Tuesday 29 December 2009

சின்னக்கண்ணன்


க்ருஷ்


'அச்சச்சோ...நேரமாகிவிட்டதே...க்ருஷ்ஷை எழுப்ப வேண்டுமே' ... பதட்டத்துடன் குளிப்பாட்டுவதற்கு வேண்டிய எல்லாத்தையும் எடுத்துக்கிட்டேன். பாதியில எழ முடியாதே.

ஆச்சு..பால், தயிர்...வாசனைத்தைலம்...ம்..வேறென்ன.. என்னது ..சோப்பா..?... அதெல்லாம் ஒத்துக்காது.
.
எழுப்பறதுக்கு மனசே வரல்லை....தூங்கறபோதுதான் என்ன அழகு!!!..அடடா.!!!.

'க்ருஷ்'என்று மெல்ல குரல் கொடுத்துக்கொண்டு தொட்டிலில் பார்த்தால் ..குறும்புக்காரன்.! ஏற்கனவே விழித்துக்கொண்டு... சிரித்துக்கொண்டிருந்தான்.இன்னிக்கு பரவாயில்லை.. சில நாட்கள் ரொம்ப நேரமாகிவிடும்.'மாத்தேன்..போ'.. என்று அழிச்சாட்டியம் செய்வான். அப்புறமென்னா. அன்னிக்கு குளியல் மட்டும் 'கட்'

ஒருவழியா, குளிக்க ரெடி செஞ்சு, நாலு நல்ல வார்த்தை சொல்லி,அப்பாடா..குளிச்சு முடிச்சாச்சு J.ஐயா இப்போ ஜம்முன்னு ..புதுடெச்..செல்லாம் போடுவார்.

ஆங்..நகையெல்லாம் போடணுமே..!!.

அலங்காரமெல்லாம் முடிச்சாச்சு,பாருங்க.


கொஞ்சம் நகர்ந்துடக்கூடாதே...பாருங்க ஈஷி வெச்சிருக்கிறதை.:-))).




இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி.'எப்பவும் போல் பொங்கல்தானா'...ன்னு கேட்டார். சரின்னு ஜவ்வரிசி கிச்சடி செஞ்சு கொடுத்தாச்சு.



'டேஸ்ட்டா' இருக்காம்.

சொர்க்க வாசல் நேரடியா போய் பாத்துக்கலாம்ன்னு விட்டு வெச்சாச்சு

டிஸ்கி:நெறய ஆணி இருந்ததால் ஒரு நாள் பிந்தி விட்டது.

Saturday 26 December 2009

அன்றும் இன்றும் கிறிஸ்துமஸ்


விண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா... மொதமொதல்ல அந்த பாட்ட அப்போதான் கேட்டேன்.(எந்தப்பாடலையாவது மொத முறை கேக்குற சூழல் மனசுல நின்னுடுமாமே) என்னா.. ஏது... எதுக்கு... ஒண்ணும் புரியாத சின்னப்புள்ளையில, அய்... நாளைக்கு லீவு...அப்பிடின்னுதான் இருந்தது.நெறய நேரம் வெளயாடலாமில்ல. வீட்டுக்கு,வந்ததும்,பையைத்தூக்கி வீசிட்டு,ஓடிர்றதுதான். கொஞ்ச நேரம் இந்த தெரு, கொஞ்ச நேரம் அங்க, எல்லாம் ,வெளையாண்டுட்டு, பின்னால இருக்கிற சர்ச்சுக்கு ஓடிர்றுவோம். அங்க, அலங்காரங்களை வாயில ஈ போறது கூட தெரியாம பாத்துட்டு நின்னுட்டு, அங்கயும் வெளையாடுவோம்.எல்லாம் ஒரே பள்ளிக்கொடந்தான் அதனால யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.

அன்னிக்கி வந்தது அந்த விபரீத ஆசை. ராத்திரி நேரத்துல நம்ம பள்ளிக்கொடம் எப்டி இருக்குன்னு பாக்கணும்.கிளம்பிட்டோம்... முன்பக்க வழி சாதாரண படிக்கட்டு. தெற்கு வாசல்தான் நம்ம டார்கெட்டு. அந்த வாசல் வழியாத்தான் 9,10ம் வகுப்பு புள்ளைங்களையெல்லாம் அனுப்புவாங்க. அது எப்டி இருக்கும்னு பாத்துடணும். போயாச்சு... ஒவ்வொரு படியா ஏறும்போதே... ரெண்டாப்பும் மூணாப்பும் படிச்சுட்டிருந்த நாங்கள்ளாம் பிரமோஷன் வாங்கி பெரிய கிளாஸ் போய்ட்டதா வளந்துட்டோம்.படிக்கு ரெண்டு பக்கமும் பக்கச்சுவர் சாய்மானமா கட்டியிருப்பாங்க. கொஞ்ச பேர் அதுல இம்சை அரசன் வடிவேலு மாதிரி சறுக்க..., மத்தவுங்க பெரிய கிளாஸ் புள்ளைங்க மாதிரி ஆக்டிங்க் கொடுத்து வெளையாட... நல்லாத்தான் போயிட்டிருந்தது.பட்...டுன்னு ஒண்ணு விழுந்தது முதுகுல.'அய்யோ..அம்மா'...ன்னு அலறிக்கிட்டு திரும்பி பாத்தா... ஹா..ஹா..ஹா.. அம்மா.

"உங்களையெல்லாம் காணோம்ன்னு தெருவெல்லாம் தேடி தட்டழிஞ்சுகிட்டிருக்காங்க..நீங்க இங்க இருக்கீங்களா?".

டின்னு கட்டிக்கிட்டே தரதரன்னு வீட்டுக்கு இழுத்துட்டு போனாங்க.பதினோரு மணி வரை வெளையாண்டா...கொஞ்சுவாங்களா.:-)))).'ப்ரண்ட்ஸோட வெளையாடிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலம்மா'ன்னேன்.

நெறய வீடுகள்ள கிருஸ்துமஸ் அலங்காரம் செஞ்சு வச்சிருப்பாங்க... ஸ்கூலுக்கு போகும்போதும் வரும்போதும் எட்டிப்பாத்துட்டே போவோம்.ஜட்ஜ்மெண்ட் பண்ண வேணாமா.. அதுக்குத்தான்.
"அம்மா...என் சினேகிதிங்கல்லாம் நாளைக்கு சர்ச்சுக்கு போறாங்க.. நானும் போகட்டுமா?... " கேட்டது மகள்.
"சரி" இது நான்.

சர்ச்சுக்கு போய்விட்டு ஒரு பட்டாளமா அவுங்க வீட்டுக்கு போய் கேக், எல்லாம் மொக்கிவிட்டு, அவள் கொடுத்த பரிசையும் பெற்றுக்கொண்டு(ரிடர்ன் கிப்டாம்), இரண்டே மணி நேரத்தில் வந்துவிட்டாள். நாந்தான் வீட்டுக்கும் உள்ளுக்கும் அலைபாய்ந்துகொண்டிருந்தேன்."ப்ரெண்ட்ஸ்ல்லாம் பேசிக்கிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலம்மா" ... ஒய் பிளட்...ஸேம் பிளட்..:-))).

MERRY X.MAS

LinkWithin

Related Posts with Thumbnails