Monday 6 March 2017

சாரல் துளிகள்


பெருமழையொன்றின் நீட்சியாய் அத்தனைத்துளிகளிலும் உருகி வழிகிறது விசும்பு.

தூக்கமற்றுப்புரளும் நோயாளியின் கனத்த இரவைப்போல் நீள்கிறது மழை கனத்துத்ததும்பும் இந்தப் பகலும்.

சற்றுமுன் வரை தன்னுள் கொண்டிருந்த அத்தனைக்கனவுகளையும் கரைத்துக்கொண்டு காலகாலமாய் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது ரத்தம். இன்னுமா தீரவில்லை ஆயுதத்தின் பசி?

ஒரு சாம்பற்புழுதிப் படலத்தைப்போல் நகரைக் கவிந்திருக்கும் மெல்லிய பதற்றத்தைச் சட்டை செய்யாது கூண்டுக்குள் தானியமணிகள் கொறிக்கும் தவிட்டுக்குருவிகளின் மேல், மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது காரிரவு.

அடுக்ககத்தின் ஒரு பக்கத்திலமர்ந்து விருந்தறிவிக்கிறது காகம். யார் வீட்டுக்கென்று அனைவரையும் குழம்ப வைத்து விட்டு.

தன்னம்பிக்கை என்பது..
மலை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் மரத்தின் நுனிக்கிளையில் கூடு கட்டும் பறவையிடம் இருப்பது.

சிறு பொறி பெருந்தீபமாய் ஔி பரப்பிக்கொண்டிருக்கிறது. இனி இருண்மைக்கிடமில்லை.

மீளாத்தூக்கமும் ஒரு விடுதலையே..

ஏதோவொரு கான்க்ரீட் வனாந்திரத்திலிருந்து கீச்சிடும் குஞ்சுப்பறவைக்கு, உச்சிவெயிலில் நகரத்தின் ஒரு தெருவில் ஒலிக்கும் குல்ஃபி வண்டி குளுமையைப் போர்த்தி விடுகிறது.

ஒரு கொக்கைப்போல் விண்ணேகும் இறகுப்பந்தின் முன் விரிந்திருக்கிறது முன்னெப்போதோ கோலோச்சிய சுதந்திர வானம். எனினும், வாய்த்ததென்னவோ மட்டையிலடிபடும் ரணகள வாழ்வுதான்.

1 comment:

கோமதி அரசு said...

தன்னம்பிக்கை என்பது..
மலை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் மரத்தின் நுனிக்கிளையில் கூடு கட்டும் பறவையிடம் இருப்பது.
//
இந்த வரிகள் மிக அருமை.

அனைத்தும் அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails