Thursday 24 June 2010

மழையே மழையே...-2

(உதவி:கூகிள்).


பிரளயமே வர்றாப்ல மழை அடிச்சு ஊத்துது. பசங்க எழுந்து, ஸ்கூலுக்கு தயாராக ஆரம்பிச்சாங்க. 'இன்னிக்கு ஸ்கூல் போக வேணாம்'ன்னு சொன்னேன். 'ஐயோ !! இன்னிக்கி பரீட்சை இருக்குது தெரியுமில்ல. போக வேணாம்ன்னு சொல்றீங்களே'ன்னு பதறினாங்க. பாவம்.. என்ன நடந்ததுன்னு அவங்களுக்கு எப்டி தெரியும். ஜன்னல்கிட்டே கூட்டிட்டு போய் வெளியே காமிச்சேன். அதிர்ந்துட்டாங்க. பக்கத்து பில்டிங்கில் க்ரவுண்ட் ஃப்ளோரில்,வீடுகளுக்குள் தண்ணி புகுந்தாச்சு. நிச்சயமா இடுப்பளவுக்கும் மேலேயே இருக்கும். ரெண்டு கட்டடங்களுக்கிடையே இருந்த தடுப்புச்சுவர் இடிஞ்சு கிடக்கு. அதான் அந்த 'தடால்'... நேர்ல பாத்துட்டு அதிர்ந்து போயிட்டேன்.

எங்க பில்டிங் கொஞ்சம் உசரமான இடத்தில் இருப்பதால் தரைத்தளத்தில் தண்ணீர் வரலை. ஆனா,.. முன்பகுதி, பார்க்கிங் பகுதியெல்லாம் தண்ணீர் தேங்கி நிக்குது. எதிர்வரிசையில் தாழ்வான பகுதியில் இருக்கும் வரிசை வீடுகளில் (இங்கே அதை chawlன்னு சொல்லுவோம்) ஜன்னல் வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. மெல்ல மெல்ல எல்லோரையும் கலவரம் தொற்றிக்கொள்ள ஆரம்பிச்சது. டிவியில் வேறு,.. செய்திகள் வரிசையா வர ஆரம்பிச்சு விட்டது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறையும் அறிவிச்சுட்டாங்க. மொட்டைமாடியில் ஏறிப்போய் பாத்தா சுத்திலும் ஒரே வெள்ளக்காடா கிடக்குது. பக்கத்து பில்டிங்கில் எல்லாம் வாகனங்கள் மூழ்கிக்கிடக்கு. டிவியில் எந்தக்காலத்திலோ பாத்ததெல்லாம் இப்போ கண்முன்னாடி நடக்கிறதை நினைச்சா நம்பவே முடியலை. ஹெலிகாப்டரில் வரும் சாப்பாட்டு பொட்டலங்களை நம்பி இருக்கவேண்டி வந்துடுமோன்னு நினைப்பு ஓடுது.

( பில்டிங்கின் முன்னால் கேட்டை பாத்தே வெளியே எவ்வளவு தண்ணி நிக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம்).
மதியத்துக்கு மேலும் மழை விட்ட பாடில்லை. தண்ணீரும் வடிந்த பாடில்லை. சோதனையா மின்சாரசப்ளையும் நின்னு போச்சு. மொபைல் ரேடியோதான் நிலவரங்களை தெரிஞ்சுக்கவும், பொழுது போக்கவும் துணையா இருந்திச்சு. மின்சாரம் இல்லாததால வீடுகளுக்கு தண்ணி சப்ளையும் வராது. தரைத்தளத்தில் இருக்கிற வாட்டர் டேங்கில் இருந்து நாங்களே எடுத்துக்க வேண்டிய சூழ்நிலை. டேங்கை காலி பண்ணலைன்னா அழுக்குத்தண்ணி கலந்துடுற அபாயம். லிப்ட் வேலை செய்யாததால், மக்களெல்லாம் தண்ணிக்குடத்தை சுமந்துக்கிட்டு ஆறுமாடி ஏறி இறங்கியதை மறக்க முடியாது. பசங்களெல்லாம் அவங்க பங்குக்கு சின்னச்சின்ன பாத்திரங்களை நிரப்பிக்கிட்டு போனாங்க.

மதியத்துக்கு மேல ராஜாவும் ராணியுமா நகர்வலம் கிளம்பினோம். மழை இருந்ததால் கேமராவுக்கு தடா..காம்பவுண்டை விட்டு வெளியே வந்தா... இடுப்பளவு தண்ணியில் நிக்கிறோம். அப்படியே மெதுவா நகர்ந்து வந்து மெயின் ரோட்டுக்கு வந்தோம். அங்கெல்லாம் ப்ராப்ளம் இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் நிலைமை மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டு, பக்கத்திலிருந்த பாலத்தில் ஏறி நின்னு பாத்திட்டிருந்தோம். ட்ரெயின்களெல்லாம் அரைப்பாகத்துக்கு மேல மூழ்கியிருக்குது. ட்ரெயினுக்கும் ப்ளாட்பாரத்துக்குமா கயிறு கட்டி உள்ள இருந்தவங்களையெல்லாம் அதை பிடிச்சுக்கிட்டே நடந்துவரச்செஞ்சு காப்பாத்திட்டாங்க. சில இடங்களில் அது முடியாம,..ரெண்டு நாளா ட்ரெயினுக்குள்ளயே மாட்டிக்கிட்டு இருந்துருக்காங்க.
(உதவி:கூகிள்).

எங்க பக்கத்துவீட்டு ஆன்ட்டியோட பையர், இதேமாதிரி ட்ரெயினுக்குள்ள மாட்டிக்கிட்டார். உசிரை காப்பாத்திக்கிட, அப்பர் பெர்த்தில் ஏறி உக்காந்துக்கிட்டு இருந்திருக்கார். ரெண்டு நாளுக்கப்புறம் தண்ணி வடிஞ்சப்புறம் தண்டவாளம் வழியாவே நடந்து அக்கா வீட்டுக்கு வந்திருக்கார். அங்கிருந்து போன் வர்றவரைக்கும் , பாவம்.. அந்த மாமி வேண்டாத தெய்வமில்லை. சில இடங்களில் ப்ளாஸ்டிக் டப்பை உபயோகப்படுத்தி,அதிலே உக்காரவெச்சு கயிறுகட்டி இழுத்து, ஆட்களை காப்பாத்தியிருக்காங்க.ஆனா.. நிறைய பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலை.

வெள்ளத்தில் நிறைய தட்டுமுட்டு சாமான்கள், ஃபர்னிச்சர்கள் எல்லாம் அடிச்சிக்கிட்டு வர்றதை, கையாலாகாத்தனத்தோட பாத்துக்கிட்டிருந்தோம். காட்டாறு மாதிரி வேகமா ஓடுற வெள்ளத்தில், அதுவும் ரெண்டாளு உசரத்துக்கு போயிக்கிட்டிருக்கிற சமயத்தில் ஆட்களே விழுந்திருந்தாகூட காப்பாத்தியிருக்க முடியாது. மும்பை நகருக்குள், அப்படி காப்பாத்தப்போயே நிறைய பேரு உசிரை விட்டுட்டாங்க.

அங்கிருந்து கிளம்பி அப்படியே தெரிஞ்ச ஏரியாவுல எல்லாம் சுத்தினோம். தாழ்வான பகுதிகள்ல எல்லாம் கட்டிடங்கள் முதல்மாடிவரைக்கும் மூழ்கியிருந்தது. கார்களெல்லாம் எங்கே நிக்குதுன்னே தெரியலை. சில கார்களின் மேல்கூரை மட்டும் தெரியுது. ரங்க்ஸோட ஃப்ரெண்ட் அதுக்கு நாலுமாசம் முன்னால்தான் லட்சக்கணக்கில் செலவு செஞ்சு வீட்டுக்கு இண்டீரியர் மாத்தியிருந்தார். எல்லாம் போச்சு. உழைப்பாளிகளோட நிலையோ இன்னும் மோசம். இருக்கிற வீடும் முங்கிப்போச்சு. கடைகளிலோ பொருட்களெல்லாம் மிதக்குது... தள்ளி நின்னு பாத்துட்டு வந்தோம்.இன்னொரு ஃப்ரெண்ட் முதல்மாடியில் குடியிருந்தார். வெள்ளம் பெருக ஆரம்பிச்சதும் அந்த கட்டிடத்தில் இருந்தவர்களை ஃபைபர் போட் மூலம் காப்பாத்தினாங்க.

கிட்டத்தட்ட எல்லோருமே, வீட்டுச்சிறையில் இருப்பதை போல்தான் இருந்தோம். இன்னும் எத்தனை நாளுக்குன்னு தெரியலை. நல்லவேளையா அப்பத்தான் வாராந்திர ஷாப்பிங் முடிச்சிருந்ததால், ஃப்ரிஜ்ஜும்,ஷெல்பும் ரொம்பியிருந்தது. மெடிக்கல் கிட்டையும் மாதாந்திர சாமான்கள் வாங்கும்போதே சரிபார்த்து அடுக்கியாச்சு. அதனால அவசரத்துக்கு மருந்தும் ரெடியாயிருந்தது. சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால பால், மற்றும் மற்ற உணவுப்பொருட்கள், காய்கறிகள் கிடைக்கவேயில்லை. கிடைச்சாலும் வெளியே வரமுடிஞ்சாத்தானே வாங்குறதுக்கு. கைக்குழந்தைகள், இருக்கிற வீடுகளில் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க.

மின்சாரம் இல்லாட்டாலும் பேட்டரி,இன்வர்ட்டர் இருந்ததால் ஓரளவு ஒப்பேத்தினோம். மிக்ஸி ஓடணுமே... இல்லாட்டா மழைத்தண்ணியத்தான் குடிச்சு உசிர் வாழ்ந்திருக்க வேண்டி வந்திருக்கும். என்னதான்,கரண்ட் தட்டுப்பாட்டை உத்தேசிச்சு அரைச்சு விட்ட மசாலா தேவைப்படாத நாலு ரெசிபிக்களை கத்து வெச்சுக்கிட்டாலும்,.. நாக்கு கேக்கணுமே. தினமும் அந்த கரம்மசாலாவையும், பாவ்பாஜி மசாலாவையும் தின்னா நொந்துடும்.. வாழ்க்கை. அதுக்கும் வந்தது ஆபத்து...

(மழை பெய்யும்)..

33 comments:

Vidhoosh said...

படித்துக் கொண்டே இருக்குறேன். :(

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு பாகத்தின் முடிவிலும் நல்லா வைக்கிறீங்க சஸ்பென்ஸ்:)! என்ன ஆபத்து?

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நல்ல அனுபவம்தான் போங்க. “தடால்” என்னன்னு தெரிஞ்சு கொஞ்ச நேரத்திலேயே அடுத்த ஸஸ்பென்ஸ்.. நல்ல வைக்கிறீங்க ஸஸ்பென்ஸ்.. அடுத்த பதிவு காண ஆவலுடன்.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆஹா இங்கயும் ஒரு ட்விஸ்டா.. யம்மாடி .. ம் பெய்யட்டும் பெய்யட்டும்..

Chitra said...

கிட்டத்தட்ட எல்லோருமே, வீட்டுச்சிறையில் இருப்பதை போல்தான் இருந்தோம். இன்னும் எத்தனை நாளுக்குன்னு தெரியலை. நல்லவேளையா அப்பத்தான் வாராந்திர ஷாப்பிங் முடிச்சிருந்ததால், ஃப்ரிஜ்ஜும்,ஷெல்பும் ரொம்பியிருந்தது. மெடிக்கல் கிட்டையும் மாதாந்திர சாமான்கள் வாங்கும்போதே சரிபார்த்து அடுக்கியாச்சு. அதனால அவசரத்துக்கு மருந்தும் ரெடியாயிருந்தது. சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால பால், மற்றும் மற்ற உணவுப்பொருட்கள், காய்கறிகள் கிடைக்கவேயில்லை. கிடைச்சாலும் வெளியே வரமுடிஞ்சாத்தானே வாங்குறதுக்கு. கைக்குழந்தைகள், இருக்கிற வீடுகளில் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க.


..... Oh my! What a situation!

Thenammai Lakshmanan said...

சுவாரசியமா பதிவு செய்து இருக்கிங்க அமைதிசாரல்

வல்லிசிம்ஹன் said...

நல்ல வேளை அந்தத் தடார் சத்தம் ஏதாவது பால்கனி தான் விழுந்திடுச்சோன்னு நினைச்சேன்பா.
ரொம்ப பழைய கட்டடங்கள்ளதான் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கு.காப்பி ட்டீக்கு என்ன செய்தீங்களோ.பால் வரலைன்னா என்னதான் செய்யறது. எங்க மாமியார் எல்லாம் 50 வருஷங்கள் முன்னால் மடுங்கால இருந்தாங்க. அண்த பில்டிங் இன்னமும் இருக்கு. என்ன மழை வந்தாலும் நார்மலா எல்லாரும் நடந்துப்பாங்க. அந்த மூணு மாசமும் எப்பவும் போலத்தான் போகும்னு சொல்லுவாங்க. அப்ப இருந்த நிலைமை வேற இப்ப வேற இல்லையா.

தைரியமா வெளில போயிட்டு வந்த உங்களைப் பாரட்டறேன்.

ஹுஸைனம்மா said...

மழைவெள்ளத்துல அவனவன் உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கான்; உங்களுக்கு மசாலா கவலை!! :-))

Deepa said...

மழையோட இன்னொரு பக்கம் அதிர வைக்குது. அதுவும் ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்குப் வந்த மகன்... :(
சீக்கிர‌ம் இய்ல்பு நிலை திரும்ப‌ வேண்டுகிறேன்.

Prathap Kumar S. said...

//மழைவெள்ளத்துல அவனவன் உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கான்; உங்களுக்கு மசாலா கவலை!! :-))//

அதானே...சரியான கேள்வி.... அவங்கவங்க கவலை அவங்களுக்கு :))

ஆர்வா said...

மழையே மழையே தூவும் மழையே...

சிநேகிதன் அக்பர் said...

நானும் மழையில் நனைந்த உணர்வை கொடுத்துவிட்டது உங்கள் எழுத்து. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விதூஷ்,

தொடர்ந்து வந்ததுக்கும் படிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

பெருசா ஒண்ணுமில்லை :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ரெண்டு நாள் மரண பயத்தோடயே இருந்தோம்ப்பா.. அந்த காம்பவுண்ட் சுவ்ர் இடியும்போது, பில்டிங்கோட சுவரும் அதேமாதிரி இடிஞ்சுடுமோன்னு பயம் வந்தது நிஜம்.

தொடர்ந்து வந்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

இதை எழுதும்போதும் மழை பெஞ்சுக்கிட்டுதான் இருக்கு. அந்த நாட்களுக்கே போயிட்டமாதிரி ஃபீலிங்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

தரைத்தளத்தில் இருந்தவங்க பாடு ரொம்பவே கஷ்டம். வீட்டுல இடுப்பளவு தண்ணி இருந்தா எப்படி இருக்கும்??

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனம்மை,

நினைவுகளை பதிவு செய்வதற்கும் பகிர்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு இல்லியா!!

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

என் உதவிக்கு வரும் பெண்ணின் வீடும் இடிஞ்சு போச்சு. ஆளுக்கொரு உதவியா செஞ்சு கரையேத்தினோம். பழைய பில்டிங்குகள் இடிவது வருஷாவருஷம் சகஜமா போச்சு.

மும்பை மழை சகஜமான ஒன்றுதான். மக்களும் எது வந்தாலும் சமாளிக்கக்கூடியவர்கள்தான். அந்த மன உறுதியை அப்போதைய வெள்ளம் அசைச்சு பார்த்துவிட்டது. கிட்டத்தட்ட நூறுவருஷத்துக்கப்புறம் அதேமாதிரி வெள்ளம் வந்திருக்குன்னு வயசாளிகள் சொல்லிக்கிட்டாங்க.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஊண் இல்லைன்னா உசிரேது :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தீபா,

ரொம்ப பயங்கரமான பக்கம்தான். இது 2005-ல் நடந்தது. இப்பவும் நிலைமை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கு. சில இடங்களில் தண்ணீர் புகுந்ததால் போக்குவரத்து ரொம்ப தாமதமாகுது.சில இடங்களுக்கு ஆட்டோ வர்றதில்லையாம்.

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

சப்போர்ட்டுக்கு நன்றிப்பா :-)))).

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதை காதலன்,

ஆரம்பம் நல்லாருக்கு.. முழுசும் பாடுங்களேன் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அக்பர்,

அடுத்த பாகம் வந்துக்கிட்டே இருக்கு.

வரவுக்கு நன்றி.

ஹேமா said...

சாரல் மழை இதமாயிருக்கிறது.
இன்றுதான் படிக்கிறேன்.
பாராட்டுக்கள்.

மாதேவி said...

மழைவெள்ளத்தைப் பார்த்து ஆடிப்போயிட்டேன்.

என்ன பாடுபட்டிருப்பார்கள்.:(

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

படிச்சதுக்கு நன்றி.

தொடர்ந்து வாங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

நன்றி.

ஜெயந்தி said...

மறக்க முடியாத வெள்ளம்தான்.

எல் கே said...

2008ஆம் வருட மலையில் இதே போல் என் அக்கா அவதிப் பட்டார்கள். அவர்கள் தெரு தாழ்வாக இருக்கும். சிறு மழைக்கே தண்ணீர் தேங்கும். அந்த வருட கன மழையில் , இவர்கள் காம்ப்லேசுகுள் தண்ணீர் வந்து, மின்சாரம் இல்லாமல், அவஸ்தை. நல்லவேளையாக, என் அக்கா இருப்பது முதல் மாடி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

ஆமாங்க.. ஒவ்வொரு வருஷமும் மழை ஆரம்பிச்சதும் கொசுவத்தியும் ஆரம்பிச்சுடும். அதிலும், அதில் மாட்டிக்கிட்டு மீண்டவர்களால் மறக்கவே முடியாது.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

அக்கா இருப்பது மும்பையிலா, சென்னையிலா...

இங்கியும் தரைத்தளத்தில் இருந்தவங்கபாடு திண்டாட்டம். கிட்டத்தட்ட அகதிவாழ்க்கைதான் வாழ்ந்திருக்காங்க.

நன்றி.

எல் கே said...

//அக்கா இருப்பது மும்பையிலா, சென்னையிலா... //

enaku adutha theru....

LinkWithin

Related Posts with Thumbnails