Wednesday, 17 October 2012

கை விடப்பட்டவை - இம்மாதப் போட்டிக்கான புகைப்படப் பகிர்வுகள்..

புறக்கணிக்கப்பட்டவை அல்லது கை விடப்பட்டவை(Abandoned).. இதுதான் 'பிட்' போட்டியின் இம்மாதத் தலைப்பு. புறக்கணிக்கப்படுவது, கை விடப்படுவதென்பது எப்போதும் வலி நிரம்பியதாகவே இருக்கிறது. ஆறறிவுள்ள மனிதர்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருட்கள், பராமரிப்பற்ற கோயில்கள், கட்டிடங்கள், விலங்குகள் கூட இந்தப் பட்டியலில் இடம் பெறலாம்.

என்னவெல்லாம் கனவுகளோடு கட்ட ஆரம்பித்திருப்பார்களோ இந்த வீட்டை..
டீசலும் பெட்ரோலும் இப்படி விலை ஏறிக்கிட்டே போனா கடைசியில் இதுதான் நிலைமையோ?..
பாதியில் கைவிடப்பட்ட வழிபாட்டுத்தலம்..
காய்கறிக்கடையாக ஒரு காலத்தில் இருந்தவை..
கை விட்டவர்கள் மறுபடியும் வருவார்களா?.. ஏக்கத்தோடு காத்திருக்கிறது.
புறக்கணிக்கப்பட்ட வலியுடன் எத்தனைக் கதைகள் புதைந்து கிடக்கின்றனவோ ஒவ்வொன்றின் பின்னும்!!


Monday, 8 October 2012

எண்ணத்துளிகள்..


1.பிறர் தமது மனத்துயரை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவரது மன இருளைப்போக்கி ஆறுதலளிக்கும் சிறு விளக்கொளியாக நமது வார்த்தைகள் இருக்க வேண்டும். மாறாக வீட்டையே கொளுத்திச் சாம்பலாக்கும் பெரு நெருப்பாக இருந்து விடக்கூடாது.

2.மயக்கமும் கலக்கமும் வாழ்வில் குழப்பமும் ஏன் வருகிறது என்று எதிர்மறையாகச் சிந்திப்பதை விடவும் குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க முடியும், கலங்கினால்தான் மனது நன்கு தெளியும், மயங்கி விழித்தபின் ஒரு தெளிவு நிச்சயம் பிறக்கும் என்று நேர்மறையாகச் சிந்திப்பது நல்லது...

3.போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும்போதோ,பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும் போதோ, நேரமாவதைப் பற்றிச் சலிப்படைந்து பொறுமை இழப்பதில் பயனில்லை. மாறாகச் சற்றே நம்மைச் சுற்றி நோக்கினால், மரக்கிளையில் கீச்சிடும் குருவி, விளக்குக் கம்பத்திலமர்ந்து கொஞ்சும் மைனாக்கள், குழந்தையின் விரல்  பிடித்தோ, தோளில் சுமந்தோ அழைத்துச் செல்லும் பாசக்கார பெற்றோர்கள் போன்ற, அவசர உலகில் காணத்தவறும் இனிய தருணங்கள் பலவற்றைக் காண முடியும்.

4.வாழ்தல் என்பதென்னவோ இனிமையானதும் எளிமையானதுமாகத்தான் இருக்கிறது. அதைக் கடினமானதாய் மாற்றிக்கொள்ள மனிதன் பெருமுயற்சி எடுக்கும் வரை.

5.சின்னச்சின்ன முடிச்சுகளாலான கயிற்றைப் பற்றிக்கொண்டு மலையேறுவது போன்றதே வாழ்வில் வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு சிறுகச்சிறுக நாம் அடையும் முன்னேற்றம். ஒரே நோக்கில் முன்னேறினால் இலக்கை அடைவது நிச்சயம்.

6.வாழ்க்கைப்படிகளோ அல்லது மாடிப்படிகளோ எவ்வளவு உயரத்திலிருந்து வீழ்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு காயமும் அதிகம் படும்.. ஆகவே எப்போதும் விழிப்பாகவும் ஊன்றியும் அடியெடுத்து வைப்பது நன்று.

7.அன்பு, நம்பிக்கை, நேர்மை போன்ற அஸ்திவாரங்களின் மேல் எழுப்பப்படும் பாலங்களே உறவுகளைப் பிணைத்துப் பலப்படுத்துகின்றன.

8.வாழ்வில் வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனும், அதற்காகத் திட்டமிடுகிறான், முயற்சிக்கிறான், கடுமையாக உழைக்கிறான், தன்னுடைய இலக்கை நோக்கிக் குறி தவறாமல் நடக்கிறான். ஆனால் அந்த வெற்றியை, முயற்சி செய்ய விரும்பாத சிலர் 'அதிர்ஷ்டம்' என்று அழைத்து அலட்சியப் படுத்துகிறார்கள்.

9.எதிலும் குறை காண்பவர்களைத் திருப்திப் படுத்துவதென்பது காதறுந்த ஊசியில் நூல் கோர்ப்பதற்குச் சமம்.

10.சாதாரணமாய் நினைத்து வீணே கழிக்கும் ஒவ்வொரு பொழுதும் காலத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகும். 


Friday, 5 October 2012

(சதுர்த்திக்)கொண்டாட்டமும் திண்டாட்டமும்.. (2)

"ஒண்ணிலிருந்து ஒன்பது வரைக்கும் கொண்டாட்டம்..
ஒன்பதுக்குப் பின்னே பத்தாம் நாளு திண்டாட்டம்"

புள்ளையார் சதுர்த்தியின் கடைசி நாளன்னிக்கு அவர் படற பாட்டை, நகைச்சுவைப் பேரரசு, கலைவாணர் திரு. என்.எஸ்.கே அவர்கள் மட்டும் இப்ப இருந்திருந்தா இப்படித்தான் பாடியிருப்பாரோன்னு தோணுது. முதல் நாள் பேண்ட் வாத்தியம் முழங்க,"கண்பதி பப்பா மோரியா"ன்னு வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து ஒன்பது நாளும் விதவிதமா மோதகங்கள், கொழுக்கட்டைகள்ன்னு படைச்சு ஒரு சுத்து பெருக்க வெச்சு, பஜனை, பூஜைன்னு கொண்டாடறோம். கடைசியில் அனந்த சதுர்த்தசியன்னிக்கும் ஊர்வலமா அழைச்சுட்டுப்போயி நீர் நிலைகள்ல கரைக்கிற(???) வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடக்குது. அப்புறம்தான் இருக்குது கொடுமையே.

நம்மூர் மாதிரி களிமண்ணுல செஞ்சாலாவது சட்டுன்னு கரைஞ்சு, மண்ணுல பிறந்த பிள்ளையார் திரும்பி வந்த இடத்துக்கே போயிருவார். ஆனா, எந்தப் பகுதி பிள்ளையார் ரொம்பப் பெருசா இருக்கார், ஜொலிக்கிறார்ன்னு ஒவ்வொரு பேட்டையிலும் நடத்திக்கிற போட்டி காரணமா பிளாஸ்டர் ஆஃப் பாரீசும், பெயிண்டுகளும் களிமண்ணோட இடத்தைப் பிடிச்சுக்கிச்சு. இவையெல்லாம் தண்ணீர்ல சட்ன்னு கரையாதுன்னு இப்போல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குக் கூட தெரியும். பலன்,... கரைச்சுட்டு வந்த மறுநாள், அங்கங்கள் சிதைவுற்ற நிலையில் பிள்ளையார்களை கடல் அலைகள் கரையில் சேர்க்குது. பத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை.

சமீபத்தில் மும்பையின் மாஹிம் கடற்கரைக்குப் போயிருந்தப்ப, இப்படிச் சிதைந்து கிடந்த புள்ளையார்கள் கரையோரமா ஒதுங்கிக்கிடந்தாங்க. அதுல ஒருத்தர் முழுசா, கொஞ்சம் கூடச் சேதமில்லாம அப்படியே இருந்தார். இதைப் பார்த்ததும் அவரை மறுபடியும் கடல்ல கரைச்சுரலாம்ன்னு அங்க நின்னுட்டிருந்த சில பசங்க முயற்சி செஞ்சாங்க. ஆனா, பார்க்கத்தான் முழுசா இருக்காரே தவிர, தொட்டுத் தூக்குனா பொலபொலன்னு சிதைந்து விழுந்துருவார் போல தோணுச்சு. சரி,.. ஹை டைட் சமயம்தானே. எப்படியும் ஒண்ணு ரெண்டு மணி நேரத்துல கடல் தண்ணி கரை வரைக்கும் வந்துரும். அப்ப தானா தண்ணிக்குள்ள போயிருவார்ன்னு முயற்சியைக் கை விட்டுட்டுப் போயிட்டாங்க.
ஒவ்வொரு வருஷமும் இயற்கையைக் காப்போம்ன்னு கோஷமிட்டதன் பலனா மக்கள் இப்ப கொஞ்ச காலமா காகிதக்கூழில் செஞ்சு, இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்ட புள்ளையார்களை புழக்கத்தில் கொண்டார ஆரம்பிச்சுருக்காங்க. நல்ல விஷயம்தான். மும்பையில் இந்த வருஷம் TV 9 என்ற சேனல்காரங்க அவங்க பந்தலில் இயற்கைப் பிள்ளையாரை வெச்சு வழிபட்டு, கரைக்கிறதுக்காகக் கொண்டாந்துருந்ததை போன பகுதியில் சொல்லியிருந்தேன்.

முந்தியெல்லாம் பிள்ளையாருக்கு அணிவிச்ச மாலைகளை ஒரு பையில் போட்டுக்கொண்டாந்து அதையும் நீர் நிலைகள்ல எறிஞ்சுருவாங்க. இப்ப குறைந்தபட்சம், அந்த நிர்மால்யங்களை எறிஞ்சு மாசு படுத்தறதையாவது குறைச்சுக்குவோமேங்கற விழிப்புணர்வு காரணமா, விஸர்ஜனுக்கு முன்னாடியே பூ, அருகம்புல் மாலைகள்ன்னு எல்லாத்தையும் கழட்டி ஆங்காங்கே வெச்சுருக்கும் நிர்மால்ய கலசத்துல போட்டுடறாங்க. கலசம் வைக்கப்படாத இடங்களில் தன்னார்வத் தொண்டர்கள் அதைச் சேகரிச்சுக்கும் பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்காங்க.
மும்பையைப் பொறுத்தவரைக்கும் 'லால்பாக்'ங்கற இடத்துல இருக்கற புள்ளையார் ரொம்பவும் புகழ் வாய்ந்தவர். மொதல்ல லால்பாக்ல சின்ன அளவுலதான் ஆரம்பிச்சது இப்ப பெரூசா மும்பையின் வி.ஐ.பிக்கள் தவறாம தரிசிக்கிற அளவுக்கு ஆகிட்டார். திருப்பதி மாதிரியே இங்கியும் மணிக்கூர் கணக்கா காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும். இவருக்குக் குவியற காணிக்கைகளுக்கு கணக்கே கிடையாது. மொத்த காணிக்கை வசூல் கோடிக்கணக்குல இருக்கும். இவருக்குன்னு சொந்தமா தங்க அணிகலன்களும் உண்டு. அருள் பாலிக்கிற அந்த தங்கக்கையே கதை கதையாச் சொல்லுமே :-)
மும்பையின் ஜூஹு கடற்கரையில் கரைக்கப்படும் பிள்ளையார்களை வானத்திலிருந்தும் தரிசிக்கலாம். தனியார் விமானக்கம்பெனிகளில் பணம் கட்டிட்டா அவங்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கூட்டிட்டுப் போயி சுமார் பதினஞ்சு நிமிஷத்துக்குச் சுத்திக்காமிக்கறாங்க. ஒருத்தருக்கு 3,500 வரைக்கும் வசூலிக்கறாங்க. இது கம்பெனியைப் பொறுத்துக் கொஞ்சம் கூடக்குறைய இருக்கும். வருஷாவருஷம் இந்தச் சேவையைப் பயன்படுத்தும் மக்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதாம்.

இந்தப் பண்டிகை சமயம் ஏற்படும் ஒலி மாசைப் பத்திச் சொல்லியே ஆகணும். அனந்த சதுர்த்தியன்னிக்கு இருக்கறதை விட அஞ்சாம் நாளான கௌரி கணபதியன்னிக்குத்தான் இது கூடுதலா இருக்கும். இந்த வருஷம் சுமார்115 டெசிபல் வரைக்கும் போனதா செய்திகள் கவலை தெரிவிக்குது. குறைஞ்ச பட்சம் மருத்துவமனைகள் அருகிலாவது அவங்க சத்தத்தையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கிட்டிருந்தா அது மனிதாபிமானம். ஆனா, கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தில் தன்னை மறந்து இருக்கறவங்க கிட்ட அதை எதிர்பாக்க முடியுமோ?..

குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேர ஒலியளவு 45டெசிபலாகவும் அதுவே அமைதிப்பகுதிகள்ல 40 டெசிபல் மட்டுந்தான் இருக்கணும்ன்னு விதி. ஆனா, பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதால் 120லேருந்து 125 வரைக்கும் ஒலியளவு இருந்ததாம். வழக்கமான ட்ரம் பத்தாதுன்னு டீஜேயும் சேர்ந்துக்கிட்டது. நானும் பையரும் மாஹிம் போயிட்டுத் திரும்பறப்ப எங்க வண்டி ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டது. திடீர்ன்னு வண்டியே அதிர்றமாதிரி திடும்.. திடும்ன்னு தூக்கிப்போடுது. காதைப்பிளக்கற மாதிரியொரு சத்தம். என்னன்னு பார்த்தா விசர்ஜன் ஊர்வலத்துல டீஜேயும் உபயோகப்படுத்தறாங்க. சத்தம்ன்னாலே அலர்ஜியாகற பையரால காதுல வெச்ச கையை கால் மணி நேரத்துக்கு எடுக்க முடியலை. அந்த இடத்தைக் கடந்ததும்தான் அப்ப்பாடீன்னு மூச்சு வந்தது. நமக்கே இப்படீன்னா பிள்ளையாரின் காது என்னாச்சுதோ பாவம். மராட்டிய மக்களின் பாரம்பரிய நடனத்தின்போது உபயோகப்படுத்தற லெஸீம்களை வெச்சுக்கிட்டு அழகா ஒரு கூட்டம், ஒரே மாதிரியான காஸ்ட்யூமில் ஆடிக்கிட்டே போனதை ரசிக்க முடிஞ்சது.

எத்தனை நிறை குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா நட்புகளோடும், உறவுகளோடும் கொண்டாடறதுக்குத்தான் பண்டிகைகள். மும்பையும் இதோ மும்பையின் ஹீரோவுக்கு தற்காலிக விடை கொடுத்து அனுப்பிய கையோட அடுத்ததா வரப்போற பண்டிகையான நவராத்திரியைக் கொண்டாடறதுக்கு இப்பவே தயாராக ஆரம்பிச்சுட்டுது. 

"கணபதி பப்பா மோரியா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா"

Wednesday, 3 October 2012

இரண்டாமிடமும், முத்துகளில் கோர்க்கப்பட்டவையும்.. இந்த வாரம் மகிழ்ச்சி வாஆஆஆரம் :-)))

பிட்டில் மாசா மாசம் நடக்கும் போட்டிக்கு நானும் அசராம பிட்டு பிட்டா போட்டுட்டிருந்தேன், என் சில படங்களும் அசராம முதல் சுற்று வரைக்கும் ஜெயிச்சு வந்துட்டு, அதுக்கப்புறம் வெற்றி கரமா வெளியேறிட்டிருந்தன. ஆர்வம் இருந்தாலும் நேரம் ஒத்துழைக்காததால இடையிடையே 'டூ' விட்டுட்டு ஒதுங்கியிருந்தாலும் காமிரா பிடிச்ச கை சும்மாயிருக்குமா என்ன?.. மறுபடி போட்டியில கலந்துக்க ஆரம்பிச்சேன். "இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ?"ன்னுதானே கேக்கறீங்க. சொல்றேன்... அதுக்குத்தானே இவ்ளோ பில்டப்பு :-))

ஆகவே நண்பர்களே,.. 'பிட்' நடத்தும் போட்டிகளில், செப்டம்பர் மாதப் போட்டிக்கான  தலைப்பான வெற்றிடத்துக்காக நான் அனுப்பிய ஊஞ்சல் இரண்டாமிடத்தை வென்றிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடையும் அதே நேரத்தில், என்னை வாழ்த்திய நல்ல உள்ளங்களான உங்களுக்கும் படத்தைத் தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்கும் அதே சமயத்தில், மகிழ்ச்சியான தருணங்கள் இரண்டொன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.

இரண்டாம் இடம் பிடிப்பது அமைதிச்சாரல்...
ஜெயித்த மற்றவர்களுக்கும் வாழ்த்தை இங்கே சொல்லிக்கலாம்.

ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் குழுமத்தில் வாராவாரம் ஏதாவதொரு தீமில் புகைப்படப் போட்டி நடக்கும். ஒருவர் தினமும் ஒரு படம் வீதம் ஏழு படங்களை இதில் பதிந்து போட்டியிடலாம். எந்தப் படத்துக்கு நிறைய லைக் விழுதோ அது அந்த வாரத்தோட கிங் அல்லது குயினாகத் தேர்ந்தெடுக்கப்படும். அது போக சிறந்த பத்துப் படங்கள் முத்துக்களாகவும் தேர்ந்தெடுக்கபடும்.

"அலைகள்" என்ற தலைப்பில் அனுப்பிய இந்தப் படம் அந்த வாரத்தோட பத்து முத்துகளில் ஒன்றாக ஜொலித்தது.
"பாலங்கள்"என்ற தலைப்பில் அனுப்பிய பாந்திரா-வொர்லி பாலத்தின் இந்தப்படம் சென்ற வார முத்துகள் பத்தில் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது.
இந்தப் பாலத்துக்கு ஃப்ளிக்கரிலும் நல்ல வரவேற்பு கிடைச்சது :-)

புகைப்படப்பிரியனில் இந்த வாரப் போட்டியோட தலைப்பு "ரோஜா(கள்). நிறையப்பேர் விதவிதமான ரோஜாக்களைப் பதிந்து ஆல்பமே கமகமன்னு மணக்குது. உங்களுக்கும் ஆர்வமிருந்தா கலந்துக்கலாம்.. கலக்கலாம்.

Monday, 1 October 2012

(சதுர்த்திக்)கொண்டாட்டமும் திண்டாட்டமும்.. (1)

மும்பைன்னதும் மக்களுக்கு இங்கே  கோலாகலமா நடக்கற பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வராம இருக்காது . பத்து நாளும் மும்பை முழுக்க ரொம்பவும் சந்தோஷமா கொண்டாடற இந்தப் பண்டிகைக்காக மக்கள் வருஷம் முழுக்கக் காத்திருப்பாங்க. ஒவ்வொரு தடவையும் பண்டிகை முடிஞ்சதும், அடுத்த சதுர்த்தி எப்போ வரும்ன்னு ரொம்ப ஏக்கமா இருக்கும். ஒவ்வொரு பகுதிகள்லயும் குடியிருப்புகள்லயும் இருக்கற பிள்ளையார்களை தினமும் நண்பர்கள் குழுமத்தோட போயிப் பார்த்துட்டு வர்றது ரொம்பவே ஜாலியான விஷயம்.  கொண்டாட்டங்கள் முடிஞ்சு புள்ளையாரை வழியனுப்பி வெச்சுட்டு வந்தப்புறம் அந்தக் காலியிடத்தைப் பார்க்கறதுக்கு மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும்.

சின்னதுலேர்ந்து பெரூசு வரைக்கும் விதவிதமான அளவுகள்ல வாங்கிட்டு வரும் கணபதிகளை அவரவர் வசதிக்கேற்ப மூணு, அஞ்சு ஏழுன்னு ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரும் தினங்கள்ல கரைப்பாங்க. சில வீடுகளில் வெறும் ஒண்ணரை நாள் மட்டும் வெச்சுட்டு சத்ய நாராயணா பூஜை முடிஞ்சதும் கரைச்சுருவாங்க. எங்க குடியிருப்பில் ஏழு நாள் வரைக்கும் வெச்சிருந்தோம். அஞ்சாம் நாள் சத்ய நாராயண பூஜை அமோகமா நடந்தது. ஏழாம் நாள்  மஹா கணபதி ஹோமம், நட்சத்திர பூஜை, லக்ஷ்மி பூஜை எல்லாம் நடத்தி, மதியம் மஹா பிரசாதமா சாதம், சாம்பார், உசிலி, வடை, அப்பளம், ஊறுகாய், மோர், பால் பாயசம், பூரி பாஜியோட புள்ளையார் சாப்பாடு போட்டார். அன்னிக்கு சாயந்திரமே அவரை வழியனுப்பிட்டு வந்ததும் என்னவோ, கலகலன்னு இருந்த கல்யாண வீடு எல்லா விருந்தாளிகளும் கிளம்பினப்புறம் ஒரு வெறுமையோட இருக்குமே. அப்டி இருந்தது..

இது எங்க குடியிருப்புக்கு இந்த வருஷம் வந்த புள்ளையார். ராஜ கம்பீரமா தலைப்பாகையோட எவ்ளோ அழகாருக்கார்.
முந்தி மாதிரி இல்லாம இப்பல்லாம் ரூம் போட்டு ஜிந்திச்சு புள்ளையாரை புதுப்புது டிசைன்கள்ல உருவாக்கறாங்க. எல்லா மண்டலிகள்லயும் போயிப் பார்த்துட்டு வர்றதுங்கறது முடியாத காரியம். சுருக்கு வழியா, கரைக்கிற இடத்துக்கே போயிட்டா நமக்கு அங்கியே வந்து தரிசனம் கொடுத்துட்டு அப்றமாத்தான் கைலாயம் போவார். இப்பல்லாம் புள்ளையாருக்கு மேட்சா மண்டலிக்காரங்களும் காஸ்ட்யூம் போட்டுக்கறாங்களாம். யாராச்சும் கூட்டத்துல தொலைஞ்சு போனா கண்டு பிடிக்க ஈஸியா இருக்கும் பாருங்க :-). இங்கியும் அப்டித்தான் வயலட் நிறமே.. வயலட் நிறமேன்னு புள்ளையாரும் பக்தர்களும் மேட்சிங்கா இருக்காங்க. கிரிக்கெட்ல மட்டுந்தான் மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கணுமா என்ன?.. இங்கியும் இருக்குது :-))


என்னோட காமிராவான பீரங்கி அடிக்கடி மக்கர் செய்ய ஆரம்பிச்சுருச்சு. சரின்னு கடாசிட்டு, நிக்கான் 5100க்கு மாறிட்டேன். புதுக்காமிராவால நிறையப் புள்ளையார்களைப் பிடிச்சுட்டு வர்றதுக்காக மும்பையின் கிர்காம் சௌபாட்டி(பீச்)க்குப் போலாம்ன்னு நானும் ரங்க்ஸும் ப்ளான் செஞ்சுருந்தோம். லால்பாக்ச்சா ராஜா, மும்பைச்சா ராஜா எல்லோரும் வருவாங்க, பார்க்கலாம்ன்னு ஐடியா. ஆனா, திடீர்ன்னு பையரோட காலேஜுக்கு அவசரமா நான் போயே ஆக வேண்டிய சூழல்,. அதனால என்னோட அஸிஸ்டெண்ட் போட்டோகிராபரான ரங்க்ஸை அனுப்பி வெச்சேன்.. ஆட்டோவுலயே எல்லாப் படங்களையும் சுட்டுட்டு வந்துருக்கார். முதல் படம் மட்டுந்தான் என்னோடது. மீதி எல்லாம்  என் மறுபாதியின் கை வண்ணம் :-))
முன்னாடி கணபதி இருக்கார். பின்னாடி என்ன பார்க்கறாங்க????
ஆனைமுகனுக்கு ஆளுயர அருகம்புல் மாலை..
ஒட்டிப்பிறக்காத ட்வின்ஸ்.. அடையாளம் கண்டுபிடிக்கறது சுலபம்தான் :-))
எங்கூரு ராஜா.. தங்கக்கையால அள்ளி அள்ளிக்கொடுப்பார் வரங்களை :-)
தேங்காய்ல ஒரு மூடி இங்கே இருக்கு. இன்னொண்ணு எங்கே??
ஞானப்பழப் பஞ்சாயத்தே இன்னும் தீரலை.. அதுக்குள்ள தேங்காயைக் கொண்டாந்துருக்காரே இந்த நவீன நாரதர் :-))
க்ருஷ் மாமா மாதிரியே வேஷம் போட்டிருக்கேன்.. நல்லாருக்கா?..
புள்ளையாரப்பா.. காணாமப்போன உன்னோட வாகனத்தை கூகிளில் தேடுனா சட்ன்னு கிடைச்சுரும். அதை விட்டுட்டு எங்களைத் தேடச்சொல்றது ஞாயமாப்பா?.. குனிஞ்சு தேடித்தேடி முதுகு வலிக்குது..
TV-9 சேனல் காரர்கள் கொண்டாந்த சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத புள்ளையார்.
புள்ளையாரே,.. மின்வெட்டு இனிமே இருக்காதா. காமெடி பண்ணாதேப்பா :-)))
தேமேன்னு அரச மரத்தடியில உக்காந்துருந்தேன். கூட்டிட்டு வந்து இங்க வெச்சுட்டாங்க.
(தொடரும்.... இல்லையில்லை, அடுத்த பகுதியில் முடியும் :-))

Thursday, 20 September 2012

வெறுமை- செப்டம்பர் மாத 'பிட்' போட்டிக்கானவை

"வெற்றிடம்" அல்லது "வெறுமை".. இதுதான் இந்த மாச 'பிட்' போட்டிக்கான தலைப்பு. படத்தைப் பார்த்ததுமே வெற்றிடம் அல்லது வெறுமை தெரியணும். இதான் போட்டிக்கான விதி. சுருக்கமாச் சொன்னா ஆளேயில்லாத டீக்கடை :-)). அங்கே போயி கடமையை ஆத்தோ ஆத்துன்னு ஆத்திக் கொஞ்சூண்டு கொண்டாந்துருக்கேன்.

'அலிபாக்' போகும் பாதையிலிருக்கும் அணைக்கட்டு.
ரயிலுக்காகக் காத்திருக்கும் வரை கதை பேசும் தண்டவாளங்கள்..
காலியான இருக்கைகள்..
வசந்த மண்டபம்..
பொன்னூஞ்சல்..

வெறிச்சோடிய மைதானம்..
இதில் பொன்னூஞ்சல் போட்டிக்குப் போயிருக்கு.. இருந்தாலும் மத்த படங்களையும் இங்கே பகிர்ந்துருக்கேன். எஞ்சாய்....

Tuesday, 4 September 2012

சாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)

ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை "ப்ளூ மூன்"என்று அழைக்கிறார்கள். சென்ற ஆகஸ்ட் மாதமும் இப்படித்தான் 2-ம் தேதி ஒரு பௌர்ணமியும், 31-ம் தேதி இன்னொரு பௌர்ணமியும் வந்தது. இதில் 31-ம் தேதி வந்த பௌர்ணமியே "ப்ளூ மூன்" என்று அழைக்கப்பட்டது. உலகெங்கும் இதைப் பார்க்கவும், படம் பிடிக்கவும் ஆர்வலர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். நானும் காமிரா, ட்ரைபாட் சகிதம் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், மும்பையில் அன்றைக்கென்று, அதுவும் பகல் முழுவதும் சுளீரென்று காய்ந்து கொண்டிருந்த சூரியனைக் குளிர்விக்கும் முகமாக சாயந்திரம் பெய்ய ஆரம்பித்த மழை வலுத்து விடவே, நீல நிலவுப்பெண் தான் நனைந்து விடக்கூடாதே என்றெண்ணி மேகத்துகில்களால் தன்னை மறைத்துக்கொண்டு விட்டாள். வெகு நேரம் விழித்திருந்து காத்திருந்து கண்கள் சிவந்ததுதான் மிச்சமானது எனக்கு :-)

மறு நாள் வந்த நிலாப்பெண், முந்தைய நாளின் பௌர்ணமியின் அழகை விட, தான் ஒன்றும் குறைந்து விடவில்லை என்பது போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள். என்ன.. முதல் நாள் பெய்த மழையில் நீலச்சாயம்தான் கொஞ்சம் வெளுத்துப்போய் விட்டது. வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல் பால் வெள்ளையில் பளீரென்றிருந்தாள் :-))

நீல நிலா என்ற பெயருக்கேற்றார்போல் இது நீல நிறமாக இருப்பதில்லை. இது ஒரு குறியீட்டுச்சொல், அவ்வளவே. ஒவ்வொரு வருடமும் 12 பௌர்ணமிகள் வருகின்றன. சில வருடங்களில் மட்டும் 13 பௌர்ணமிகள் வருகின்றன. இந்த அதிகப்படியான பௌர்ணமியை அடையாளப்படுத்திச்சொல்லவே "ப்ளூ மூன்" என்ற பெயரிடப்பட்டுள்ளது. 

இன்னும் சொல்லப்போனால் மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒரு பெயருண்டு. அமெரிக்கப் பழங்குடியினர் இப்பெயர்களை இட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்வுகளைக்கொண்டு இப்பெயர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பெயரைக் கேட்டாலே பெயர்க்காரணமும் விளங்கி விடும்.

ஜனவரி-  Wolf Moon - ஓநாய் நிலவு- இந்த மாதத்தில் கடும் பனி மற்றும் குளிர் காரணமாக காட்டுக்குள் உணவு கிடைக்காமல் ஓநாய்கள் கிராமங்களில் புகுந்து கோழி ஆடு போன்றவற்றைத் தூக்கிச் சென்று விடுவது, மற்ற மாதங்களை விட அதிகமாக நடக்குமாம். ஆகவே இப்பெயரிடப்பட்டது.

பிப்ரவரி-  Snow Moon - பனி நிலவு - இம்மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் இப்பெயர். பனிப்பொழிவு காரணமாக வேட்டைக்குச் செல்வது கடினமாகி, உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கவும் நேரிடுவதால் இதை "பசி நிலவு" என்றும் சில பழங்குடியினர் அழைக்கிறார்கள்.

மார்ச்-  Worm Moon - புழு நிலவு - பனிக்கால விடுமுறை முடிந்து சூரியன் எட்டிப்பார்க்கும் காலம். மிதமான சூடு காரணமாக பூமிக்குள்ளிருந்து புழுக்கள் வெளி வர ஆரம்பிக்கும். இவற்றைத் தின்னவென்றே ராபின் பறவைகளும் நிறைய கூட்டம் கூட்டமாக வந்திறங்கும்.

ஏப்ரல்-  Pink Moon -  பிங்க் நிலவு - மாஸ் பிங்க் என்றழைக்கப்படும் ஒரு வகை வசந்தகாலப்பூக்கள் அதிகம் பூக்கும் காலமாதலால் இப்பெயரிடப்பட்டது.

மே-  Flower Moon - பூ நிலவு - தாவரங்கள் அனைத்தும் பூத்துக்குலுங்கும் காலத்தில் வரும் பௌர்ணமி. ஆகவே இப்பெயரிடப்பட்டது.

ஜூன்- Strawberry Moon - ஸ்ட்ராபெர்ரி நிலவு - ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் அதிகம் கிடக்கும் மாதத்தில் வரும் பௌர்ணமியாதலால் நிலாப்பெண்ணுக்கும் இப்பெயர்.

ஜூலை- Buck Moon -  மான் நிலவு - பொதுவாக இம்மாதத்தில்தான் இளம் மான் குட்டிகளுக்குக் கொம்பு முளைக்க ஆரம்பிப்பதாக அப்பழங்குடியினர் நம்புவதால் இப்படிப் பெயரிடப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட்- Sturgeon Moon - ஸ்டர்ஜன் நிலவு - ஸ்டர்ஜன் என்ற ஒரு வகை மீன்கள் அதிகம் கிடைக்கும் மாதத்தில் வருவதால் இப்பௌர்ணமிக்கு இப்பெயர்.

செப்டம்பர் - Harvest Moon - அறுவடை நிலவு - மக்காச்சோளம் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் இம்மாதத்தில் வரும் பௌர்ணமியின் பிரகாசம் பகலைப்போல் ஒளிருமாம். அந்த வெளிச்சத்திலேயே கூட அறுவடை நடக்குமாம்.

அக்டோபர் - Hunter's Moon - வேடுவரின் நிலவு - இதற்கு ரத்த நிலவு என்றும் இன்னொரு பெயர் உண்டு. இம்மாதத்தில் கிட்டத்தட்ட அறுவடை முடிந்து வயல்களெல்லாம் கட்டாந்தரையாகக் கிடப்பதால் வயல்களில் நடமாடும் நரிகள், சிந்திய தானியங்களைத்தின்ன வரும் மான்கள் போன்றவை எளிதில் புலப்பட்டு விடும். அவற்றை வேட்டையாடி, அந்த மாமிசத்தை அடுத்து வரும் குளிர்காலத்துக்கென சேமித்து வைத்துக் கொள்வர். அதிகம் ரத்தம் சிந்தும் மாதமாதலால் இதற்கு ரத்த நிலவு என்று பெயரிடப்பட்டிருக்கிறதோ என்னவோ?

நவம்பர்-  Beaver Moon - நீர் நாய் நிலவு - இம்மாதத்தில் பீ(b)வர்ஸ் என்று அழைக்கப்படும் நீர் நாய்களை வேட்டையாடி அதன் உரோமங்களைக் குளிர்கால ஆடைகள் நெய்யப் பயன்படுத்திக் கொள்வர். ஆகவே இம்மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு இக்காரணப் பெயரிடப்பட்டது.

டிசம்பர்-  Cold Moon - குளிர் நிலவு - டிசம்பர் மாதக் குளிருக்குச் சொல்லவா வேண்டும். இம்மாதத்தில் சூரியனே தணிந்து இருக்கும்போது நிலவு மட்டும் சுடுமா என்ன?.. குளிர் நிலவு மேலும் குளிர்ந்து போய் இருக்கும்.

சில சமயம் ஒரே வருடத்தில் இரண்டு நீல நிலவுகள் கூட வருவதுண்டாம். கடைசியாக இந்நிகழ்வு 1999-ம் வருடம் நிகழ்ந்தது. ஜனவரியில் இரண்டு பௌர்ணமிகள் வந்த காரணத்தால் வருடத்தின் மிகக்குறைந்த நாட்கள் கொண்ட பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமியே இல்லாமல் போய் விட்டது. பதிலாக மார்ச் மாதத்தில் மீண்டும் இரண்டு பௌர்ணமிகள் வந்தன. இப்படிப்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகள் 19 வருடங்களுக்கு ஒரு முறையே நடக்குமென்று சொல்லப்படுகிறது. அடுத்த இரட்டை நீல நிலவுகளை இனிமேல் 2018-ல் காணலாம்.

சாதாரணமாக நிலவு ஒரு முறை பூமியைச் சுற்றி வர 29.53 நாட்கள் ஆகின்றன. அதாவது இக்காலம் இரண்டு பௌர்ணமிகளுக்கிடையேயான காலமாகவும் இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் முப்பது நாட்கள் கொண்ட ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு பௌர்ணமிகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அப்படி வர வேண்டுமானால் முதல் பௌர்ணமியானது மாதத்தின் முதல் தேதியிலோ அல்லது ஆரம்ப ஒன்றிரண்டு நாட்களிலோ வர வேண்டும். அப்படியிருந்தால் நிலவின் சுழற்சி முறையில் அடுத்த பௌர்ணமி அந்த மாதமே வந்து விடும். இப்படி ஒரு மாதத்தில் இரண்டாவதாக வரும் பௌர்ணமியே நீல நிலவு என்றழைக்கப் படுகிறது. ஆனால் இது ஒவ்வொரு மாதமும் சாத்தியப்படுவதில்லை. நிலவின் சுழற்சிக்காலத்தின் அடிப்படையில் இந்நிகழ்வு இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறையே சாத்தியப்படுகிறது. அடுத்த நீல நிலவு 2015-ம் வருடம் ஜூலை மாதம் 31-ம் தேதி காட்சி தரவிருக்கிறது.

"உச்சியில் நிற்கும் நீல நிலா வெளுத்து விட்ட போதிலும், தவணை முறையில் மேகங்கள் வந்து சூழ்ந்து நின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை" என்று சூளுரைத்து விட்டு, கிடைத்ததைப் பிடிப்போமென்று காமிரா, ட்ரைபாட் எல்லாம் தயார் செய்து வைக்கவும் மேகங்கள் சூழ்ந்து கொண்டன. பொறுமை எருமையை விடப் பெரியது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!!.. அதன்படிக் கொஞ்ச நேரம் பொறுமையைச் சோதித்தபின் வெள்ளித்தட்டாய் தகதகவென ஆடினாள் நிலாப்பெண். காமிராவில் அளவுகளைச் சரி பார்த்தபின் சட்.. சட்டென்று ரெண்டே க்ளிக்கவும் அடுத்த தவணை மேகங்கள் வந்து குசலம் விசாரித்தன. ச்சரி.. அவர்கள் தனிமையைக் கெடுக்க வேண்டாமென்று கடையைக் கட்டி விட்டேன். பிடித்து வந்ததில் ஒண்ணே ஒண்ணு,.. கண்ணே கண்ணைப் பகிர்ந்திருக்கிறேன். தரிசித்துக் கொள்ளுங்கள்.

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails