ஊருக்கு புறப்படும்போது இருக்கிற உற்சாகமும், சுறுசுறுப்பும் ஏனோ அங்கிருந்து திரும்பும்போது, குறைஞ்சுதான் போகிறது.இந்த நாள் இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் நீண்டுகிட்டே போகாதான்னு இருக்கு...ஆனா, நம்மை மாதிரி ,வெளியூரிலோ, வெளி நாட்டிலோ இருக்கிறவங்க வாழ்க்கை,தவளை வாழ்க்கையாயில்ல இருக்கு.. எங்கியுமே கொஞ்சநாள் நல்லாத்தான் போகுது,.. அப்புறம் தூரத்துப்பச்சைதான் கண்ணுக்கு குளுமையா இருக்கு.
ஊருக்கு போகும்போதெல்லாம், எல்லோரும் மறக்காம சொல்றது..'இந்தப்பக்கம் மாத்தலாகி வந்துடுங்க',. நாங்களும் மறக்காம சொல்றது,.. 'ஆகட்டும் பார்க்கலாம்'.இந்த தடவை, ரங்க்ஸும் கொஞ்சம் யோசிக்கிற மாதிரி இருந்ததைப்பாத்ததும்,..என் பங்குக்கு நம்ம shifa வைப்பத்தி சொல்லி வெச்சேன். போனதடவை ஊருக்கு போனபோதே,அதை பார்க்கும்போது .. அட!! நல்லா இருக்கே!!ன்னு தோணிச்சு. அப்புறம், துளசி அக்காவோட பதிவுல அதைப்பாத்துட்டு அப்பவே, ரங்க்ஸ் காதுல போட்டு வெச்சாச்சு.. இப்ப, அதை நேரில் போய் பார்க்க நேரம் இல்லாததால்,போனில் விசாரிச்சுக்கிட்டோம்.
k.t.c. நகரில் நல்ல வீட்டுமனைகள் இருக்காம். அங்கே இருக்கிற அண்ணி கொடுத்த தகவல் இது. இருந்தாலும்.. 'வீட்டைக்கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்'..,..'யானை அசைந்து தின்னும்..வீடு அசையாம தின்னும்'....பயமுறுத்தறதுக்குன்னே பழமொழிகளை சொல்லி வெச்சிட்டாங்களே ....கல்யாணம் கூட இப்பல்லாம் ஈஸி போலிருக்கு.வீடு கட்டுறதுதான்.. அம்மாடி!!!
ரெடியா வாங்கிட்டா பிரச்சினை இல்லை பாருங்க.. இன்னும் குறைஞ்சது பதினஞ்சு வருஷம் கழிச்சு வரும்போது, இன்னும் நல்ல மாடலா கிடைக்காதா என்ன!!.
இந்த பத்து நாளும் நேரம் போனதே தெரியலை.. ஊர் சுத்துறதும், மிச்ச நேரத்துல தம்பிகளின் மகள்களுடன் விளையாடுவதுமாக சந்தோஷமாக கழிஞ்சது. அதிலும் ஆறுமாதப்பூ ஒன்னு 'அத்தைமடி மெத்தையடி' என்று கீழே இறங்கவே இல்லை. மெஹந்தி, என்னுடைய முறையில் மஹாராஷ்ட்ரா ஸ்பெஷல் கிச்சடி என்று கவனித்ததில் மருமகள்கள் மெச்சிய மாமியாராகிப்போனேன்.
மறுநாள் காலை, ஒரு கூட்டுக்கிளிகள் அவரவர் தோப்பைத்தேடி பறக்கத்தயாரானோம்.தயாராகி, வரும் வழியிலேயே லஷ்மி விலாசில் அல்வாவும், திருவிழா மிட்டாய் என்று ஊர் வழக்கிலும், சுத்துமிட்டாய் என்று என்வழக்கிலும், சொல்லப்படும் ஸ்வீட்டையும் வாங்கிக்கிட்டோம். திருவிழாக்கடைகளில் ஒரு பெரியவட்டமா அதை சுத்தி வச்சிருப்பாங்க. ராவணன் சபையில், அனுமார் தன்னோட வாலையே சுத்திவெச்சு, சிம்மாசனமா உக்காந்திருப்பாரில்லையா..அதை கற்பனை செஞ்சுக்குங்க. அதுமாதிரிதான் இதுவும் இருக்கும்.
ஸ்டேஷன் வந்து, பிளாட்பாரத்தில் நின்னாச்சு.. கரெக்டா 8.30 க்கெல்லாம் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி ஜங்க்ஷனுக்குள் மூக்கை நீட்டியது.இருக்கை தேடி, பெட்டிகளை ஒழுங்கு செஞ்சுட்டு,வழியனுப்ப வந்தவங்ககிட்ட 'போயிட்டு வரோம்'ன்னு சொல்லி நிமிரவும் வண்டி கிளம்பியது.
நேரப்போக்குக்கு துணையா கள்ளிக்காட்டு இதிகாசம் இருந்தது. மதுரை வைகைப்பாலத்துக்கு மேலே வண்டி ஓடும்போது மனசு ஒரு நிமிஷம் வைகைஅணைக்கு போய்வந்தது. இதைப்போல எத்தனை எத்தனை இதிகாசங்கள் ஒவ்வொரு அணைக்கட்டுக்குப்பின்னாலும் இருக்குமோ....
மறு நாள் மதியத்துக்கெல்லாம் மஹாராஷ்ட்ரா எல்லைக்குள் வந்துவிட்டோம். 'ஷோலாப்பூர்' பெட்ஷீட்டுகளுக்கு பெயர் போனது. அதை தாண்டியதும் வரிசையாக கரும்புவயல்கள், புஞ்சை நிலப்பயிர்கள்...சோளம்,கம்பு,தினை எல்லாம் விளைஞ்சு நிக்கிது. இங்கே அதை மாவாக்கி ரொட்டி செய்வார்கள். நம்ம ஊரில் இப்ப இதெல்லாம் கிடைக்குதான்னு தெரியல்லை.பூனா வந்ததும் ரங்க்ஸுக்கு போன்பண்ணி, எங்கிருக்கோம்ன்னு சொல்லியாச்சு.suburban மும்பையின் முதல் ஸ்டேஷன் 'கல்யாண்'. அங்கியே இறங்கிக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம்,
பூனாவிலிருந்து வேறு எஞ்சின் மாற்றப்பட்டு வண்டி பயணத்தை தொடரும்.லோனாவாலா,(லோனாவ்லா என்று இங்கே சொல்வார்கள்) போன்ற மலைப்பகுதிகளில் போகும்போதே ஹாலிடே மூடு வந்துவிடுகிறது.பக்கத்திலிருக்கும் கண்டாலாவும் இதுவும் ஹனிமூன் ஜோடிகளின் ஃபேவரிட்.இரவு நேரங்களில் அங்கிருந்து பார்க்கும்போது கர்ஜத்,கசாரா பகுதிகளின் மின் விளக்குகள் நட்சத்திரங்கள் போல் ஜொலிக்கும். "தொலைதூரம் தோன்றும் ஊரிட்ட மின்விளக்கோ விண்மீன் கூட்டம்"ன்னு வரிகள் ஞாபகம் வருதா!!! .(உவமைக்கவிஞர் சுரதா ன்னு ஞாபகம்). 'லோனாவாலா சிக்கி' புகழ்பெற்றது. கடலை, எள், பாதாம், கலவைபருப்புகள்ன்னு நிறைய வெரைட்டி கிடைக்கும்.
அம்பர்'நாத்' வருதுன்னு மாசுபட்ட காற்றின் 'வாசனை'யே சொல்லிடும். அப்புறம் வர்ற உல்லாஸ் நகர், நான் மட்டும் என்ன எளப்பமா!!ன்னு அதோட பங்குக்கு உல்ஹாஸ் நதியோட வாசனையை சேர்த்து பரப்பும். ஒருகாலத்துல அது ஆறா இருந்ததுன்னு சத்தியம் செஞ்சாக்கூட யாரும் நம்பமாட்டாங்க. தொழிற்சாலைக்கழிவுகளை சுமந்து கொண்டு கரேல்ன்னு ஓடிக்கிட்டிருக்கு.தண்ணியை பழிக்கப்பிடாதுன்னு சொல்வாங்க.. சுயநலத்துக்காக மனுஷன் கொடுத்த விலைகளில் இதுவும் ஒன்னு....
கல்யாண் வந்து சேரும்போது மணி 7.40. ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து, சூடா ஒரு ச்சாய் குடிச்சிட்டு,பத்திரமா வந்து சேர்ந்ததை சொந்தங்களுக்கெல்லாம் சொல்லிட்டு, பக்கத்து தெருவில் விட்டிருந்த காரை எடுத்துக்கிட்டு(ஸ்டேஷனில் எதிர்க்க ஸ்கைவாக் கட்டிக்கிட்டிருக்காங்க ரெண்டு வருஷமா...எனவே அங்கே நோ பார்க்கிங்)வீடு வந்து சேர்ந்தோம்.ரங்க்ஸ் ஏற்கனவே சூடா சாப்பாடு தயார் செஞ்சு வெச்சிருந்தார்.தினமும் கிடைக்காதே!!!..ஸோ.... எஞ்சாய்...:-))
இவ்வளவு நாள் கூடவே வந்து ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.._/\_.. பயணக்களைப்புல குறட்டை விட்டு தூங்கிடாதீங்க... அப்பப்ப வரணும்.:-))




