Friday, 7 April 2017

சாபுதானா கிச்சடி.

மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியை உபயோகப்படுத்திச் செய்யப்படும் உப்புமா மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் காலை அல்லது மாலை டிபனாகவும் விரத நாட்களுக்கான உணவாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வடக்கர்களால் "சாபுதானா கிச்சடி" என்றழைக்கப்படும் இப்பண்டம் செய்வதற்கு மிகவும் எளிதானது. மேலும், மாவு மற்றும் ப்ரோட்டின் சத்து நிரம்பியது.

மளிகைக்கடைகளில் வற்றல் போட உபயோகப்படும் ஜவ்வரிசி எனக் கேட்டு வாங்கவும். நைலான் ஜவ்வரிசி கிச்சடி செய்ய உதவாது. ஒரு கப் ஜவ்வரிசியை இரண்டு முறை நன்கு தண்ணீரில் அலம்பி வடித்து விடவும். பின் ஜவ்வரிசியின் மேற்பரப்பில் ஒரு செ.மீ அளவே தண்ணீர் நிற்குமளவிற்கு நீரூற்றி ஊற விடவும். வாகைப்பொறுத்து ஜவ்வரிசி ஊற அரைமணி நேரத்திலிருந்து ஐந்து மணி நேரம் வரைக்கும் ஆகலாம். காலையில் கிச்சடி செய்ய வேண்டுமானால் இரவே ஊற வைத்து விடலாம். மாலையில் வேண்டுமெனில் முற்பகலில் ஊற வைக்கவும். அத்தனை நீரையும் உறிஞ்சிக்கொண்டு நன்கு ஊறி உதிர்உதிராக வந்துவிடும். ஊறிய ஜவ்வரிசியில் ஒன்றை எடுத்து நசுக்கினால் மசிய வேண்டும். மசியவில்லையெனில் மேலும் சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும். மேற்கொண்டு தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
அரை கப் வேர்க்கடலையை கருகாமல் வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக்கொள்ளவும். காரத்திற்கேற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைப் பொடியாக ஒரு தேக்கரண்டியளவு நறுக்கிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவராத்திரி, ஏகாதசி போன்ற விரத நாட்களில் செய்வதானால் வெங்காயம் சேர்க்க வேண்டாம்.

ஒரு அகன்ற வாணலியில் இரண்டு டேபி்ஸ்பூன் நெய்யைச்சூடாக்கி அதில் கால் தேக்கரண்டி சீரகத்தைப்போட்டு பொரிய விடவும். பின் நறுக்கி வைத்த மிளகாய், இஞ்சி, வெங்காயம் போன்றவற்றைப்போட்டு வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கியபின், அத்துடன் ஜவ்வரிசியையும் ருசிக்கேற்ப காலாநமக் அல்லது சாதாரண உப்பைச் சேர்த்துக்கிளறியபின் மூடி ஒரு நிமிடம் வேகவிட்டு, பொடித்த வேர்க்கடலை மற்றும் உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆகும்வரை மறுபடியும் மூடியி்ட்டு குறைந்த தீயில் வேக விடவும். அவ்வப்போது மூடியைத்திறந்து கிச்சடியைக் கிளறிக்கொடுக்கவும். உதிர்உதிராக நன்கு வெந்தபின் இறக்கி கொத்துமல்லித்தழையைத்தூவி சிறு எலுமிச்சைத்துண்டுடன் பரிமாறவும். சாப்பிடும்போது சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைப்பிழிந்து கிச்சடியுடன் கலந்து பின் சாப்பிடுதல் மரபு.

Friday, 31 March 2017

சாரல் துளிகள்

அந்திச்சூரியனுடன் அளவளாவி வழியனுப்பியபின் தேநீரருந்த யத்தனிக்கும்போது, இளம் பொன்னிறத்தில் கோப்பைக்குள் தளும்புகிறது கடல்.

நரியின் நயவஞ்சகம் 
ஔிரும் கண்களையுடையவன், 
தவளைகளுக்கு 
அகிம்சையைப் போதித்துக்கொண்டிருக்கிறான். 
பாம்பின் விஷமெனப் பரவும் 
அதன் வீரியத்தில் மயங்கி 
புற்கடிப்பதை விடுத்து நிற்கின்றன முயல்கள்.

அற்றைக்கும் இற்றைக்கும் ஒரு மௌனசாட்சியாய் நின்ற அக்கட்டடத்தின் விரிசல்களில் ஊன்றியிருந்த வேர்கள் வழி கசிந்த முணுமுணுப்புகள் வருங்காலத்தின் செவிகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தன.

ஒரு நத்தையைப்போல் ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த வெயிலின் முதுகில் ஒட்டியிருக்கும் மகரந்தத்துகள்களினுள் ஔிந்திருந்து கூவுவது அக்காக்குருவியாகவும் இருக்கலாம்.

ஒரு பூனையைப்போல் மென்பாதம் வைத்துப் போய்க்கொண்டிருக்கும் இப்பனிக்காலத்தின் மேல் மெல்லக்கவியும் வேனிற்காலத்தின் முதல் குல்மொஹர் பூ ஒரு சூரியனாய் மலர்ந்திருக்கிறது.

ஒரு மெல்லிறகைப்போல் மிதந்து தரையிறங்கும் அவ்விமானத்தை ஆதுரத்துடன் தழுவும் மஞ்சுப்பொதியில் பன்னீர்ப்பூக்களின் வாசம் இருந்தது தற்செயலானதேயன்றி வேறென்ன?

அதி உக்கிரமாய்ப்பொழியும் வெயிலின் அன்பை, அதில் நனைவதை விட வேறெப்படி அங்கீகரித்து விட முடியும்!?

கடந்தகால இருளின் நிழல்கள் தற்காலத்தில் பேயுருக்கொள்ளும்போது, கூந்தல் பற்றியிழுத்து ஆணியுடனறைந்து முடக்கிப்போடுகிறான் சமயோசிதச்சித்தன்.

கொன்றையும் குல்மொஹரும் பூவிதழ்கள் உதிர்த்திருந்த அச்சாலையில் நடந்து செல்கின்றன சீருடையணிந்த லேவண்டர்ப்பூக்கள்.

ஆசிரியரின் குரலைச் செவி மடுக்கா கடைசி வரிசைப் பையனின் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது நேற்று பார்த்த சர்க்கஸ் புலி.

Monday, 6 March 2017

சாரல் துளிகள்


பெருமழையொன்றின் நீட்சியாய் அத்தனைத்துளிகளிலும் உருகி வழிகிறது விசும்பு.

தூக்கமற்றுப்புரளும் நோயாளியின் கனத்த இரவைப்போல் நீள்கிறது மழை கனத்துத்ததும்பும் இந்தப் பகலும்.

சற்றுமுன் வரை தன்னுள் கொண்டிருந்த அத்தனைக்கனவுகளையும் கரைத்துக்கொண்டு காலகாலமாய் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது ரத்தம். இன்னுமா தீரவில்லை ஆயுதத்தின் பசி?

ஒரு சாம்பற்புழுதிப் படலத்தைப்போல் நகரைக் கவிந்திருக்கும் மெல்லிய பதற்றத்தைச் சட்டை செய்யாது கூண்டுக்குள் தானியமணிகள் கொறிக்கும் தவிட்டுக்குருவிகளின் மேல், மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது காரிரவு.

அடுக்ககத்தின் ஒரு பக்கத்திலமர்ந்து விருந்தறிவிக்கிறது காகம். யார் வீட்டுக்கென்று அனைவரையும் குழம்ப வைத்து விட்டு.

தன்னம்பிக்கை என்பது..
மலை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் மரத்தின் நுனிக்கிளையில் கூடு கட்டும் பறவையிடம் இருப்பது.

சிறு பொறி பெருந்தீபமாய் ஔி பரப்பிக்கொண்டிருக்கிறது. இனி இருண்மைக்கிடமில்லை.

மீளாத்தூக்கமும் ஒரு விடுதலையே..

ஏதோவொரு கான்க்ரீட் வனாந்திரத்திலிருந்து கீச்சிடும் குஞ்சுப்பறவைக்கு, உச்சிவெயிலில் நகரத்தின் ஒரு தெருவில் ஒலிக்கும் குல்ஃபி வண்டி குளுமையைப் போர்த்தி விடுகிறது.

ஒரு கொக்கைப்போல் விண்ணேகும் இறகுப்பந்தின் முன் விரிந்திருக்கிறது முன்னெப்போதோ கோலோச்சிய சுதந்திர வானம். எனினும், வாய்த்ததென்னவோ மட்டையிலடிபடும் ரணகள வாழ்வுதான்.

Monday, 30 January 2017

குள்ராட்டி - புத்தக விமர்சனம்

இணையத்தின் படக்கொடைக்கு நன்றி
தான் வாழும் காலகட்டத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் படைப்பாளி, தன்னைச்சுற்றியிருக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை, தன் மண்ணின் பெருமையையும் சேர்த்தேதான் பதிவு செய்கிறார். அந்த வகையில்  தான் பிறந்த நெல்லைச்சீமையின் கீழாம்பூரையும் அதன் சுற்று வட்டாரக் கிராமப்பகுதிகளையும் அங்கே நடமாடும் மனிதர்களையும் மண்ணின் மணத்தோடு ஏக்நாத் தன் சிறுகதைகளில் நம் கண் முன்னே கொண்டு வந்து "குள்ராட்டி" என்ற தொகுப்பாய் நிறுத்தியிருக்கிறார். இவர் "ஆடுமாடு" என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். கிராம வாழ்க்கையின் யதார்த்தம் தொட்டு எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் வாழ்வியலில் ஒரு புதிய தரிசனத்தை நமக்குக் கிடைக்கச்செய்கிறது. 

தெற்கத்திக் கிராம வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட இச்சிறுகதைகளில், அதற்கேயுரிய, பரம்சம், பத்தாடி மவன், ஆறுமாச்சி, நைன்த் பி முப்புடாதி பிள்ள, போன்ற பெயர்களோடு அவர்களுக்கேயுரிய மொழிவழக்குமாக கிராமிய மணம் வீசுகிறது. பொசுக்கென்று பொங்குவதும் அதே வேகத்தில் சட்டெனத் தணிவதுமான இந்த மனிதர்களின் ஈரமனசின் ஒரு துளிதான் “மூணு பொட்டுச் செவளை”. ஊர் வம்பெல்லாம் விலைக்கு வாங்கி வந்து தன்னைப் பாடாய்ப்படுத்தும் அந்த நாலு கால் ஜீவனை வாய்க்கு வாய் “அர்தலி” என்று திட்டித்தீர்த்தாலும், “விக்கதுக்காய்யா நான் மாடு வளக்கேன்?” என்று ஊர் மக்களிடம் சுள்ளென்று கோபப்படும் அதே கதை நாயகன்தான், இரவோடிரவாக கயிற்றை அறுத்துக்கொண்டு போகும் அந்த மாட்டை, “வந்தம்ன்னா முதுகு தொழிய பிச்சுருவேன்” என்று திட்டியபடி துரத்தியோடுகிறான். செய்வதையெல்லாம் செய்து விட்டு அப்பாவி போல் நிற்கும் அந்த வாயில்லா ஜீவனோடு அவன் படும் பாடு இருக்கிறதே.. கதை முழுக்க அங்கதச்சுவை தாண்டவமாடுகிறது.  ஒரு கட்டத்தில், அந்த செவளையைப் பார்த்து "க்க்கியே.. சொன்னவ்டி கேக்க மாட்டியா? என்னா செர படுத்துத" என நாமே அலுத்துக்கொள்வோம் போல் ஓர் உணர்வு :-)

கிராம மக்களைப்பொறுத்தவரை கால்நடைகளும் குடும்பத்தில் ஓர் அங்கம்தான். பாபநாசம் மலைக்கு மேலிருக்கும் “குள்ராட்டி” எனப் பெயர் மருவிய குளிர்ஆட்டிக்கு மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்ட இடத்தில் சொந்தக்காரருக்குத் தெரியாமல் விற்கப்பட்ட பசுமாடு, எதிர்பாராமல் நடுச்சாலையில் தனது முன்னாள் சொந்தக்காரனை கண்டு கொண்டு தன் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் வாசிப்பவர் கண்களில் நிச்சயமாக ஈரம் படரச்செய்யும்.

உணர்வுகளால் பந்தாடப்படும் இந்த எளிய மனிதர்களின் அலைக்கழிப்பை இதை விட அற்புதமாகச் சொல்லி விட முடியாது. மந்திரமூர்த்தி கோயில் கொடையில் வேட்டி கட்டு முறையைத் திருப்பிச் செய்ய முடியாமல் கருக்கலில் மனைவியுடன் ஊரை விட்டுச் செல்லும் பூச்சிக்கண்ணனாகட்டும், பார்வதி தன்னைக்காதலிப்பதாகக் கனவில் திளைத்து நித்தம் அலையும் முனியசாமியாகட்டும், தன் குடும்பத்தில் செத்தும் கெடுக்கும் அந்தக் கன்னி யார்? என்ற கேள்விக்கு விடை தேடிக்குமையும் லட்சுமியாகட்டும், டிம்சனக்கா என்று அழைக்கப்படும் அம்பிகாபதியாகட்டும்,, ஒரு கணம் நம் முன் வந்து, “என்னா? கெதியாயிருக்கியளா?” என்று கேட்டு விட்டுப் போகிறார்கள். 

“தெரியாமச் சொல்லிட்டேன் விடுங்க” என்றால் கூட, ஏழு தெருவுக்குக் கேட்கிறமாதிரி, “அதெப்படி நீ தெரியாமச் சொல்லலாம்’ என்று அழிச்சாட்டியம் செய்கிற மக்களுக்கு, மச்சான் கொழுந்தியா என்ற உறவு முறையில் காதலித்துக்கொண்டிருக்கும் இளஞ்ஜோடிகளை, வேறொரு உறவு முறையில் அவர்கள் அண்ணன் தங்கை எனச்சொல்லி பட்டுக்கத்தரித்தாற்போல் பிரிக்கவும் தெரியும். ‘தாய் முறையோ.. நாய் முறையோ’ என நெல்லைச்சீமையில் சொல்வார்கள். அதாவது தாய் தந்தை என இருவரின் வழியிலும் ஒருவர் உறவினராக இருந்தால், தாய் வழியில் வரும் உறவு முறையைக் கணக்கில் கொள்ளாமல் தந்தை வழி உறவு முறைப்படிதான் அவரை அழைக்க வேண்டுமென்பார்கள். வீட்டினர் விரும்பாத காதலென்றால் அவர்களைப்பிரிக்க பிரிக்க தாய் வழி உறவு முறையையும் கொள்ளலாமென்பது “முறைகள்” மக்களின் கணக்கு. ஆனால், கும்பிடும் கடவுளான பூதத்தாராகவே இருந்தாலும், தன் தாத்தாவின் முகத்தை அணிந்து விட்டதால் இனிமேல் அவரும் சேக்காளிதான் என்பது ஒரு பேரனின் கணக்கு.

வாசிக்குந்தோறும் நம்முன் விரிந்து செல்லும் ஏக்நாத்தின் மண்ணிலிருந்து ஒவ்வொரு கதையாக முளைத்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வில் நிகழும் மிகச்சாதாரண சம்பவங்கள் அசாதாரணமாகவும் அமைந்து விடுகின்றன. எவ்விதமாகவும் அணி செய்து கொள்ளாமல் அவற்றை உள்ளது உள்ளபடி உரைத்துச்செல்லும் அவரது மொழியில், புதிய எளிய அழகில் சொல்லப்பட்டிருக்கிறது அவ்வுலக மாந்தர்களின் காதல், சூழ்ச்சி, அறியாமை, பாசம், கண்ணீர் நிரம்பிய வாழ்வியல். அவற்றின் தொகுப்பே “குள்ராட்டி”. 

ஆசிரியர் : ஏக்நாத்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை :50
ஆன்லைனில் வாங்க: உடுமலை.காம்,  New Horizon Media

Sunday, 29 January 2017

வரத விநாயகர் (அஷ்ட விநாயகர்-மஹட்)

பிள்ளையாரை இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ள மராட்டிய மக்கள், பூனாவின் சுற்றுப்புறப்பகுதிகளில் அமைந்திருக்கும் எட்டுப் பிள்ளையார்களை மிகவும் முக்கியமானவர்களாகக் கருதி விரும்பி வணங்குகின்றனர். அக்கோயில்கள் மஹாராஷ்ட்ர மண்ணில் “அஷ்டவினாயக்” எனக் குறிப்பிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் தம்பிக்கு அறுபடை வீடு எனில் அண்ணனுக்கோ மராட்டிய மண்ணில் எட்டு வீடுகள். இவற்றைத் தரிசனம் செய்ய இங்குள்ள மக்கள் குழுவாகவோ குடும்பத்தினருடனோ “அஷ்டவினாயக் யாத்ரா” செல்வது வழக்கம். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தாலும் கிளம்பி விடுவார்கள். இங்குள்ள ட்ராவல் ஏஜென்சிகளின் சுற்றுலா நிரல்களில் இந்த யாத்ராவிற்கு முக்கிய இடமுண்டு.
வரவேற்பு வளைவு
இளம் தொழிலதிபர்கள்
“மஹட்” என்னுமிடத்திலிருக்கும் வரத வினாயகர் அஷ்ட வினாயகர்களில் நான்காமவர் ஆவார். மஹட் பூனாவிலிருந்து 85 கி.மீ தொலைவிலும் மும்பையிலிருந்து 63 கி.மீ தொலைவிலுமிருக்கிறது. புதிய மும்பை-பூனா ஹைவேயில் பன்வெல்லைக் கடந்ததும் சற்றுத்தொலைவில் மஹடுக்கான பாதை பிரிகிறது. இச்சாலை மும்பை-பன்வெல்-கோப்போலி ரோடு எனவும் அறியப்படுகிறது. இரண்டு டோல் சந்திப்புகளைக் கடந்து பளிங்கு போன்ற வழவழப்பான சாலையில் பயணித்தால் சிறிது நேரத்தில் வலது புறம் அலங்கார வளைவு நம்மை மஹடுக்கு வரவேற்கிறது. கோவிலுக்கு முன்புறம் வாகனங்களை நிறுத்த மைதானம் இருக்கிறது. சிறு கட்டணம் செலுத்தி, வாகனத்தை நிறுத்தி விட்டு இருபுறமும் இருக்கும் கடைகளை வேடிக்கை பார்த்தபடியே இரண்டு நிமிடம் நடந்தோமானால் கோவிலின் முன்புறத்துக்கு வந்து சேர்ந்து விடலாம். காலணிகளைப் பாதுகாக்கவென்று லாக்கர் வசதி எதுவும் இங்கே காணப்படவில்லை. சிறு ஷெல்புகளில் வைத்து விட்டு கோவிலுக்குள் போக வேண்டியதுதான். 
கோவிலின் முன்வாயில்
கருவறையிலிருக்கும் பிள்ளையார், அருகில் தனிச்சன்னிதியில் இருக்கும் சிவன், அம்பாள் இவர்களைத்தவிர வேறு சன்னிதிகள் எதுவும் இங்கே கிடையாது. நவக்கிரகங்களையும் அன்னதானக்கூடத்தின் அருகேயிருக்கும் தத்தரையும் போனால் போகிறதென்று ஒத்துக்கொள்ளலாம். மூர்த்தி சிறிதானாலும் இக்கோயிலின் கீர்த்தி பெரிது. காலை ஆறுமணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு மக்கள் சாரிசாரியாக வந்து தரிசித்துச்செல்கிறார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் நெருக்கியடிக்கும் கூட்டத்தில் கம்பித்தடுப்பு வழியே ஊர்ந்து சென்று முதலில் அப்பனையும் அம்மையையும் வணங்கினோம். அம்மையப்பன் சன்னிதி வாசலின் வலது புறம் பிள்ளையாரும் இடது புறம் விஷ்ணுவும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு சிந்தூரத்தால் மெழுகி மூடப்பட்டிருந்தார்கள். சிற்பக்கலையின் நுட்பங்கள் எதுவும் இல்லாத,.. இருந்தாலும் நம் கண்ணுக்குப் புலப்படாத மொழுமொழு மூர்த்தங்கள் மராட்டியக்கோவில்களின் சிறப்பு.

அம்மையப்பனை வணங்கி இடது புறம் திரும்பினால் வரத வினாயகரின் தனிச்சன்னிதி. இதன் நான்கு புறமும் ஒவ்வொரு ஜோடி யானைகளின் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. இவை காவல் புரிவதாக ஐதீகம். வெள்ளித்திருப்பணி செய்யப்பட்டிருக்கும் குறுகிய வாயிலைக் கடந்து உள்ளே போகிறோம். நம் வரதுக்குட்டி சித்தி புத்திகளுடன் கிழக்கு நோக்கி, இடஞ்சுழி தும்பிக்கையுடன் ஜம்மென்று வீற்றிருக்கிறார். அவர் முன் 1892-லிருந்து தொடர்ந்து ஒளிரும் அணையாவிளக்கொன்று இருக்கிறது. பக்தர்கள் தாம் கொண்டு வந்த மலர்மாலைகளை தம் கையாலேயே அவருக்குச் சூட்டலாம். மற்ற காணிக்கைகளான பேடாக்கள் மற்றும் தேங்காய்களை பண்டிட்டுகள் வாங்கிப் படைத்து விட்டு, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர். நாங்களும் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டு, “எல்லோரையும் காப்பாத்து” என்ற வழக்கமான பிரார்த்தனையைச் சொல்லிக்கொண்டு கண்ணும் மனமும் நிறைய அவரைத் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தோம். பிரசாதம் விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. முன்னெல்லாம் இங்குள்ள கோவில்களில் பேடா எனப்படும் பால் இனிப்புதான் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. தென்னாட்டுக்கோவில்களின் தாக்கமோ என்னவோ!!.. இப்பொழுது ஆறு லட்டுகள் கொண்ட பாக்கெட் பிரசாதமாக விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஷிர்டியிலும் இதே கதைதான். வெளிப்படி இறங்கியதும் இடது பக்கம் யாத்ரீகர் நிவாஸும் அன்னதானக்கூடமும் வலப்புறம் குடிநீர்க்குழாய்களும் திருக்குளமும் அமைந்துள்ளன. வெளியே வந்தபின்னும் சி.சி.டி.வி மூலமாக வரதுக்குட்டியின் தரிசனம் நமக்குக் கிடைப்பது விஞ்ஞான வளர்ச்சியின் பலனே.
கோவிலின் பின்புற வாயில்


திருக்குளம்
வரதவினாயகர் என்ற பெயருக்கேற்ப கேட்கும் வரங்களையெல்லாம் அள்ளியள்ளித் தரும் வரப்பிரசாதியான இந்தப்பிள்ளையார் சுயம்புமூர்த்தி. கோவிலையடுத்துள்ள குளத்தில் கி.பி.1690ல் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கி.பி. 1725ல் மராட்டிய பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் சுபேதார் ராம்ஜி மஹாதேவ் பிவள்கர் என்பவரால் கட்டப்பட்ட இக்கோவில் அக்குளத்தின் கரையிலேயே அமைந்திருக்கிறது.

கோவிலுக்குக் கதை இல்லாமல் இருக்குமா? இருக்கிறதே.. முன்னொரு காலத்தில் கௌடின்யபூரின் இளவரசரான ருக்மாங்கதர், வேட்டைக்குச் சென்றபோது வழியில் வசக்நவி முனிவரின் ஆசிரமத்தில் சிறிது சிரமபரிகாரம் செய்து கொண்டார். முனிவரின் மனைவியான முகுந்தா, இளவரசரின் அழகில் மயங்கி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். இளவரசர் மறுத்துவிட, இதற்கென்றே காத்திருந்தாற்போல்.. யார் எவ்வளவு அடித்தாலும், அவமானப்படுத்தினாலும் தாங்கும் இந்திரன் ருக்மாங்கதரின் உருவெடுத்து வந்து முகுந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினான். பலனாக கர்ப்பமடைந்த அவள், க்ருத்ஸமத் என்றொரு மகனைப்பெற்றெடுத்தாள். அறிவிற்சிறந்த அவன், அறிஞர்கள் கூடியிருந்த சபையில் ஒரு சமயம் அவமானப்பட்டு, தன் தந்தை யார்? என அன்னையிடம் வினவியபோதுதான் தான் ருக்மாங்கதரின் மகன், வசக்நவி முனிவரின் மகனல்ல என்றறிந்தான். 
விதவிதமாய் வினாயகர்
தனது பிறப்பின் ரகசியமறிந்தவன் கோபமுற்று தன் அன்னையை, “நீ முட்கள் நிரம்பிய இலந்தை மரமாக மாறுவாயாக” எனச்சபித்தான். காட்டில் தானாக வளர்ந்து நிற்கும் இந்த இலந்தை மரத்தை மராட்டியர்கள் bhor என அழைப்பார்கள். “பெற்ற அன்னையை சபித்த உனக்கு ஒரு ராட்சசன் மகனாகப் பிறப்பானாக” என அவளும் சபித்தாள். அச்சமயம், ‘க்ருத்ஸமத் இந்திரனின் மகன்” என அசரீரி கூறியது கேட்டு இருவருமே தலையில் இடி விழுந்தாற்போல் அதிர்ந்து போனார்கள். அடக்கடவுளே!!.. இந்திரன் இப்படி மோசம் செய்வானென்று முகுந்தா அறிந்திருந்தாளா என்ன?. மகனின் சாபம் பலித்து அவள் இலந்தை மரமானாள். மகனோ பெற்றவளைச் சபித்த பாவம் நீங்க, இன்றைய மஹடான அன்றைய மணிபத்ர காட்டில், “ஓம் கண்கணபதயே நமஹ” எனும் மந்திரத்தை உச்சரித்தபடி பிள்ளையாரை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தார். தவத்திற்கு மெச்சிய பிள்ளையார், “வேண்டிய வரங்களை எந்த உச்சவரம்புமின்றிப் பெற்றுக்கொள்” என தாராள மனத்தோடு செப்ப, க்ருத்ஸமத்தும், தன் மேல் விழுந்த பழிச்சொல்லும் தனது பாவமும் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டதோடு கொசுறாக, “எக்காலமும் இங்கேயே எழுந்தருளியிருந்து மக்களுக்கு வேண்டிய வரங்களை அருள வேண்டும்” எனக்கேட்டுக்கொண்டார். அந்தப்படியே அவர் இங்கே எழுந்தருளினார். தரிசிப்பவர் வேண்டும் வரங்களை அள்ளி வழங்குவதால் வரதவினாயகர் எனப் பெயரும் பெற்றார்.
குளத்தின்  அக்கரையிலிருந்து கோவிலின் தோற்றம்
மும்பை-பன்வெல்-கோப்போலி ரோட்டில் சற்று உள்வாங்கி அமைந்திருக்கும் இந்தக்கோயிலுக்கு ரயில் மார்க்கமாகச்செல்ல வேண்டுமென்றால் கர்ஜத் அல்லது கோப்போலி ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமோ அல்லது டாக்ஸி மூலமோ செல்லலாம். இந்த ஊரில் யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதியான ஹோட்டல்கள் கிடையாது. கோவிலின் பின்பக்கம் அன்னதானக்கூடம் அருகே இருக்கும் நிவாஸில் தங்கிக்கொள்ளலாம். கோவிலின் வலதுபக்கமும் தங்குமிடமொன்று ,,,,,ஹோட்டல் என்ற பெயர்ப்பலகையைச் சுமந்து கொண்டு இருக்கிறது. ஆனால், கோப்போலி ரோட்டிற்கு வந்து விட்டால் கோவிலிலிருந்து இரண்டு கி.மீ தொலைவுக்குள் நல்ல ரிசார்ட்டுகள் இருக்கின்றன. கோவிலின் சார்பாக தினமும் அன்னதானமும் நடைபெறுகிறது. தவிர, முன்பதிவு செய்துகொண்டால் ஊர்மக்களும் சாப்பாடு ஏற்பாடு செய்து தருகிறார்கள் என அறியப்படுகிறது. வழக்கமான உணவு போதுமென்றால் ரிசார்ட்டுகளையும் ஹோட்டல்களையும் நாடலாம்.. அதுவே மராட்டிய மண்ணின் பாரம்பரிய உணவைச் சுவைக்க வேண்டுமானால் ஊர்மக்களிடம் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
அக்கரையிலிருக்கும் பாண்டுரங்கன் துணைவியுடன்
அஷ்டவினாயகர்களில் ஒருவரானதால் அருள் வழங்குவதில் வருடம் முழுவதும் பிஸியோ பிஸி. கூடுதலாக மராட்டிய மாதமான பாத்ரபத் (Bhadrapath - ஆகஸ்ட்-செப்டம்பர்) மற்றும் மாக்(Magha  - ஜனவரி-பெப்ரவரி) மாதங்களில் கோவிலில் விழாக்காலம். சனிக்கிழமை கோவிலுக்குச் செல்லும் வழக்கப்படி இன்று வரதரை சந்திக்கச்சென்றோம். வருகிற 31-ம் தேதி கணேஷ் ஜெயந்தி வருவதையொட்டி கோவில் புது அலங்காரம் கண்டிருந்தது. அடித்த பெயிண்ட் கூட இன்னும் காயவில்லை. முன்மண்டபத்தில் தம்பதியராக அமர்ந்து ஒரு ஜோடி பூஜை செய்து கொண்டிருந்தது. மாக் மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு தேய்பிறையில் வரும் சதுர்த்தசி திதி பிள்ளையாரின் பிறந்த நாளாக மராட்டியர்களால் கொண்டாடப்படுகிறது. இதை தில்குட் சதுர்த்தி எனவும் அழைப்பார்கள். மஞ்சள் அல்லது சிந்தூரத்தினால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜித்து நாலாம் நாளன்று நீரில் விசர்ஜன் செய்வார்கள். அன்று உணவில் எள்ளும் சேர்த்துக்கொள்ளப்படும். இந்த சதுர்த்தியையும் வழக்கமாக செப்டம்பரில் கொண்டாடப்படும் சதுர்த்தியையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. 

பார்வதி நீராடச்சென்றபோது பாதுகாவலனாக இருந்த பிள்ளையாரின் தலை, சிவனால் துண்டிக்கப்பட்டு மறுபடியும் யானைத்தலை பொருத்தி உயிர்பெற்ற நாளே செப்டம்பர் மாத சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. எல்லாம் ஒரே நாளில் நடந்தவைதானே, பிறகேன் இத்தனை மாத வித்தியாசம்? என ஆராய்தல் அறியாமை. நமது காலக்கணக்கும் கடவுளரின் காலக்கணக்கும் வெவ்வேறு எனத் தெளிவதே அறிவு. வேண்டுமானால் மாக் சதுர்த்தியை குளிர்கால வினாயகர் சதுர்த்தி எனக்கொள்ளலாம். செவ்வாயன்று சதுர்த்தி திதியும் சேர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பு. இங்குள்ள மக்கள் விரதமிருந்து “அங்காரக சதுர்த்தி” எனக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். மும்பையிலிருக்கும் சித்தி வினாயக் போன்ற பெரு நகரங்களின் பெரிய கோவில்களில் எள் போட்டால் விழாத அளவுக்குக் கூட்டம் நெருக்கும். ஆகவே, அரச மரத்தடியில் காற்றோட்டமாக அமர்ந்து அருள் பாலிக்கும் பிள்ளையார்களை, கூட்ட நெரிசல் ஏதுமில்லாமல் நாமும் தரிசித்து அருள் பெறுவோமாக. 

கணபதி பப்பா.. மோர்யா.
மங்கள் மூர்த்தி.. மோர்யா.

Saturday, 26 November 2016

பூச்சிகள் ராஜ்யத்தில்..

பூச்சிகள் முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த கணுக்காலிகள் வகையுள் அடங்கும் முதன்மையான உயிரினமாகும். இவை தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று ஜோடிக்கால்களையும், கூட்டுக்கண்களையும், ஒரு ஜோடி உணர்வுறுப்புக்களையும் கொண்டவையாக இருக்கின்றன. இவை தமது வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறு வளர்நிலைகளைக் கொண்டிருப்பதுடன் உருமாற்றத்திற்கு உட்படுவனவாக இருக்கின்றன. 

உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையில் பூச்சிகளே மிக அதிகப் பங்கு, அதாவது சுமார் 90%மாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும் வேறுபட்ட குழுக்களைக் கொண்ட விலங்குகளில் பூச்சிகளும் அடங்கியுள்ளன,இவ்வுலகிலிருக்கும் மொத்த விலங்கினத்தில் பெரும்பகுதியளவுக்கு பூச்சியினம் இருக்குமென கருதப்படுகிறது. மொத்தமாக இருக்கும் பூச்சி இனங்கள் 6-10 மில்லியன்கள் இருக்கலாம் எனவும் அதற்கும் மேலாக 80-100 மில்லியன்கள் இருக்கலாம் எனவும் வெவ்வேறு தகவல்கள் கூறுகின்றன. 

பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன், புதிய சூழலுக்கு இலகுவில் தம்மை இசைவாக்கிக்கொள்ள வல்லனவாகவும் இருக்கின்றன. குளிரான காலநிலை, சூடான காலநிலை இரண்டிலும் அவை வாழ்கின்றன. குளிரான பகுதிகளில் வாழும் பூச்சிகள் குளிரைத் தாங்கி, தமது தொழிற்பாடுகளைத் தொடர்பனவாகவோ, அல்லது வேறு சூடான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்பனவாகவோ, அல்லது தமது செயற்பாடுகள் அனைத்தையும் குறைத்துவிட்டு, உறங்குநிலை போன்ற மிகவும் மந்தமான நிலையில் இருக்கின்றனவாகவோ உள்ளன. வேறு சில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை தம் இனவிருத்தியைத் தள்ளிப்போடுகின்றன.

பூச்சி ஆங்கிலத்தில் Insect என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழியில் உள்ள சொல்லான insectum என்பதிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது. insectum என்பதன் பொருள் வெட்டப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட உடல் என்பதாகும், இச்சொல்லுக்கேற்ப பூச்சிகளின் உடல், தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

தலைப் பகுதியானது ஒரு ஜோடி உணர்விழைகளையும், ஒரு ஜோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1லிருந்து 3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியே உணர்வுகளுக்கான முக்கியப் பகுதியாகக் காணப்படுகின்றது. இது மிகவும் தடித்த தலையுறையினால் மூடப்பட்டிருக்கும்.

மார்புப் பகுதியானது முன்மார்பு, இடைமார்பு, கடைமார்பு என்று வரையறுக்கப்பட்ட மூன்று துண்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டத்திலும், ஒரு ஜோடிக்கால்கள் வீதம், ஆறு துண்டங்களாக்கப்பட்ட கால்கள் இருக்கும். அத்துடன் மார்புப் பகுதியிலேயே இறக்கைகள் அமைந்திருக்கும். எல்லாப் பூச்சி இனங்களும் இறக்கைகளைக் கொண்டிருப்பதில்லை. சிலவற்றில் இரு சிறகுகளும், வேறு சிலவற்றில் இரு ஜோடிச் சிறகுகளும் காணப்படும்

வயிற்றுப் பகுதியானது பொதுவாக 11 துண்டங்களைக் கொண்டிருக்கும். ஆனாலும் வெவ்வேறு பூச்சியினங்களில், இதன் அளவு குறைவாகவோ, அல்லது இணைந்த துண்டங்களாகவோ காணப்படும். அத்துடன் வயிற்றுப் பகுதியின் உள்ளேயே, சமிபாடு, சுவாசம், கழிவகற்றல், இனப்பெருக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான உள்ளுறுப்புக்கள் காணப்படும். வயிற்றுப் பகுதியின் வெளிப்புறமானது தலை, மார்புத் துண்டங்களை விடவும் கடினத்தன்மை குறைந்ததாகக் காணப்படும்.

மனிதர்களால் பல பூச்சிகள் தீங்குயிர்களாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை வேளாண்மை மூலம் பயிர்நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர்கள், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பயிர்கள், பூஞ்செடிகள் போன்றவற்றிற்கோ, அல்லது விளைச்சலில் பெறப்பட்டு பாதுகாத்து வைக்கப்படும் தானியங்கள், காய்கறிகள், மற்றும் ஏனைய உணவு வகைகள், கால்நடைகள் அல்லது நேரடியாகவே மனிதருக்குக் கேடு விளைப்பனவாக உள்ளன

சில பூச்சிகள் மனிதர்களால் பயிர் செய்யப்படும் பயிர்கள் அல்லது அவற்றின் விளைபொருளின் சாற்றை உறிஞ்சுவதால் அல்லது இலைகள், பழங்களை உண்ணுவதனால் தீங்கு விளைவிக்கின்றன, வேறுசில ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொண்டு பல இடர்களைத் தோற்றுவிக்கும், வேறு சில நோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகளைப் பரப்புகின்றன.   கறையான் போன்ற சில பூச்சிகள், கட்டட அமைப்புக்களை சேதப்படுத்துகின்றன. புத்தகப் பூச்சி போன்ற சில வகை வண்டுகள் புத்தகங்களைச் சேதப்படுத்துகின்றன. 
அதேவேளை சில பூச்சிகள் மனிதருக்கு மட்டுமன்றி உயிரியல் சூழலுக்கும் நன்மை பயப்பனவாக உள்ளன. அனேகமான பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தச் சேர்க்கைக்குப் பல பூச்சிகள் உதவுகின்றன. தேனீ, குளவி, எறும்பு, பட்டுப்பூச்சி போன்றன மகரந்தச் சேர்க்கைமூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் உதவுகின்றன. அதேவேளை பூச்சிகளுக்குத் தேவையான உணவு தாவரங்களிலிருந்து அவற்றிற்குக் கிடைக்கின்றது. அத்துடன் விதைகளின் பரவலுக்கும் பூச்சிகள் உதவுகின்றன. பட்டுப்புழு மூலம் பட்டுநூல் பெறப்படுகின்றது. தேனீயானது தேனையும், மெழுகையும் உருவாக்குகின்றது. இவ்விரு பயன்பாட்டையும் முன்னிட்டு மனிதரால் இந்தப் பூச்சிகள் பல்லாண்டு காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
சில பூச்சிகள் தமது கொன்றுண்ணல் செயற்பாட்டினால் அல்லது தமது ஒட்டுண்ணி வாழ்வு முறையினால், மனிதருக்குக் கெடுதல் விளைவிக்கும் தீங்குயிர்களைக் கொன்று அழிப்பதன் மூலம் மனிதருக்கு உதவுகின்றன.

சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக அவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது. சில பூச்சிகளிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்கள் மனிதருக்குத் தேவையான மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில பூச்சிகளை மீன்பிடித்தலின்போது, மீனுக்கான இரையாகப் பயன்படுத்துவர்








பொதுவாகப் பூச்சிகள் தனி வாழ்வு கொண்டனவாக இருப்பினும் சில பூச்சியினங்கள் சமூக வாழ்வைக் கொண்டிருக்கின்றன. தேனீ, எறும்பு, கறையான், குளவி போன்றவை கட்டுக்கோப்பான ஒரு சமூக வாழ்வை மேற்கொள்வதுடன், மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட பெரிய  குழுக்களாக வாழும் தன்மை கொண்டவை.

வால்: தகவல்களித்த இணையம் மற்றும் எனது விலங்கியல் பாடப்புத்தகத்திற்கு நன்றி.

Monday, 21 November 2016

பாலும் பழமும் கடைகளில் தேடி..

"எல.. மணீண்டன் கல்யாணத்துக்கு ஸ்ருதிக்கி புளியங்கொட்ட பட்டுப்பாவாட எடுத்தாச்சி. இனும ஒனக்கு மட்டுந்தான் சேல எடுக்கணும். விடிஞ்சதும் ஆரெம்கேவி போலாம்" என்று அம்மா சொன்னதும் பட்டுப்பாவாடை துணியை கையில் வாங்கிப்பார்த்தேன். மெரூன், பச்சை, மஞ்சள் என்று கட்டம்போட்ட டிசைன் ஒரு மார்க்கமாகத்தான் இருந்தது. 

"ஒனக்கு வேற டிசைனே கெடைக்கலியா? இல்ல கலர்தாம் கிடைக்கலியா?" 

"தச்சுப்போட்டப்றம் பாரு, அதுவும் போட்டோல பாரு. இதாம் எடுப்பா இருக்கப்போவுது. ப்ளெயின் பாவாடதான் அவாட்ட நெறய இருக்கே" என்று எனது ஆட்சேபத்தை இடது கையால் ஒதுக்கிய அம்மாவின் கூற்று எத்தனை உண்மையானது என்பதை திருமண புகைப்படங்கள் வந்தபின் புரிந்து கொண்டேன். அப்பொழுதிலிருந்தே அந்த டிசைனில் புடவை வாங்கி மகளின் பட்டுப்பாவாடைக்கு மேட்சாகக் கட்டிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை வளர்ந்தது. எப்பொழுதாவது ஊருக்குப்போகும்போது புடவைக்கடைகளில் தேடுவேன். அது கிடைக்காது.. சொக்கா!!! எனக்கில்ல.. எனக்கில்ல. இல்லவேயில்ல. விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட என புடவை ஆசையை விட்டொழித்தேன்.

இப்படியாகத்தானே சில வருடங்கள் போனபின், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் என் நண்பிகளான முப்பெருந்தேவியர் ஒரே மாதிரியான புடவை கட்டி போட்டோ போட்டு வெறுப்பேத்தினார்கள். அது வேறேதுமில்லை. புளியங்கொட்டை டிசைன் என என் அம்மா நாட்டு வழக்கில் சொன்ன பாலும் பழமும் டிசைனேதான். கி கி கி. மறுபடி புத்தியில் தீ பற்றிக்கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்தபோது நெல்லையி்லிருக்கும் சென்னை சில்க்ஸிற்குப் போனேன்.

"பாலும் பழமும் டிசைன்ல புடவை இருக்கா?"

உடனே பட்டுப்புடவை செக்ஷன் முழுக்க "ஏ.. பாலும் பழமும் எடுத்துப்போடு" என குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. கடைசியில் முஹூர்த்தப்புடவைகள் இருக்கும் செக்ஷனில் இருந்தவர் என் செவியில் பால் வார்த்தார்.

"இருக்குங்க. பாதிப்பாதி இருக்கு." அவர்சொன்னது half and half. அதாவது புடவையானது முட்டி வரைக்கும் ஒரு டிசைனும் கணுக்கால் வரைக்கும் பாலும் பழமும் கட்டம் போட்டதுமாக இருந்தது. அதுவும் நான் கேட்ட மல்ட்டி கலரில் இல்லாமல் மஞ்சளும் பச்சையும், காவியும் மெரூனும் என காவியக்கலர்களில் இருந்து கண்ணைப்பறித்தது. கடையைத் தலைகீழாகப் புரட்டி தேடியவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு வெறும்கையோடு நடையைக் கட்டினேன். இங்கில்லாவிட்டாலென்ன? ஆரெம்கேவியில் இருக்கும் என அங்கும் சென்றேன்.

"பாலும் பழமுமா? இன்னேரத்துக்கு பாலுக்கும் பழத்துக்கும் நா எங்க போக?". புடவை இருக்கிறதா எனக்கேட்ட சக பணியாளருக்கு இன்னொரு பணியாளர் அளித்த பதிலில் நெல்லைக்கே உரிய குசும்பு இருந்தது :-). என்றாலும், கடையை மூடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலும் வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்ய ஒவ்வொருவரும் தேடத்தொடங்கினர். கடைசியில் ஒருவர், "கெட்டு நாளைக்குத்தான் பிரிப்போம். ஆனா நீங்க ஆசையா கேக்கேளேன்னு இப்பமே பிரிச்சுட்டேன். பிடிச்சதைப் பாருங்க" என நாலைந்தை எடுத்துப்போட்டார். நல்லாத்தான் இருந்தது என்றாலும் நான் கேட்ட மல்ட்டி கலரிலோ பார்டரிலோ இல்லாததால் "போனால் போகட்டும் இந்தத் தடவையும்" என்ற மன நிலையை அடைந்திருந்தேன்.. எனினும் மகளுக்குப் பிடித்துப்போனதால் ஒன்றை எடுத்துக்கொண்டேன். ஆனாலும் "பாலும் பழமும் போச்சே" என வெம்பிய மனதை, "ஹெ.. யாருக்கு வேணும் பாலும் பழமும்? இந்தா இருக்கே பொடி தோசை.. சாப்டு" என சமாதானப்படுத்தியாயிற்று.

மறுநாள் நாகர்கோவிலில் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறோமோ எனத்தோன்றியது. வேப்பமூடு ஜங்க்ஷனில் இருக்கும் "நல்லபெருமாள் சில்க்ஸ்" நல்ல டிசைன் துணிகளுக்குப் பெயர் போனது. ஒரு காலத்தில் நெல்லை வட்டாரத்திலிருந்து கூட ஜவுளி எடுக்க இங்கேதான் வருவார்கள். இதை மறந்து விட்டோமே என என்னை நானே கடிந்து கொண்டு, கடைக்குள் நுழைந்து, நேராக பட்டுப்புடவை செக்ஷனுக்குச் சென்றேன். "பாலும் பழமும் டிசைன் இருக்கா?" எனக்கேட்டதுதான் தாமதம். நாலைந்தை எடுத்துப்போட்டார். அத்தனையும் நான் எதிர்பார்த்த மல்ட்டிகலர் கட்டங்கள் போட்ட புடவைகள். அளவான அழகான கட்டங்களும் அசத்தலான பார்டர்களுமாக ஜிலுஜிலுத்தன. "அள்ளிக்கோ" என பரபரத்த மனதை அடக்கிக்கொண்டு ரொம்பவும் பிடித்த புடவையை பத்தே நிமிடத்தில் செலக்ட் செய்து கையில் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். "ஆயிரம் சொல்லு.. இல்லே, ஐநூறு சொல்லு. கடைசில எங்கூர்தான் எனக்கு வேணுங்கறதைக் கொடுத்துச்சு" என மகளிடமும் பெருமையடித்துக்கொண்டேன். 

என்ன ஒன்று, இந்தப்புடவையைப் பார்க்கும்போது, "லேய்.. அன்னிக்கி என்னமோ, புளியங்கொட்டைலாம் பழைய டிசைன்.. இதப்போயி எடுத்தியேன்னு கேட்டியே" எனக் கிண்டலடிக்கலாம் அம்மா. அடுப்பில் காய் கருகுவதைக்கவனிக்கச் செல்வதைப்போல் நழுவி விட வேண்டும். அடுப்பே எரியாவிட்டாலும் கூட.

LinkWithin

Related Posts with Thumbnails