Thursday 19 September 2013

பூந்தோட்டம்.. (19-09-2013 அன்று பூத்தவை)

மணிச்சிகை: கோலாகலமாய் அம்ச்சி மும்பைக்கு வந்த கணபதி அதே கோலாகலத்தோடு திரும்பிப் போயிருக்கிறார். குழுவினர் தங்கள் முழு பலத்தையும் காட்டி வாசித்த பாண்டு வாத்திய இசையைக் கேட்டவண்ணம் வந்தபோதே அடுத்து வரும் சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். அவருக்கான ஆசனத்தில் அமர்த்தி, மாலை மரியாதை செய்து, மோதகம் நிவேதனம் செய்து, காதுக்கினிமையாக ஆரத்திப் பாடல்களைப்பாடி அவரை மகிழ்வித்தனர். உபசாரங்களில் மகிழ்ந்து சற்றே ரிலாக்ஸாக இருந்த பொழுதில் திடீரென்று ஹைபிட்சில் ஒலித்த 'லுங்கி டான்ஸ்' பாட்டால் தூக்கி வாரிப் போட்டதன் காரணமாக கையில் வைத்திருந்த மோதகம் தெறித்து எங்கோ விழுந்து விட்டதாகக் கேள்வி. போன வருஷப் பிள்ளையார்கள் 'ஷீலா கி ஜவானி, சிக்னி சமேலி' போன்ற காலத்தால் அழியாக் காவியங்களைக் கேட்டு இன்புற்றதை இந்த வருஷப் பிள்ளையார்கள் அறியவில்லை.. பாவம்.

தினமும் ஆரத்தி முடிந்ததும் அடுத்து அனுபவிக்கப்போகும் இ(ம்)சையை எதிர்நோக்கி காதுகளை இறுக மூடிக்கொண்டதால் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்குக் கூட சரியாக காதுகொடுக்க முடியவில்லையாம். "போனால் போகட்டும் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லி வீட்டுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். வந்து நிம்மதியாக உட்கார்ந்து கொண்டார். ரெண்டு வகை மோதகங்கள், போளி எல்லாம் சாப்பிட்டு விட்டு, "அம்மாடி,.. இங்கே ஒண்ணரை நாள் நிம்மதியா இருந்தேன். அடுத்த வருஷமும் வாரேன்" என்றுவிட்டுப் போயிருக்கிறார்.
எங்க வீட்டுப்பிள்ளை..
"பாட்டா பாடுறீங்க?.. உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு" என்று கறுவியர், மும்பையின் ஒரு மண்டலில் ட்ரெஸ் கோட் கொண்டு வந்துவிட்டார். தேசிய உடையான பெர்முடாஸில் வந்தவர்களை அலேக்காகக் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் பந்தலுக்கு வெளியே விடும்படி அமைப்பாளர்களின் மனதில் புகுந்து கொண்டு இவர் செய்த திருவிளையாடலை என்னவென்பது!!! "இருங்க,.. இன்னும் பதினஞ்சு நாளில் எங்கம்மா வருவாங்க. அவங்க கிட்ட உங்க விளையாட்டைக் காட்டினா தெரியும் சேதி" என்று எச்சரித்து விட்டுப்போயிருக்கிறார். "ஹைய்யோ.. ஹைய்யோ.. புரியாத விளையாட்டுப் பிள்ளையா(ரா) இருக்கியே. அந்தம்மா வந்தாங்கன்னா பத்து நாளும் எங்களோட சேர்ந்து கும்மியடிப்பாங்க தெரியுமோ" என்று மக்கள் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். 

உந்தூழ்(மூங்கில் பூ): புகைப்படப்பிரியனில் நான் எடுத்த இந்தப்படம் முத்துக்கள் பத்தில் ஒரு முத்தாக வெற்றி பெற்றது. தீர்ப்பு சொன்ன நாட்டாமைக்கு நன்றி :-)

எறுழம்பூ: வீட்டுக்கு வெளியே போனாலே சுவாரஸ்யமான அனுபவங்களுக்குக் குறைவிருக்காது. ஒரு சமயம் வண்டியை ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே பார்க்கிங்கில் சுவரையொட்டி நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தால் பின்னால், பக்கவாட்டுகளில் என்று சகட்டு மேனிக்கு வண்டிகளை நிறுத்தியிருந்தார்கள். எந்த வகையிலும் நகர முடியாமல் மாட்டிக்கொண்டோம். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தோம்.. ஹார்ன் சத்தம் கேட்டு யாராவது வருவார்கள் என்று முயற்சிக்கலாமென்றால் அதற்கும் பலனிருக்காது. அந்தச்சாலையில் ஓடும் எக்கச்சக்க வண்டிகளில் ஏதாவதொரு வண்டியின் ஹார்ன் என்று நினைக்கப்பட வாய்ப்பிருக்கிறதே. கடைசியில், வண்டியின் ஹெட்லைட்டுகள் மற்றும் பிற லைட்டுகளைப் போட்டு விடச்சொல்லி ரங்க்ஸிடம் சொன்னேன். லைட்டுகளைப் போட்டு விடுவதால் பாட்டரி டவுன் ஆகிவிடுமே என்று ரங்க்ஸுக்குத் தயக்கம். பயந்தால், தயங்கினால் காரியம் ஆகுமா என்ன?. "சும்மா வெறும் ரெண்டு செகண்டுக்குப் போட்டு விடுங்க. லைட் அணைஞ்சு அணைஞ்சு எரியறதைப் பார்த்தால் யாராவது வருவாங்க" என்று சொல்லிக்கொண்டே....... இருந்தேன். அது படியே ஆகிற்று :-). என் நச்சரிப்புத் தாங்காமல் விளக்குகளை எரிய விட்டார்.

முதல் தளத்திலிருந்த ஒரு கடைப்பையர் பார்க்கிங்கிலிருக்கும் வண்டியின் விளக்குகள் எரிவதைப் பார்த்து விட்டு உதவிக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், "அந்த வண்டியின் ஓனரின் ஆபீஸ் இங்கேதான் இருக்கு. விஷயத்தை அவரிடம் சொல்றேன்" என்று கூறிவிட்டு ஓனரை அழைத்து வந்தார். 'ஸாரி' கேட்டு விட்டு அந்த வண்டி நகர்ந்து வழியேற்படுத்திக் கொடுத்ததும், நாங்கள் கிளம்பினோம். "சொன்னாக் கேக்கணும்ன்னு இதுக்குத்தான் சொல்றது" என்று சொன்னபடியே அவரைப் பார்த்தேன். என்றுமில்லா முனைப்போடு சாலையைக் கவனித்துக் கூர்ந்து பார்த்தபடி கியரை மாற்றினார் அவர் :-))))))))

சுள்ளி(மராமரப்பூ): சாரல் துளிகளில் ஒரு துளியை "குங்குமம் தோழி" ஃபேஸ்புக்கின் முக வரி பகுதியில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தோழி.
கூவிரம் பூ: எல்லைப்பிரச்சினையென்பது அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் பரவியிருப்பது என்னவோ உண்மைதான். என்றாலும் மின்சார ரயில்களிலும் அவை அதிகமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன போலும். எதையாவது விற்றுக்கொண்டு வருபவர்கள் அதைத் தீவிரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதைச் சமீபத்திய ஒரு பயணத்தில் காண நேர்ந்தது. பத்து ரூபாய்க்குப் பதினைந்து எலுமிச்சம் பழங்கள் விற்கும் இரண்டு பசங்கள் ஒரே சமயத்தில் ரயிலில் ஏறி விட்டார்கள். அப்புறமென்ன வாய்த்தகராறுதான் இருவருக்கும். "இது என் ஏரியான்னு தெரியுமில்லே.. அப்புறம் ஏன் வண்டியில் ஏறினே?.." என்று கேட்டான் முதலாமவன். "ரயில் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா?" என்று கேட்டு விட்டு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான் இரண்டாமவன். முதலாமவன் திகைத்து நின்று விடவில்லை. "தஸ் கா லிம்பு லே லோ..(பத்து ரூபாய்க்கு எலுமிச்சம்பழம் வாங்கிக்கோங்க)" என்று இரண்டாமவன் சவுண்ட் விடும்போதெல்லாம் "அச்சா,.. படாவாலா இதர் ஹை (பெரிய நல்ல பழங்களெல்லாம் இங்கே கிடைக்கும்)" என்று தன் கையிலிருந்த பழப்பொதிகளைக் காண்பித்துக்கொண்டிருந்தான். உண்மைக்குமே அவன் வைத்திருந்த பழங்கள் நல்ல தரமானவையாக இருந்தமையால் சட்சட்டென விற்றுத்தீர்ந்து கொண்டிருந்தன. முகம் சிறுத்துப்போன இரண்டாமவன் எந்த ஸ்டேஷனில் இறங்கி வெளியேறினான் என்று தெரியவில்லை :-)))

LinkWithin

Related Posts with Thumbnails