Friday 31 March 2017

சாரல் துளிகள்

அந்திச்சூரியனுடன் அளவளாவி வழியனுப்பியபின் தேநீரருந்த யத்தனிக்கும்போது, இளம் பொன்னிறத்தில் கோப்பைக்குள் தளும்புகிறது கடல்.

நரியின் நயவஞ்சகம் 
ஔிரும் கண்களையுடையவன், 
தவளைகளுக்கு 
அகிம்சையைப் போதித்துக்கொண்டிருக்கிறான். 
பாம்பின் விஷமெனப் பரவும் 
அதன் வீரியத்தில் மயங்கி 
புற்கடிப்பதை விடுத்து நிற்கின்றன முயல்கள்.

அற்றைக்கும் இற்றைக்கும் ஒரு மௌனசாட்சியாய் நின்ற அக்கட்டடத்தின் விரிசல்களில் ஊன்றியிருந்த வேர்கள் வழி கசிந்த முணுமுணுப்புகள் வருங்காலத்தின் செவிகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தன.

ஒரு நத்தையைப்போல் ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த வெயிலின் முதுகில் ஒட்டியிருக்கும் மகரந்தத்துகள்களினுள் ஔிந்திருந்து கூவுவது அக்காக்குருவியாகவும் இருக்கலாம்.

ஒரு பூனையைப்போல் மென்பாதம் வைத்துப் போய்க்கொண்டிருக்கும் இப்பனிக்காலத்தின் மேல் மெல்லக்கவியும் வேனிற்காலத்தின் முதல் குல்மொஹர் பூ ஒரு சூரியனாய் மலர்ந்திருக்கிறது.

ஒரு மெல்லிறகைப்போல் மிதந்து தரையிறங்கும் அவ்விமானத்தை ஆதுரத்துடன் தழுவும் மஞ்சுப்பொதியில் பன்னீர்ப்பூக்களின் வாசம் இருந்தது தற்செயலானதேயன்றி வேறென்ன?

அதி உக்கிரமாய்ப்பொழியும் வெயிலின் அன்பை, அதில் நனைவதை விட வேறெப்படி அங்கீகரித்து விட முடியும்!?

கடந்தகால இருளின் நிழல்கள் தற்காலத்தில் பேயுருக்கொள்ளும்போது, கூந்தல் பற்றியிழுத்து ஆணியுடனறைந்து முடக்கிப்போடுகிறான் சமயோசிதச்சித்தன்.

கொன்றையும் குல்மொஹரும் பூவிதழ்கள் உதிர்த்திருந்த அச்சாலையில் நடந்து செல்கின்றன சீருடையணிந்த லேவண்டர்ப்பூக்கள்.

ஆசிரியரின் குரலைச் செவி மடுக்கா கடைசி வரிசைப் பையனின் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது நேற்று பார்த்த சர்க்கஸ் புலி.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அழகான அற்புதமான வரிகள்
பயமற்ற காட்டில் உலாவிடும் சுகம் தருகிறது
வாழ்த்துக்களுடன்...

'பரிவை' சே.குமார் said...

முகநூல் முத்துக்கள் இங்கே தொகுப்பாய் அருமை அக்கா...

LinkWithin

Related Posts with Thumbnails