சிறுகதையை வெளியிட்ட "பூபாளம்" இதழுக்கு நன்றி
பீரோவைத்திறந்து, அடுக்கப்பட்டிருந்த அம்மாவின் சேலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ரகு. ரகம் வாரியாகப் பிரித்து வெகு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள் அம்மா. விசேஷங்களுக்கு உடுத்தும் பட்டுப்புடவைகள், சில்க் காட்டன், ஜரிகை போட்ட ஜிகுஜிகுவென்ற புடவைகள் ஒவ்வொன்றும் பழைய தலையணை உறைகளுக்குள் தனித்தனியாகப் பொதியப்பட்டிருந்தன. அக்கம்பக்கம் கோவில்களுக்குப்போக, ஷாப்பிங் மற்றும் உற்றார் உறவினர் வீடுகளுக்குப் பளிச்செனச்செல்ல என அதற்கேற்ற வகையில் உள்ள புடவைகளை இன்னொரு அடுக்கில் வைத்திருந்தாள். தினப்படி வீட்டில் உடுத்தும் எளிய காட்டன் புடவைகள் நடுத்தட்டில் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன.
அம்மாவுக்கு எல்லாவற்றிலும் நேர்த்தி வேண்டும், ஏனோதானோவென செயல்படுவது அவளுக்குப் பிடிக்காது. வீட்டில் உடுத்தும் சேலைகளைக்கூட அவ்வப்போது கஞ்சி போட்டு, மொடமொடப்பாக அயர்ன் செய்து உடுத்துவாள். எப்போது அவளைப் பார்த்தாலும் ஏதோ இப்போதுதான் வெளியில் கிளம்பத்தயாராய் இருப்பது போல் பளிச்சென்று இருப்பாள். ரகு லேசாக முன்னகர்ந்து வாத்சல்யத்துடன் சேலைகளைப் பட்டும்படாமலும் வருடியபோது, பொத்தென்று ஒரு சேலை கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அசங்கி, உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த மேட்சிங் ப்ளவுஸ் லேசாக சேலைக்கு வெளியே வந்து தெரிந்தது.
குனிந்து எடுத்து முகத்தை சேலையில் புதைத்துக்கொண்டு முகர்ந்து அனுபவித்தான். அந்த மென்மையும் வாசனையும் அவளது மடியில் படுத்துக்கிடந்த தினங்களை ஞாபகப்படுத்தியது. அம்மாவின் மடியில் யார் படுப்பதென்பதில் எப்பொழுதும் அவனுக்கும் சின்னக்காவுக்கும்தான் போட்டி. வெளியூரில் வேலை கிடைத்து, பெட்டியை அடுக்கும்போது முதலாவதாக அம்மாவின் பழம்புடவையொன்றைத்தான் எடுத்து வைத்துக்கொண்டான். வீட்டு ஞாபகம் மேலிட்டு அதிகமாகி ஏக்கமாக மாறி தூக்கம் தொலைத்த இரவுகளில் அதைப் போர்த்திக்கொண்டு உறங்குவான். அம்மாவே அருகிலிருந்து தலையைக்கோதி தூங்க வைப்பதுபோல் உணர்வான்.
கையிலிருந்த புடவையின் மேல் அவன் பார்வை சென்றது. இதே மாதிரியான புடவையால்தான் அன்றைக்கு அம்மாவுக்கும் பாட்டிக்குமிடையே சண்டை வந்தது. இதுதானா அது?! இல்லையில்லை.. இது பிங்க் கலர் அல்லவா!, அம்மாவிற்குக் கோபமேற்படுத்திய அந்தப்புடவை நல்ல வாடாமல்லி கலர். பேத்தியின் பிறந்த நாளுக்கென பாட்டி வாங்கி வைத்திருந்தாள். புடவையைக் கண்டதும் பெரியம்மாவின் கண்கள் விரிந்தன. அவளது வழக்கப்படி முதலில் விலையைப் பார்த்தாள். விலையுயர்ந்த புடவை என்றதும் ஆசையில் பளபளத்தன அவள் கண்கள். “இதை நான் எடுத்துக்கறேனே அம்மா?” என மூத்த மகள் ஆசைப்பட்டுக்கேட்டதும் புடவையை அவளிடம் தூக்கிக்கொடுத்து விட்டு பேத்திக்கு வாடாமல்லி கலரில் ஒரு புடவையை வாங்கிக்கொண்டு சின்ன மகளின் வீட்டுக்கு வந்தார்.
வந்தவர் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல், நடந்ததைச் சொல்லிவிட அம்மாவுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. ‘எம்புள்ளையோட பொறந்த நாளுக்குன்னு வாங்குனதை நீங்க வழக்கம்போல ஒங்க மூத்தமகளுக்கே தாரை வாத்துட்டு வந்துருக்கீங்களா’ என ஆவேசப்பட்டுச்சீறியவர், அந்த புதுப்புடவையை வாங்கி, பாட்டி பதறப்பதற சரிபாதியாக இரண்டாகக் கிழித்தார். “அடுத்த வீட்டு ராகினி அக்காட்ட கொடுத்து ஒனக்கும் கீதா அக்காக்குமா ரெண்டு பாவாடை தைக்கச்சொல்லு” என சின்னக்காவை அனுப்பினார். நடந்ததைக் கேள்விப்பட்ட பெரியம்மா அதன்பின் அடுத்தவர் புடவைகளுக்கு, முக்கியமாய் தங்கையின் உடமைகளுக்கு ஆசைப்படுவதையே விட்டுவிட்டார்.
அவர்களது குடும்ப வட்டாரத்தில் அவளது உடைரசனை மிகவும் பிரசித்தம். “ஏட்டி சியாமளா.. ஒனக்குன்னு எங்கேருந்துதான் கிடைக்குதோ?!!.. நாங்களுந்தான் நாகருகோயிலு, திருனேலின்னு கட கடயா அலஞ்சு அலசுதோம். இந்தக் கலருதாம் வேணும்ன்னு கட கடயா முங்கி முத்தெடுத்தோம். அப்புடியும் வீட்டுக்கு வந்து பிரிச்சுப்பாத்தா அந்தச்சேல அவ்வளவா நல்லாயில்லாத மாதிரி தோணி, புடிக்காம போயிட்டு. ஒனக்கு எந்தச்சேல கட்டுனாலும் அம்சமா பொருத்தமா இருக்கு” என பாதி வயிற்றெரிச்சலில் குமைவார்கள். “அவளும்.. அவளுக்க சீலையும்.. பெரிய ஆப்பீசர் கணக்கால்லா மினுக்கிட்டு அலயுதா” என்பவர்கள் கூட, “சியாமளா.. நாளைக்கு மகன் கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க சொக்காரங்க, அப்றம் கல்யாணப்பொண்ணுன்னு எல்லாருக்கும் சேலை எடுக்கணும். நீயும் வாயேன், உன் செலக்ஷந்தான் டாப்பா இருக்கும்” என கூச்சநாச்சமில்லாமல் அழைப்பார்கள்.
இத்தனைக்கும் ஒவ்வொரு பெண்களைப்போல் பத்து கடைகள் ஏறியிறங்கி, எல்லாப்புடவைகளையும் கலைத்துப்போடச்சொல்லி கடை ஊழியர்களின் பொறுமையைச் சோதிக்கும் ரகமில்லை அவள். ரேக்குகளில் அடுக்கப்பட்டிருப்பவைகளை கண்ணாலேயே அலசி ஆராய்ந்து நாலைந்தை எடுத்துப்போடச்சொல்லி ஒன்றை செலக்ட் செய்து ஐந்து நிமிடத்தில் கடையை விட்டு வெளியே வருபவள் அவள். “உங்களுக்கு உங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா? எங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா?” என அவன் ஒரு நாள் கேட்டதற்கு, “எனக்கு நான் வாங்கிக்கறதுதான் பிடிக்கும்?” என குறும்புடன் சொன்னாள்.
“பீரோ முழுக்க புடவையா வாங்கி அடுக்கி வெச்சிருக்கியே.. கொடுத்து வெச்சவதான் போ..” என ஓர் உறவுக்காரி சொல்லிவிட்டுப்போன அன்றைக்கு அந்திக்கருக்கலில், உப்பும், மிளகும், கடுகும், வரமிளகாயுமாய் பொட்டலம் கட்டி, புடவைகளுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டவள் அவள். அம்மாவின் புடவைக்காதலைப் பற்றிப் புரிந்திருந்த மகள்களும் மகன்களும் அவளுக்கு விதவிதமாய் வாங்கிக்கொடுத்தாலும், அவளுக்கு ரகு ஒவ்வொரு முறையும் வெளியூர்களுக்குப்போய் வரும்போது அந்தந்த ஊரின் ஸ்பெஷல் என வாங்கி வரும் புடவைகள் என்றால் தனிப்பிரியம். “பணக்கார மகன் வாங்கிக்கொடுக்கறதுதானே ஒனக்குப்புடிக்கும், நாங்க வாங்கிக்கொடுக்கறதுல்லாம் புடிக்குமா?” என சின்னக்கா ஒரு நாள் குத்தலாகச்சொன்னபோது, “ஏட்டி.. என்ன வார்த்தை சொல்லுகே? தாய்க்கு எல்லாப்புள்ளையளும் ஒண்ணுதான்” என அடக்கிவிட்டாள்.
“கையைத்தூக்க முடியலைப்பா இப்பல்லாம், ப்ளவுஸ் போடறதுக்குள்ள சீவன் போகுது” வயோதிகத்தின் முதல்படியில் நின்றுகொண்டு அலுப்புடன் அம்மா சொன்னபோது, முதன்முதலாக நைட்டி அணிய நேர்ந்த கூச்சமும், இனிமேல் புடவையே கட்டிக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவளிடம் லேசாக எட்டிப்பார்த்தது. நாளாக ஆக நடமாட்டம் குறைந்தபோது பார்த்துப்போகவென வந்திருந்த சின்னக்கா, “இனும உடுத்தமுடியாதுன்னு ஆயாச்சுன்னா, எங்களுக்கு ஆளுக்கு ரெண்டு புடவைங்களைத் தரலாமில்ல? நாங்களாவது கட்டி அனுபவிப்போம்” என்றதற்கு,
“என் கண்ணுள்ள வரைக்கும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கட்டும், நான் போனதுக்கும்பொறவு என்னமும் செஞ்சுக்கோங்க” என்று ஒரேயடியாய் மறுத்துச் சொல்லிவிட்டாள்.
அப்படியெல்லாம் சேலைகளை ஆசையுடன் கட்டிக்காத்த அம்மாவைத்தான் இன்று சிதையில் வைத்து விட்டுத் திரும்பியிருந்தார்கள் அவனும் அண்ணனும். நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை, பின்னால் கேட்ட பேச்சுக்குரல் நனவுக்குக்கொண்டுவந்தது.
அக்காக்களும் அண்ணியும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்..
“என்னதான் சொல்லுங்க.. அம்மாவோட கலெக்ஷன் போல வராது”
“அப்பம்லாம் அம்மா புதுப்புடவை எடுத்தா, மொதல்ல என்னைத்தான் கட்டச்சொல்லுவாங்க. அதென்னவோ அம்மாவுக்கு அப்படி ஒரு செண்டிமெண்ட்” இது பெரியக்கா.
“நீ கல்யாணமாகிப்போனப்புறம் அம்மா என்னைக் கட்டிக்கச்சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க” இது சின்னக்கா.
“எனக்கு அம்மாவோட ஞாபகமா ஒரு சேலை வேணும்”
“எனக்கும்..”
“எனக்கும்..”
சேலைக்கடை போல் ஆகியிருந்தது வீட்டுக்கூடம்.
“அடடா!!.. அதுக்கென்ன? ஒண்ணென்ன?! யார்யாருக்கு என்னென்ன வேணுமோ எடுத்துக்கிடுங்க” என்றான் பெரியண்ணன்.
அவர்கள் வருவதை உணர்ந்து வழிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான் ரகு. அவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு புடவையாகக் கையிலெடுத்துப்பார்த்து, பிடித்தவற்றை.. முக்கியமாக விலையுயர்ந்தவற்றைத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார்கள். அவரவர் வாங்கிக்கொடுத்தவற்றையும் கவனமாக அவரவரே எடுத்துக்கொண்டனர்.
“இந்த காப்பிப்பொடி கலர் புடவை, மகேசுக்கு நல்லாருக்கும், அவளுக்குத்தான் கொடுக்கப்போறேன்னு அத்தை சொல்லிக்கிட்டே இருந்தாங்க” என்றாள் அண்ணி. மகேசு என்ற மகேஸ்வரி அவள் மகள்.
“அந்தப்புடவை அம்மாவோட சித்தி பையன் அவன் மகளோட கல்யாணத்துக்கு அம்மாவுக்கு வச்சுக்குடுத்ததுதானே? அம்மா சார்பா அந்தக்கல்யாணத்துக்கு நான் ஐயாயிரம் ரூவா மொய் செஞ்சேன் பாத்துக்கோ. பரவால்ல, மாமா நல்ல புடவையாத்தான் எடுத்திருக்கார்” என்ற சின்னக்கா புடவையைத் தன்மேல் போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள்.
“எம்புள்ள இன்ன நேரம்ன்னு கிடையாது.. பெரியவளாகிருவா. அவளுக்கு ஆச்சியோட சீரா, மொதப்பொடவையா இத கொண்டுட்டுப் போறேன். காப்பிப்பொடி கலர் அவ நெறத்துக்கு நல்லா எடுப்பா இருக்கும்” என்றாள் பெரியக்கா.
புடவைகளின் சரசரப்பினூடே பேச்சும் சலசலத்துக்கொண்டிருந்தது. ஒரே புடவைக்கு அத்தனை பேரும் போட்டி போடும்போது பெண்கள் நடத்தும் நுண்ணரசியலை நினைத்து அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘இது எனக்கு வேண்டும்’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லாமல் அதே சமயம் அத்தனை பேருக்கும் அழுத்தமாகப் புரியும் வண்ணம் எப்படி சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒரு சதுரங்க ஆட்டத்துக்கேயுரிய லாவகத்துடன் எத்தனை அழகாகக் காய் நகர்த்தி பாகம் பிரித்துக்கொள்கிறார்கள் என ஆச்சரியப்பட்டான். தனக்குத் திருமணமாகியிருந்தால் இந்நேரம் தன் மனைவியும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பாளோ என யோசனையாக இருந்தது. இவர்கள் அம்மாவின் நினைவுகளைப் பகிர்கிறார்களா அல்லது அதைச்சாக்கிட்டு அவளது பொருட்களை மிச்சமில்லாமல் சுருட்டுகிறார்களா எனப்புரியவில்லை.
அண்ணி அவனது மௌனத்தைக்கலைத்தாள். “ஒங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா கொழுந்தம்பிள்ளே?”
வேண்டாமெனச்சொல்லலாமா என ஒரு நிமிடம் யோசித்தான். அம்மையை வேண்டாமென அப்படி சுலபமாகச் சொல்லிவிட முடியுமா?
சுற்றிலும் பார்த்தான். கொடிக்கயிற்றில் அம்மாவின் இன்னும் துவைக்காத ஒரு நைட்டி தொங்கிக்கொண்டிருந்தது. அவள் இறப்பதற்கு முந்தைய நாள்தான் உடம்பு துடைப்பதற்காக அட்டெண்டர் அதை அவிழ்த்துப்போட்டிருந்தார். அதை அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டான். அம்மாவின் கடைசி வாசனை,.. இனியெப்போதுக்குமாக இது போதும். நைட்டிக்கும் முந்தானை உண்டு, அம்மாவை நினைத்து ஏங்கும் பிள்ளைகளை அது அரவணைத்து ஆறுதலளிக்கும். நாப்தலீன் மணக்கும் சேலைகளை மற்றவர்களே வைத்துக்கொள்ளட்டும்.
அவன் நைட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு அணைத்தாற்போல் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டு எழுந்தான். அம்மையே குழந்தையாக அவன் தோளில் சாய்ந்திருப்பதுபோல் ஒரு தாய்மையுணர்வை உணர்ந்தபோது அவனுக்குச் சிலிர்த்தது. நைட்டியின் கைப்பாகம் அவனது கையில் உரசியபோது அம்மாவே தன் கையைப்பற்றியிருப்பது போல் உணர்ந்தான். “நடுச்சாமம் ஆகப்போகுது, போய்த்தூங்கு மக்கா” என்ற அம்மாவின் குரல் காதில் கேட்டதுபோல் இருந்தது. நைட்டியைத்தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான்.
வெகு நாட்களுக்குப் பின் அம்மையின் மடியில் தலை வைத்துப்படுத்திருப்பது போல் ஒரு ஆறுதல், கொந்தளித்துக்கொண்டிருந்த அவனது மனதைச் சற்று அமைதியுறச்செய்தது. மரத்துப்போயிருந்த மனது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது. இனிமேல் அம்மையை எப்போதுமே பார்க்க முடியாதே என்ற ஏக்கம் தாக்க, சூடான கண்ணீர் அவன் இமைகளினோரம் வழிந்து நைட்டியை நனைத்தது. கண்ணீர் வழிய வழிய துக்கம் மெல்ல மெல்ல கரைந்து, தூக்கம் கண்ணைச்சுழற்றியது. மின்விசிறியின் காற்றில் மெல்ல படபடத்துக்கொண்டிருந்த நைட்டி மெதுவாக அவன் கன்னத்தை உரசியது. “அழாதே மக்கா..” என அம்மையே அவனது கண்ணீரைத் துடைத்ததுபோல் உணர்ந்தான். ‘என் அம்மா.. எங்கூடவேதான் இருப்பா” என தனக்குத்தானே ஆறுதலாகச் சொல்லிக்கொண்டான். அம்மாவின் கை தனது தலையைக்கோதுவது போன்ற கற்பனையுடன், இமைகள் கனக்க ஆழுறக்கத்தில் இன்னும் இன்னுமென அமிழத்தொடங்கினான்.
No comments:
Post a Comment