Sunday, 8 March 2026

வலை ஜிமிக்கி - பண்புடன் மின்னிதழில் வெளியானது.


அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது அவளுடைய தலையாட்டலுக்கேற்ப மெலிதாக அசைந்து கன்னங்களின் ஓரத்தை உரசிச்செல்வது தனி அழகு. வலை ஜிமிக்கி வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டுக்கேட்டதற்காக பிரத்தியேகமாக அவளது பாட்டியே அதை வடிவமைத்து நகைக்கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொடுத்திருந்தாள். அம்மாதிரி நுணுக்கத்தை இப்போது வரும் மெஷின் கட் நகைகளில் பார்க்கவே முடியாது.

அந்த ஆண்டு குலதெய்வக்கோவிலின் பொங்கல் திருவிழாவிற்காகத் தன் அப்பாவுடன் சொந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தாள் சுவாதி. ஊரே கோலாகலமாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் பெரியப்பா வீட்டில் கூடியிருந்தார்கள். சுவாதியின் நெருங்கிய உறவினரான பெரியம்மா கஸ்தூரி, சுவாதியை உச்சி முகர்ந்து வரவேற்றார்.

அன்று மாலை திருவிழா முடிந்து அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கஸ்தூரி சுவாதியின் காதுகளைக் கவனித்தார். வலை ஜிமிக்கியோடு அதன் முத்துகளுக்குப் பொருத்தமாக முத்துகள் கோர்த்த மாட்டலையும் அணிந்திருந்தது வசீகரமான அழகைக் கொடுத்திருந்தது. "சுவாதி, இந்த ஜிமிக்கி எங்கே வாங்கினே? என்னமா ஒரு அழகா இருக்கு! இப்போலாம் இப்படி ஒரு கைவேலைப்பாட்டைப் பார்க்கவே முடியாது," என்று வியந்து சொன்னார்.

சுவாதி பெருமையாகச் சிரித்தாள். "ஆமா பெரியம்மா, இது எங்க பாட்டி எனக்குக் கொடுத்தது."

கஸ்தூரி "சரோஜாக்கும் வலை டிசைன்ல ஒரு ஜோடி ஜிமிக்கி செய்யணும்னு ஆசை. இந்த டிசைன் ரொம்ப அழகாயிருக்கு. ஒரு ரெண்டு நாளைக்குக் கழட்டிக்கொடுத்தீன்னா கடையில் மாடலுக்குக் காமிச்சுட்டுத் திருப்பித்தந்திருவேன்" என்றார். சரோஜா அவரது மகள். சமீபத்தில் திருமணமாகி முதல்முறையாக அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள்.

சுவாதிக்கு இதயம் ஒரு நொடி நின்றது போலிருந்தது. காதுகளிலிருந்து அந்த பாரத்தை இறக்கி வைப்பது, தன் உயிரையே கழற்றிக் கொடுப்பது போல அவளுக்குத் தோன்றியது. அதை அணிந்த நாளிலிருந்து இது வரை கழட்டியிராததால் "பெரியம்மா... இது..." என அவள் இழுத்தாள்.

அப்பா பக்கத்துல இருந்துகொண்டு, "மக்கா, பெரியம்மதானே கேக்கா? குடு... ஒரு ரெண்டு நாள்ல தந்துருவாள்லா? சொந்தக்காரங்ககிட்ட என்ன தயக்கம்?" என்றார். அப்பாவின் சொல்லுக்கு மறுபேச்சு பேசத் தெரியாத சுவாதி, கைகள் நடுங்க அந்த ஜிமிக்கிகளைக் கழற்றிக் கொடுத்தாள். கழற்றிய பின் தன் காதுகள் வெறுமையாக இருப்பதை அவளால் சகிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலை, எதிர்பாராத விதமாக அப்பாவிற்கு ஒரு முக்கியமான அவசர அழைப்பு வரவே, குடும்பத்துடன் உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல். சுவாதி பதறிப்போனாள். 

"பெரியம்மா, அந்த ஜிமிக்கி..."

"அதற்குள் என்னம்மா அவசரம்? நகைக்கடைக்குப் போயிட்டு, அடுத்த வாரம் உன் தம்பி ஊருக்கு வரும்போது அவன்கிட்டக் கொடுத்து அனுப்புறேன். இல்லன்னா நானே நேர்ல வந்து தர்றேன்," என்றார் கஸ்தூரி உறுதியாக. சுவாதி கனத்த இதயத்துடன் ஊருக்குத் திரும்பினாள்.

வாரம் ஒன்று கடந்தது. சுவாதி தன் செல்போனை அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கஸ்தூரியிடமிருந்து அழைப்பு வரவில்லை. பொறுத்துப் பார்த்துவிட்டு அவளே அழைத்தாள்.

"சுவாதி, இப்போதான் கூப்பிடலாம்னு இருந்தேன்.  இன்னும் ரெண்டு நாள்ல கொண்டு வரேன்" என்றார் கஸ்தூரி. அடுத்த வாரம் அழைத்தபோது, "உங்க ஊருக்குத்தான் பொறப்பட்டுட்டு இருந்தேன், ஒங்க மாமா சொந்தத்துல ஒரு இறப்பு, இப்ப அங்கதான் இருக்கேன். ஊருக்கு வந்ததும் மொத வேலையா ஒங்க வீட்டுக்குத்தான் வருவேன்" என்றார். இப்படி வாரங்கள் மாதங்களாகின. சுவாதிக்கு அழுகையே வந்துவிட்டது. அவளது காதுகளில் ஒரு சாதாரணக் கம்மலைப் போட்டிருந்தாள், ஆனால் அது அவளுக்கு ஏனோ அந்நியமாகவே இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாதி மீண்டும் அழைத்தாள். இந்த முறை கஸ்தூரியின் குரலில் ஒருவித நடுக்கம் இருந்தது.

"பெரியம்மா, போதும். என் ஜிமிக்கியைக் கொடுத்துடுங்க. நான் நேர்ல வந்து வாங்கிக்கவா?" என்றாள் கோபமும் அழுகையுமாக.

கஸ்தூரி நீண்ட பெருமூச்சு விட்டார். "சுவாதி... என்னை மன்னிச்சிடுமா. சரோஜாவுக்கு ஜிமிக்கி ஆர்டர் கொடுக்கைல கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஆகிட்டுது. கடையில் நின்னுக்கிட்டு இன்னும் நாலு கிராம் எடை கூடுதலாச் செய்யச்சொல்லுங்க, அப்பத்தான் பாரிக்கமா இருக்கும்ன்னு ஒரே நச்சு. எங்க பட்ஜெட்டையும் தாண்டிப்போயிட்டுது. கையிருப்பிலும் காசு இல்ல.  வேற வழியில்லாம உன் ஜிமிக்கியை அடகு வச்சிட்டேன்..."

சுவாதிக்குத் தலை சுற்றியது. "என்ன பெரியம்மா சொல்றீங்க? அது என் பாட்டி எனக்குக் கொடுத்தது. அதை எப்படி நீங்க அடகு வைக்கலாம்?"

"சூழல் அப்படி சுவாதி... இன்னும் ரெண்டு மாசத்துல வயல் அறுவடையானதும் மீட்டுத் தந்துடுறேன்..." என்று அவர் ஏதேதோ சமாதானம் சொன்னார். ஆனால் சுவாதியின் காதுகளில் எதுவும் விழவில்லை. அவள் அடைந்த கோபத்திற்கு எல்லையே இல்லை. பெரியம்மா செய்த நம்பிக்கை துரோகம் அவளைக் குலைத்தது. சுவாதி கோபத்துடன் போனை வைத்தாள். "உறவுன்னா என்னப்பா? ஒருத்தரோட பலவீனத்தை இன்னொருத்தர் லாபமாக்குறதுதானா? ஏன் மனுஷங்க இவ்வளவு சுயநலமா இருக்காங்க?" என்று தன் அப்பாவிடம் பொருமினாள். மாதங்கள் ஓடின. ஆனால் ஜிமிக்கி வந்தபாடில்லை. கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் அக்காட்சி அவளை வதைத்தது.

ஓராண்டு கழித்து, ஒரு அதிகாலை நேரத்தில் வாசலில் ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்டது. சுவாதியின் அப்பா கதவைத் திறந்தார். வெளியே கஸ்தூரி நின்றிருந்தார். முகம் வாடிப் போயிருந்தது.

அப்பா எதையும் பேசவில்லை. கஸ்தூரி நேராக சுவாதியின் அறைக்குள் நுழைந்தார். சுவாதி அவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கஸ்தூரி மெதுவாக அவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டார். "சுவாதி..  என்னைய மன்னிச்சிருடி. அந்த ஜிமிக்கிய அடகு வச்ச இடத்துல இருந்து மீட்க முடியல. வட்டி ஏறிப்போச்சு. இப்போ அந்த நகை மூழ்கிப்போச்சு மக்கா..." என்று விம்மினார்.

சுவாதிக்குத் தலையே சுற்றுவது போலிருந்தது, எதிர்பார்த்த அளவுக்கு வயலில் வருமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் நகையை மீட்க முடியாமல் மூழ்கிப்போனதையும், எப்பாடு பட்டேனும் அதே போல் நகையைச் செய்து கொண்டு தந்தபின்தான் இனி இந்த வாசல்படி ஏறுவேன் என்றும் பெரியம்மா சொல்லிவிட்டுச் சென்றது கூட கவனத்தில் ஏறாமல் உணர்விழந்து அமர்ந்திருந்தாள். துக்கமும் கோபமும் பொங்கிப்பொங்கி வந்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா!! என உள்ளுக்குள் கசந்தது.

இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. கொஞ்சங்கொஞ்சமாக அந்த நினைவுகளையெல்லாம் மறக்க முயன்று கொண்டிருந்தாள் அவள். என்னதான் எதிர்பாராதவிதமாக நடந்திருந்தாலும் தன்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் எனத்தோன்றியது. அப்பாவிடம் சொல்லி அந்தப் பணத்தைக் கொடுத்து, தானே அந்த நகையை மீட்டிருந்தால் மூழ்கியிருக்காதே! எனவும் யோசித்தாள். பாட்டி ஞாபகமாக வைத்திருந்ததை இப்படிக் கை நழுவ விட்டுவிட்டோமே என தன் மீதே கோபம் கொண்டாள். கோபம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறிப்போயிருந்தாலும் அதன் வடு இன்னமும் இருந்தது. 

சரோஜாவுக்குக் குழந்தை பிறந்து, அதற்குப் பெயர் சூட்டும் விழாவுக்கு விருப்பமே இல்லாமல்தான் சுவாதி சென்றிருந்தாள். அங்கே போனால் அவர்களையெல்லாம் பார்க்க நேரிடும், நீறு பூத்திருக்கும் நெருப்பு கனன்று கொள்ள ஆரம்பிக்கும் எனப் பயந்தாள். வீட்டினுள் கஸ்தூரி பெரியம்மா ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார். சரோஜாவின் புகுந்த வீட்டிலும் நிலைமை சரியில்லை எனக் கேள்விப்பட்டிருந்தாள். ஏதோ பணப் பிரச்சனை வர, சரோஜாவின் நகைகளை எல்லாம் அவளது மாமியார் பிடுங்கிக் கொண்டதாகத் தகவல்.

சுவாதியைக்கண்டதும் கஸ்தூரி ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். கன்னம் தடவி முத்தினார். “நீ வருவேன்னு காத்திருந்தேன் மக்கா” எனச்சொன்னபோது கண்களில் அதே பழைய பாசம் மினுமினுத்ததைக் கண்ட சுவாதிக்கும் உள்ளுக்குள் ஏதோ கரைந்தது. அவளைத் தனியாகக் கூட்டிப்போனவர், பர்ஸ் உள்ளிருந்து ஒரு சிறிய ரோஸ் நிறக் காகிதப்பொட்டலத்தை எடுத்தார். அதனுள்ளிருந்த ஒரு சிறிய பட்டுத் துணியை விரித்தார். உள்ளே அதே வலை டிசைன் ஜிமிக்கி மின்னிற்று.

சுவாதி அதிர்ச்சியுடன் பார்த்தாள். "இதோ உன் சொத்து சுவாதி. இதை மீட்கத்தான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன். அடகு வெச்சிருந்தவங்க கிட்ட கெஞ்சிக்கூத்தாடி மறுபடி தவணை கேட்டு எப்படியோ பணத்தைப்புரட்டி உன்னோட நகையையே மீட்டுட்டேன். உன் பாட்டியையே உங்கிட்ட சேர்த்த மாதிரி தோணுது. இப்போதான் என் மனசு நிம்மதியா இருக்கு," என்றார் கண்ணீருடன்.

சுவாதி அதை வாங்கிப் பார்த்தாள். ஒரு காலத்தில் அவளது உயிராக இருந்த அந்த ஜிமிக்கி, இப்போது அவளுக்கு வெறும் பொருளாக மட்டுமே தெரிந்தது.

கஸ்தூரியின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. சுவாதியின் கோபம் ஒரு நொடியில் பனியாகக் கரைந்தது. 

"பெரியம்மா, இதுக்காக நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டீங்க?" என்றாள் சுவாதி அவரை அணைத்துக்கொண்டு.

"மானம் பெருசு சுவாதி. அதைவிட உன் அன்பு பெருசு. இந்த நகை நம்ம மனசுல ஏற்படுத்தின விரிசல் ரொம்பப்பெருசு. அதை எப்படியாவது நிரப்பணும், என் பிள்ளை நீ.. என்னை விட்டு விலகிடக்கூடாதுன்னு நினைச்சேன். நம்ம பொருளை நம்மோட அனுமதி இல்லாம இன்னொருத்தர் அழிச்சா, மனசு என்ன பாடுபடும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு," என்றார் கஸ்தூரி.

அவள் மெதுவாகச் சொன்னாள், "நகை திரும்ப வந்துட்டுது. ஆனா என் மனுஷங்க மேல இருந்த அந்த நம்பிக்கை போயிட்டுதே? நகை போனா மீட்டுரலாம், ஆனா போன நம்பிக்கையை எப்படிக் கொண்டு வர்றது? இப்போ, இந்தப் பொன் எனக்குப் பெருசாத் தெரியல பெரிம்மா. நீங்க உங்க தப்ப உணர்ந்தீங்களே, அதுதான் எனக்குப் பெரிய நகை. போயிட்டுப்போகுது. காலம் எல்லாத்தையும் ஆத்தும்ன்னு சொல்வாங்க. ஆத்தட்டும்…” என்றவள், கையிலிருந்த நகையை தொட்டிலில் கிடந்த குழந்தையின் கையில் வைத்து அதன் உள்ளங்கையை மூடி, “இது இந்தச் சித்தியோட பரிசு செல்லம்.. வளர்ந்தப்புறம் போட்டுக்கோ” என்றாள். “சரோஜா கழுத்துல, காதுல எதுவுமில்லாம இருக்கா, இதைப்போட்டுக்கச்சொல்லுங்க பெரிம்மா” என கஸ்தூரியின் காதுகளில் கிசுகிசுத்தாள். கண்கலங்கப்பார்த்துக்கொண்டிருந்த கஸ்தூரி, குழந்தையை எடுத்து சுவாதியின் மடியில் இட்டாள். கொஞ்சத்தொடங்கிய சுவாதியையும் மடியிலிருந்த குழந்தையையும் ஒரு சேர அணைத்தன அவள் கைகள்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Thursday, 5 February 2026

அத்தினி - சித்ரா சிவன்( புத்தக மதிப்புரை)


நூல்: அத்தினி
ஆசிரியர்: சித்ரா சிவன்
வெளியீடு: பிறகு பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவு)
முதல் பதிப்பு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 229
விலை:280

இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் ஒரு நேர்காணல் தொகுப்பையும் வெளியிட்டுள்ள சித்ரா சிவனின் மூன்றாவது புத்தகமே அத்தினி. இது இவரது முதல் நாவலுமாகும். இந்த நாவல் ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2024 போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது. மேலும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, சௌமா இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளது. சித்ரா சிவன் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் எழுதிவருகிறார்.

“அத்தினி” என்ற சொல் பெண்யானையையும் குறிக்கும், பெண்ணையும் குறிக்கும். யானைக்கூட்டத்தில் ஆளுமை மிக்க ஆண் யானைகள் இருந்தாலும், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெண்யானையே அக்கூட்டத்தைத் தலைமை தாங்கி வழி நடத்திச்செல்லும், இடர்களை முன்கூட்டியே அறிந்து தன் கூட்டத்தைப் பாதுகாத்துக்கொள்ளும். அவ்வாறே, வெளிப்பார்வைக்கு ஆண் குடும்பத்தை நடத்துவது போல் தோன்றினாலும், முக்கியமான முடிவுகளை அக்குடும்பத்திலுள்ள தலைமைப்பெண்ணே எடுக்கிறாள். ஆண் அந்த முடிவைச் செயல்படுத்துகிறான். சில குடும்பங்களில் பெண்ணே வெளிப்படையாகக் குடும்பத்தை நடத்திச்செல்வதைக் காண முடியும். இது நாம் தாய்வழிச் சமூகமாக இருந்ததன் எச்சம். 

இவ்வாறு தலைமைப்பண்புடன் இயங்கும் பெண்களிடம் தைரியமும், தன்னம்பிக்கையும், சுதந்திர மனப்பான்மையும் சற்று அதிகமாகவே இருக்கும். வாழ்க்கைப்பயணத்தில் கூட நமக்கு வேறு துணை யாரும் தேவையில்லை என்ற முடிவுடன் தனித்தியங்குவர். அப்படிப்பட்ட சகோதரிகளான பவித்ரா தேவி, உமையாள் என்ற இரு பெண்களையும் அவர்களின் உலகத்தையும் மையமாகக் கொண்டிருக்கிறது எழுத்தாளர் சித்ரா சிவனின் “அத்தினி” என்ற இந்நாவல். 

ஆஸ்பத்திரி கேண்டீனை கதைக்களனாகக் கொண்டிருக்கும் நாவலில் ருசிக்குக் குறைவில்லை, பாத்திரங்களுக்கும் குறைவில்லை. பவித்ரா எனும் அத்தினியின் கூட்டத்தில்தான் எத்தனையெத்தனை அத்தினிகள். ஆனால், அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதாமல், ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருப்பதுதான் பெருஞ்சிறப்பு. அவரவரின் வலிகளைப் பகிர்ந்து கொண்டாலும், அதிலேயே அமிழ்ந்து கிடக்காமல் அந்த வலிகளை வெல்லும் யுக்திகளையும் கையாண்டு நகர்ந்து செல்கின்றனர்.

பெண்களின் கதைகளைப் பெண்களே எழுதும்போது, அவர்களை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. சரிதா, பூங்கொடி போன்றவர்களின் கதைகளைப் புரிந்துகொள்ள முடிவதைப்போல. ஆஸ்பத்திரியில் பவித்ரா சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணிடமும்தான் எத்தனை சோகம் கொட்டிக்கிடக்கிறது. பெரும்பாலும் குடும்ப வன்முறைக்கு ஆட்பட்டவர்களாக, ஆணாதிக்கத்தால் நசுக்கப்படுபவர்களாக இருக்கும் அவர்களின் தலை சாயும் ஒரு தோளாக இருக்கிறாள் பவித்ரா. அவள் மூலம், பெண்கள் விரும்பும் ஓர் உலகத்தைப் பல நிகழ்வுகள் மூலம் சுட்டுகிறார் எழுத்தாளர். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிறுவப்பட்டிருக்கும் பல சமூகக்கோட்பாடுகளை அநாயாசமாக உடைத்தெறிந்திருக்கிறார். ஏன் கூடாது? என்ற கேள்வி வாசிப்பவர் மனதில் எழும் எனில் அதுவே அவரது எழுத்தின் பலம். ஆற்றொழுக்குப்போன்ற தெளிவான நடையில் பட்டுப்போன்ற மொழியில் ஒழுகிச்செல்கிறது நாவல். ஆங்காங்கே பட்டுக்கத்தரித்தாற்போன்று கருத்துகளைச்சொல்லவும் தவறவில்லை ஆசிரியர்.

அன்னக்கொடியின் பாத்திரப்படைப்பு மிகவும் கவர்ந்தது. அத்தனை ஆளுமையுள்ள, பொருளாதாரச் சுதந்திரமுள்ள ஒரு பெண்ணாக இருந்தபோதும் கணவனின் சொல்லைத்தாங்கவியலாமல் தன்னையே கொளுத்திக்கொள்ளுமளவு அவள், கணவன் என்ற ஆணின் அதிகாரத்தால் பலவீனப்படுகிறாள். அவளது தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் ஆளுமைத்திறனின் எச்சமே பவித்ராவாக நீள்கிறது. வாழ்வில் சந்திக்க நேரிடும் நிகழ்வுகளால், திருமணத்தை வெறுத்த சகோதரிகள் தனியாகவே வாழ்கிறார்கள். குடும்பச்சொத்துகளையும் காத்துக்கொண்டு தேவைப்படுபவர்களுக்குத் தங்களாலான உதவியைச்செய்துகொண்டு வாழ்ந்த அவர்களின் வாழ்வில் மாறன், இளங்கோ எனும் இரு ஆண்கள் குறுக்கிடுகிறார்கள். நாவலில் பெரும்பாலும் கூறப்பட்ட ஆண்களைப்போலில்லாமல் இவர்கள் நல்லவர்களாகச் சித்திரிக்கப்பட்டது சிறப்பு. எல்லா ஆண்களும் கெட்டவர்களாக இருந்து விடுவதில்லைதானே. அவர்களில் மாறனை உமையாள் திருமணம் செய்துகொண்டு அவளுக்கான தனிக்கூட்டை அமைத்துக்கொண்டுவிடுகிறார். பவித்ராவும் இளங்கோவும் ஒருவர் கனவை ஒருவர் மதித்து அவரவர் பாதையில் செல்கின்றனர். ஆனால் அதுவுமே பவித்ராவை இன்னும் புடம் போடுமேயன்றி பலவீனப்படுத்தாது. கூட்டத்தின் முன்னால் தலை குலுக்கி, மத்தகத்தை நிமிர்த்திகொண்டு நடை போடும் அந்த அத்தினி.

Sunday, 25 January 2026

வயிற்றுக் கணக்கு - சரவணன் சந்திரன் (புத்தக மதிப்புரை)

நூல்: வயிற்றுக்கணக்கு
ஆசிரியர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 220
முதல் பதிப்பு : 2024

எழுத்தாளன் தான் சொல்ல விரும்புபவற்றை கதை, கவிதை, கட்டுரை, யாப்பு எனப் பல வடிவங்களின் மூலமாகப் பகிர்கிறான். இவற்றில் தான் சந்திக்கும் மனிதர்களை வாசித்து அந்த அனுபவங்களை நம்முடன் கட்டுரை வடிவில் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன். அச்சு, மின், காட்சி என எல்லா தரப்பட்ட ஊடகங்களிலும் பங்களித்திருக்கும் அனுபவம், இவரது முதிர்ந்த எழுத்துகளிலும் பிரதிபலிக்கிறது. மொத்தம் 27 கட்டுரைகளைக்கொண்டிருக்கும் இத்தொகுப்பினை வாசிக்கும்போது, இவை கதைகளா? அல்லது கட்டுரைகளா? என்ற உளமயக்கம் ஏற்படுகிறது. 

இலக்கிய மாந்தருக்குச் சற்றும் குறையாத வாழ்வியல் அனுபவங்களுடன் நடமாடும் மனிதர்கள், சித்தர்களுடனான அனுபவப்பகிர்வுகள், செய்யும் மீன்தொழில் முறையில் கொண்டிருக்கும் கடல் மற்றும் கடலுணவு பற்றிய ஞானம், விவசாயத்தையும் ஏற்றுச்செய்வதால் வானிலை மாற்றங்கள் பற்றிய கவனிப்பு, விளையாட்டு வீரராகவும் இருப்பதால், உடலை, ஆரோக்கியத்தைக் கவனிப்பது என எல்லாவற்றையும் ஒருக்கியிருக்கும் இவற்றை வாழ்வியல் கதைகள் என்றே சொல்லலாம். தன்னைச்சுற்றி இருப்பவற்றைக் கவனிப்பதும், அவற்றை எழுத்தில் கொண்டுவருவதும் எழுத்தாளனின் இயல்பு, ஆனால், நாமும் களத்தில் இருப்பது போன்றே உயிரோட்டத்துடன் உணரச்செய்கிறது இவரது எழுத்து. 

எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் பழக்கம் எப்படி வந்தது எனவும் அச்சுமையை எப்படி இறக்கி வைத்து, தன்னைத்தானே அணைத்து வைக்கப் பழகிக்கொண்டார் எனச்சுட்டுகிறார் ‘அணைத்தல்’ என்ற கட்டுரையில். 

பூத்துக்கிடந்த வயிறு, ஓய்ந்து அணைவது வரையிலானது வயிற்றுக் கணக்கு மட்டுமல்ல.. வாழ்ந்த காலத்தின் கணக்கும் கூட. அதற்குப்பின்தான் மனித மனது நாவால் ருசித்தவற்றையெல்லாம் மனதால் ரசிக்க ஆரம்பிக்கிறது. பிறர் சாப்பிடுவதைப் பார்த்தாலே அதற்கு நிறைந்து விடுகிறது. தொகுப்பின் தலைப்புக்கட்டுரையாய், சோற்றுக்கணக்கின் பாதிப்பில் அமைந்த “வயிற்றுக்கணக்கு” சுவாரஸ்யம்.

நுணுக்கமாகக் கணித்து மதிப்பிடும் மனிதர்களைப்பற்றிய “கண்மதிப்பு” கட்டுரை சிறப்பு. சரியாகக் கணித்து கவனமுடன் செயல்பட்டாலே பல தோல்விகளைத் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாவல் பிறந்த கதையைக்கூட அவ்வளவு சுவையாகச் சொல்லியிருக்கிறார் “சுபிட்ச முருகன்” கட்டுரையில்.

அவரவர் நியாயங்கள் அவரவருக்கு. அதை அடுத்தவர் மேல் ஏற்றித்துன்புறுத்தி அடுத்தவர் மேல் ஆக்கிரமிப்பு செலுத்தினால் என்னாகும்? “காதலின் பரிசு” கட்டுரையை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். தற்காலத்தில் விவசாயம் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது என்கிறார். எப்படி? என்பதை மூங்கில் புல் கட்டுரையில் காணலாம். அத்தனை இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளைக் கடந்துதான் நடந்துகொண்டிருக்கிறது விவசாயம். 

போதையின் பாதையில் தடுமாறி கெடுவழியில் சென்ற மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. ‘இளைதாய் முள்மரம் கொல்க’ என்பது வாக்கு. இக்கால இளைஞர்களில் சிலர் அவ்வாறு மூத்தோர் சொல் கேட்டு கெடுவழக்கங்களைக் கைவிடுவரா? எனச் சந்தேகிப்போர் “பொறுப்பு” கட்டுரையை வாசித்தல் நலம். தங்க ஊசிகள் நடமாடும் நாட்டில் நமது கண்ணை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

“மனிதன்தான் படைப்புச்செயலின் உச்சம்” என்று கூறும் சரவணன் சந்திரனின் படைப்புகளில் மனிதர்களுக்கும் அவர்தம் ஓயாத கதைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு மூட்டை தானியத்தை ஒரே நாளில் கொத்தித்தின்ன ஆசைப்படும் வாசகக் குருவிகளுக்கு ஏற்றதுதான் அந்த விளைநிலம்.

LinkWithin

Related Posts with Thumbnails