Thursday 20 September 2018

சாரல் துளிகள்

எல்லாவற்றையும் பின்தங்கவிட்டு முன்னேறிப் பறந்து இறங்கும்போதுதான் இறங்கியது வெற்றுக்கூடெனப்புரிபடுகிறது. மனமா?.. அது எங்கே லயித்து விழுந்து கிடக்கிறதோ.. யாருக்குத்தெரியும்!.

சட்டெனப் பறக்க நினைத்தெம்பிப் பின் பட்டெனத் திரும்பியமரும் பறவையின் இறகுகளில் ஒளிர்ந்தணைகிறது அது பறக்க நினைத்த வானம்.

சிறுமழையில் சூரியன் கரைந்த அப்புல்வெளியெங்கும் முளைத்திருக்கின்றன ஓராயிரம் சூரியன்கள்.

சொட்டித் தீராத வெயில், பொழிந்து தீராத நிலவு
சிறுகண் திறக்கும் மலர்களொடு என்றும் அலுக்காத அப்புன்னகையும்.

நடைபாதையில் தூங்கும் குழந்தையைப் போர்த்தி பாதுகாப்பு கொடுத்திருக்கிறது L.I.C விளம்பர சுவரொட்டி, ப்ரீமியம் எதுவும் கட்டாமலே.

தேடித்தேடி நம்மைக் கண்டுகொள்ளும் இறுதிக்கணத்தில் மறுபடியும் தொலைந்து போகிறோம்.

பேராசை அரக்கனின் பசி, குடும்பங்களின் மகிழ்வையும் நிம்மதியையும் காவு கொண்டபின்னும் அடங்குவதில்லை. எத்தனைதான் இட்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென கபளீகரம் செய்து செல்லும்.

ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல் காற்றில் சுழன்று செல்லும் பூஞ்சருகைத் துரத்துகிறதொரு வண்ணத்துப்பூச்சி. யாருமற்ற அவ்வனாந்திரமெங்கும் நிறைகிறது அத்தனை வண்ணங்களாலும்.

சொற்கள் இறைபடும் தளத்தைச் சற்றே கவனத்துடன் கடப்போம். ஏனெனில் நம்மைக் காயப்படுத்தும் சொல்லொன்று நம்மால் வீசப்பட்டதாகவும் இருக்கக்கூடும்.

அமிலமும் வெந்நீருமாய் ஊற்றி அத்தனை அக்கறையாய்க் கவனித்துக்கொண்ட பின்னும், ஏனோ துளிர்க்கவில்லை அம்மரம்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் சிறப்பு. பாராட்டுகள்.

LinkWithin

Related Posts with Thumbnails