Sunday 5 January 2020

மாம்பழம் வாங்கலையோ..

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் மாம்பழம் முதலாம் இடத்தில் வைத்துப்போற்றப்படுகிறது. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மட்டுமல்ல மாம்பழக்காலமும் ஆரம்பிக்கிறது. அப்பொழுது அல்போன்ஸாவோடு ஆரம்பிக்கும் மாம்பழக்காலம், ஜூலையில் மழைக்காலத்தில் கிளிமூக்கு மாம்பழங்களின் வருகையோடு நிறைவடையும்.  பாதாம் அப்பூஸ், கேஸர், லங்கடா, தஸேரி, நீலம், பங்கனபள்ளி, மல்கோவா என நாம் சுவைக்க பல்வேறு வகைகள் ஒவ்வொன்றாய் அணி வகுத்து வரும் மாம்பழக்காலத்தில் அதைப் பழத்துண்டுகளாகவும், சாறாகவும், மற்றும் பல இனிப்புகளாகவும், உணவு வகைகளாகவும் அவரவர் விரும்பிய வகையில் உண்பர் மக்கள்.

மாம்பழக்காலம் தொடங்கி விட்டது என்பதைக் கட்டியம் கூறி அறிவிக்கிறது அல்போன்ஸா மாம்பழங்களின் வருகை. அளவில் சற்றே சிறியதாய் இருந்தாலும் சுவை மிகுந்தது. மெல்லிய தோலும் அதிக அளவு சதைப்பற்றும் , மிகுந்த சுவையும் கொண்ட இப்பழம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஹாராஷ்ட்ராவின் ரத்னகிரி, தேவ்கட் போன்ற இடங்களில் விளையும் அல்போன்ஸா மாம்பழங்கள் மிகுந்த பிரசித்தி பெற்றவை. நார் சற்றும் இருக்காது ஆகவே, சீசனின்போது அல்போன்ஸாவை உபயோகித்து, வீடுகள் தோறும் ஆம்ரஸ் எனும் இனிப்பு செய்யப்படுவது வழக்கம். மற்ற மாம்பழ வகைகளிலும் செய்யலாமெனினும் அல்போன்ஸாவிலிருந்து தயாரிக்கப்படும் ஆம்ரஸ்ஸிற்குச் சுவையும் நிறமும் அதிகம்.


ருசி மற்றும் இதன் மற்ற குணங்கள் காரணமாக அல்போன்ஸாவானது "மாம்பழங்களின் ராஜா" என வழங்கப்படுகிறது. மஹாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை இது டஜன் கணக்கில்தான் விற்பனையாகிறது. சீசன் ஆரம்பிக்கும்போது ஒரு டஜன் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கும். மெல்ல மெல்லக்குறைந்து முன்னூறு ரூபாய் வரைக்கும் வருவதுண்டு. ஒரு டஜன் மட்டுமல்லாமல் இரண்டு, நான்கு, ஐந்து டஜன் மாம்பழங்கள் கொண்டவை என வகை வகையாகப் பெட்டிகள் விற்பனைக்கு சந்தையில் அடுக்கப்பட்டிருக்கும். மொத்தமாக வாங்கும்போது விலை சற்றுக்குறையும். அவரவர் சாமர்த்தியத்தைப்பொறுத்து பேரம் பேசி மேலும் விலையைக்குறைக்கலாம்.




பாதாம் அப்பூஸ்: வடிவிலும் நிறத்திலும் அல்போன்ஸாவைப்போன்றே தோற்றமளிக்கும் அதே சமயம், அளவில் சற்றுப்பெரிதான பாதாம் அப்பூஸ் மாம்பழம், கர்நாடகாவிலிருக்கும் பதாமி என்னும் இடத்தைத் தாயகமாகக் கொண்டது. ஆகவே அப்பெயர். அல்போன்ஸாவின் விற்பனை சற்று உச்சத்தை எட்டும் காலத்தில் இது சந்தையில் நுழையும். ருசியில் அல்போன்ஸாவிற்குச் சற்றும் குறைந்ததல்ல. ஆகவே அப்பூஸ் அளவிற்கே இதற்கும் வரவேற்பு கிடைப்பதுண்டு. இதுவும் நாரில்லா வகையைச் சேர்ந்ததே ஆகையால் ஜூஸ் முதலானவை தயாரிக்கப் பயன்படுகிறது.

கேசர்: நீள்வட்ட வடிவமும் பொன்னிறமும் கொண்டது. காம்பையொட்டிய பகுதியில் சிவந்திருக்கும். சந்தையில் அல்போன்ஸா மாம்பழங்களின் வரத்து சற்றுக்குறைய ஆரம்பிக்கும்போது கேசர் மாம்பழம் வர ஆரம்பிக்கும். கவர்ந்திழுக்கும் நறுமணம் மற்றும் இனிய சுவையின் காரணமாக இதுவும் அதிக அளவில் விற்பனையாகிறது. பழச்சாறு, பழக்கூழ், ஜாம் மற்றும் மாம்பழத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் மற்றும் மேற்கு இந்தியாவில் அதிகம் விளைகிறது. அல்போன்ஸா வகையை விட அளவில் சற்றுச் சிறியதான இப்பழம் "மாம்பழங்களின் ராணி" எனப் போற்றப்படுகிறது.

கிளிமூக்கு: சற்றே நீளமாய் அதே சமயம் உருண்டு திரண்டு இருக்கும் இந்த மாம்பழ வகை, கிளிமூக்கு, தோத்தாபுரி, பங்களோரா, கல்லாமணி, சந்தேர்ஷா என பற்பல பெயர்களால் அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகம் விளையும் கிளிமூக்கு மாங்காய் அதிகம் புளிப்பதில்லை, அதேசமயம் பழுத்தால் அதிகம் இனிப்பதுமில்லை. ஆகவே இது ஊறுகாய், பச்சடி, உப்பிலிடு போன்ற பதார்த்தங்களைத் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவியல், சாம்பார், கூட்டாஞ்சோறு போன்ற அயிட்டங்களில் சேர்த்தால் ருசி கூடும். பொதுவாக மாம்பழ சீசன் முடியப்போகும் காலத்தில்தான் இது சந்தைக்கு வரும்.
லங்கடா: உள்ளே நன்கு பழுத்தபின்னும் தோல் சற்று கெட்டியாக பச்சை வண்ணத்திலேயே இருக்கும். சற்று நீள் வடிவத்தில் இருக்கும். மாம்பழக்காலம் கிட்டத்தட்ட முடியப்போகும் சமயம் கேஸர் வகையுடன் இதுவும் சந்தையில் வர ஆரம்பிக்கும். சதைப்பகுதி லேசான நார் கொண்டது.

மீதமுள்ள வகைகள் வரும் மாம்பழக்காலத்தில் பகிரப்படும்.

முன்னொரு முறை பகிர்ந்ததை வாசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

மாம்பழம் - என்றாலே எனக்கு நெய்வேலி நினைவுகள் வந்து விடும். விதம் விதமான மாம்பழங்கள் - வீட்டிலேயே பங்கனபள்ளி மரம் கூட இருந்தது. தோத்தாபரி, லங்க்டா, கேசர், அல்ஃபோன்ஸா என இங்கே வந்த பிறகு இங்கே கிடைக்கும் மாம்பழ வகைகள் சுவைத்தாலும் நெய்வேலியில் சுவைத்த போது கிடைத்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை!

தொடரட்டும் பதிவுகள்.

LinkWithin

Related Posts with Thumbnails