்.

என்னடாயிது,..இந்த தமிழ்நாட்டுக்கு வந்த சோதனைன்னு நினைச்சிக்கிட்டு, 'என்ன எழுதலாம்'ன்னு கன்னத்துல கைவெச்சிக்கிட்டு உக்காந்தோம். அப்படி உக்காந்தாத்தான் கற்பனை ஓடுமாம். எங்கேன்னு தெரியலை :-)) அப்பத்தான் வராந்தாவுல நாற்காலி போட்டு உக்காந்திருந்த ஏழரைச்சனி என்னைப்பாத்து சிரிச்சான். நானும் பதிலுக்கு ஒண்ணரைப்பல்லை காமிச்சு வெச்சேன்... ஐடியா வந்துட்டது. கவிதையே எழுதலாம். கதைன்னா ரொம்ப கற்பனை வளம் வேணும். கட்டுரைன்னா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுருக்கணும். கவிதை எழுதறதுதான் ஈஸி. உடைச்சுப்போட்டா,..

க..
வி..
தை..
ஆகிடாதா என்ன??

என்ன விஷயத்தைப்பத்தி எழுதலாம். நாம எழுதறதையும் கவிதைன்னு நினைச்சு படிக்கிறவங்களுக்கு ஏமாத்தம் வரலாமோ!!!!. எவர்க்ரீன் டாப்பிக் " வரதட்சணை"
ரொம்ப செண்டியான விஷயம் இது. எப்படி எழுதினாலும் நிச்சயம் பாராட்டு வாங்கும். எழுத ஆரம்பிச்சேன்.

விளக்கேற்ற வரும் பெண்ணிடம்
வரதட்சணை வாங்கும்
மாமியார்களே..
கேட்ட தட்சணை
கிடைக்காததால்தான்
மருமகளையே
விளக்காக
எரிக்கின்றீர்களோ!!!!

எழுதிமுடிச்சிட்டு வெற்றியோட நிமிர்ந்து பார்த்தா, ஒவ்வொருத்தியும் செமஸ்பீடா எழுதிக்கிட்டு இருந்தாங்க. விட்டா.. அடிஷனல் ஷீட் கேப்பாங்க போலிருக்கு. நான் பேப்பரை கொண்டுபோய் சார்கிட்ட கொடுத்தேன். வாங்கி படிச்சுப்பார்த்தார்.. வேர்த்து விறுவிறுத்து முகத்தை துடைச்சிக்கிட்டு அப்படியே உக்காந்துட்டார். அப்றம் மெதுவா சமாளிச்சிக்கிட்டு, வகுப்புக்கு வெளியே போயிட்டார். அந்தக்கவிதை எழுதினதன் பலன் மறுநாள் கல்லூரிக்கு வந்தப்போதான் தெரிஞ்சது.

"ஸட்ரைக் முடிஞ்சு போச்சாம்"


டிஸ்கி: மொதமொத கவிதைன்னு எழுதினது அது. குத்தங்குறை இருந்தா பொறுத்தருளவும்.. ஒரு கவுஜையாளரை உருவாக வழிகாமிச்ச அந்த லெக்சரர், இப்போ இருக்காரான்னு தெரியலை. எனவே ஆட்டோ அனுப்ப வேண்டாம் :-)). இது சும்மா சுத்தின கொசுவத்தி.



LinkWithin

Related Posts with Thumbnails